🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அன்பின் வழியது...

வணக்கம் அன்பு நண்பர்களே... முந்தைய பதிவுகளின் இணைப்பு அன்பின் கருவி...அன்பு என்பது... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு - அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம் செவிகளும் உண்டு... அன்பு மனம் படைத்தவர்கள் இன்ப வாழ்வு கொடுப்பவர்கள் - எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா2...? கண்ணிரண்டும் தேவை இல்லை - காண்பதற்கு... காதிரண்டும் தேவை இல்லை - கேட்பதற்கு... உண்மை அன்பு இருந்தால் போதாதா...? நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா...?

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

© மாடப்புறா அ.மருதகாசி K.V.மகாதேவன் சூலமங்கலம் இராஜலட்சுமி @ 1962 ⟫




அறத்துப்பால் - அதிகாரம் 08. அன்புடைமை (77-80)

குறளுக்கேற்ப திரைப்படப் பாடலை ஓரளவு தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளேன்... பாடலில் வரும் மூன்று சொற்களையும் கொடுத்துள்ளேன்... ஊகித்த விதத்தைக் கருத்துரையில் சொல்லலாம்... குறளையும் பாடலையும் வாசிக்க, கேட்க இதயத்தைச் சொடுக்கி, குறளின் மேன்மை கூடுவதையும் உணரலாம்... நன்றி...

அறத்திற்கு மட்டும் தான் அன்பு துணை, என்று சொல்பவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால், சட்டம், நீதி மன்றம், தெய்வம், என அனைத்தும் தண்டிக்காததைத் தண்டிக்கும் அறத்தையே தருவது அன்பு... அத்தகைய அன்பை அறிந்தும் கடைப்பிடிக்காதவரை, எலும்பில்லாத உயிர்கள் வெயிலில் துடிதுடிக்கத் துன்பப்படுவது போல, அவரவர் மனச்சாட்சியே வாட்டி வதைப்பதை அறக்கடவுள் உணர வைத்து தண்டிக்கும்...

அன்பைக் கெடுத்து | துன்பத்தைக் காட்டி | பதறிப் பதறி
அரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல; அனைத்து தவறுக்கும் அறம் கூற்றாகும்...

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் 77


அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப் பெண்ணே... துன்பத்தைக் காட்டி சுமக்கத் துணிந்தவன் - சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே2... தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு - தனிப்பட்டுப் போனவன் ஞானப் பெண்ணே2... பதறிப் பதறி நின்று கதறிப் புலம்பினாலும், பயன்பட்டு வருவானோ ஞானப் பெண்ணே2...
© தங்கப் பதுமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி C.S.ஜெயராமன், பத்மினி (வசனம்) @ 1959 ⟫


மனச்சாட்சி வாட்டி வதைப்பதோடு, மனத்தில் அன்பு இல்லாதவரின் குடும்ப வாழ்க்கையானது, யாருமே விரும்பிச் செல்லாத பாலைவனத்தில் வற்றல் மரம் தளிர்த்தல் போல், யாருக்கும் பயனில்லாமல் வாழ்வு அமையும்...

பாலைவனம் | நாகரீகம் | அடிமை
ககக மறந்து போனீர்களே...!

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று 78


இன்பங்கள் இங்கே பொங்கி வழியும் - முகங்கள் நான் பார்க்கிறேன்... இதயம் எல்லாம் பாலைவனம் போல் - இருக்கும் நிலை பார்க்கிறேன்... அன்பு பணிவு அடக்கம் எங்கே...? - தேடிப் பார்த்தேன் தென்படவில்லை... | குடிக்கும் நீரை விலைகள் பேசி - கொடுக்கும் கூட்டம் அங்கே... இருக்கும் காசை தண்ணீர்போலே - இரைக்கும் கூட்டம் இங்கே... ஆடை பாதி ஆளும் பாதி - அறிவும் பாதி ஆனது இங்கே... | உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் உறவு கொண்டீர்களே - கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மறந்து போனீர்களே... நாகரீகம் என்பது எல்லாம் - போதையான பாதை அல்ல... அன்புக்கு நான் அடிமை - தமிழ் பண்புக்கு நான் அடிமை - நல்ல கொள்கைக்கு நான் அடிமை - தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை... அன்புக்கு நான் அடிமை...
© இன்று போல் என்றும் வாழ்க முத்துலிங்கம் M.S.விஸ்வநாதன் K.J.யேசுதாஸ் @ 1977 ⟫


வற்றல் மரம் போல் வாழ்வு அமைந்து எவ்விதப் பயனும் தராமல் போவதோடு, மேலும் வேர்கள் கெட்டுப்போனால் ஒரு மரத்தின் உறுப்புக்களெல்லாம் பாழ்படுவது போல, இல்வாழ்க்கையின் பண்பாகிய அன்பு உறுப்பு மனதில் இல்லாவிட்டால், தோல், நாக்கு, மூக்கு, கண், காது, கைகள், கால்கள், வாய், குதம் மற்றும் பால் குறி என இடம், பொருள், ஏவல் எனப்படும் பத்து வெளி உறுப்புகள் இருந்தும் பயனேயில்லை...

மானிட ஜென்மம் | அகிம்சை | பாழ்மரமே
உண்மையும், ஆருயிர் அன்பும், அகிம்சையும் என்றால்...?

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு 79


சத்திய ஞான தயாநிதியாகிய புத்தரைப் போற்றுதல் நம் கடனே... பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர், புண்ணியம் இன்றி விலங்குகள் போல் - காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவி2... காலமும் செல்ல மடிந்திடமோ...? உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும் - இல்லை எனில் நர ஜென்மம் மிதே... மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய - பாழ்மரமே வெறும் பாமரமே2...
© அசோக்-குமார் பாபநாசம் சிவம் பாபநாசம் சிவம் தியாகராஜ பாகவதர் @ 1941 ⟫


உடம்பின் புறத்துறுப்புகளும் பிறர்க்குப் பயன் பெறவும், மண்ணாகப்போகும் வரை உடம்பிற்கு மதிப்பும் இருக்க வேண்டுமென்றால், உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும்... அன்பு இல்லையெனில் அந்த உடம்பு சும்மா, எலும்பின் மேல் தோலைப் போர்த்திய வெற்று உடல்...

துன்பம் | சுய நலம் | பொது நலம்
உண்மை தன்னை எண்ணிப் பாரடா...

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு 80


துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா...? அன்பு இல்லாத இதயம் - இதயமா...? நல்ல தேமாங்கனி - என்றும் வேம்பாகுமா2...? - இந்தச் சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா2... சுய நலம் பெரிதா...? பொது நலம் பெரிதா...? - இந்தச் சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா2... மதி மயக்கத்திலே வரும் தயக்கத்திலே - மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா - இந்தச் சொல்லின் உண்மை தன்னை எண்ணிப் பாரடா2...
© யார் பையன் அ.மருதகாசி S.தட்சிணாமூர்த்தி கண்டசாலா @ 1957 ⟫

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சட்டென மனதில் அதற்கேற்ற பாடல் வரிகள் தோன்றி விடுவது வியப்பு. வழக்கம் போல பதிவு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. பதிவு மிக அருமை.

    முதல் பாடல் மிக அருமை. வெகு காலம் ஆகி விட்டது இந்த பாடல் கேட்டு.
    உண்மை அன்பு இருந்தால் போதும்.

    அன்பு என்ற சாவி கொண்டு கொண்டு கல் போன்ற இதயத்தையும் திறந்து விடலாம். படம் அருமை.

    பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் நல்ல தேர்வு.



    திருக்குறளும், அதற்கு ஏற்ற பாடல்களும் அருமை.

    வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
    அன்பு செய்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல் சிறப்பான பதிவு ஜி
    பொருத்தமான பாடல்கள்

    பதிலளிநீக்கு
  4. குறள்க்ளும், பாடல்களும் சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கருத்துக்களும் பாடல்களின் தேர்வும் அருமை!
    ' அன்பு என்பதை கண்ணிழந்தவர்களும் பார்க்க முடியும், செவித்திறனற்ற‌வர்கள் கூட கேட்க முடியும், பேச்சிழந்தவர்களால்கூட பேச முடியும் ' என்று என் இள‌ம் வயதில் ஒரு சிறுகதை ஒன்றில் எழுதியிருந்தேன். அதையே தான் நீங்களும் வேறு விதமாக எழுதியிருக்கிறீர்கள். எப்படியிருந்த போதிலும் அன்பு மட்டுமே அனைத்து சிறப்புகளும் வாய்ந்துள்ள மொழி என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
  6. அருமையானா விளக்கம் தித(DD) வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு மிக அருமையாக உள்ளது. அன்பு ஒன்றுதான் அனைத்திலும் சிறந்தது. படங்களும் அதை குறிப்பிடுகிற மாதிரி அமைத்தது சிறப்பு. எப்போதும் போல் குறளுக்கு ஏற்ற விளக்கம், அதற்கேற்ற பாடல்கள் என உங்கள் தேர்வு படிக்க/கேட்க சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல எழுத்துக்களுக்கும், நல்ல கருத்துக்களுக்கும் எப்போதும் உரிமையாளாராகிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் சிந்தனைகள் எங்களுக்கு படிப்பினையாகவும் உங்கள் ஒவ்வொரு பதிவும் அமைவதற்கு அன்பான பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. குறளும் நெறியும்
    பாடலும் பதமும்..
    அருமை.. இனிமை!..

    பதிலளிநீக்கு
  9. தெரிந்த குறள்கள் என்றாலும் அதை நீங்கள் விவரிக்கும் பாங்கு பாடலுடன் சிறப்பே. அதற்கு குறளை ஆழமாகப் பருக வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. அன்பின் அருமையை நல்ல பண்பான பாடல்களைக்கொண்டு சிந்தைதெளிவுற சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் ... வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.