🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



துறவியாகப் போகிறேன்...!

வணக்கம் நண்பர்களே... இந்த "நம்முடைய" நினைப்பாலே தான் கூட்டுக் குடும்பம் இல்லையோ...? முறைக்காதே...! அடுத்த பதிவுக்கு அச்சாரம்ன்னு வைச்சிக்கோ... அந்த அச்சாரம் தான் இப்பதிவு... அந்தப் பதிவை வாசிக்கச் சுயநலம் தேவை...! எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா...! நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா... பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா... இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா... சட்டி சுட்டதடா... கை விட்டதடா... புத்தி கெட்டதடா... நெஞ்சைத் தொட்டதடா... நாலும் நடந்து முடிந்த பின்னால் - நல்லது கெட்டது தெரிந்ததடா... (படம் : ஆலயமணி)


அடேய் மனசாட்சி... புத்தி கெட்டுப் போச்சா...? அந்த "நடந்த நாலு" என்ன...?

நாலென்ன, எட்டு...! மனைவி, மக்கள், குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு, வீடு, மனை, சொத்து, Blog எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவியாகப் போகிறேன்...! ஞானம் தேடிச் செல்லப் போகிறேன்... ஞானம் பெற வேண்டுமென்றால், காட்டுக்கோ, மலைக்கோ செல்ல வேண்டும் என்கிறார்களே...? எங்கே செல்வது...?

இதுவே குழப்பமா...? இதுலே ஞானம்...ம்... அகந்தையும், எதிலும் அதீத ஆசையும், அற்ப பொருட்கள் மீது மயக்கமும் இருந்தால் ஞானம்...ம்ஹீம்... மலை போல் எதுவென்றாலும் "காட்டுக்கோ" வேண்டாம்... "கத்துக்கோ..."

ம்ஹீம்... இங்கேயிருந்து வடக்கே காசிக்குச் சென்று விட்டு இமயமலை போவதா...? இல்லை தெற்கே பொதிகை மலை போவது நல்லதா...?

ஏனப்பா இந்த விபரீத ஆசை...? ஏதாவது வீட்டில் பிரச்சனையா...? கடனே வாங்க மாட்டியே... அப்படி ஏதேனும் மாட்டிக்கிட்டியா...? இல்லை உறவினர்கள், நண்பர்கள் என யாரையும் பிடிக்கவில்லையா...?

அதெல்லாம் ஒன்றுமில்லை... எல்லாம் நல்லாத்தான் இருக்கு... இருந்தாலும் ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் இந்த உலகில் தனி மரியாதை இருக்கிறது... அந்த மரியாதை எனக்கும் வேண்டும்... அதனால் தான் இமயமலைக்கோ, பொதிகை மலைக்கோ சென்று ஞானம் பெற்றுத் திரும்பப் போகிறேன்...!

கங்கைக்குப் போகும் பரதேசி2 நீ நேத்து வரையிலும் சுகவாசி...! காசிக்குப் போகும் சந்நியாசி... உன் குடும்பம் என்னாகும் ? நீ யோசி... காசிக்கு காசிக்கு... காசிக்குப் போறேன் ஆள விடு... என்னை இனிமேலாவது வாழ விடு... இல்லறம் என்பது நல்லறமாகும், இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்2 குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும், கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்...! பக்தியின் வடிவம் சன்யாசம், புண்ணியவான்கள் சகவாசம் - அதுவே சந்தோசம்...! சக்தியின் வடிவம் சம்சாரம், அவளே அன்பின் அவதாரம் - வேண்டாம் வெளி வேஷம்...! காசி நாதனே என் தெய்வம்... கட்டிய மனைவி குல தெய்வம்... மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை... மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை...! (படம் : சந்திரோதயம்) பாட்டு போதும்... என்ன சொன்னே...?

திரும்பப் போகிறாயா...? அப்படியே போயிடு... நாட்டுக்கு நல்லது... ஹிஹி... துறவியாக வாழ்வதற்கும், ஞானியாக உருமாறுவதற்கும் காட்டுக்கோ மலைக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை... குடும்பத்தோடு இருந்து கொண்டே ஞானியாகலாம்... துறவியாகலாம்... குடும்ப வாழ்வில் குடும்பத்திற்காகவே வாழ்வதைக் கொஞ்சம் விரிவு படுத்தி.... ஊருக்காக, உலகிற்காக, சமூகத்திற்காக வாழத் தொடங்கினால்... அது கூட துறவு வாழ்வு தான்... ஞான வாழ்வு தான்... தம்முடைய சொந்த நலனைத் துறந்து பொதுநலனுக்காக வாழ்பவர்கள் அனைவருமே துறவிகள் தான்... எந்தப் பொருள் மீதும் பற்று வைப்பதைத் துறப்பவர்கள் அனைவருமே ஞானிகள் தான்...



© அழகன் புலமைப்பித்தன் மரகதமணி S.P.பாலசுப்ரமணியம் @ 1991 ⟫

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா...? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழு நீ ஒரு கைதியா...! தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்... தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான்... கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது... கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்... உன்னைப்போல் எல்லோரும் என எந்நாளும் அதில் இன்பத்தை தேடணும்... ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே... ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி...

அழகான பாட்டு... கடுகு மனதைக் கடலாக்கு...! எங்கே கதையை காணாம்...?

ஒரு வீட்டில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார்... அவர் வீட்டுக்குள் பட்டப் பகலில் ஒரு திருடன் நுழைந்து விட்டான்... ஞானியின் மனைவி வெளியே சென்றிருந்தார்... விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் கண்ணில் படவில்லை என்பதால், ஒரு அலமாரியில் இருக்கும் சின்ன பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடத் துவங்கினான்... சத்தம் கேட்டு இதைப் பார்த்த ஞானி, "எப்பா... கொஞ்சம் நில்லுப்பா..." என்றார்... திருடன் காதில் வாங்காமல் தலை தெறிக்கச் சந்து போனதெல்லாம் ஓடினான்... ஞானியும் விடுவதாக இல்லை... அவரும் விரட்டிக் கொண்டே ஓடினார்... கடைசியில் திருடனைப் பிடித்து விட்டார்... "ஏம்பா... இந்த வயசிலே என்னை இப்படியா ஓட வைக்கிறது..." என்று சொல்ல, "ஐயா என்னை மன்னிச்சிடுங்க... என்னுடைய வறுமை என்னைத் திருடனாகி விட்டது... இந்தாங்க உங்க பெட்டி" என்றான்... "தம்பி, நான் விரட்டி வந்தது உன்னைப் பிடிப்பதற்காக அல்ல... அந்தப் பெட்டியில் என்ன உள்ளது தெரியுமா...? பல நாள் உழைப்பில் வாங்கிய மூன்று பவுன் தங்கச் சங்கிலி... இதை நீ யாரிடமாவது விற்கும் போது மூன்று பவுனுக்கும் குறைவாக விற்று விடாதே... ஏமாந்து போகாதே... இதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன்... நல்லாயிறு...!" என்று சொல்லி விட்டு நகர்ந்தார் ஞானி... உழைப்பே தெய்வம் என்று திருடன் மாறியதைச் சொல்ல வேண்டுமா நண்பர்களே...? ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்... உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்2 யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்... மனம் மனம் அது கோவிலாகலாம்... மனிதன் என்பவன் தெய்வமாகலாம்2 வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்... வாழை போலத் தன்னை தந்து தியாகியாகலாம்... உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்...(படம் : சுமை தாங்கி) அதனால் நண்பர்களே... பொருள் இருந்தும் இல்லாமல் போல் வாழ்வது தான் ஞானி... குடும்பத்திலிருந்தாலும் அவர்களுக்காக வாழாமல், சுயநலமில்லாமல் ஊருக்காக வாழ்பவர்கள் தான் துறவி...

நீங்கள் என்ன சொல்றீங்க நண்பர்களே...?

நான் இன்னும் முடிக்கலே... வாழ்க்கையே வானவில் தான்... பெற்றோர்கள் சுமை தாங்கி தான்... ஒளியை வீசி தன்னையே உருக்கிக் கொள்பவர்கள் தான்... ஆனால் அவர்களுக்கு வயதானவுடன் ஞானிகளாக மாறுவதும், துறவிகளாக ஆவதும் ஏன்...? வீட்டுத் திருட்டுப் பசங்களை என்ன செய்வது...? கதையில் வந்த ஞானியின் பெயரிலா வீடு இருந்தது...? இல்லையென்றால் முதியோர் இல்லங்கள், நல்வாழ்வு மையங்கள் ← இவை உருவாக → வாரிசுகளின் தவறா...? அவர்களை வளர்த்த ஞானி / துறவி மீது தவறா...?

நான் எப்போதோ முடித்து விட்டேன்... மேலே படத்திலுள்ள குறளே பதில்...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல பகிர்வு. இந்தப் பதிவின் தூண்டுகோல் எது என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார் :-

      தூண்டுகோல் 1 : பதிவின் ஆரம்பத்தில் உள்ள இணைப்பு 50%
      தூண்டுகோல் 2 : துறவு (35) அதிகாரத்தை குறளின் குரலாக சிந்தித்த போது உருவானது 50%

      நீக்கு
  2. பொருள் இருந்தும் இல்லாதது போல் வாழ்பவன்தான் ஞானி
    அருமை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  3. உங்களிடம் எனக்குப்பிடித்ததே , எழுத்துடன் பாடலையும் (சு)வாசிக்கவைத்துவிடும் பதிவுகள் தான் அண்ணா . குறளின்வழியே உணர்த்தும் கருத்துகள் மட்டுமில்லை , தங்களின் பதிவுகள் அனைத்துமே மிகமிக அருமை .

    பதிலளிநீக்கு
  4. திருடனுக்கு ஞானியின் அறிவுரை நன்று. இது சாத்தியமா? குறளில் குரல் வழக்கம்போல் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல்கள். அதிஅற்புதமான கதை.

    மிகச் சிறந்த பதிவு தனபாலன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அண்ணா.

    நீங்கள் ஞானியாக வேண்டாம் துறவியாக வேண்டாம் அண்ணா...கீ....கீ...கீ...
    நல்ல கருத்தை முன்வைத்து பதிவை எழுதியுள்ளீர்கள் அதில் சொல்லிய கதை நன்று.. ஞானி எப்படிப்பட்டவன் என்பதையும் துறவி எப்படிபட்டவன் என்பதையும் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி த.ம10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. குடும்பத்தில் இருந்து கொண்டே ஞானியாகலாம் தான்.ஆனால் உற்றம், சுற்றம், பற்று, பாசம் எல்லாம் ஞானியாக விடாமல் இழுக்கிறதே !தாமைரை இலையில் உள்ள தண்ணீர் போல வாழவேண்டும், விளாம்பழஓட்டை போல் விட்டதடா ஆசை என்று வாழ வேண்டும் என்று முன்னோர்கள் சொன்னபடி வாழ முயற்சி தான் செய்யலாம். பெரியவர்கள். ஒரு காலகட்டத்தில் இவற்றை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

    முன்பு முதியவர்கள் பிள்ளைகளிடம் பொறுப்பை விட்டு விட்டு கானகம் சென்றார்கள். (வானப்பிரஸ்தம்) இப்போது முதியவர்களுக்கு கடமைகள் நிறைய வைக்கிறார்கள் இளையவர்கள், அவர்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும், (கணவன், மனைவி வேலைக்கு செல்லும் வீடுகளில் பொறுப்பான பெரியவர்கள் இருந்தால் நல்லது என்று) முதியவர்களும் அதை விரும்பியும், வேறு வழி இல்லாமலும் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு. ‘தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்’ என்ற 48 ஆவது குறளின் பொருளையும் தந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. குறளின் அடிப்படையில் எழுதப் பட்ட பதிவு அருமை.அதை திரைப் பாடல்களோடு இணைத்து குட்டிக் கதை ஒன்றையும் பொருத்தமாகக் கூறியது சிறப்போ சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று..

    //காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
    கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
    காலில் விலங்கு இட்டோம் கடமை என அழைத்தோம்
    நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்..//

    அவன் தான் மனிதன் - திரைப் படத்திற்காக கவியரசர் வார்த்துக் கொடுத்த வைர வரிகள் அவை!..

    தத்துவக் களஞ்சியமானது - இந்தப் பாடல்.
    இதற்கு அர்த்தம் அவரவர்களும் கண்டு உணரவேண்டும்.

    அதுவே தான் - தங்களின் பதிவிற்கும்!..

    காலம் நியாயங்களை மாற்றிப் போடவல்லது!..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  11. BEST WISHES
    this article is selected by VALAICHARAM (best article)
    on 18/02/2015

    puthuvai velou
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  12. குறல், கதை, திரைப்படப் பாடல் அழகான கருத்து....அருமையில்ம் அருமை சகோ நீங்கள் சொல்லும் விதம்.

    தம 14

    பதிலளிநீக்கு
  13. வீடு மனை பொருள் சொத்து (Blog...?) எல்லாவற்றையும் விட்டு விட்டு துறவியாவது என்பது யாருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று. வேண்டுமானால் இவற்றின் மீதான ஆசைகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  14. மிக அழகான பாடல்களோடு சரியான பகிர்வு சகோ .

    பெற்றவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொருவரும் இதைப் படித்தால் தங்கள் தவறை உணர்வார்கள்.

    பதிலளிநீக்கு
  15. துறவி வேறு, ஞானி வேறு. தாமரை இலைத் தண்ணீர் போல இல்றத்தில் இருந்தாலும் பற்றற்று வாழ்பவனே ஞானி. ஞானிக்கு கடமைகளும் பொறுப்பும் உண்டு. துறவி எல்லாவற்றையும் துறந்தவன். பொறுப்புகளையும் துறந்தவனே. அதற்கு அவன் ஞானியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  16. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. பொருள் இருந்தும் இல்லாததுபோல் வாழ்வது கஞ்சத்தனமில்லையா!! தலைவரே..

    பதிலளிநீக்கு
  18. தங்களின் ஓய்வு நேரத்தை தெரிவித்தால் ..நானே தங்களிடம் பேசுகிறேன் தலைவரே!!!

    பதிலளிநீக்கு
  19. சிந்திக்கவேண்டிய பகிர்வு. குறளுடனும், நல்ல தத்துவப்பாடல்களுடனும் தந்தது அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமான பதிவு. எங்களின் சுயநலப்பிடியில் அவர்களும், அவர்களின் சுயநலப்பிடியில் நாங்களும், என்ன, அவர்கள் எப்படி சுயநலவாதிகள் என்றா? எல்லாம் அப்படித்தான்.
    தாம் ஏற்ற பாத்திரத்தின் கடமை முடிப்பவரே துறவி. ஞானி எல்லாம். எதையும் பாதியில் விட்டு நான் துறவி என்றோ, ஞானி என்றோ சொன்னால் என்ன செய்வது.


    பதிலளிநீக்கு
  21. பாடல்களும், பகிர்வும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  22. நல்லதொரு பதிவு. கோமதி மேடம் சொல்லியிருக்கா மாதிரி தாமரை இலையில் தண்ணி போல வாழ வேண்டும்.
    சிறப்பான சிந்தனைப்பதிவு.

    பதிலளிநீக்கு
  23. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். எல்லோரும் நல்லவர்களாகி, பற்றற்று. துறவிகளாகி, ஞானிகளாகிப் போகிறார்கள் என்றால் வாழ்வே சுவைக்காதே. எப்போதுமே இல்லாத ஒன்றையும் நடக்க இயலாத ஒன்றையும் சிந்திப்பதே நம் இயல்பாகி விட்டது. தனபாலன் எனக்குள் ஒரு ஆசை. குறளில்லாமல். திரைப்படப் பாடல் இல்லாமல், அதாவது உங்கள் ஸ்பெஷாலிடி இல்லாமல் நீங்கள் ஒரு பதிவு எழுத வேண்டும்

    பதிலளிநீக்கு
  24. நல்ல பதிவு
    தன் கடமைகளை ஆறு;றுவதை விட
    வேறு எது மேன்iமானது

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் நண்பரே...
    முதலில் தலைப்பை படித்து பயந்து விட்டேன்

    ஏற்றமும் தாழ்வுமே மனிதனை ஆசை கொள்ள வைக்கின்றது இல்லையெனில் வாழ்வு சவைக்காது என்பதும் உண்மையே..

    தாங்கள் சொல்வகுபோல பண்டைகால ஞானிகள் கெட்டவனுக்கு உதவும் வாழ்வே வாழ்ந்தார்கள் இன்றை நித்தியானந்தாக்களை நினைத்துப்பார்த்தேன் தெற்க்கும், வடக்கும் போல இருக்கின்றது

    வழக்கம்போல குறள்களோடு பாடல்களும் நல்ல தேர்வு
    வீடு, மனைவி, மக்கள், குடும்பத்துடன் ப்ளாக்கையும் இணைத்தது நல்லதொரு காமெடி

    வாழ்த்துகளுடன்.
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  26. sorry மேலே //பண்டைகால ஞானிகள் கெட்டவனுக்கும் உதவும்// என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  27. வள்ளுவன் வழி துறவியை விளக்கிய , துறவியாரே உமக்கு மிக்க நன்றி! இடனறிந்து எடுக் காட்டிய பாடல் அனைத்தும் உம் திறமைக்குஎடுத்துக் காட்டு மதிப்பெண் இரண்டு போட வேண்டும்! என்ன செய்வது! என்மதிப்பே ஒன்றுதானே!

    பதிலளிநீக்கு
  28. சொல்வது
    சித்தர் அல்லவா
    வாக்கு பலிக்கும்
    தம + 1

    பதிலளிநீக்கு
  29. // நீங்கள் என்ன சொல்றீங்க நண்பர்களே
    எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே... சொல்றதுக்கு ஒன்னுமில்லை.
    அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.... ஆறு மனமே ஆறு.

    பதிலளிநீக்கு
  30. ஓடுற திருடனுக்கு ஓடிப்போயி அறிவுரை கூறும் ஞாானியை அடுத்த தேர்தலில் நிற்க வைத்தால் என்ன ? என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  31. சிந்த்க்கவும் சிரிக்கக்தூண்டும் பகிர்வு ஆனாலும் திருடனைவிட ஞானி ஓடியது உண்மைக்கு சிந்திக்க வேண்டு!

    பதிலளிநீக்கு
  32. மிக நல்ல பதிவு.
    பொருந்தமான பாடல்களுடன்
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  33. சாமியாராகப் போகிறேன் என்று சொல்லி விட்டு, மீண்டும் சம்சார சாகரத்திற்கே வந்து விட்டீர்கள். இது உலக இயல்பு.
    த.ம.21

    பதிலளிநீக்கு
  34. one of the best postings in the recent times..pl continue with yourgood contributions sir

    பதிலளிநீக்கு
  35. ஏன்னடா அண்ணன் ரஜினி மாதிரி கிளம்பிடறேனு பார்த்தேன். ஆனா end பன்ச்சும் ரஜினி மாதிரி பட்டாசா முடிச்சிருக்கீங்க:)

    பதிலளிநீக்கு
  36. அருமையான பதிவு ! ஞானி துறவு என்றெல்லாம் போய் விடாதீர்கள்... வலை " சித்தராக " தொடருங்கள் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  37. எல்லோருக்கும் ஏற்ற பதிவு. அருமையான கருத்துகளும் பாடல்களும். கதையும் கூடவே குறளும். அமிர்தமான பதிவு. தனபாலன். மிக நன்றி.சஞ்சலத்தில் இருப்போர்க்குச் சரியான அறிவுரை.

    பதிலளிநீக்கு
  38. சரியான நேரத்தில் வந்த நல்ல பதிவு.

    முரட்டுப் பிள்ளைகளும் முட்டாள் பெற்றோர்களும் இருக்கும் வரையில் இப்படித்தான் இருக்கும். ஒருவேளை இந்த இல்லற வாழ்க்கை இதனால்தான் இறை ஞானம் பெற ஒரு குறுக்கு வழியாக இருக்கிறதோ என்னமோ.

    வாழ்த்துக்கள்.

    God bless you.

    பதிலளிநீக்கு
  39. துறவியால் யாருக்கு என்ன பயன்....?

    நீங்கள் சித்தராகவே இருந்துக்கொண்டு தத்துவத்தைச் சொல்லுங்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  40. அழகான பதிவு. இரண்டு நாள் முன்னர்தான் வானொலி நிகழ்ச்சிக்காக துறவு தலைப்பில் பாடல்களைத் தொகுத்தேன். இங்கே பார்த்தால் அதே பாடல்கள்... அருமை. கருத்தும் நன்று. பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  41. தங்களின் ஒவ்வொரு பதிவிலும் கருத்துக்கள் பொதிந்துள்ளன.

    அருமையான ஒரு பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  42. அண்ணா...
    தாங்கள் எழுத வரும் கருத்தையும் அதற்குப் பொருத்தமான பாடல்கள் வரிகளையும் இணைத்து அழகாய் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறீர்கள்... அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் DD சார்!
    நீங்கள் 20 பிப்ரவரி 2014 ல் சிந்தித்த பதிவை
    "கோபம்" குறித்து "செய்கூலி சேதாரம் இல்லாமல்"

    நான் (புதுவை வேலு)
    20 பிப்ரவரி 2015 ல் சிந்த்தித்து "கோபத்தை விட கொடுமை உண்டா?" பதிவை வெளியிட்டு உள்ளேன்!

    பாருங்கள் நண்பரே!
    ஒத்த சிந்தனை, பதிவு ஒரே தேதி,
    ஒரே மாதம் ,ஆண்டு மட்டும் மாற்றம்! .ஏனெனில்!" குழலின்னிசை" துவங்கி 9 மாதம் மட்டுமே அல்லவா ஆகிறது?

    இந்த வகையில் பார்த்தால்? "குழலின்னிசை"க்கும் வழி காட்டிய வார்த்தைச் சித்தர் ஆகி விட்டீர்கள்.
    நினைவூட்டலுக்கு நித்திய வணக்கம் நண்பரே!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  44. சாமியாராக போவதற்கு வேண்டிய கல்வித் தகுதி என்னவென்று தெரியவில்லையே தலைவரே....

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் சகோதரரே.!

    வழக்கம் போல் சிந்திக்க வைக்கும் நல்லதொரு பதிவு.. நாலும் நடந்த பின்தான் வாழ்வின் நிதர்சனங்களை உணர முடிகிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.ஞானியின் சுய நலமில்லாத கதை அருமை..! அனைவருக்கும் ஒரளவாவது அந்த எண்ணம் வந்தால் வீட்டிலேயே துறவியாக வாழ முயற்சிக்கலாம்,என உணர்த்தும் அருமையான பதிவிற்கு பாராட்டுக்கள்..! நல்லதொரு கருத்துடன் ௬டிய பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றிகள். !

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. பாடலின் வரிகள் பொருத்தமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  47. வள்ளுவரின் குறளும் பொருத்தமாகத்தான் இருக்கின்றன.!!!

    பதிலளிநீக்கு
  48. மிகச் சிறப்பான பதிவு டிடி! இதைக் கடந்த வாரம் படிக்க முடியவில்லை.

    ஞானிக்கும், துறவிக்கும் ஒரு சிறு மயிரிழை வித்தியாசம் உண்டுதான் இல்லையா. துறவி இந்த உலக வாழ்க்கையையே துறந்தவர். பொறுப்புகள் அற்றவர்.....ஆனால் ஞானி ஆவதற்கு இல்லற வாழ்க்கையையோ, உலக வாழ்க்கையையோ துறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான். சிறு வயதில் கூட ஞானியாகலாம்....கற்றல் என்பது இருந்தால்.....

    இறுதி வரிகள் அருமை! எப்போதுமே மிகவும் சிறப்பான பதிவுகளைத் தரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  49. டிடி! நீங்கள் துறவியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை...ஹஹஹ ஞானியாகத்தான் பதிவுகள் இருக்கின்றன.!!! ஞானியாகவும் இருந்து பற்றற்று, தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தாலே போதுமே....பற்று இருப்பதால்தான், கோபம், பொறாமை, எதிர்ப்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆணவம், வீணான ஆசைகள் இப்படிப் பல....துறவியாக இருந்தாலும் ஞானம் இல்லை என்றால் வீண்தானே டிடி என்ன சொல்லுகின்றீர்கள்! நீங்கள் ஞானிதான் ஐயா!

    பதிலளிநீக்கு
  50. சிறு திருத்தம்......ஞானியே எஎன்பதற்கு பதில் ஞானிதான் என்று தவறாகைவிட்டது...

    பதிலளிநீக்கு
  51. துறவு வாழ்வு குறித்த அருமையான விளக்கத்துக்கு நன்றி. இல்லறத்தில் இருந்து கொண்டே துறவியாக வாழ்ந்த ஜனகர் இதற்கு முக்கிய உதாரணம்.

    பதிலளிநீக்கு
  52. திருடனைத் துரத்திய ஞானியின் கதை நல்லதொரு நகைச்சுவை.

    முனைவர் கந்தசாமி ஐயா சொல்லியுள்ள கருத்துக்கள் சிந்திக்க வைப்பவைகளாகும். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  53. அருமையான பதிவு சகோதரா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
    அன்புடன் கீர்த்தனா...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.