🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தமிழ்க் கணினியன்...

அனைவருக்கும் வணக்கம்... தமிழுக்குக் கணினிக் கருவிகளை உருவாக்குவதில், எதையுமே எதிர்பார்க்காது பலவற்றை முனைப்புடன் செய்துவரும் நீச்சல்காரன் - திருமிகு ராஜா அவர்களின் பொதுப் பணிக்குத் தமிழ் உலகம்,
தக்க பெருமை சேர்க்க வேண்டும்...


சில மாதங்களாக இங்குப் பல அழகான எழுத்துருக்களை ரசிப்பதற்குக் காரணமே கணினியன் தான்... திருக்குறளால் HTML எனும் பள்ளிக்கூடத்தை இன்றைக்கு வரை படித்துக் கொண்டு, ஏதோ சில வலைநுட்பங்களை செய்து கொண்டிருக்கும் எனக்கு, கணினியன் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வளர்ப்பவர்...! சரி, கடந்த இரு பதிவுகளான ①மனிதம் || ②தலைமை ஆகியவற்றில் கொம்பில்லா குறள்களை எவ்வாறு சரி பார்த்தேன்...? அனைத்து குறள்களையும் வாசித்துத் தேடுவது அந்தக் காலம்... இடையினிலே மனதில் சிந்திக்க வேண்டிய விசயங்கள் பலவற்றைக் கண்டு திணறாமல், கல்லாதது குறளளவு என்று ஆராய்வதும் இந்தக் காலம்... பணம் வரும் வழிகளை மட்டுமே சாப்பிடத் தேடுவதும் படிப்பதும் இந்தக் காலமே...! ஆனால் மற்ற எந்தச் செயல்களுக்கும் உடம்பாலும் அசைவதற்கு வல்லமை பெறாத படியால், இன்றைய நவீன உலகத்தில் கணினியிலும், கைப்பேசியிலும், தொலைக்காட்சி பெட்டியிலும், சில பொத்தான்களை அழுத்தக் கூட, நமக்குப் பிறர் சொன்னால் தான் அறியும் வல்லமையும் வாய்க்கப் பெற்றுள்ளோம்...!? சரி, இனி இன்றைய இளைய தலைமுறை ஆண் குழந்தைகளுக்கும் சில நுட்பங்கள் :-

நம் கொம்பில்லா தமிழ்க் கணினியன் நீச்சல்கார நண்பரின் சொல்லாய்வுக் கருவி சுளகு உதவியது :- சுளகு பதிவில், 1330 குறள்களையும் நகலெடுத்து, சுளகு கருவிப் பெட்டியில் இட்டு விட்டு, அங்குள்ள 'ஓரெழுத்து'ப் பொத்தானைச் சொடுக்கினேன்... கொம்புள்ள எழுத்துக்களை உருவாக்கும் உயிரெழுத்துகளுடன் சேர்ந்த மெய்யெழுத்துக்கள் எல்லாம், ஒரு நொடியில் கட்டம் கட்டி எண்ணிக்கையுடன் காட்டியது...! Ctrl-F சொடுக்கி, மேலே வரும் சிறு பெட்டியில் அவற்றை ஒவ்வொன்றாக இட்டேன்... அழிப்பதும் நீக்குவதும் மாற்றுவதும் என, இந்தக் காலத்தில் எளிதாகி விட்டதால், பளீரென மஞ்சள் வானத்தில் கொம்புள்ள சொற்களைக் காட்டும் குறள்களையெல்லாம் ஒரு சில நொடிகளில் நீக்கினேன்...! கொம்பில்லா குறள்கள் கிடைத்தது...! எதிர்பார்த்தது வந்தவுடன் தேடல் முடிய, ஆனால் அது தவறு என்பதை அடுத்த பதிவில் பேசுகிறேன்...!

"யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே" என்றார் பெரியார்... 36.மெய்யுணர்தல் :- 355. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு | 43.அறிவுடைமை :- 423. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்றார் ஐயன்... அவரவர் சமயம் சார்ந்து எழுதிய அனைவரின் உரையையும் வாசித்தாலும் எழுதுவதில்லை... ஐயனுக்குப் பட்டையும் கொட்டையும் போட்டு ஜாதகம் பார்த்தவர்களும், பொருளில் தான் அறிவு வளரும் என்பது புரியாமல், வேற்று மொழியின் மீது காதல் கொண்டு திணிக்க அலைபவர்களும், திருக்குறளைக் கையிலேயே எடுக்காதவர்கள் எனக் காலம் கடந்து சிறிது அறிகிறேன்...! இப்பேர்ப்பட்ட புல்லறிவாளர்கள் கூட்டம், கூட்டம் போட்டு நம் நாட்டின் பல நூற்றாண்டு கால வரலாற்றை ஆராய (!) ஒரு வல்லுநர் (!) குழு அமைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி...! அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது என்பது கொடூரமான செய்தீ...! இதற்கும் உலகப்பொதுமறையில் ஒரு குறள் உண்டு... அது தான் கொம்பில்லா ⑲-வது குறள்...! எந்தவொரு ஒரு உறுதிப் பொருட்களுக்கும் திருக்குறளில் தீர்வு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்...!

விக்கிப்பீடியாவில், கொம்பில்லா குறள்களைப் பற்றிய தகவல் ஏதும் இருக்காது...! கணினி வாங்கியவுடன், இணையம் என்று இணைப்பு கொடுத்தவுடன், அளவில்லா திருக்குறளின் சிறப்புகள் கொண்ட பதிவுகளைச் சேமித்து வைத்துள்ளேன்...! ஆனால் அவற்றில் திருக்குறளின் எண்கள் மட்டுமே உள்ளதே தவிர, அதன் குறளின் குரல் இல்லை... அதனால் அதைப் பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்து, ஒரு புதிய பாதையில் பயணிக்கிறேன்... 2016 ஆண்டு சுளகு கருவியை அறிமுகம் செய்த கணினியனின் சுளகு பதிவில், என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் கொடுத்துள்ளார்... திருக்குறள் பற்றிய ஆய்வுப் பதிவுகளில் மேலும் பேசுவோம் நண்பர்களே... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. இவருக்கு நான் செய்ய வேண்டிய கடமை அதிகம் உள்ளது. செய்யும் அளவிற்கு வாழ்வில் நான் உயர வேண்டும்.

    பதிலளிநீக்கு

  2. பெரியாரின் பிறந்தநாளான இன்று அவர் சொல்லிய பொன்மொழியையும், ஐயனின் குறளையும் இணைத்தது சிறப்பு ஜி.

    திரு. நீச்சல்க்காரன் அவர்களின் தமிழ்த்தொண்டுக்கு எமது வணக்கம்.

    தொடரட்டும் தங்களது குறளின் குரல்கள்.

    பதிலளிநீக்கு
  3. சகோதரர் திரு.நீச்சல்காரனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ’கணினியன்” அற்புதமான சொல்லாக்கம். கணினியில் திறமை படைத்தவர் என்பதற்கு ஆங்கிலத்தில் கூட இதுபோன்ற சொல் இருப்பதாகத் தெரியவில்லை. நீச்சல் காரன் ஒரு பொக்கிஷம் அவரை நல்ல முறையில் பயன்படுத்தினால் தமிழுக்கு நன்மை. உதய சந்திரன் ஐ ஏ.எஸ் அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு பயன்படுத்தினார். இன்னும் உரிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கொம்பில்லா எழுத்துகள் உள்ள குறட்பாக்களை கண்டறிய சுளகு பயபடுத்திய விதம் சிறப்பு. இத்தகைய திறமைதான் மாணவர்களுக்குத் தேவை;. அவரது சொல்லாய்வுக் கருவி ஒரு எழுத்து ஈரெழுத்து சொல் என பல வகைகளில் பிரித்தறியப் பயன்படுகிறது. அப் பயன்பாட்டை கொம்பு உள்ள எழுத்துகளை கண்டறியப் பயன்படுத்தியது உங்கள் நுண்ணறிவு. தகுதித் தேர்வுகள் இத்தகைய கற்றல் பயன்பாட்டைத்தான் எதிர்பார்க்கின்றன. ஆசிரியர்கள் இத்திறனை வளர்க்க வேண்டும்.முதலில் ஆசிரியர்கள் இத்திறனைப் பெறவேண்டும். இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தித்தான் ஒத்த ஓசை உடைய புதிய சொற்களை கண்டறிந்து பாடல்களில் பயன்படுத்துகிறார் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... சுளகு கருவியில், "பரம்பல்" எனும் பொத்தான் இருக்கிறது... அதைப் பற்றிய விளக்கம் கொண்ட, ஒரு வலைப்பூ பதிவின் இணைப்பு :
      வளவு← இதையும் சொன்ன கணினியனுக்கு நன்றி...

      நீக்கு
  6. அணி கலன் போன்ற பதிவு... அறிந்து கொள்ள வேண்டியவை அதிகம்.. அதிகம்..

    பதிலளிநீக்கு
  7. எதைப்படித்தாலும் நமக்கு தெரிவது சொற்பமே புதிய ப்ளாகரில் லேபெல் எங்கு எப்படிஇடுவது என்பது கூட தெரியவில்லையெ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலது புறம் மேலே Post settings என்று இருக்கும் ஐயா... அதில் முதலில் இருப்பதே Labels தான்... அதைச் சொடுக்கினால், Seperate labels with commas என்பதற்கு மேல் சொடுக்கி, Labels இட வேண்டும்... இன்று முதல் பழைய முகப்புத் திரைக்குச் செல்ல முடியாது... புதியவை சில நாட்களில் பழகி விடும்... ஆனாலும் சற்றே கவனம் தேவைப்படுவதும் உண்மை...

      மாற்றம் ஒன்றே மாறாதது...! ← பதிவையும் புதுப்பித்துள்ளேன்...!

      நீக்கு
    2. நன்றி டிடி அதேபோல் ஷெட்யூல் செய்யவும் கூறினால் நன்றி உடையவனாவேன்

      நீக்கு
    3. ஐயா, முதலில் சரி பார்க்க வேண்டியவை : ① வலைப்பூ முகப்புத்திரை பக்கத்தில் இடதுபுறம் வரிசையாக உள்ளதில் Settings-யை சொடுக்கவும்... ② scroll செய்து கொண்டே வரவும்... அதில் Formatting-ல் Time zone-யை சொடுக்கி, (GMT+05:30) India Standard Time - Kolkata என்பதைத் தேர்வு செய்துவிட்டு, SAVE-யை சொடுக்கி விடவும்... ③ இனி அங்கிருந்து விலகி, Posts-யை சொடுக்கி, வெளியிட வேண்டிய - எழுதிய பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கவும்... ஏற்கனவே Labels இட்டு விட்டதால், அதன் கீழ் Published on என்பதைச் சொடுக்கி, சும்மா ஒருமுறை Automatic என்பதைத் தேர்வு செய்து விட்டு, Set date and time என்பதைச் சொடுக்கினால், இன்றைய தேதியோடு உங்கள் கணினியின் நேரத்தைக் காட்டும்... அவை சரி★ தானே...?

      ④ எந்த நாள் என்பதை நேரடியாகவும் இடலாம் அல்லது அங்குக் காட்டும் நாட்காட்டி மூலமும் தேர்ந்தெடுக்கலாம்... ⑤ இதே போல் அடிக்கோடிட்டுக் காட்டும் நேரத்தையும் மாற்றவும்... ⑥ இரண்டையும் மாற்றியது உறுதியானதுடன், ஆரஞ்சு நிற Publish-யை சொடுக்கவும்... இப்போது Publish post? This will publish this post to your blog on xx/xxxx, xx:xx:xx AM - என்று கேட்கும்... CONFIRM செய்து விடவும்....

      ★ ⑦ எதற்கும் இதையும் செய்து விடுங்கள்... அங்கே Location என்று இருக்கும்... அதைச் சொடுக்கி Search input எனுமிடத்தில், Bengaluru என்று தட்டச்சு செய்து, பக்கத்தில் தேடல் கண்ணாடியைச் சொடுக்குங்கள்... Map-பிற்கு கீழே Location Name என்பதில், Bengaluru, Karnataka, India என்று தானே வந்து விடும்... எது செய்தாலும், அவ்வப்போது தானே சேமித்துக் கொள்வதை Preview-விற்கு இடது புறமுள்ள மேகக்கூட்டத்தில் நடுவே ஒரு டிக் மார்க் (√) வருவதைக் கவனித்துக் கொள்ளுங்கள்... நன்றி ஐயா...

      நீக்கு
  8. நல்ல உழைப்பாளிக்கு நீங்கள் சூட்டிய புகழாரம் அருமை. புருவங்களை உயர்த்தும் அளவிற்கு அவருடைய சாதனைகள் தொடர்கின்றன. இளைஞர்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் அவருடைய பணியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நீச்சல்காரன் திரு ராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பெரியார் சொன்னதை இங்கு குறிப்பிட்டது அருமை.
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்" குறள் பேரன் சொன்னான், சொல்லி அர்த்தமும் சொன்னான் போன வாரம்.

    நல்ல பயனுள்ள பதிவு. உங்கள் உழைப்புக்கும் , குறளின் மேல் உள்ள பற்றுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்க் கணினியன்
    போற்றுதலுக்கு உரியவர்
    உரியவகையில் போற்றப்பட வேண்டியவர்

    பதிலளிநீக்கு
  11. நீச்சல்காரன் திரு ராஜா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. . நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்கி. தங்கள் நண்பரின் தமிழ் தொண்டுகளையும் அறிமுகப் படுத்தியிருப்பது சிறப்பு. வழக்கம் போல இன்றைய குறளமுதமும் சுவையாக உள்ளது. . நிறைய கற்றுக் கொள்ள வழி வகுக்கும் தங்கள் நண்பருக்கும், உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. திரு.ராஜா, கணினியன் மேலும் அங்கீகாரம் பெற வாழ்த்துகள். எங்களைப்
    போன்ற கணினி அறியாதவர்களுக்கு உங்கள் பதிவுகள்
    வளம் தரும்.

    நீங்கள் குறித்துள்ள பதிவுகளையும்
    படித்து அறிய முயல்கிறேன்.
    நன்றி அன்பு தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. நீச்சல்காரன் அவர்களின் தமிழ்த் தொண்டுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நீச்சல்காரன் பற்றி மதுரைத்தமிழன் வலைப்பூவில் வெளியானது.
    தாங்களும் செயல் எடுத்துக்காட்டாக வெளிப்படுத்திவிட்டீர்கள்.
    'வாணி' செயலி, 'நீச்சல்காரன்' வலைப்பூ வழியே நெடுநாளாக நானும் அறிந்தாலும் இலங்கை, யாழ்ப்பாணத்தில் 2019 இல் இடம்பெற்ற விக்கிப்பீடியர் சந்திப்பில் நீச்சல்காரன் அவர்களை நேரில் பழகவும் வாய்ப்பு இருந்தது.

    நீச்சல்காரனின் தன்னம்பிக்கையும் நிகழ்நிரலாக்க ஆற்றலும் 'தமிழ்க் கணினியன்' என்ற உயர் நிலைக்கு அவரை உயர்த்தி இருக்கு. நிகழ்நிரலாக்கம் என்பது கணிதப் பிணக்குகளை வைத்துச் செயலியாக்க இலகுதான். தமிழில் எழுத்துப் பிழை, சொற்பிழை, சந்திப் பிழை, உரை மதிப்பீடு எனச் செயலியாக்குவது என்பது இலகுவானதல்ல. அதற்கு நிகழ்நிரலாக்க இலக்கணம் தெரிந்து இருந்தும் தமிழ் இலக்கணம் முழுமையாகக் கற்று இருந்தும் பயன்படுத்தும் நுட்பம் (Applying Technique) இறுக்கமானது; அதைப் பட்டறிந்து (அனுபவித்து) வெளிப்படுத்தத் தனித்திறமை வேண்டும். அத்தகைய பெரிய அறிஞர் நீச்சல்காரன் அவர்களை; ஒன்றிரண்டல்லப் பல செயலிகளை ஆக்கித்தந்த நீச்சல்காரன் அவர்களை 155 நாடுகளில் வாழும் தமிழரும் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல்காரன் ஆக்கித்தந்த செயலிகள் தமிழுக்குச் சிறப்பு. அவர் தமிழுக்கு மேலும் பல செயலிகளை ஆக்கித்தருவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பது போன்று எனக்குமுண்டு.

    உலகெங்கும் வாழும் தமிழர் தரும் ஊக்கப்படுத்தலும் ஒத்துழைப்புமே நீச்சல்காரன் அவர்களிடம் இருந்து தமிழ் வளம் பேணத் தேவையான செயலிகளை ஆக்கிப்பெற உதவும். எனவே, நாம் எல்லோரும் நீச்சல்காரன் அவர்களுக்குத் தோள் கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதமான கருத்துரை... தமிழின் சிறப்புகளை சுவாசித்தவர்கள் மட்டுமே கணினியன் போல் செய்யவே முடியும்... தமிழ்ப் பதிவுகள் எழுதும் அனைவரும், அவரின் நுட்பங்களைப் பயன்படுத்தி, அதன் சிறப்புகளை பகிர வேண்டும் என்றும் ஓர் விருப்பம்... மிகவும் எதிர்பார்த்த கருத்துரை... நன்றி...

      நீக்கு
  16. நல்லதோர் பதிவு. நீச்சல்காரன் அவர்கள் செய்துவரும் பணி மகத்தானது. அவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    தொடரட்டும் அசத்தலான உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  17. தமிழ்க் கணினியன் நீச்சல்காரன் திரு ராஜா அவர்கட்கு பாராட்டுகள்! அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி!

    பல நூற்றாண்டு கால வரலாற்றை ஆராய (?) அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் (!) குழுவைக் கலைக்க சொல்லி 32 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.