🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



செய்கூலி, சேதாரம் இல்லாமல்...!

வணக்கம் நண்பர்களே... கிளி போலப் பேசு... இளங்குயில் போலப் பாடு... மலர் போலச் சிரித்து... நீ குறள் போல வாழு...! மனதோடு கோபம்-நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும் (படம் : நம்நாடு) ஆமா, போன வாரம் குழந்தையை அவங்களுக்கான தள்ளுவண்டியிலே ரோட்டிலே உட்கார வைச்சி கூட்டிட்டு வரும் போது, ஏதோ பேசிக்கிட்டே வந்தேயாமே... சொன்னா தான், கோபத்தை வரவழைக்க மாட்டேன்...


ஓஹோ...! கோபம் வரும் போது, மேலே படத்தில் உள்ள மாதிரி கண்ணாடியில் உன்னைப் பார்த்துத் திட்டுவதும், அதனால் கோபம் குறைந்து திருந்துவதும் உன்னால் தான் தானே மனமே... ஹிஹி... உன்னைத் தவிர யார்கிட்டேயும் கோபிக்க முடியுமா...? கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்ன்னு சொல்லிகிறாங்க... ஆனால், கோபம் தனக்குள் காட்ட வேண்டும்... அதனால் என்ன பலன் என்று நாளாக நாளாகப் புரிந்து விடும்... மனப்பக்குவம் வருவதற்கு மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் உண்மை பேசுவது உட்பட அனைத்தும் தானாகவே மாறும்... அன்றைக்கு..........

குழந்தை திடீரென்று "வீல்வீல்" என்று அழுக ஆரம்பிருச்சி... நான், "DD சும்மா வா; DD பொறுமையா வா; DD சத்தம் போடாம வா; DD டென்சன் ஆயிராதே"ன்னு சொல்லிட்டே வந்தேன்... வழியில் பார்த்த பெரியவர், "என்னங்க இது, குழந்தை பேரு DD-யா...? அதுகிட்டே 'பேசாம வா, சத்தம் போடாம வா' அப்படின்னு சொன்னா, அது அழுகையை நிறுத்திடுமா...? அந்தப் பச்சிளங் குழந்தைக்கு என்னங்க தெரியும்...? முதல்லே தூக்குங்க" அப்படின்னார்... அதற்கு நான், "DD-ன்னு எங்கள் Blog ஸ்ரீராம் ஐயா வலையுலகில் வைத்த பெயர், குழந்தை கத்தி கத்தி அழுகிறதைப் பார்த்து, எனக்குக் கோபம் கோபமாக வருது, அதான் என் கோபத்தை அடக்க அப்படிப் பேசிக் கொண்டே வந்தேன்... இதோ வீடு பக்கம் தான்..."-ன்னு சொல்லிட்டு, இதோ இப்போ நீ நினைக்கிற பாட்டை பாட்டிட்டு வந்துட்டேன்... ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்... அன்பு நன்றி கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம்... இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்... (படம் : ஆண்டவன் கட்டளை)

ஆக, கோபம் வந்தா உனக்குள்ளே சொல்லி அல்லது மனதில் பாட்டுப் பாடி, சூழ்நிலையை மாத்திக்கிறதையும் வாசகர்கள் அறிய ஒரு கதை மூலம் சொல்லிட்டே... ஆனா, மேலே சொன்னவை உண்மையிலே நடந்து, நீ கோபத்திலே இருக்கும் போது, வழியிலே ஒரு சிறுவன் ஏதாவது கிண்டல் பண்ணியிருந்தால், அடிச்சிட்டு வந்திருப்பேன்னு நினைக்கிறேன்...

நம்ம மகாத்மா அவர்கள் ஒருமுறை தன் சீடர்களுடன் பம்பாயில் ஒரு பணக்கார வீட்டில் தங்கியிருந்தார்... அனைவருக்கும் சமையலறையில் பிரமாண்டமான விருந்து தயாராகிக் கொண்டிருந்தது... அவரது சீடர்களில் ஒருவரான சுவாமி ஆனந்தர் சமையலறை வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்... அப்போது ஒரு சிறுவன் சுகாதாரக் குறைவாக நடந்து கொண்ட உடனே சுவாமி 'ஆ' கோபப்பட்டு "பளார்" கன்னத்தில் ஒரு அறை விட்டார்... கன்னம் வீங்கி விட்ட அந்தச் சிறுவனின் 'ஆ' அலறல் காந்திஜி காதுகளுக்கு எட்டியது... சுவாமியைக் கூப்பிட்டு, "இதே ஒரு பெரியவர் செய்திருந்தால், இப்படிச் செய்வீர்களா...? முதலில் சிறுவனிடம் மன்னிப்பு கேளுங்கள்" என்றார்... அவரும் அதன்படி கேட்கச் செல்லும் போது, அங்குள்ளவர்கள், "நீங்கள் எவ்வளவு பெரிய துறவி, ஒரு வேலைக்கார சிறுவனிடம் மன்னிப்பு கேட்பதா...? வேண்டாம், நாங்கள் சிறுவனைச் சமாதானப் படுத்துகிறோம்" என்றனர்... மாலை பிரார்த்தனை முடிந்தவுடன், சுவாமியிடம் விவரம் அறிந்த பின், "குற்றம் இழைக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்பது கூட, அவருக்கு நாம் செய்யும் சிறு பரிகாரம் தான்... மற்றவர்கள் சொன்னதற்காக நீங்கள் மாறினால், ம்... நீங்கள் எங்கள் குழுவிடமிருந்து விலகிக் கொள்ளலாம் என்றார் காந்திஜி... உடனே சுவாமி சிறுவனிடம் சென்று மன்னிப்பு கேட்டதைக் கண்டு மகிழ்ந்தார் மகாத்மா... கோபம் காக்கப்படவே கூடாது... அதில் சிறுவர் - பெரியவர், ஏழை - பணக்காரர், படித்தவன் - படிக்காதவன், இன்னும் பல பேதங்கள் எதற்கு...?

செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற. (குறள் எண் 302)


துறவிக்கு 250வது குறள் தெரியலே... கோபம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்... இப்போ எனக்கொரு சின்ன சந்தேகம் வந்துருச்சி...! செய்கூலி, சேதாரம் இல்லாமல் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது...? வள்ளுவரை கூப்பிடாம சொல்லு... எனக்கும் தெரியும்... சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லும் என்றால், கோபம் யார் மீது வருகிறதோ-அவரையும், கோபம் யாருக்கு வருகிறதோ-அவரையும் கொல்லும்... அதனால் தான் கேட்கிறேன்... செய்கூலி + யாருக்கும் சேதாரம் இல்லாமல், கோபத்தை வெளிப்படுத்துவது எவ்வாறு...?

கோபம் வருவதைத் தடுக்க முடியாது... இது எல்லோருக்கும் தெரியும்... ஆனானப்பட்ட தவசீலர்களுக்கே கோபங்கள் வந்து, அவை சாபங்களாக உலாவிக் கொண்டிருக்கின்றன - புராணங்களில்...! ஆனால் வருகின்ற கோபத்தைப் பாதகமில்லாமல், சாதூர்யமாக எப்படி வெளியேற்றுவது...?

கேள்வி கேட்டா எப்படி கேள்வி கேட்கலாம்...? "என்ன சின்னபிள்ளத்தனமா இருக்கு...!" எல்லோருக்கும் கோபம் வருவது ஒருநொடிப் பொழுது தான்... அது வந்த வேகத்திலேயே வீரியம் குறைந்து போகும்... அந்த வீரியத்தை வரும் போதே மட்டுப்படுத்தி எப்படி வெளியேற்றுவது...? என்பது தான் கேள்வி...

சிலரைப் பார்க்கலாம்... கோபம் வந்து விட்டால் "மூசு மூசு" என்று அழத் தொடக்கி விடுவார்கள்... "என்ன...? என்ன...?" என்று கேட்டால் எதுவும் சொல்ல மாட்டார்கள்... சிலருக்குக் கோபம் வந்தால், சின்ன வயதில் கற்று வைத்திருந்த எல்லா (கேட்ட) கெட்ட வார்த்தைகளையும் ஒரு பக்கமாகத் திருப்பி, சப்தம் போட்டுக் கொட்டித் தீர்த்து விடுவார்கள்... சிலர் கோபம் வந்தவுடன், 'குடி' உட்பட தங்களை தாங்களே உடலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொள்வார்கள்... இப்படி எல்லாம் செய்வதால் கோபம் வருவதை மறைத்து, தடுத்து விட்டதாகக் கூற முடியாது... தரையில் ஓங்கி குத்துகிறவனுக்குக் கைவலி இருக்கும், அது போலக் கோபம் என் நண்பன், அதுவே என் குணம்ன்னு "பெருமை"ப்படுவர்களுக்கு, வேதனை அனுபவத்திலிருந்து தப்பவே முடியாதுன்னு நம்ம ஐயன் என்ன சொல்கிறாரென்றால்...

சரி சரி... அது குறள் எண் 307; அழுதாலும், துன்புறுத்திக் கொண்டாலும் அதில் ஒரு வகை சேதாரம் இருக்கு... சத்தம் போட்டுத் திட்டினால் கூட, அடுத்தவருக்குப் பாதிப்பு இருக்கு... அதை நெனச்சி பிறகு நொந்தும் பிரயோசனமில்லை தான்... சின்ன சின்ன எரிச்சல் வந்து, அது எப்படி கோபம் ஆகிறதுங்கிறதையும், எதையும் அறிந்து கொள்ள ஆர்வத்தை விட, அவசரத்தை விட... பொறுமை மிகவும் அவசியங்கிறதையும் நான் மட்டுமில்லே; இப்போ படிக்கறவங்களும் தெரிஞ்சிட்டு இருப்பாங்க;

எனக்கு வர்ற கோபத்திற்கு... செய்கூலி, சேதாரம் இல்லாமல்...!
பதிலைப் சொல்லுப்பா...! ஓடிருவேன்...! ஹா... ஹா...

குறள் சொல்லக் கூட முடியலே...! ம்... இன்றைக்கு ரசிக்கும் நிலைமையிலே இல்லேன்னா குழந்தை கூட முறைக்குது...! ஹா... ஹா... சரி கேளு : ஆபிரகாம் லிங்கம் அவர்கள், "உங்களுக்கு யார் மீதாவது, எந்த செயல் மீதாவது கோபம் வந்தால், உடனே வெளிப்படுத்தி விடாதீர்கள்... ஒரு பேனாவையும், பேப்பரையும் எடுங்கள்... மனதில் தொங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளை எல்லாம் பேப்பரில் எழுதி தீர்த்து விடுங்கள்" என்கிறார்... பிறகு செய்கூலி, சேதாரம் இல்லாமல், எல்லாம் சரியாகி விடும் மனமே...!
நண்பர்களே... இது ஒரு நல்லவழி போலத் தோன்றுகிறதா...? தொடர்ந்து அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு (Diary) எழுதுபவர்களுக்கு இது தெரிய வாய்ப்புண்டு... எழுதி வைத்த பழைய நமது செயல் குறிப்புகளைப் படிக்கும் போது, சுவாரஸ்யமும், சிரிப்பும், ஏன் திருந்தவும் செய்யும்...! கோபம் என்பது தற்கொலை போல ஒரு நிமிட பைத்தியக்காரத்தனம்... ஒரு நிமிடம் கடந்ததும், நாம் கோபப்பட்டுச் செய்தவை எல்லாம் நமக்கே அபத்தமாக தோன்றும்... அபத்தங்களை எழுதி வைக்க, எழுதி வைக்க அபத்தங்களே தோன்றாமல் கூடப் போகும்...! என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே...?

சரி தானே...? இந்தக் குணம் இருந்தால் கோபமே வராது....! அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கோபத்தை குறைக்க நீங்க சொன்ன வழி...செய்க்கூலி சேதாரம் எல்லாம் போக 916 தங்கம்தான் ,உங்கள் தளம் இதனால் ISO 9௦௦1 விருது பெறுகிறது !
    த ம 3

    பதிலளிநீக்கு
  2. எரியும் கொள்ளிக் கட்டையை மேலே தூக்கி எறியச் சொன்னார் குரு. மேலே சென்ற கொள்ளிக்கட்டை கொளுந்து விட்டு எரிந்தது. கீழே தண்ணீர் அருகே வரும் வரையிலும் காற்றில் பட்ட தீப்பிழம்பின் வேகம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. தண்ணீரைத் தொட்டதும் புஸ் என்ற சப்தமாகி வெறும் கரிக்கட்டையாக மாறிவிட்டது. அதன் வேகம் இயல்பு எல்லாமே மாறிவிட்டது.

    நம் மனதில் உள்ள பொறாமை, எரிச்சல், கோபம் எல்லாமே இப்படித்தான். மனம் எப்போதும் தண்ணீர் போல இருந்தால் எது தாக்கினாலும் பாதிப்பு உருவாகாது.

    அனுபவங்களை உள்வாங்கினால், பயிற்சியை அக்கறையுடன் கவனித்து நம் குணத்தை மாற்றிக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

    நல்ல விதைகளை ஊன்றும் உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அண்ணா.

    நீங்கள் சொல்வது உண்மைதான்
    கோபம் என்பது தற்கொலை போன்றது.....
    போபம் வரும் போது நம் அறிவுக்கு வேலைகொடுக்க வேண்டும்....
    நல்ல கதை மூலம் எடுத்துக்காட்டியுள்ளிர்கள்
    இதை படிப்பவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யும் என்பதில் ஐயமில்லை...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்
      அண்ணா.

      த.ம 5வது வாக்கு

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  4. உங்கள் கட்டுரையை பார்த்து கோபம் வரும் குணம் படைத்தவர்களின் குணமும் மாறி அமைதியோடு கருத்துரை தருவார்கள் .உங்கள் மீது கோபமில்லை என் மீதே ஏனக்கு கோபம் வருகிறது உங்களைப் போல் அருமையாக எழுத முடியவில்லையே என்பதனால் ஆனாலும் நீங்கள் சொல்வது அறிந்து புரிந்து பொறுமை வந்து மனம் அமைதி அடைகின்றது ,உங்கள் தளதத்தைப் பார்த்து வளர்த்துக் கொள் உன் அறிவை என்று மனம் சொல்வதால் .வாழ்த்துகள் கோபத்தை அடக்க வழி சொன்னமைக்கு . அன்புடன் நன்றி

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே!
    கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகி விட வேண்டும் இல்லையேல் மௌனம் சிறந்தது. என்பது என் கருத்து.
    வழமை போல் நல்ல பதிவு ! வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  6. இந்த அவசரமயமான கோப உலகத்தில் அவசியமான பதிவு டிடி

    @ஜோதிஜி தங்கள் கருத்துக்களை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  7. அருமையான கருத்துகள். அதற்காகக் கோர்த்த சம்பவங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளன. கோபத்தால் சிதைந்த உறவுகள் தான் எத்தனை. படிக்கப் படிக்க உயர்ந்த கருத்துகள் உள்ளத்தில் தோன்றுகின்றன. மிக நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  8. கோபம் பற்றி தங்களின் கோபம் நியாயமே...ஆனால் கோபம் இல்லையென்றால் வாழ்க்கை உப்பில்லா பண்டம் போன்றது ...என்ன நான் சொல்றது?

    பதிலளிநீக்கு
  9. நல்லாச் சொன்னீங்க...ஆனா யாரு உங்கள குறள் சொல்ல விடமாற்றாங்க...எனக்குப் பயங்கர கோவம் வருது..அச்சச்சோ :)
    மனசாட்சிகிட்ட அடங்கு அடங்கு என்று சொன்னாலும் துடிக்கிறதே..என்ன பண்றது...
    நீங்கள் ஏற்கனவே படித்த ஒரு கதை தான்... http://thaenmaduratamil.blogspot.com/2012/10/kobam.html

    பதிலளிநீக்கு
  10. எனக்குக் கூட அதிகமா கோவம் வரும். என்ன செஞ்சும் கட்டுப் படுத்த முடியலியே!

    பதிலளிநீக்கு
  11. கோபத்துக்குப் பிறகு, சில நாட்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இதற்காகவா கோபப்பட்டோம் என்று தோன்றும். கோபம் இருக்கக்கூடாது என்று நினைப்பது சுலபமாகத்தான் இருக்கிறது. செயல்முறைப் படுத்துவதுதான் சிரமமாக உள்ளது. சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் பகிர்வுகளை படித்து முடித்ததும் பிரசங்கம் கேட்ட மகிழ்வு கிடைக்கிறதுங்க... கோபம் நமக்கு கிடைத்த சாபம்..

    பதிலளிநீக்கு
  13. கோபத்தை கட்டுபடுத்த எளிய வழிமுறைகள் ..... சூப்பர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தான்..நன்றி

    பதிலளிநீக்கு
  14. கோபத்தைக் குறைக்கும் வழியைத் தெரிந்தால் எல்லாமே தூசுதான்

    பதிலளிநீக்கு
  15. கோபம் வருது ..
    அது எது மேல யார் மேல ?
    பல தருணங்களிலே
    தன் மேலேயே வருது.

    டி.டி. எல்லாத்தையுமே சொல்லிப் போட்டாரு.

    பாக்கி ஒன்னு கூட இல்ல. இருந்தாலும்
    ஒன்னு சொல்லணும்
    எல்லா தீயவைகளும் மற்றவர்களை அழிக்கும்.
    ஆனா, கோபம் ஒன்னு தான் தன்னையே அழிக்கும்.

    வள்ளுவன் சொல்லியிருக்காரு இல்லையா ..

    இன்னொன்னு சொல்லணும்.
    நம்ம போற வழிலே
    எதிர்பட்ட குரைக்கிற நாய் எல்லாத்து மேலேயும்
    கல்லை விட்டு எரிஞ்சுகினே இருந்தோம்னா.
    நம்ம எங்கே போகணுமோ அது இன்னும்
    தூரமா போய்க்கினு தான் இருக்கும்.

    அதுனாலே, நம்ம நம்ம வழி எது
    அப்படின்னு சரியா பார்த்துகிட்டு
    போய்க்கினே இருங்க.

    நம்ம இலக்கு என்ன அப்படிங்கறது
    ஸ்ட்ராங் ஆ இருந்துச்சுன்னா
    அதிக கோபம் வழிலே வர்றதுக்கு
    சான்ஸ் இல்லீங்க.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. கோபப்படுவதால் நாம் இத்தனை நாள் செய்திருக்கும் நல்ல செயல்கள் எல்லாம் மறையும். சேதாரம் இதுதான். உறவுகள் முறிவது நமது கோபத்திற்கு நாம் கொடுக்கும் செய்கூலி என்று கொள்ளலாம்.

    கோபம் தவறுதான் ஆனால் வந்துவிடுகிறதே என்ன செய்வது? மனம் அடங்காதவரை கோபம் வரத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு
  17. கோபத்தை பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் வெளிப்படுத்த நம் மனதில் இருப்பதை அப்படியே ஒரு தாளில் எழுதி விடுவது என்பதும் நல்ல வழிமுறைதான். நாம் எழுதியதை நாமே படித்துப் பார்க்கும்போதுதான் நமக்குள் இத்தனை வக்கிரமம் இருக்கிறதா என்பதே தெரியவரும். கோபமும் தன்னால் வடிந்துபோகும். நான் சில தினங்களுக்கு முன்பு எழுதிய பதிவும் கோபத்தை பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் அதையே உங்கள் பாணியில் மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். இது பலரையும் சென்று அடைந்திருக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. "இதுக்கெல்லாம் கோபப் படலாமா" என கோபப்படா விட்டால் நம்மை பைத்தியகாரனாக பார்க்கிறார்களே அதுக்கு என்ன செய்ய

    பதிலளிநீக்கு
  19. நல்ல முறைதான் . முயற்சித்துப் பார்க்கிறேன் .

    பதிலளிநீக்கு
  20. கோபப்படாதீங்க என்று பொறுமையாக உங்கள் பாணியில் சொல்லி, திருக்குறளும் அதற்கு உதாரணமாக சொல்லி, தங்கத்துக்கு மட்டும் தானா கைக்கூலி சேதாரம் எல்லாம்… தங்கத்தை விட மேலான மனித உணர்வுகள் எப்படி கோபத்தில் தன் நிலை மறந்து தன்னை வருத்திக்கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் வருத்தி, கோபத்தில் தன்னிடமிருந்து வெளிப்படும் சொற்கள் நம்மையே சிறுமைக்கொள்ளவைத்துவிடும் என்ற அபாயத்தையும் விளக்கி, அன்னத்தை சிந்தினால் அள்ளிவிடலாம், ஆனால் கோபத்தில் மனம் வருந்தும்படியான வார்த்தைகளை சிந்திவிட்டால் அள்ளமுடியாது, திரும்ப பெறமுடியாது, தீராத வடுக்களாக மாறி மனதில் நின்று தைத்துவிடும்.. பின்னொரு நாளில் என்றாவது எதிர் எதிர் சந்திக்க நேர்ந்தால் புன்னகைக்கும் முகமாக இல்லாது நாம் பேசிய வார்த்தைகளே பாம்பாய் கொத்தியதை தான் நினைக்கவைக்கும்..

    ஒருவர் சொன்னார் கோபம் வரும்போது நீங்க சப்பாத்திக்கு மாவு பிசையும்போது நல்லா திட்டி அடிச்சு அந்த மாவை பிசைஞ்சு உங்க கோபத்தை எல்லாம் அதில் காட்டிடுங்க. உங்க மனசு லேசாகிவிடும் என்று. ஏனெனில் மனதில் உதிக்கும் கோபத்தை கூட வெளிப்படுத்திவிடுவது நல்லது. இல்லையென்றால் உள்ளே இருந்து அது நம்மை அழித்துவிடும் நோயாய் இறுகவைத்து நம்மை தவிடுப்பொடியாக்கிவிடும் என்றார். அவர் சொன்னது சரி.. ஆனால் கோபத்தை வெளிப்படுத்தும் முறையாக அவர் சொன்னது தான் இடறியது. நம் குடும்பத்து உறுப்பினர்கள் உண்ணவேண்டிய உணவை இப்படி பிறர் மேல் உள்ள கோபத்தை அதில் காட்டி அடித்து இம்சித்து அந்த உணவை சமைத்துக்கொடுத்து அவர்கள் அதை சாப்பிட்டால் அவர்கள் நிலை?

    கோபம் நமக்கு எத்தனை விதமாக தீங்கிழைக்கிறது என்பதை பொறுமையாக சொல்லி இருக்கீங்க டிடி. நல்லாத்தான் இருக்குப்பா பெயர். ஒரு பேப்பர் எடுத்து கோபம் வரும்போது நம் உணர்வுகளை முழுமையாக அதில் எழுதி வைத்துவிட்டு ஒரு வாரமோ ஒரு மாதமோ ஒரு வருடமோ எடுத்து வாசித்தால் நமக்கே சிரிப்பு வந்துவிடும்.. இவ்ளோ கோபமா நாம் பட்டோம் என்று நமக்கே வெட்கம் கூட வரலாம். இந்த வழி மிக அருமையானதுப்பா.

    அருமையான பகிர்வு.. அன்பு நன்றிகள் கோபம் தீர்க்க சொன்ன வழிக்குப்பா..

    பதிலளிநீக்கு
  21. கோபத்தைக் கொஞ்சம் ஒத்திப் போட்டால் போதும். நீர்த்து விடும். கோபத்தை அடக்கிக் கொண்டால் வியாதிதான் வரும். கோபத்தில் வெடிக்கும் ஒரு வார்த்தையின் வீச்சு உஅவுகலை, நட்புகளை தூர விரட்டி விடும்! அதற்கு பதிலாக, கோபம் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும். யார் என்ன செய்தாலும் அது அவர் இயல்பு என்று ஒதுங்கிப் போனால் போதுமே! கொட்டும் தேளை தண்ணீரிலிருந்து காப்பாற்றும் முனிவர் போல! கொஞ்சம் கஷ்டம், பழக்கத்தில் வந்து விடும். நான் இந்தவகையில் 60 சதவிகிதம் முன்னேறியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

    என்னைக் குறிப்பிட்டதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி!

    பதிலளிநீக்கு
  22. அருமையான கருத்துகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. தற்கொலை எண்ணம் இருக்கே - அது
    சில மணித்துளிகள் வரை
    ஆட்டம் போடும் - அதை
    கடந்து விட்டால் வாழ்வு தான்!
    தற்கொலையை
    கோபத்துக்கு நிகராக்கி - அந்த
    சில மணித்துளிகள் நேரத்தை
    முறையாகக் கடக்க - தந்த
    நல்வழிகாட்டலை வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  24. கோபப்படாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சுட்டிக் காட்டியுள்ள குறள்கள் மற்றும் விளக்கங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  25. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  26. அருமையான நீதிக்கதைகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அதனால் தானோ என்னவோ ........

    தங்களிடமிருந்து கடைசி நாளான இன்று, இதுவரை ’VGK 05 சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான விமர்சனம் ஏதும் வராமலேயே இருந்தும் எனக்குக் கோபமே வரவில்லை, DD Sir.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  27. கோபம் வருவது இப்பொழுது வயசு காரணமாகக் குறைவு
    வந்தாலும் பெரும்பாலும் அடக்க முயல்வேன்
    சில வேளைகளில் வார்த்தைகளைக் கொட்டிவிடுவதுண்டு
    உங்கள் ஆலோசனை நன்று

    பதிலளிநீக்கு
  28. கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை தான் அண்ணா

    பதிலளிநீக்கு
  29. "//ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்//" அருமையான தத்துவம்.

    பதிலளிநீக்கு
  30. சகோதரி இனியா சொன்னது போல், கோபம் வந்தால், மௌனமாக இருந்து விட்டால் நல்லது என்று நினைப்பவன்.

    ஆம் உண்மை தான், நாம் கோபப்பட்டு செய்தவையெல்லாம், பின்னாடி யோசித்தால் நமக்கே ஆபத்தாமாக தான் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  31. மிக மிக அருமையானதொரு பதிவு! கோபம் தற்கொலைக்குச் சமம்தான் தாங்கள் கூறியது போல! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றும் சொல்வது உண்டுதானே!

    நம் கோபத்தில் தெரித்து விழும் வார்த்தைகள் மற்றவர் மனதைப் புண்படச் செய்யும் போது அது ஒரு கொலைக்குச் சமம் ஆகும்! கோபத்தில் தெரித்து விழுந்த வார்த்தைகளால் இருவரைக் கொன்ற பிறகு, அதைப் பொறக்க முடியுமா?

    Sorry cannot make a dead man alive!

    ஜோதிஜியின் பின்னூட்டக் கருத்து அழகாக ரசிக்கும்படியாக உள்ளது!

    வாழ்த்துக்கள்! DD! தங்கள் எல்லா பதிவுகளுமே மிகவும் கருத்துச் செறிவுள்ளதாக, பயனுள்ளதாக இருக்கின்றது!

    பதிலளிநீக்கு
  32. ரௌத்திரம் பழகுன்னு பாரதியாரே சொல்லியிருக்கார்னு யாரும் இன்னும் கமெண்ட் போடலியே..!!

    பதிலளிநீக்கு
  33. கோபம், தள்ளிப் போடுதல். தூரநடத்தல். வேறு வேலைகள் சிந்தனைகளை மாற்றல், தேகப்பயிற்சி செய்தல் என்று பல வழிகளில் கோபத்தை திசை திருப்பலாம். வந்த வேகத்தில் அடங்கிவிடும்.
    தங்கள் கட்டுரையும் மிகச் சிறப்பு . இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்

    பதிலளிநீக்கு
  34. குறை காண்பதை விட்டுவிட்டால் கோபம் வராது.
    விருப்பு வெறுப்பை விட்டுவிட்டால் கோபம் வராது.
    அகந்தையை விட்டுவிட்டால் கோபம் கிட்டவே நெருங்காது.

    பதிலளிநீக்கு
  35. கோபம் என்னும் கிருமியை நாசம் செய்வதற்கு இன்னும் ஒன்று கண்டுபிடிக்கவில்லையே என்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆபிரகாம் லிங்கன் சொல்லியிருக்கும் வழி, நல்ல வழி தான். யாருக்கும் சேதாரம் வராது. நன்றி DD சார், கொபத்ஹ்டைத் தடுக்கும் வழியைக் காண்பித்ததற்கு

    பதிலளிநீக்கு
  36. கோபத்தைப் பற்றி சாந்தமாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை!

    நன்றி...

    பதிலளிநீக்கு

  37. //அபத்தங்களை எழுதி வைக்க எழுதி வைக்க அபத்தங்களே தோன்றாமல் கூட போகும்//

    நூற்றுக்கு நூறு உண்மை.

    பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  38. அவசியமான, அருமையான பதிவு.

    சொல்லும்போது கேட்க நல்லாதான் இருக்கு. கட்டாயம் கடைப்பிடிக்கணும்னுதான் தோணுது. ஆனா, செயல்படுத்த நினைக்கும்போதுதான் கஷ்டம்தெரியுது.

    பதிலளிநீக்கு
  39. எத்தனை படித்தாலும் மனிதனின் இயல்பை மாற்றிவிடமுடியாது. அவசியமானதற்கு கோபப்பட்டே ஆகவேண்டும். 'ஆறு மனமே ஆறு' எனபதெல்லாம் எல்லா நேரங்களிலும் ஒத்து வராது.

    பதிலளிநீக்கு
  40. ஆறுவது சினம் கூறுவது தமிழ்
    செய்கூலி சேதாரம் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் தரும் DD -க்கு வாழ்த்துக்கள்
    , நன்றிகள் . த ம 18

    பதிலளிநீக்கு
  41. கோபம் இன்னும் குறையுது இல்லை அண்ணாச்சி ஒருவேளை வயது அப்படிபோல ஹீ இனி நானும் பேப்பரில் கிறுக்க முயல்கின்றேன் பகிர்வுக்கு நன்றி அருமைக் கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  42. கோபத்தை பற்றி விளக்கீட்டீங்க.....!!

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  43. கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் ஆறப் போடலாம். பிறகு வார்த்தைகளை உதிர்த்தால் கண்டிப்பாக வீரியம் குறைந்திருக்கும். அல்லது வேறுவேலையில் கவனம் செலுத்தலாம். முக்கியமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவது நல்லது. ஆனால் முடியமாட்டிங்குதே !!

    நல்ல விளக்கங்களுடன் கூடிய கருத்துக்கள் செறிந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  44. மன்சன் கோச்சுக்கினா இன்னா பண்ணி அத்த சரி பண்ணிக்கணும்னு சொம்மா வெயக்கு வெயக்குன்னு வெயக்கிட்ட அண்ணாத்தே...
    அந்தப் படம் படா சோக்கா கீதுபா...!

    பதிலளிநீக்கு
  45. கோபத்தால் கெட்டுப்போன உறவுகள் இறுதிவரை உள்ளத்தை முள்ளாகக் குத்தி ரணப்படுத்திக்கொண்டே இருக்கும்! அருமையான பகிர்வு. வாழ்த்துகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  46. அருமையான பதிவு. மிகவும் அவசியமான ஒன்றை அழகாய் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  47. அவசியமான ஒன்றை அழகாய் உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்.

    அருமையான பகிர்வு சகோதரரே...

    ஆறுவது சினம்...

    பதிலளிநீக்கு
  48. இந்தக் கட்டுரையைப் படித்தபின் கோபம் நம் திசைக்கே தலை வைத்துப் படுக்காது என்று நினைக்கிறேன்…

    பதிலளிநீக்கு
  49. கோபம் தவிர்க்க வேண்டும் என்பதை உங்கள் பாணியில் அழகா சொல்லியிருக்கீங்க! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  50. எளிமை...இனிமை..!

    மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து உபதேசங்களும், அறிவுரைகளும் தங்கள் வலைத்தளத்திக் கொட்டிக்கிடக்கிறது. அளப்பரிய பணிக்கு வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி.

    எனது வலைத்தளத்தில் இன்று:

    சாம்கேலக்சி நோட் 3 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த சுருக்கமான தகவல்கள்

    பதிலளிநீக்கு
  51. காந்தியின் ‘கொள்கைப் பிடிப்பு’தான் அவரை மகாத்மா ஆக்கியது.

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  52. வழமை போல் ஆழமான அர்த்தமுள்ள பதிவு ..!

    வாழ்த்துக்கள் தனபாலன் சார் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  53. சிறப்பான இந்த ஆக்கத்தினைப் பார்க்கும் போது அதை எழுதிய தங்களின் அன்பு உள்ளத்தையும் உணர முடிகிறது .சில சமயங்களில் கோபம் வரும் வரும் போதெல்லாம் இறைவனது சித்தம் மனிதனது வாழ்வு என்று ஆழமாக
    உணர்வினைப் படர விட வேண்டும் சகோதரா அப்போது கோபம் அடங்கி
    மனதில் அமைதி பிறக்கும் .குறளும் பொருளும் வெகு சிறப்பாக உள்ளது .
    வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  54. இரு சக்கர வாகனத்தில் பயணம். சாலையின் வலப் பக்கம் திரும்ப வேண்டும். ஒளி ஒலிக் குறிப்புடன் திரும்ப முயற்சிக்கையில் அதே வலப் பக்கமிருந்து அசுரன் ஒருவன் நேராகப் பாய்ந்தான். வினாடிப் பொழுதில் சேதாரம் இன்றித் தப்பினேன்.

    நாம் - பிறர் பிழை கண்டு ருத்ர மூர்த்தி ஆனாலும் சாந்த மூர்த்தி னாலும் அவரவர் செய்த வேலைக்குக் கூலி கிடைக்கும் தானே!..

    நல்லதொரு விஷயத்தைத் தங்களுடைய பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  55. மிக மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    த.ம 28

    பதிலளிநீக்கு
  56. நாம் கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளில் ஒன்று கோபம். சில நேரங்களில் நாம் கோபப்பட்டு பின்னர் வருத்தப்படுகிறோம். ஆப்ரகாம்லிங்கன் கூறிய உத்தி மிகவும் சிறந்ததாகும். தேவையான மற்றும் முக்கியமான இக்கருத்து அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்றாகும்.

    பதிலளிநீக்கு
  57. மிகவும் சரியாக சொன்னீர்கள் சார்... நானும் எப்பொழுதும் என் கோபத்தை எழுத்திலேயே காட்டி விடுவது உண்டு.. மிகச் சரியான வடிகால் அதுவே

    பதிலளிநீக்கு
  58. எழுதியதை கோபம் தீர்ந்த பின் கிழித்தும் போடலாம்.

    செய்கூலி, சேதாரம் இல்லாமல் புன்னகை செய்ய ஒரு வழி காட்டி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  59. அன்பு சகோதரருக்கு
    மிக அழகாக கோபத்தின் விளைவுகளையும், கோபத்தை மடைமாற்றும் உத்தியையும் சொல்லி விட்டீர்கள். டி டி (சகோதரரின்)யின் சொல்லாடல் வெகுவாக கவர்ந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  60. மிக அருமையான பதிவு. கலக்கிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  61. கோபத்தை அடக்க என்பதை விடவும் கோபத்தை அழிக்க சிறந்த வழி தாங்கள் குறிப்பிட்டுள்ள வழிதான். வயது ஆக ஆக முதிர்ச்சி உண்டாகி பொறுமையும் நிதானமும் கைகூடிவரவேண்டும். அதைவிடுத்து கோபமும், குரோதமும் கூடினால் வாழ்க்கை சீரற்றுப்போகும். மனம், உடல் கெடும். உறவுகள் விலகிப்போகும். எவ்வளவு உபாதைகள்! சிறப்பான ஆலோசனைக்குப் பாராட்டுகளும் நன்றியும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  62. 'இதுக்குப் போயி அலட்டிக்கலாமா' கொள்கை அத்தனை எளிதல்ல.. எனினும் முயல வேண்டும்.

    ஒரு கண முட்டாள்தனம்.. எத்தனை உண்மை!

    பதிலளிநீக்கு
  63. கோபம் வந்தா, கொஞ்சம் தண்ணி குடிங்க, கொறஞ்சுடும்னு, எங்க ஊர்ல ஒரு சாமியார் சொன்னாரே சார். ஒரு வேளை அது வேற தண்ணியா இருக்குமோ சார்?

    பதிலளிநீக்கு
  64. அனைத்துமே நல்லவைதான். கோபம் வந்தால் பேப்பர் எடுத்து எழுதி கோப்பத்தை தீர்க்கும் வழிமுறை நல்ல யுக்தி. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  65. வணக்கம் DD சார்!
    நீங்கள் 20 பிப்ரவரி 2014 ல் சிந்தித்த பதிவை
    "கோபம்" குறித்து "செய்கூலி சேதாரம் இல்லாமல்"

    நான் (புதுவை வேலு)
    20 பிப்ரவரி 2015 ல் சிந்த்தித்து "கோபத்தை விட கொடுமை உண்டா?" பதிவை வெளியிட்டு உள்ளேன்!

    பாருங்கள் நண்பரே!
    ஒத்த சிந்தனை, பதிவு ஒரே தேதி,
    ஒரே மாதம் ,ஆண்டு மட்டும் மாற்றம்! .ஏனெனில்!" குழலின்னிசை" துவங்கி 9 மாதம் மட்டுமே அல்லவா ஆகிறது?

    இந்த வகையில் பார்த்தால்? "குழலின்னிசை"க்கும் வழி காட்டிய வார்த்தைச் சித்தர் ஆகி விட்டீர்கள்.
    நினைவூட்டலுக்கு நித்திய வணக்கம் நண்பரே!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.