🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது...?

வணக்கம் நண்பர்களே... இன்று நாம் அலசப் போவது "மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது ?" என்பதைப் பற்றி... அதற்கு முன் : முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியிடவில்லை... ஏனென்றால் பதிவின் நீளம் ! இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொற்களில் (Labels) வந்த முந்தைய பதிவுகள்...



நண்பர்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் : நண்பர்களே! கீழே உள்ள பிளே பட்டனை அழுத்தவும். ஒருமுறை அழுத்தினால் பதிவைப் படிக்கும் போது பாடல்களைக் கவனமாகக் கேட்க முடியாதென்பதால், இருமுறை அழுத்தவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் "Load" ஆகி விடும்.


வழக்கமாக நண்பர் :1, நண்பர் :2 என்று எழுதுவேன். அவ்வாறு எழுத முடியுமா ? ஏனென்றால் தலைப்பு அப்படி... " பிரச்சனை " அவரவர் வயதிற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எவ்வளவோ பிரச்சனைகள். அட... படிக்கிற குழந்தைகளிடம் பேசினால், "எனக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு... தெரியுமா உங்களுக்கு ?" அப்படிங்கிறான் ! பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இல்லை. ஆனால் வாழ்க்கையே பிரச்சனை என்றால்...? அது சரியில்லை... இது சரியில்லை... அவன் அப்படி இருக்கான்... இவன் இப்படி இருக்கான்... கஷ்டம்... நஷ்டம்... கொடுமை... ஏமாற்றம்... சோதனை, வேதனை, எரிச்சல்... அப்பப்பா எழுதிக்கொண்டே போகலாம். பிரச்சனை-ஏன் ? எப்படி ? எதனால் ?

நண்பர்களே... தன்னுடைய வீட்டுப் பிரச்சனையையே தீர்வு காண முடியாதவன், தான் செய்யும் தொழிலிலோ, வேலை செய்யும் இடத்திலோ, சமூகப் பிரச்சனைகளிலோ முழுமையாகத் தீர்வு காண்பது கஷ்டம். இதனால் வீட்டிலிருந்தே அலசுவோம். இன்று கூட்டுக் குடும்பமே குறைந்து விட்டது. முதியோர் இல்லங்களும், அனாதை இல்லங்களும் பெருகி விட்டன. மனித நேயம் என்றால் என்ன ? என்றாகி விட்டது. சரி... தனிக்குடும்பம் செல்பவர்கள் நிம்மதியாக இருக்கிறார்களா.... ம்ஹீம்... பெரும்பான்மையினர் பிரச்சனைக்குக் காரணமாகச் சொல்வது : பெரியவர்களால், பெற்றோர்களால், துணைவியால், கூடப் பிறந்தவர்களால், குழந்தைகளால், உறவினர்களால், நெருங்கிய நண்பர்களால்... இப்படி நிறையப் பேர்கள் என்று தொடர்ந்து கொண்டே போகும். இப்படி மாறி மாறி அடுத்தவர் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை அதிகமாக்கிக் கொள்கிறார்கள். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'இவர்களில் யாராவது ஒருத்தர்' என்று சொல்லிவிடலாமா...?

நண்பர்களே... இதற்குக் காரணம் : பணமா ? பேராசையா ? கர்வமா ? விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததா? கோபமா ? எரிச்சலா ? தோல்வியா ? பயமா ? தன்னம்பிக்கை இல்லாமையா ? ஆர்வம் இல்லாமையா ? பழி / பலி வாங்கும் எண்ணமா ? பொறுப்பின்மையா ? பொறுமையின்மையா ? பிடிவாதமா ? துரோகமா ? மன்னிக்கும் மனப் பக்குவம் இல்லாமையா ? அகங்காரமா ? போட்டியா ? பொறாமையா ? ...ஸ்... ...ஸ்... அப்பப்பா... இன்னும் உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் யோசிங்க நண்பர்களே... மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'இவைகளில் ஏதாவ்து ஒன்று'என்று சொல்லிவிடலாமா...?

நமது ஐயன் நல்ல கேள்வி கேட்கிறார் நம்மிடம்... குறள் எண் 190-ல்
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பொருள் : அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால் நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ ? நண்பர்களே... மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'குற்றம் காணல்' என்று சொல்லிவிடலாமா...?

இந்தக் குற்றம் காணல் எதனால் வருகிறது ? "மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது." அப்பாடா... இப்ப தான் விசயத்திற்கே வருகிறோம் நண்பர்களே... இதில் ஒரு பலவீனம் என்னவெனில், எப்போதுமே தன்னை விட மேல்நிலையில் உள்ளவர்களுடனேயே ஒப்பிடுவது. அழகாக இருப்பவர்களுடன், பணம், நல்ல மனைவி & குழந்தைகள், ஆரோக்கியம், வீடு, வசதி... இப்படிப் பலபல... என்றைக்காவது ஒரு நாளாவது, வாழ்நாளிலே ஒரு தடவையாவது நம்மை விடக் கீழே உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோமா ? அப்படிச் செய்தால் தானே, மனம் திருப்தியடைந்து அடுத்த வேலையைச் செய்வதற்கு மனதிலும், உடலிலும் ஒரு உற்சாகம் வரும். "நான் அணிந்து கொள்வதற்கு எனக்குக் காலணிகள் இல்லையே என்று சலித்துக்கொண்டே இருந்தேன், கால்களே இல்லாத ஒரு நபரைப் பார்க்கும் வரை" என்ற வாசகத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். மனிதனின் பிரச்சனைக்குக் காரணம் 'மற்றவர்களிடம் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது' என்று சொல்லிவிடலாமா...? இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம் நண்பர்களே...

"உன்னை மற்றவர்களோடு நீ ஒப்பிட்டுக் கொள்ளும் போது உன் சக்தி விரயமாகிறது." இதைச் சொன்னது இந்த உலகம் இதுவரை சரியாகப் பலரால் புரிஞ்சிக்காத மிகப் பெரிய மனிதர்-புத்தர். "அவன் இப்படி இருக்கான்... நான் அப்படி இல்லையே... அவனுக்கு மட்டும் அப்படி நடக்குது... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..." என்று பலவாறு புலம்பினால், பொறாமை என்கிற நெருப்பு, போட்டி போடணும்கிற வெறி - இந்த இரண்டும் வந்தவுடனே நம்ம சக்தி அதிகமாகும். ஆனா இந்தப் பொறாமை & போட்டியாலே உங்க சக்தி எல்லாம் வீணாப் போயிடும். "ஒருவன் முன்னேற வேண்டாமா...? முன்னேறுவதற்கு ஒப்பிட வேண்டாமா ? ஒப்பீடு இல்லாமல் முன்னேற முடியுமா ? பொறாமை தான், தவறே தவிர, போட்டி ஒரு போதும் தவறல்ல... போட்டி இருந்தால் தான் மனித சமூகம் முன்னேற முடியும்.'"- இப்படித் தான் பல பேர் நினைப்பதுண்டு. அதை எல்லாம் இனி மேல் மறந்து விடுங்கள் நண்பர்களே... நம்மை வளர்த்தது அப்படி ! அத்தகைய முன்னேற்றம் ஒரு தடவையோ இரண்டு தடவையோ... நிம்மதியான முன்னேற்றமும் அல்ல. பொறாமை / போட்டி என்று வாழ்ந்தவன், நிம்மதியா இருந்ததாய் அல்லது வாழ்க்கையில் முன்னேறியதாய் வரலாறே இல்லை.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. (
குறள் எண் : 165)
பொருள் : பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம். அந்த பொறாமையே, பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்து விடும். இதற்கு மேல் என்ன வேண்டும்... நண்பர்களே...?

அடுத்து புத்தர் சொல்கிறார் பாருங்கள். "அப்படி ஒப்பிடுவதானால் உன்னிடமே ஒப்பிட்டுக் கொள்." எப்படி ஒரு தீர்வை சொல்லி இருக்கார் பாருங்க... நாம் செய்யும் செயல்கள் சரியில்லையா... அதற்குக் காரணம் என்ன என்பதை உங்களிடமே சோதனை செய்யுங்க... அடுத்த முறை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்வது என்பதை யோசியுங்க... முக்கியமாகக் குழந்தைகளிடம் இந்தக் குணத்தை வளர்க்காதீர்கள். இந்தப் பதிவின் நோக்கமே அது தான். வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் எல்லாம் (எந்தத் துறையாக இருந்தாலும், ஆண்/பெண்-யாராக இருந்தாலும்) தன்னைத் தானே ஒப்பிட்டுப் பார்த்தவர்களாக இருப்பார்கள்... நமக்கு என்ன தெரியுமோ, எது முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்ய முயல வேண்டும். "வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கின்றனர்"-ஷிவ்கெரா. கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே... உண்மை புரியும்... ஆக என்னைப் பொறுத்தவரை...

மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் : ஒப்பிட்டுப் பார்த்தல்
உன்னைப் பிறரோடு நீ ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் சக்தி விரயமாகிறது.
உன்னை உன்னோடு ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் வளர்ச்சி நிகழ்கிறது. - புத்தர்

நண்பர்களே... இப்போது பாடல் லோட் ஆகியிருக்கும். பிளே பட்டனை அழுத்தவும். எப்படி இருக்கு நம்ம DD Mix (Dindigul Dhanabalan Mix)?
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

குணம் குறிச்சொல்லில் (Labels) பதிவுகள் சில :
1. மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

2. மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன?

3. மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன?

4. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை?

5. பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சத்தியமான உண்மைகளை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் சரியே...!!!

    பதிலளிநீக்கு
  2. தங்களுடைய பழைய இடுகைகளையும் விரட்டி துரத்தி படிக்கும் சிந்தனை மேலோங்கிறது என்னுள்!

    பதிலளிநீக்கு
  3. நண்பரே நீங்கள் இந்த பதிவுகளை தொகுத்து நீங்கள் புத்தகமாகவே போடலாம். அவசியம் தொடருங்கள். அலுவலகத்தில் பாடல் கேட்க முடியலை

    பதிலளிநீக்கு
  4. ஈகோ, எதிலும் விட்டுகொடுத்து போகாமை. நெகிழ்வு தன்மை இருக்கவேண்டும் முதலில் பின் ஏன் பிரச்னை வருகிறது?

    பதிலளிநீக்கு
  5. //Do't compare yourself With any One in this World
    If You compare You are insulting You Self //

    நம்மை நாம் பிறருடன் ஒப்பிடுகையில்
    நாமை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்

    எனக்கு ரெம்ப பிடிச்ச ஓன்று

    ரெம்ப அழகா விளக்கமா நிறைய விஷயுங்களுடன் சொன்னீர்கள் சார்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு
    என்னுடைய பதிவின் தலைப்பு கூட
    இதை ஒட்டித்தான் வைத்துள்ளேன்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அடடே.. அருமை.. அருமை.. ஒப்பீட்டில் இத்தனை இருக்கா? அழகான ஒப்புமைகளுடன் பதிவை பதப்படுத்தி தந்திருக்கிறீர்கள்...! பழம்பாடங்களுடன், புதிய பாடல்களிலும் உள்ள கருத்துகளை தொகுத்தளித்த விதம் அருமை.. தங்களின் உழைப்பிற்கு தலைவணங்குகிறோம் திண்டுக்கல் தனபாலன் சார்..!

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. உங்களுடைய பதிவுகளின் வித்தியாசத்தன்மை தொடர்ச்சியாக கட்டிப்போடுகிறது பாஸ்.

    பதிலளிநீக்கு
  9. அலசி பிட்டு பிட்டு வைச்சிருக்கீங்க தோழரே! ம்ம்ம்ம்ம்....தொடருங்க!

    பதிலளிநீக்கு
  10. //நான் அணிந்து கொள்வதற்கு எனக்கு காலணிகள் இல்லையே என சலித்துக் கொண்டே இருந்தேன்,கால்களே இல்லாத ஒரு நபரைப் பார்க்கும்வரை...//
    முற்றிலும் உண்மைதான் சகோதரா.பிரச்சனைகளை உருவாக்குவதும், இல்லாமல் போக்குவதும் எல்லாமே மனித மனங்களில்தான் இருக்கிறது.எல்லா தடைகளையும் தாண்டி வாழும் வாழ்வில்தான் இனிமையும் நிம்மதியும் இருக்கிறது.
    Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள தனபாலன்...


    நிறைய அனுபவம் பெற்றிருக்கிறீர்கள். நிறைய சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால் ஒரு வேண்டுகோள் ஒரே பதிவில் எல்லாவற்றையும் கொட்டவேண்டியதில்லை. குறைவாக சொல்லலாம். செறிவாக சொல்லலாம். இல்லையெனில் படிப்பதில் ஒரு தளர்வு வந்துவிடும். அப்போதுதான் நல்ல செய்திகள் ஒன்றிரண்டாவது மனதில் தங்கும்.

    பதிலளிநீக்கு
  12. தன்னம்பிக்கை,பொறுமை இவை இரண்டும் இருந்தால் பிரச்சினை எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்.பாடல்களின் தொகுப்பு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு.ஏகப்பட்ட விஷயம் பகிர்கிறீர்கள் !!!

    பதிலளிநீக்கு
  14. திண்டுக்கல் அன்பரே! தங்களின் பதிவில் நல்ல கருத்தோட்டம் உள்ளது.

    மக்களை அதிகமாக சொர்க்கத்தில் புகுத்தும் இரண்டு குணங்கள்:

    1. இறையச்சம் 2. நற்குணம் - என இறைத்தூதர் நபி நாயகம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதீ.

    இந்த இறையச்சம் மற்றும் நற்குணம் மட்டுமே மனிதனை மனிதனாக மாற்றும். அத்துடன் மனிதநேயத்தையும் வளர்க்கும்.

    நான் அணிந்து கொள்வதற்கு எனக்கு காலணிகள் இல்லையே என சலித்துக் கொண்டே இருந்தேன். காலகள் இல்லாத ஒரு நபரை பார்க்கும் வரை.. எனக் குறிப்பிட்டுருந்தீர்கள். இது நூறு சதவீதம் உண்மை.

    உங்களை விட கீழ் நிலையில் உள்ளவர்களைப் பாருங்கள். உங்களை விட மேல் நிலையில் உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். இறைவன் உங்களுக்கு வழங்கிய அருட்கொடையை மறக்காமல் இருக்க இதுவே சிறந்த வழியாகும் என இறைத்தூதர் நபி நாயகம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு.ஆழ்ந்து வாசிக்கவேண்டிய பதிவு..

    பதிலளிநீக்கு
  16. “ மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது? “ கேள்வியையும் கேட்டு பதிலையும் தந்து விட்டீர்கள். பலநாள் பட்டு பட்டு, பட்ட, பட்டறிவு இது என்று நினைக்கிறேன். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பகிர்வு !!! புத்தரின் போதனைகள் எப்பவுமே டாப்புத் தான் !!!

    பதிலளிநீக்கு
  18. ஒப்பிடுதலைப் பற்றிய அலசல் நல்லதொரு பகிர்வாக அமைந்திருக்கிறது. DDM நாளைக் காலைதான் கேட்க வேண்டும்!! Free time!!

    பதிலளிநீக்கு
  19. வீட்டில் இருந்து அலச ஆரம்பித்த பிரச்சனைகளை தனி மனிதன் பிற மனிதர்களுடன் ஒப்பிட்டு பின் ஒப்பிட்டால் கால விரயமாகும் என்ற புத்தன் வாய் மொழி சொன்ன அற்புதமான கருத்துகளையும் வள்ளுவன் தன் குரல் மூலம் சொன்ன கருத்துகளையும் தேவையான வரிகளில் தக்க தருணங்களில் எழுதியிருக்கும் விதம் அருமை என்று சொல்வதை விட பிரமாண்டம் என்று சொல்வது பொருத்தம்

    பதிலளிநீக்கு
  20. அருமையான பதிவு..ஆரோக்கியமான பதிவு..படிக்கும்போதே புத்துணாச்சி வந்தது நண்பரே..

    பதிலளிநீக்கு
  21. முக்கியமான ஒன்று என நீங்க சொன்னது முற்றிலும் சரியே குழந்தைகளிடம் இந்த ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கத்தை பழக்காமல் இருந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  22. ஒப்பிட்டுப் பார்க்கும் குணத்தால் நிம்மதி இழந்து தவிக்க நேரிடுகிறது. அருமையான அலசல். சிறப்பான பதிவு. அருமை.

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு.. குணம் ஒருவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதை காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  24. என்னை பொறுத்த வரை நம் குணத்தை போலவே நம் வாழ்க்கையும் அமையும் என்பதை நான் நம்புகிறேன்..நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  25. சிறப்பான குணங்களைப்பற்றிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  26. தம்மின் மெலியாரை நோக்கி, தமதுடமை அம்மா பெரிதென்று அகம் மகிழ்க! விளக்கமான பதிவு வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  27. மிகத்துல்லியமான பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. நல்ல அலசல் பல விடயங்கள் தெளிவாக உள்ளது. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  29. நீங்கள் நல்ல மனதை பற்றி எழுதியுளீர்கள்.. கொடுரமனமுள்ளவர்களை இங்கே பார்க்கவும்

    TVPMUSLIM.BLOGSPOT.COM-கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    பதிலளிநீக்கு
  30. ஒப்பிட்டு பார்க்கும் குணம் மனிதனின் தாழ்வு மனப்பான்மையில் ஆரம்பிக்கிறது. தாழ்வு மனப்பான்மை மனிதனின் வாழும் சூழல்,பழகும் மனிதர்களிடம் இருந்து வருகிறது. மனிதன் ஒப்பிட்டுப் பார்ப்பதில் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகிறான். பணம்,புகழ்,திறமை, இப்படி பல விடயங்களில் மனிதன் பிறரோடு தன்னை ஒப்பிட்டு பார்த்து மனநிம்மதியை இழந்து,வாழுகின்ற நல்ல வாழ்க்கையையும் இழந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.
    தங்கள் பதிவு கூறும் கருத்துக்கள் ஆழமானவை. கருத்தாழமிக்க பதிவுகளை தொடருங்கள். \

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்-விவேகானந்தர்

    பதிலளிநீக்கு
  31. உண்மையை உரித்து வைத்து விட்டீகள் அங்கிள் அருமை.......

    பதிலளிநீக்கு
  32. மனிதனின் பிரச்சினைக்கு முதல் காரணம் ‘சுய நலம்’ என்பேன் நான். நல்ல பதிவு.ஆய்ந்து,அலசி எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!அருமையான பாடல்களை தந்த DD Mix க்கு நன்றி

    பதிலளிநீக்கு
  33. பதிவின் ஆழத்தின் மூலம்... தங்களின் தேடலும் வாசிப்புத் திறணும் தெரிகிறது சகோ... நன்றி..

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    பதிலளிநீக்கு
  34. மிகச் சிறப்பான கருத்துக்கள் உள்ளடங்கிய
    நல்லதொரு படைப்பு!!.....தொடர வாழ்த்துக்கள்
    சகோதரரே .

    பதிலளிநீக்கு
  35. அருமையான விளக்கம் தோழரே நிச்சயமாக தன்னை பிறருடன் ஒப்பிடுதலில்தான் தன்னை தான் தாழ்த்திக் கொள்கிறோம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  36. தங்கள் பதிவினைப் படிப்பதென்றால் ஆற அமர அமர்ந்து படித்தால் தான் நன்றாக இருக்கும்... அதற்கு சரியான நேரம் இப்போது தான் கிடைத்தது!!

    வழக்கம் போலவே பதிவு மிக அருமை...

    மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்குக் காரணம் அவனே அன்றி வேறுயாரும் இல்லை.. அதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர் தர வாரா


    நன்றி!!

    பதிலளிநீக்கு
  37. mixingக்கு அதிகநேரம் செலவீடுவீர்கள் போல உங்கள் உழைப்பு தெரிகிறது

    பதிலளிநீக்கு
  38. அருமையாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய குறிப்புகள்.தொடர்ந்து பயனுள்ள பகிர்வுகளை பகிரும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  39. என் வலை பூவிற்கு வந்து பாருங்கள் சகோ..உங்களுக்கு விருது காத்திருக்கின்றது.பெற்று கொள்ளுங்கள் :)

    பதிலளிநீக்கு
  40. தனபாலன், உங்கள் பதிவுகள் அனைத்துமே நல்ல சிந்தனை வளர்க்கும் விதமாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. சொல்லும் விதமும் எளிதாகவும் வசீகரமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  41. சகோ அவர்களே மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் .... தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிபெறலாம் என்பது உண்மை....
    பாடல் தொகுப்பு அனைத்தும் அருமை சகோ....

    பதிலளிநீக்கு
  42. சிறப்பான அலசல்.............உங்கள் காரணம் தான் பிரதானமாக அமைகிறது...அதன் மூலம்தான் மற்றவை அனைத்தும்....

    பதிலளிநீக்கு
  43. நண்பரே கடந்த சில வாரங்களாகவே உங்களின் தளம் திறப்பதில்லை - அப்படியே திறந்தாலும் கருத்து போட்டி மிஸ்ஸிங் - குழம்பிட்டேன்

    இன்று ஒக்கே

    ஆழ்ந்து ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள் சிந்திக்க வைத்தன - உங்களின் இந்த பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  44. நல்லதொரு பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  45. சிறப்பாக எழுதியிருக்கிறிர்கள் . தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் பிரச்சினை என்பது சரியே .

    பதிலளிநீக்கு
  46. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகிறேன் . ஒப்பிட்டுக்கொள்ளுதல்தான் பிரச்சினை உண்டாக்குகிறது என்பது சரியே .

    பதிலளிநீக்கு
  47. அருமையா பதிவு சார்.பலரைப்போய் சேரனும்.தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  48. உண்மையிலே மறுக்க முடியாத கருத்துக்கள் தனபாலன் அவர்களே ! ஒப்பிட்டு பார்க்கும் குணம் ஒருவரை நிம்மதியாக இருக்க விடாது....அதுவே தன்னைத்தான் ஒப்பிட்டு பார்த்தல் ,உறுதியாக நமது முன்னேற்றத்தின் பாதை என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும். -

    பதிலளிநீக்கு
  49. நீங்கள் கூறியவை அத்தனையும் உண்மைதான். மேலும் ஒப்பிடுதலால் மட்டுமே ஆற்றாமை வருவதில்லை. தனக்கு ஒரு கண் போனாலும் மற்றவனுக்கு இரு கண்களும் போக வேண்டும் என நினைப்பவன் மற்றவர்களுக்கு கிடைக்கும் நியாயப் படியான விடயங்களுக்கே ஆற்றாமைப் படுகிறார்கள்.
    உங்களது தமிழறிவு பாராட்டத்தகுந்தது.

    God Bless You

    பதிலளிநீக்கு
  50. அருமை. வீட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களால் சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளை தீர்க்கவே முடியாது என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  51. அடேங்கப்பா (உங்க எதிர்பார்ப்பு வீணாகிடக்கூடாதுன்னு தான் இந்த கமன்ட் அண்ணா. மத்தப்படி படிச்சேன், புரிஞ்சேன்... சூப்பர் ஹஹா )

    பதிலளிநீக்கு

  52. 1. மற்றவர்கள் சொல்லியிருப்பதின் அடிப்படையில் எதையும் யோசிப்பது.
    2. தன் யோசிப்பிற்காக மற்றவர்கள் சொல்லியிருப்பதை
    துணை கொள்வது.

    -- இந்த இரண்டில் எது சரி என்று நீங்கள் தான் தீர்மானம் கொள்ள வேண்டும்.

    இந்த விஷயத்தில் என்னையும் யோசிக்க வைத்ததற்கு நன்றி, நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மிக்க நன்றி ஐயா...

      தாங்கள் சொன்ன இரண்டையும் நடைமுறையில் அனுபவித்த செயல்கள் உண்டு... ஆனால்...

      உள்மனம் ஒரு உண்மையை உரக்கவே சொல்லும்... அதை வெளிமனம் எளிதில் ஏற்றுக் கொள்ளாது... இதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளவே ஆண்டுகள் சில கடந்து விட்டன...

      இன்றளவும் கூட சிலவற்றில், என்னையும் எனது மனதையும் சமமாக்க முயன்று கொண்டிருக்கிறேன்... ஆனால் பலவற்றில் வெற்றியும் கண்டு இருக்கிறேன்... இங்கே வெற்றி என்பது திருப்தி... மேலும் சிந்திக்கிறேன்... நன்றி...

      நீக்கு

  53. உள் மனம் உள்ளறிவால் செம்மைப்பட்ட குழந்தை மனம். வெளிமனமோ வெளியுலக வாழ்க்கைக்கான சாமர்த்தியங்கள் ஜாலக்குகள் நிறைந்தது. இந்த இரண்டுக்கும் இடையேவான போராட்டத்தில் வெல்வது தான் நம் செயல்பாடாகிறது.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் பதிவுகளில் சந்திக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.