🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...?


நண்பர்களே.....! இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதை அலசுவோம்.

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

இருக்க வேண்டியவை : அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச்சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன்னிப்பு, அடக்கம், அமைதி, மானம், ஒழுக்கம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, இன்னும் பல.....

இருக்கக் கூடாதவை : பேராசை, கோபம், பொறாமை, பிடிவாதம், துரோகம், அவசரம், பொய் பேசுதல், சோம்பேறித்தனம், வஞ்சகம், திருட்டு, கொலை, கொள்ளை, சூது, பிறன்மனை நோக்குதல், இன்னும் பற்பல...

இது போலப் பல குணங்களோ பண்புகளோ இருந்தாலும் அவற்றில் முதன்மை குணம் என்னவாக இருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்துக் கொண்டே இருங்கள்... முடிவில் தெரிந்து கொள்வோம்.

இது ஒன்று மட்டும் இருந்தால் மற்ற எல்லாக் குணங்களும் பண்புகளும் இதற்குப் பின்னால் வந்து விடும் என்பது என்னுடைய கருத்து. உங்களின் கருத்துகள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மனிதனின் நல்ல குணங்களையும் பண்புகளையும் பற்றி மட்டுமே இங்கு ஆராயப் போகிறோம்.....

முதலில் அன்பு, பாசம்... பாசமென்பது நம் பெற்றோர்களிடம், குழந்தைகளிடம் மற்றும் நம் உறவினர்களிடம் நாம் பாசமாக இருப்பது. அன்பென்பது நமக்குத் தெரியாதவர்களிடம் அன்பைச் செலுத்துவது. எல்லாரிடமும் எப்போதும் அன்பாக இருக்க முடியுமா? எல்லாரிடமும் அன்பாக இருப்பவர்கள், எல்லா உயிர்களிடமும் (மனிதனைத் தவிர) அன்பாக இருக்கிறார்களா? அதுவும் இன்றைய காலத்தில்? ஆனால் எல்லாரிடமும் அன்பாக இருக்க வேண்டுமென்றால் பொறுமை வேண்டும், கோபம் இருக்கக் கூடாது, நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. ஆக, மனிதனுக்கு முதன்மையாக அன்பு/பாசம்/கருணை/சாந்தம்/பணிவு இருந்தால் போதுமா ?

அடுத்து விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளவர்கள். இவர்களை உலகம் இளிச்சவாயன் என்று கூறுகிறது. எல்லாவற்றையும் எப்போதும் விட்டுக் கொடுப்பவரை 'ஏமாந்த சோணகிரி' என்று சிரிக்கிறது. உங்களுக்கு உண்டான உரிமையை நீங்கள் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால், ஏமாற்றுபவனை விட ஏமாறுபவனே குற்றவாளி. ஆக, மனிதனுக்கு முதன்மையாக விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் போதுமா? பார்ப்போம்...

தவறு செய்யாத மனிதனே கிடையாது. முதலில், செய்த தவற்றை ஒத்துக் கொள்ளத் தைரியம் வேண்டும். அவனை மன்னிக்கப் பெரிய மனது வேண்டும். ஏனென்றால், மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன் ! மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன். ஆனால், மன்னித்து ஏற்றுக் கொள்பவன் இறைவன்! ஆக, மனிதனுக்கு முதன்மையாக மன்னிக்கும் தன்மை/தைரியம் இருந்தால் போதுமா ?

ஒவ்வொன்றுக்கும் சில விளக்கங்கள் தரலாம். நீள் பதிவு ஆகி விடும் என்பதால்................ அடுத்ததாக அறம், ஈகை, தானம், உதவி, தவம், நன்றி, நட்பு, ஆர்வம், ரசனை - இவை எல்லாமே பொருள் இருப்பவர்களிடம் இருக்கும். பொருள் இல்லாதவர்களிடம் ...? இவை எல்லாமே மனிதனுக்குத் தேவை தான். ஆனால், முதன்மையாக இருக்க வேண்டிய குணம் - ஒரு சின்ன கதை மூலம் :

அந்தக் காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தறுவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய் தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தைக் கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். செக்கச் செவலென்று இருந்த பழத்தைப் பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஒரு பழத்தைச் சாப்பிட்டு முடித்தவுடன் குரு அந்தத் தாயிடம், "பழம் நன்றாக உள்ளது, நன்றி" என்று சந்தோசமாகத் தெரிவித்தார். ஆனால், அந்தத் தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறியவுடன் இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்தத் தாய் மிக்க மகிழ்ச்சியோடு வீட்டுக்குச் சென்றார். சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவே, ஒரு பழத்தைச் சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்தத் தாயிடம் சொல்லிருக்கலாமே? இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். அதற்கு குரு, "சீடர்களே, அந்தத் தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளைச் சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதைச் சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, " சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்தத் தாயின் முன்பு செய்திருப்பீர்கள். தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை" என்று கூறினார்.

இந்தக் கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன? அந்தத் தாய் சந்தோசப்பட, குரு முகத்தைக் கூடச் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்த பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும்.

மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மன்னிக்கிறவன் மனுசன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன்' என விருமாண்டியில் கமல்ஹாசன் சொல்வது ஞாபகம் வந்தது. மேலும், அடுத்தவரை பாராட்டுவதுதான் மனிதனுக்கு தேவையான முதன்மை குணம் என்று சொன்னது நன்று. நல்ல கட்டுரை. வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆகா... அருமையான கருத்து...
    உங்களுக்கு என் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  3. கதையும் கருத்தும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகிற குணம் உங்களிடம் நிரம்ப இருக்கிறது..நன்றி நல்ல நண்பர் கிடைத்தமைக்கு..

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுகிறேன் நண்பரே ! பாராட்டுகிறேன். பாராட்டப்படுவேன் என்பதற்காக அல்ல, கருத்துக்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. அற்புதம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிலர் பாரட்டுதலை சரியான விமரிசனம் இல்லை எனச் சொல்வர். ஆனால் உண்மை அப்படிக் கிடையாது பாராட்டுதல் ஒருவனை நிச்சயம் வளர்க்கும். ஒரு நிலைக்கு வந்தவுடன் அவனாகவே தன் செயல்களுக்கு ஒரு நல்ல விமரிசகனாக மாறி விடுவான்.

    நற்குணங்களைக் கூட வளர்த்துக் கொள்ளலாம் ஆனால் கோபம்,வெறுப்பு, ஆற்றாமை போன்றவைகள் நஞ்சைப் போன்றவைகள். ஆளை நிச்சயம் கொல்லும். சிலர் சினம் கொல்வது நல்ல குணம் எனப் போற்றி தங்களை அழித்துக் கொள்கின்றனர். என் செய்ய?

    God Bless You.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .
    அடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .
    www.puthumaiyukam.blogspot.in

    பதிலளிநீக்கு
  8. இயற்கை நமக்கு சொல்லும் பாடம்
    பரஸ்பரம் மரியதை
    பரஸ்பரம் உதவி
    பரஸ்பரம் உண்மை
    பரஸ்பரம் சகிப்புத்தன்மை
    உறவுகள் தொடர இந்த குணங்கள் இருக்க வேண்டும்.இந்த குணங்கள் இல்லாத உறவுகள் தொடராது.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் திரு.பூதலிங்கம் அவர்கள் சொல்வது மிகசரி

    பதிலளிநீக்கு
  10. நன்று இது போன்று மேலும் பதிவிட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. பாராட்டுகிறது அன்பின் முதல் வெளிப்பாடு நண்பரே !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.