🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மெய்ப் பொருள் காண்பது அறிவு - ஏன்...?


மெய்ப் பொருள் காண்பது அறிவு

© அறிவாளி அ.மருதகாசி S.V.வெங்கட்ராமன் T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫
எனது முந்தைய பதிவைப் படித்தவர்களுக்குத் தெரியும், எனது கணக்கு ஆசிரியர் தான் தமிழ்ப் படமும் எடுத்தார் என்று! கணக்குப் பாடத்தில் அவர் சொன்ன "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" பகுதி ஒன்றில் பார்த்து விட்டோம். அதுவும் இதை ஒட்டிய கருத்து தான். அவர் தமிழ் வகுப்பு முடிந்து செல்லும் போது "மாணவர்களே! மெய்ப் பொருள் காண்பது அறிவு! நாளை சந்திப்போம்! சிந்திப்போம்!" என்பார். அப்போதெல்லாம் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர் கூறிய வேறு ஒரு விஷயம் என்னவென்றால் :

"மாணவர்களே! ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில் மூன்று வகை உண்டு. 'கற்பூரம், கரிக்கட்டை, வாழைமட்டை.' கற்பூரம், தீயை உடனே பற்றிக் கொள்ளும். கரிக்கட்டை, தீயைப் பற்றிக் கொள்ளச் சிறிது நேரம் ஆகும். ஆனால் அவ்வப்போது ஊதிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைமட்டை, தீயைப் பற்றிக் கொள்ளாது. புகை தான் வரும். நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ளப் போகிறீர்கள் மாணவர்களே?" என்று கூறுவார். அப்போதெல்லாம் நாங்கள் 'டியுப்லைட்!'

நண்பர்களே! நாம் அனைவரும் சொல்வோம் : "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்" என்று! ஆனால் இன்றைய நவீன உலகில் தீர விசாரித்து அறிந்து கொள்வது மட்டும் போதாது. அதை முழுவதுமாக அறிந்து, முறையாக தெரிந்து கொண்டு, தெளிவாகச் செயல் படுத்தி புரிந்து கொள்வதே மெய் என்றாகி விட்டது.....!.....?

நண்பர்களே! பட்டிமன்றங்களில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர் பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும், சிந்திக்க வைக்கும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த திரு. அறிவொளி அவர்கள் கூறியது என்னவென்றால் : "பொதுவான உண்மை, உண்மையான உண்மை, பொய்யான உண்மை என்று மூன்று உண்மைகள். நமது பூமி முக்கால்வாசி தண்ணீராலும், கால்வாசி நிலமாகவும் உள்ளது-இது பொதுவான உண்மை. ஆனால் அது பொய்யான உண்மை! எப்படி? நடுக்கடலில் ஒரு பொருள் மூழ்கி விட்டால் அது கடைசியில் சென்றடைவது எங்கே? கீழே... கீழே... நிலம் தானே? இப்போது பொதுவான உண்மை, பொய்யான உண்மை ஆகி விட்டதா? அப்போது உண்மையான உண்மை என்ன? பூமி முழுவதும் நிலம் தான் உள்ளது. அதில் முக்கால்வாசி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்" என்பார். யோசிக்க வேண்டிய விஷயம் தான்...! மனிதனால் பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்படும் நிலை என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

நமது பெரியோர்கள் 'நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது' என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறோமா என்ன? பெரியோர்கள் வாக்கு முன்னாடி கசக்கும், பின்னாடி இனிக்கும் என்பார்கள். சரி... நாம் நமது விசயத்திற்கு வருவோம். 'நதி மூலம்... ரிஷி மூலம்...' மலையில் அருவி உற்பத்தியாகும் இடம் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மலையில் உள்ள மாசுகளும், இறந்து போன உயிரினங்களின் உருப்படிகளும் அருவி நீரில் கலந்து இருக்கலாம். அதை எல்லாம் பார்த்து விட்டால் நதியின் தூய்மையில் நமக்குச் சந்தேகம் வரலாம். அதனால் மலையிலிருந்து சம தளத்தை அடைந்து, நதியாக ஓடும் போது அதற்குப் பெருமை அதிகம். இவ்வளவு ஏங்க... ஆத்தூர் டேம்மை சென்று பார்த்தால் எங்கள் ஊரிலே யாருக்கும் தண்ணீரைக் குடிக்க ஒரு தயக்கம் வரும்! நதி மூலம் பார்க்கக் கூடாது. சரி தான்...!

சேற்றில் தோன்றியது செந்தாமரை. அதற்காகத் தாமரையைப் பார்த்ததும் சேற்றின் ஞாபகம் வரக் கூடாது நண்பர்களே! 'புனுகு' தரும் நறுமணத்தை நுகர வேண்டுமே தவிர, அது வெளியாகும் விலங்கினத்தின் உருப்படியைப் பார்க்கக் கூடாது. ரிஷிகள், வேதங்களை அர்ப்பணித்தவர்கள். சிந்தனையாளர்களுக்கு வழி காட்டியவர்கள். இவ்வளவு ஏங்க... "ராமனின் நடத்தையைப் போல் வாழ வேண்டும். கிருஷ்ணனின் நல்லுரைகளைக் கேட்க வேண்டும்" என்று சொல்லும் நமது பெரியோர்கள், "கிருஷ்ணனின் சாகசச் செயல்களைப் பின்பற்றக் கூடாது" என்று சொல்கிறார்கள். ரிஷி மூலம் பார்க்கக் கூடாது. சரி தான்...! நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பார்ப்போம். அதுவும் 2 குறள்களில் உள்ளது!

முதல் குறள் எண்: 355, அதிகாரம் : மெய் உணர்தல் எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. பொருள் : எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அப் பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.

இரண்டாவது குறள் எண்: 423, அதிகாரம் : அறிவு உடைமை எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. பொருள் : எந்தப் பொருளைப்பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்.

முதல் குறள், நாமாக அறிந்து கொள்வது. திருவள்ளுவரே பொருளில் தெளிவாகச் சொல்லி விட்டார். அது ஒவ்வொரு மனிதனின் நிலைக்கேற்ப மாறுபடலாம். அவரவருடைய அனுபவங்கள் அவர்களுக்கே கற்றுக் கொடுக்கும். அடுத்த குறள் தான் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நல்லவர்களின் அறிவுரைகள், ஆலோசனைகள், கருத்துக்கள்... இன்னும் பல... இருந்தாலும் அவற்றையெல்லாம் கூட நாம் தான் ஆராய வேண்டும் என்கிறார் நமது திருவள்ளுவர். உண்மையாகவே நம் கருத்து தவறாக இருந்தால், அது யார் சொன்னாலும், அதாவது வயது வித்தியாசம் கருதாமல், நம் கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டும். உளி இல்லாமல் சிற்பம் ஏது? சிற்பத்தின் அழகை ரசிக்கும் நாம் உளியின் கஷ்டத்தை மதிக்கவில்லை என்றால் எப்படி? வைரமுத்து அவர்கள் (யூத் திரைப்படம் ) பாடலில் "காலுக்குச் செருப்பு எப்படி வந்தது? முள்ளுக்கு நன்றி சொல்" என்பார். அதே சமயம் நமக்கு எது உண்மையாகச் சரியென்று படுகிறதோ, எது நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறதோ, நாம் தான் சரியான முடிவு எடுக்க வேண்டும்.

நாம் கருத்துக் கேட்கும் நபர்கள் குள்ள நரியாக இருந்து நாம் நம்பி விட்டால்? அந்த மாதிரி மனிதர்களுக்குக் கூடவே நிறைய ஜால்ரா அடிப்பவர்களும் இருப்பார்கள். ஒரு சின்னத் தவறு செய்து விட்டாலோ, அவர்களை விடச் சிறிது உயர்ந்து விட்டாலோ அவ்வளவு தான். நீங்கள் அம்பேல்! நிறைய வீடுகளில் இப்படித் தான் நடக்கிறது. நம்மைக் கெடுப்பதற்கு வெளி ஆள் தேவை இல்லை. கூட இருப்பவர்களே போதும். அப்போது குருடனாக அல்லது செவிடனாக அல்லது ஊமையாக இருந்து விட்டால் நாம் தப்பித்தோம். சந்திரமுகி படத்தில் சில வரிகள் :- // உன்னைப் பற்றி யாரு..... அட என்ன சொன்னால் என்ன.....? இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் தள்ளு..... மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு.....! பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலே தான்... அட... உன்னை யாரும் ஓரம் கட்டித் தான் வெச்சாலும் தம்பி வாடா வந்து தொடத்தான்..... மூன்றாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா...? //

1957-ல், நீலமலைத் திருடன் படத்தில், ஏ.மருதகாசி அவர்களின் வரிகளில், கே.வி.மஹாதேவன் அவர்களின் இசையில், டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய சில வரிகள் :- // எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை இடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே... அத்தனையும் தாண்டி காலை முன்வையடா... அத்தனையும் தாண்டி காலை முன்வையடா... - நீ அஞ்சாமல் கடமையிலே கண்வையடா. குள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்... நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்... - நீ எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா... எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா... - அவற்றை எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா... சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா... தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து கொள்ளடா. //

நாம் கெட்டுப் போவதற்கு இதை விடப் பெரிய ஆள் ஒருத்தர் இருக்கிறார். உலகில் அவர் தான் நமக்கு மிகப் பெரிய பகைவன்! அது வேறு யாருமல்ல. நம் மனம் தான்! இதற்கு நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...

அதிகாரம் : அறன் வலியுறுத்தல், குறள் எண் : 34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. பொருள் : தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் என்பதாகும். மற்றவை ஆரவாரத் தன்மை கொண்டவை!

ஏன்?

தலைப்பில் முடிவில் அதென்ன ஏன்? என்று கேட்கிறீர்களா? நம் மனதிற்குள் ஏன்? ஏன்? என்று கேள்விகள் கேட்பதினால் தான் நமது பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள முடியும். எனது ஆசிரியர் மேலே புரிந்து கொள்வதை மூன்று பிரிவாகக் கூறினார். அப்படி இருக்கிறோமோ இல்லையோ நமக்கு வரும் எல்லா வகையான துன்பங்களையும் கற்பூரம் போலக் காற்றில் கரைத்து விட்டுச் சந்தோசமாக, நிம்மதியாக வாழ்வோம் நண்பர்களே...! அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே... உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே... ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை - நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை...

© ஆயிரத்தில் ஒருவன் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫


ஏன் ? எப்படி ? எவ்வாறு ? இப்படிப் பல கேள்விகள் மனிதனின் மனதில் தோன்றாமல் 'எங்கே ?' என்ற கேள்வி மட்டும் இந்த விசயத்தில் தோன்றுகிறதே.... அது என்ன விஷயம்....? படிக்க : இங்கே சொடுக்கி அறியவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மெய்ப்பொருள் காண்பதறிவு அருமையானபதிவு. நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. விரிவான விளக்கம் கொடுத்தீர்கள்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. சற்றுமுன்தான் ஒருபதிவில் திருக்குறள் கதைகள் படித்துவிட்டு வந்தேன். அதே கருத்தையே இங்கு வழிமொழிகிறேன். இது காலத்தின் தேவை தனபாலன். அருமை. தொடர்ந்து செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி திரு தனபாலன் அவர்களே.!!

    பதிலளிநீக்கு
  5. சொல்ல வந்ததை பாடல்களைக் கொண்டு அருமையாக விளக்கியிருகிறீர்கள். இப்படி பதிவுகள் அமைவதால் பலபேரின் மனதிலும் அருமையாக பதியும்.. நெஞ்சை விட்டு நீங்காத இடம் பெறும் வகையில் பதிவிட்டமைக்கு நன்றி தனபாலன் அவர்களே..!!

    பதிலளிநீக்கு
  6. முன்னுக்கு பின் முரணாய் உள்ளதே உங்கள் பதிவு.. கொஞ்சம் தெளிவு படுத்துறீங்களா?

    எல்லாத்தையும் தீர விசாரிச்சு உண்மையை தெரிஞ்சுக்கணும்ன்னு ஆரம்பிச்சு நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க வேணாம்ன்னு சொல்றீங்க?

    நாம சில விசயங்களை கண்டுக்காம இருக்கணும்ன்னா உண்மையை தீர விசாரிச்சு தெரிஞ்சுக்கிறதுல என்ன பிரயோஜனம் பாஸ்??

    இன்னைக்கு உறவுமுறையிலையே உண்மை இல்லையே பாஸ்? அப்பறம் எதுக்கு மெய்பொருள் நமக்கு? எல்லாம் பொய் பேசி நடிக்கத்தானே செய்யுறோம் ? ஒவ்வொருத்தர் பேசுறதுலையும் எது உண்மைன்னு கண்டு பிடிச்சுக்கிட்டே இருந்தா நாம பைத்தியம் ஆயிடமாட்டோமா?

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு. மிகச் சிறப்பாக உங்கள் அனுபவம், படித்தது, நம்பிக்கை, இலக்கியம் என அனைத்தையும் சேர்த்து மிக அழகாக எழுதியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் தனபாலன் - அருமையான சிந்தனையில் உதித்த உரை. நன்று நன்று. அத்தனையும் உண்மை - ஏற்றுக் கொள்ள வேண்டிய அறிவுரைகள் . குறள் விளக்கம் - ஆண்டுக்கு ஆண்டு ..... - பாடல் எப்படி லோட் செய்ய வேண்டும் - பதிவு படித்து முடித்த வுடன் கேடு மகிழ ஒரு நல்ல பாடல். மிக மிக இரசித்தேன் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தன பாலன். நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்துகள்...

    "ஏன் என்ற கேள்வி -இங்கு
    கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம் - கொண்ட
    மனிதன் வாழ்ந்ததில்லை"

    இந்த வரிகளை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.

    "கண்ணால் காண்பதும் பொய்
    காதால் கேட்பதும் பொய்
    தீர விசாரிப்பதே மெய்"

    என்று ஒரு பழமொழி (என்று நினைக்கிறேன்!) உண்டு..

    "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
    மெய்ப் பொருள் காண்பது அறிவு."
    இந்த குறள் "கண்ணால் காண்பது பொய்" என்று சுட்டிக்காட்டுகிறது.

    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப் பொருள் காண்பது அறிவு."
    இந்த குறள் "காதால் கேட்பது பொய்" என்று சுட்டிக்காட்டுகிறது.

    இரண்டும் பொய்களைக் களைந்து மெய் உணர கூறுகிறன.

    நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. அழகாய் முடித்திருக்கிறீர்கள். நல்ல கருத்துக்களை பாடல்களின் துணை கொண்டு விதைத்திருக்கிறீர்கள். நன்று. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. சிந்தனை வேறு பகுத்தறிவு வேறு என்று ஒருவர் என்னிடம் வாதிட்டார்... நான் சிந்தனை இருந்தால் தான் பகுத்தறிவு வரும் என்றேன்... சரியா தப்பா என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், நான் கூறியதை சரி என்று உணர வைத்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. நன்றாக சொல்லி இருக்கிறிர்கள் தனபால்.

    பதிலளிநீக்கு
  13. சூப்பர் பாஸ்....

    வித்தியாசமான பதிவு..... ரெம்ப மினக்கெட்டு படிச்சேன் ஆக்கும் :)))

    பதிலளிநீக்கு
  14. வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அத்தனையும் தரமான, முத்தான , சுவையான,தேவையான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு!


    என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    என்னுடைய வலைப்பூவில் இன்று "வரம் தருவாய் புத்தாண்டே!"
    http://www.esseshadri.blogspot.com/2012/01/blog-post.html

    படித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய விழைகிறேன்!

    நன்றி!
    கார்ஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  19. அருமை!!அழகாக சொல்லி இருக்கிறிர்கள்.,புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  21. ஜி எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    எல்லாம் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  22. மெய்ப்பொருள் காண்பதறிவு அருமையானபதிவு. நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. நமக்கு வரும் எல்லா வகையான துன்பங்களையும் கற்பூரம் போல காற்றில் கரைத்து விட்டு சந்தோசமாக, நிம்மதியாக வாழ்வோம் அதுவே மெய்ப் பொருள் காண்பது அறிவு-

    பாராட்டுக்கள் அருமையான பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
  24. உண்மையான பொருளை உணர்ந்து முடிவு எடுக்க வேண்டும்,யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பக்கூடாது என்பது பற்றிய அருமையான ஆராய்ச்சி.
    நன்றி பகிர்வுக்கு.

    புத்தாண்டு நல் வாழத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. மெய்ப்பொருள் காண்பதறிவு அருமையான பதிவு...விரிவான விளக்கம்.. மிக அழகாக எழுதியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  26. கட்டுரை மிகவும் அருமை! நல்ல
    செய்திகளை அழகுபடத் தந்துள்ளீர்
    நன்று!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  27. அருமையான கருத்துக்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. மனம் சோர்வடையும் போது உங்கள் பதிவுக்குள் வந்து விட்டாலே போதும் போல.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.