🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1

நண்பர்களே... முதலில் இந்தப் பதிவை, என் பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் சொல்லிக் கொடுத்த முறை எனக்குப் பலவற்றில் உதவுகிறது. அது என்ன? என்று பார்ப்போமா?


நான் பள்ளிக் கூடத்தில் படித்த போது, எனது கணக்கு ஆசிரியர், ஒரு கணக்கை மட்டும் விளக்கமாகக் கரும் பலகையில் எழுதி விட்டு, மற்றக் கணக்குகளை எல்லாம் இதே போல் செய்யுங்கள் என்று கூறி விட்டு, சிறிது நேரம் அவகாசம் கொடுப்பார். பிறகு, ஒவ்வொருத்தராக அருகில் கூப்பிட்டு, "கணக்கு அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று கேட்பார்.

"கணக்கை அறிந்து கொண்டேன்" என்று சொன்னால், "அப்போ உனக்குக் கணக்கு சரியா தெரியலே, புரியலே..... மறுபடியும் செய்." என்பார்.

"கணக்கை தெரிந்து கொண்டேன்" என்று சொன்னால், "அப்போ உனக்குக் கணக்கு சரியா புரியலே.... மறுபடியும் செய்." என்பார்.

அதற்காக, "கணக்கை நன்றாக புரிந்து கொண்டேன்" என்று சொன்னால், எப்படிப் புரிந்து கொண்டாய் என்பதைத் தெரிந்து கொண்டு , இரண்டாவது கணக்கைச் செய்யச் சொல்வார்.

[ அந்த இரண்டாவது கணக்கு, முதல் கணக்கில் சின்ன மாற்றம் செய்தால் விடை வந்து விடும். ]

நாமாக யோசித்து இரண்டாவது கணக்கின் விடையைச் சரியாகக் கண்டுபிடித்து, அவரிடம் காண்பித்தால், "இப்போது தான் முதல் கணக்கை நீ அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டாய், அடுத்து மூன்றாவது கணக்கைச் செய்" என்று கூறுவார்.

தவறாகச் செய்து விட்டு "எப்படி இந்தக் கணக்கைச் செய்வது" என்று அவரிடமே கேட்டால், "முதல் கணக்கை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை" என்று கூறி பிறகு விளக்கமாகச் சொல்லிக் கொடுப்பார். இப்படியே இந்தக் கணக்கு வகுப்பு போகும்.

என்னடா இது... "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று எங்களுக்கு எரிச்சலாக அப்போது இருக்கும். ஆனால், அதைத் தெரிந்து கொள்ளச் சிறிது நாட்களிலே ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஏனென்றால் அவரே தான் தமிழ் வகுப்பும் எடுத்தார். கணக்கு வகுப்பையே இந்தப் பாடு படுத்துகிறாரே இப்போ என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் நினைத்தது மாறாக அருமையாகச் சொல்லிக் கொடுப்பார். சின்ன சின்னக் கதைகள் சொல்லி, நகைச்சுவையாகச் சொல்லிக் கொடுப்பார். எல்லாவற்றுக்கும் ஒரு திருக்குறளைச் சொல்லி அழகாக விளக்கம் கொடுப்பார்.

கணக்கு வகுப்பில் மட்டும் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்று நாங்கள் நினைத்துக் கொள்வோம். ஒரு முறை தமிழ் வகுப்பில் அவரிடமே கேட்டு விட்டோம். "ஒவ்வொரு முறையும் கணக்கை முடித்துக் காண்பிக்கும் போது ஏன் "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று கேட்கிறீர்கள்" என்று. அதற்கு அவர் சொன்ன பதில் :

" மாணவர்களே... இதை நான் கணக்குப் பாடத்திற்காக மட்டும் சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லாப் பாடங்களையும் அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். உங்களுக்கு எல்லாருக்கும் நான் சொல்லும் திருக்குறள் தெரியும்.

கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக.

அதற்கு விளக்கம் என்னவென்றால், நீங்கள் படிப்பதற்கு தகுதியான புத்தகங்களை மட்டும் படிக்க வேண்டும். அந்தப் புத்தகங்களை எவ்வித பழுதில்லாமல் படிக்க வேண்டும். அவ்வாறு படித்த பின் அந்தப் புத்தகத்தின் தகுதிக்குத் தகுந்த படி நீங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

தமிழைப் போல் கணக்கை மனப்பாடம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதை நான் என்ன தான் விளக்கமாகக் கூறினாலும் நீங்களாக அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டால், அதில் எளிய வழி இருந்தால் எனக்கும் நீங்கள் கூறலாம். அதற்காகத் தான் நான் அப்படிக் கூறுகிறேன்." என்று கூறினார்.

[... அப்போது நாங்கள் "எனக்கும் நீங்கள் கூறலாம்" என்று சொன்னதை நினைத்துச் சிரித்தோம். "நல்ல வேலை கணக்கைப் போலத் திருக்குறளையும் கேட்டிருந்தால்.....?" என்று நினைத்துப் பயந்தோம். மேலும் அவர் அந்தத் திருக்குறளை வைத்தே, அதிலும் "கசடறக் கற்பவை" என்பதற்கு மட்டும் அவர் இந்தப் பதிவின் தலைப்பைப் பற்றிக் கூறிய விளக்கங்கள் : ...]

"மாணவர்களே : தினமும் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அந்தக் குறளின் பொருளை முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். திருக்குறளில் இல்லாத விசயமே இல்லை. நான் சொல்லும் "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" பற்றிச் சொல்கிறேன்.

1. அறிந்து கொள்தல் : பாட புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் நான் அறிந்து கொள்ளச் சொல்லவில்லை. உங்கள் தாய் தந்தையரைப் பார்த்துப் பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டில் உள்ள புத்தகத்தின் மூலம், நாளிதழ்கள் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் வானொலி, தொலைக்காட்சி மூலமும் பற்பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால் சுயமாகக் கூட அறிந்து கொள்ளலாம்.

2. தெரிந்து கொள்தல் : ஒரு நல்ல விசயத்தை முழுமையாக அறிந்து கொண்ட பின், அதைப் பற்றிய தேடல் உங்களுக்கு வர வேண்டும். அதற்கு உங்கள் முயற்சியும், ஆர்வமும் இருக்க வேண்டும். மனதைத் தளர விடக் கூடாது. அப்படி முயற்சியும் ஆர்வமும் இருந்தால், அந்த விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

3. புரிந்து கொள்தல் : ஒரு நல்ல விசயத்தை முழுமையாக அறிந்து, தெரிந்து கொண்ட பின், அதைச் செயல் படுத்திப் பார்க்க வேண்டும். பயம் இருக்கக் கூடாது. அதற்கு உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செயல் படுத்திப் பார்க்கையில், அந்தச் செயலில் நமக்குக் கிடைக்கும் நன்மை/தீமை, வெற்றி/தோல்வி, லாபம்/தோல்வி, உங்களால் முடியும்/முடியாது போன்றவற்றைப் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்யும் செயலானது திருந்தச் செய்ய வேண்டுமென்றால் "அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல்" இந்த மூன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதைப் பற்றி உங்களுக்குச் சரியாக அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பிற்காலத்தில் பல நேரங்களில் இந்த மூன்றும் உதவும்...." என்று கூறினார்.

அப்போது எங்களுக்கு ஒன்றுமே அறியவில்லை... தெரியவில்லை... புரியவில்லை. நண்பர்களே... உங்களுக்கு.....?



அடுத்த பதிவில் சிந்திப்போம்... போகலாமா...? இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உண்மையான எடுத்துக்காட்டும் சிறந்த வழிகாட்டலும் நிச்சயமாக மாணவானக இருந்தாலும் ஆர்வலராக இருந்தாலும் எதையும் ஆய்ந்து அறிந்து உணரந்து படிக்கும் போதும் செயலில் கொண்டுவரும்போதும் கற்றதன் பலனை உணரமுடியும் இதை ஏனையவர்கள் பின்பற்றலில் சிறப்பிருக்கிறது நன்றி தங்களின் அருமையான பதிவிற்காக

    பதிலளிநீக்கு
  2. வணக்கமுங்க!இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மிகவும் வேண்டிய ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள்,பதிந்திருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியர்களுக்கான சமர்ப்பணம் உங்கள் உயந்த உள்ளத்தைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  4. வெற்றியின் அடித்தளமாக விளங்கும் பண்புகளை மிக நேர்த்தியாக தங்களின் அனுபவம் மூலம் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்...

    பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. அருமை கணக்கு ஆசிரியர்கள் எல்லாரும் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு!
    முதலில் ஒன்றை அறிவது தெரிந்து தெளிவது
    பின் புரிந்து செயலாய்ப் புரிவது!
    நன்று நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு!
    மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை
    மிக நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது
    நன்று நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அனுபவம் பேசுகிறது.அருமை
    ஒரு ஆசிரியரின் வேலை கற்பிப்பது
    என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்
    அது யாராலேயும் முடியாது என்று சுவாமிவிவேகானந்தர் கூறியிருக்கிறார்
    ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இருக்கும் அறிவை
    உணர்ந்துகொள்ள வழி வகுத்து அவனுக்கு உதவி செய்வதே ஆசிரியரின் பணி
    ஆனால் இன்று நடப்பதென்ன?
    மாணவனின் கருத்தை யாரும் கேட்பதில்லை
    பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கின்றனர்
    அனைவரையும் ஒரே பாடத்தை படிக்குமாறு வற்ப்புறுத்த படுகின்றனர்
    ஏற்றுக்கொள்ள மறுக்கும் குழந்தைகளை கொடுமைபடுத்துகின்றனர்
    அதனால்தான் இன்று கற்பது ஒன்று
    வாழ்க்கையில் நடப்பது ஒன்று.
    உதாரணதிற்கு பலர் படிப்பது பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது கணக்கு
    ஆனால் தொழில் புரிவது நடிகனாக பாடகனாக என அவர்கள் படித்த துறைக்கு தொடர்பில்லாத துறைகள்
    இதனால் பெற்றோருக்கும் நஷ்டம் அரசுக்கும் நஷ்டம்
    இன்று யாருக்கும் சுதந்திரமில்லை
    யாராவது யார் மீதாவது எதையாவதை திணித்து அவர்கள் வாழ்க்கையை சீரழிப்பதுடன் அவர்களின் நிம்மதியையும் இழக்கின்றனர்
    இந்நிலை மாறுவது எப்போதோ?

    பதிலளிநீக்கு
  9. இன்றைய காலகட்டத்துக்கு தகுந்த நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  10. எதார்த்தமான நடை! எளிமையான நடை...தொடருங்கள் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவு ஒவ்வொரு மாணவர்களிடம் சென்றடையவேண்டும்

    பதிலளிநீக்கு
  12. இந்த பதிவினைப் படித்த பின் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டேன்...
    மூன்றிற்கும் இடையிலான வேறுபாட்டினை விளக்கியமைக்கு நன்றி..

    இதனைக் கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  13. சிந்தனைக்கு விருந்தாக அமைந்த அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வளரும் பயிர்களுக்கோர் சிறந்த பதிவு நன்றி...

    பதிலளிநீக்கு
  15. நண்பரே எம்முடைய பள்ளி நாட்களையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டீர்கள்...
    நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குறேன்...

    பதிலளிநீக்கு
  16. @புலவர் சா இராமாநுசம் அவர்களுக்கு, ஐயாவின் கருத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. #மாணவர்களே : தினமும் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அந்த குறளின் பொருளை முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். திருக்குறளில் இல்லாத விசயமே இல்லை# உண்மை ... எனது பதிவில் போராளி - புதிய போர் பழைய களம் ...
    http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html

    பதிலளிநீக்கு
  18. பதிவை படித்து அறிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  19. அறிந்தது தான் - தெரிந்தும் புரிந்தும் கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. அறிந்து,தெரிந்து,புரிந்து கொண்டேன். மிகவும் நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  21. பல விசயங்களை அறிந்து கொள்ள தெளிவான பதிவு புரிந்து கொண்டேன் நண்பரே.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  22. மாப்ள உண்மைதான்...முக்கால் வாசி விஷயங்கள் அனுபவத்தோடு வந்து சேருகின்றன!

    பதிலளிநீக்கு
  23. சார் மன்னிக்கவும்..
    இப்போ தான் வாசித்தேன்....
    இருந்தாலும் நாம நிறைய பேசியிருக்கோம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் விளக்கங்கள் அருமை! நல்ல விஷயங்கள் எப்போதும் தாமதமாத்தான் புரியும்......! ஆசிரியரை நினைவுகூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  25. படிப்பதற்குத் தகுதியான புத்தகங்களை மட்டும் படிக்க வேண்டும். அந்த புத்தகங்களை எவ்வித பழுதில்லாமல் படிக்க வேண்டும். அவ்வாறு படித்த பின் அந்த புத்தகத்தின் தகுதிக்குத் தகுந்த படி நீங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

    பதிலளிநீக்கு
  26. திறமையான ஆசிரியரால், படிப்பில் ஆர்வத்தினை உருவாக்கி, சான்றோனாக்கும் வல்லமை ஒரு ஆசிரியனுக்கும், ஒரு மாணவனின் தந்தைக்கும் உண்டு.
    பதிவில் மிகவும் எளிமையாக வலியுறுத்தி, உணர்த்தியிருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  27. அருமையான பகிர்வு, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...!!

    பதிலளிநீக்கு
  28. அறிந்தது. புரிந்தது. தெரிந்தது. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. தனபாலன் நம்முடைய அனுபவங்கள்தான் நம்முடைய வாழ்க்கையை வழிநடத்திச்செல்கின்றன. கணித ஆசிரியர் தமிழாசிரியராக இருந்த சூழல் அருமை. ஆகவே அறிந்ததையும் அதனை நன்றாகத் தெரிந்துகொண்டதையும் அதனைப் புரிந்து இன்று எங்களுக்குக் கூறுவதையும் உணரும்போது அதன் அருமை புரிகிறது. தொடர்ந்து இதுபோல வேறுபட்ட அனுபவங்களைப் பகிரத் தாருங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. நீங்கள் செய்யும் செயலானது திருந்தச் செய்ய வேண்டுமென்றால் "அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல்" இந்த மூன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதைப் பற்றி உங்களுக்கு சரியாக அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பிற்காலத்தில் பல நேரங்களில் இந்த மூன்றும் உதவும்...." என்று கூறினார்.//

    உங்கள் ஆசிரியர் சொன்னது நன்றாக பயன் படுகிறது உங்களுக்கு.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  31. "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" தேவையான பகிர்தல், பாராட்டுக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  32. உங்கள் விளக்கங்கள் அருமை... நல்ல விஷயங்கள் எப்போதும் தாமதமாத்தான் புரியும்...ஆசிரியரை நினைவுகூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  33. எங்கள் 11ம் ஆண்டு கணக்கு வாத்தியாரும் இப்படித் தான். கணக்கைப் புரிந்து செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். பசுமையான நினைவுகளை மீட்டுத் தந்தீர்கள். மாணவர்களாக இருக்கும் காலங்களில் ஆசிரியர்களின் அருமை தெரிவதில்லை. இப்போது தான் அவர்கள் வசங்களின் அர்த்தங்கள் புரிகின்றது. பகிர்விற்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  34. நல்ல கருத்து நண்பரே


    அனைத்திலும் வாக்களித்தேன்

    தமிழ் மணம் 14

    பதிலளிநீக்கு
  35. அழகான எளிமையானா எழுத்து நடை..பாராட்டுக்கள் நண்பரே..தொடர்ந்தும் எழுதுங்கள்..

    பதிலளிநீக்கு
  36. ஒன்று நன்றாக விளங்குகிறது தனபாலன். பதிவுலகு பற்றி நீங்கள் நன்றாக அறிந்து, தெரிந்து புரிந்து செயல்படுகிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  37. ஒரு நல்ல ஆசிரியராய்த் தம் பணியைச் சிறப்புற செய்த ஆசிரியருக்கும், ஒரு நல்ல மாணவனாய் அவர் சொன்னதைப் பின்பற்றி இன்றும் அவரது கருத்துக்களைப் பரப்பி பலரும் பயனடையச் செய்யும் தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டும். மிகவும் பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
  38. சகோதரா! எனக்குத் தலை சுற்றுது ஆயினும் உமக்கு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  39. உயரிய சிந்தனையை அனுபவ ரீதியாகத் தந்தமை சிறப்பாக உள்ளது, பாராட்டுக்கள் நண்பா!

    தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  40. சிறப்பான கட்டுரை தனபாலன் சார்.திண்டுக்கல்லில் எந்தப் பள்ளியில் படித்தீர்கள்?

    பதிலளிநீக்கு
  41. அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ளச் சொன்ன ஆசிரியர் கிடைச்சது உங்க அதிர்ஷ்டம், எனக்கு அப்படி ஒரு கணக்கு ஆசிரியர் கிடைச்சிருந்தால்??? ம்ம்ம்ம்ம்ம்ம் கனவு தான்! :)))) வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் ஆசிரியருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.