🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை...?

நண்பர்களே!... இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது தானத்தைப் பற்றி. உலகில் இப்போது நிறையத் தானங்கள் இருந்தாலும், அதில் எந்தத் தானம் உண்மையானது, எந்தத் தானம் முதலில் தேவை, இன்னும் பலவற்றைப் பற்றி அலசுவோம்.


நண்பர்களே! இவை யாவும் என் சொந்த கருத்துக்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இன்றைய உலகில் பல்வேறு தானங்கள் பெருகி விட்டன. அன்ன தானம், கண் தானம், இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம்.... இப்படிப் பல. இவையெல்லாம் வரவேற்கத் தக்க வேண்டியது தான். தானம் பற்றிய சில விளக்கங்கள் :

நம்முடைய பெருமைக்காக, ஜோசியர் சொல்லிவிட்டதால் பரிகாரத்திற்காக, சுயநலத்திற்காக மற்றும் பல தானங்களைப் பற்றி நான் அலசப் போவதில்லை.
ஏழைகளுக்கு, உண்மையிலேயே துன்பப் படுபவர்களுக்கு மனதார தானம் செய்வது தான் சிறந்தது. நம்ம திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால்...
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர் துடைத்து. (குறள் எண் : 221)
பொருள் : வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே தானம். பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர் பார்த்துத் தருவதே ஆகும்.

"தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, 'நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றைத் தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள்' என்று சொன்னார்கள். "நமக்கு எங்கே மிஞ்சுவது? நாம் எங்கே தானமும் தர்மமும் செய்வது?" என்று நினைக்காமல் நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து, முடிந்தால் மனதார மேலே நம்ம திருவள்ளுவர் சொன்னதைப் போலச் செய்யலாமே.

"பாத்திர அறிந்து பிச்சையிடு" என்றும் பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, நாம் மற்றவர்களுக்குத் தானமோ, உதவியோ செய்யும் போது, அந்தத் தானமோ, உதவியோ அவர்களுக்கு உண்மையிலேயே தேவை இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அதை விட நம்ம திருவள்ளுவர் ஒரு படி மேலே போய் என்ன சொல்கிறார் என்றால்...
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள. (குறள் எண் : 223)
பொருள் : ஒருவன் வந்து, 'நான் யாதும் இல்லாதவன்' என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடியில் பிறந்தவனுக்கு உண்டு. பெரியோர்கள் இதையே கதையாகவும் சொல்வார்கள் :

அந்தக் காலத்தில், ஒரு பெரிய பணக்காரர் தன் வீட்டிற்கு வந்த ஒருவருக்கு 10 ரூபாய் பிச்சை இட்டார். அந்த நபர் எந்த வேலையும் நிரந்தரமாகச் செய்ததில்லை. ஆனால் அதிகப் பணம் கிடைத்தவுடன், அந்த 10 ரூபாயை வைத்துக் கொண்டு கொஞ்சக் கொஞ்சமாக முன்னேறினார். செய்த தொழில் என்னமோ தவறான தொழில். எப்படியோ மற்றவர்களை ஏமாற்றி, பொய் சொல்லி, தில்லுமுல்லு செய்து, ஒரு வருடத்தில் அவரும் பெரிய பணக்காரராகி விட்டார். ஒரு நாள் அவருடைய வீட்டிற்குப் பிச்சை கேட்க ஒருவர் வந்தார். அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் ! அவர் வேறு யாருமல்ல. அன்று 10 ரூபாய் பிச்சையாக இட்ட பெரிய பணக்காரர். அவர், "உன்னைப் பற்றித் தெரியாமல் அன்று நான் உனக்குப் பிச்சை இட்டேன். நீ அந்தப் பணத்தை வைத்து என்னென்ன தப்பு செய்தாயோ தெரியவில்லை. அந்தப் பணத்தினால் நீ செய்த பாவமெல்லாம் எனக்கு வந்து, இப்படி உன்னிடம் வந்து பிச்சை கேட்கும் நிலைமைக்கு வந்து விட்டது" என்று புலம்பிக் கொண்டே சென்றாராம்.

மேலே உள்ள கதை அந்தக் காலத்தில்...! இந்தக் காலத்தில் அந்த மாதிரி நடந்தால், நம்மிடம் வந்து நமக்கே பலபல அறிவுரைகளும், ஆலோசனைகளையும் சொல்வார்கள். அதனால் நண்பர்களே : பெரியோர்கள் சொன்னது போல் "பாத்திர அறிந்து பிச்சையிடு"

தானத்தைப் பற்றி எழுதும் போது கர்ணனைப் பற்றி எழுதாமலிருக்க முடியுமா? அப்படி நினைக்கும் போதே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நம் கண் முன் வராமல் இருக்க முடியுமா? அந்தப் படத்தில் கர்ணன் இறக்கும் தறுவாயில், அவர் செய்த தர்மம் அவரை இறக்க முடியாமல் தடுக்கும். பிறகு, அவர் செய்த தர்மமெல்லாம் கிருஷ்ணன் வந்து விவரமாக வாங்கிக் கொண்டு சென்று விடுவார். (சிறு வயதில் அந்தப் படத்தைப் பார்க்கும் போது கிருஷ்ணன் மீது கோப கோபமாக வரும்) ஆனால், அப்போது கூடக் கர்ணன், வந்திருப்பது யார் என்று தெரிந்தும், "முதியவரே. இந்த வாய்ப்பை அடைந்ததற்குப் பெரும் பேறு பெற்றேன்" என்று சந்தோசமாகக் கூறி எல்லாவற்றையும் தாரை வார்த்துக் கொடுத்து விடுவார். நாமும் அவரைப் போல தானம் செய்வதை இறைவன் நமக்குக் கொடுத்த வாய்ப்பு என்று எண்ண வேண்டும். கர்ணனின் கொடையைப் பற்றி ஒரு புத்தகத்தில் :

பெரும்பாலும் தானம் செய்கிறவர்கள் கை மேல் இருக்கும். வாங்குபவர்கள் கை கீழே இருக்கும். ஆனால், கர்ணன் தானம் செய்யும் போது, எல்லாவற்றையும் தனது உள்ளங்கையில் வைத்துத் தானம் செய்வாராம். அதாவது கர்ணனின் கை கீழிருக்கும். தானம் பெறுபவர்கள், கர்ணனின் உள்ளங்கையில் உள்ள பொருளை மேலே இருந்து எடுத்துக் கொள்வார்கள். அதாவது வாங்குபவர்கள் கை மேல் இருக்கும். இதைப் பார்த்த கிருஷ்ணன், "கர்ணா! தானம் தருபவர்கள் கை மேலே தானே இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை கீழே தானே இருக்கும். நீ இப்படிச் செய்தால் உனக்குப் புண்ணியம் எப்படிக் கிடைக்கும்?" என்ற விளக்கத்தைக் கேட்டார். (கிருஷ்ணனுக்கா தெரியாது... கர்ணனின் பெருமையை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காகத் தான்!)

கர்ணன், "கிருஷ்ணா! நான் தானம் செய்வது எனது புகழுக்காக அல்ல. நான் மடிந்த பின் கொடை வள்ளல் என்ற பெயர் வாங்குவதற்காகவும் அல்ல." என்று கூறினார். மேலும் கர்ணன் கூறியது தான் கிருஷ்ணனுக்கே திகைப்பாக இருந்தது. "கிருஷ்ணா! 'எத்தனை பிறவி எடுத்தாலும் இதைப் போல் தானம் செய்வதற்கு எனக்கு வல்லமை தா' என்று என் கைகளைக் கீழே வைத்து இறைவனை வேண்டுகிறேன். தானமும் செய்கிறேன். நீயே சொல்! புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழே தானே இருக்க வேண்டும்!" என்றாராம்..... சரி நாம் நம்ம விசயத்திற்கு வருவோம் நண்பர்களே...

(1) உயிரோடு இருக்கும் போது ரத்த தானம், (2) இறந்த பின் கண் தானம், (3) இறந்தும் இறவாமல் இருக்க உடல் உறுப்புகள் தானம் - இவ்வாறெல்லாம் செய்யலாம் என்று நான் கூறப் போவதில்லை. இவற்றை எல்லாம் செய்ய மருத்துவத்தில் பல வரைமுறைகள் உள்ளன. சட்டத்திலும் பல விதிமுறைகள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்தத் தானங்கள் செய்வது அவரவர் விருப்பம். அவரவர் மனதைப் பொறுத்தது.

அதை விட முக்கியம் என்னவென்றால் மேலே உள்ள தானங்கள் செய்வதற்கு ஏற்றவாறு நம்முடைய உடலைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். மனதையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நிதானம் என்பதற்குக் கவனம் அல்லது பொறுமை என்கிற அர்த்தமுண்டு. முதலில் உங்களின் உடம்பையும், மனதையும், கவனமாகவும் பொறுமையாகவும் இந்த நவீன உலகில் ஏற்றவாறு காத்துக் கொள்ளுங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பொறுத்தார் பூமி ஆள்வார். பிறகு மேலே உள்ள தானங்களை யோசியுங்கள். ஆக என்னைப் பொறுத்தவரை,

இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை.

நன்றி!

நிதானத்துடன் செயல் பட்டால் என்னவாகும் என்பதைப் படிக்க இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உண்மைதான்,இன்றைய அவசர உலகில் நிதானமே முக்கியம்,நன்று

    பதிலளிநீக்கு
  2. சரிங்க சகோதரரே, நிதானமா படிச்சிட்டு நிதானமா கருத்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அதை விட முக்கியம் என்னவென்றால் மேலே உள்ள தானங்கள் செய்வதற்கு ஏற்றவாறு நம்முடைய உடலை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். மனதையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நிதானம் என்பதற்கு கவனம் அல்லது பொறுமை என்கிற அர்த்தமுண்டு. முதலில் உங்களின் உடம்பையும், மனதையும், கவனமாகவும் பொறுமையாகவும் இந்த நவீன உலகில் ஏற்றவாறு காத்துக் கொள்ளுங்கள்
    >>>
    ஒத்து கொள்ள வேண்டிய விசஹ்யம்தான் சகோ. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். உடல்நலம் இருந்தால்தானே ரத்ததானம், பொருள்தானம், கோதானம் போன்றவற்ற செய்யலாம்

    பதிலளிநீக்கு
  4. இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை.----உண்மை தான்

    பதிலளிநீக்கு
  5. இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை.- உண்மை தான் ....

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. கர்ணன் படத்தையும் கண்முன் கொண்டுவந்துள்ளீர்கள். உதவி உதவி வரைத்தன்று உதவி உதவி செய்தார் சால்பின் வரைத்தன்று என்றும் ஒரு குறள் இருக்கின்றது. இது பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்னும் பழமொழியுடன் தொடர்புடையது.அத்தனை அள்ளிக் கொடுத்தும் கர்ணனுக்கு இந்த நிலை. கூடாத கூட்டத்துடன் சேர்ந்தால் அள்ளிக் கொடுத்தும் புண்ணியம் இல்லை. இப்படி எல்லாவற்றையும் அவதானமாக கவனித்தே மனிதன் வாழவேண்டி இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு. கர்ணன் படத்தையும் கண்முன் கொண்டுவந்துள்ளீர்கள். உதவி உதவி வரைத்தன்று உதவி உதவி செய்தார் சால்பின் வரைத்தன்று என்றும் ஒரு குறள் இருக்கின்றது. இது பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்னும் பழமொழியுடன் தொடர்புடையது.அத்தனை அள்ளிக் கொடுத்தும் கர்ணனுக்கு இந்த நிலை. கூடாத கூட்டத்துடன் சேர்ந்தால் அள்ளிக் கொடுத்தும் புண்ணியம் இல்லை. இப்படி எல்லாவற்றையும் அவதானமாக கவனித்தே மனிதன் வாழவேண்டி இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  8. விளக்கக் கதைகள் மிகவும் அருமை. இன்றைய மனிதனுக்கு நிதானம்தான் முதன் முதல் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.
    உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com ல் பதிவுகளை பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆம் நண்பரே,

    நின்று பேசும் தானம் நிதானம்.
    நிதானம் இருந்தால் சொல்விதானம் பெரும்...

    அருமையான பதிவுக்கு நன்றிகள் பல நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. முதலில் நம்மளை பார்க்கணும் பாஸ்.... :)

    கர்ணன் ஆக இருந்தால் உடனே நமக்கு சங்கு ஊதிருவாங் களே !!! அவ்வ

    பதிலளிநீக்கு
  11. இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை.----உண்மை தான்

    பதிலளிநீக்கு
  12. தானத்தில் சிறந்தது நிதானம்.
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  13. ’நானும்தான் தானம் செய்கிறேன், கர்ணனை ஏன் வள்ளல் என்கிறார்கள்?’ என அர்ஜூனன் கேட்க, கண்ணன் இரு தங்க மலைகளை உண்டாக்கி, இரவுக்குள் இதை தானம் செய் என நிபந்தனை விதிக்க, பகலெல்லாம் வறியவருக்கு பாளம் பாளமாக வெட்டித் தந்தும் மலை தீராமல் விஜயன் களைத்துப் போக, மாலையில் கண்ணன், கர்ணனை அழைத்து அதே நிபந்தனையைக் கூற, இரு வறியவர்களை அழைத்த கர்ணன், ’இதோ உனக்கு ஒரு மலை, அவனுக்கு ஒரு மலை’ என்று நொடியில் தானம் செய்தானாம். கொடைத்தன்மை ரத்தத்தில் ஊறியது என்பதற்கு கர்ணனைப் பற்றிய இந்தக் கதை என் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  14. தானத்தில் சிறந்தது நிதானம், பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும் என்ற நல்ல விஷயங்களை அழகுற உரைத்துள்ளீர்கள் தனபாலன் சார்! அதே சமயம் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன ஔவையையும் மனதில் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. (நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன்.) அருமையான ஒரு பதிவுக்கு என் மனமார்நத பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  15. பெரியதொரு செய்தியை சுருக்கி உணர்த்திய உங்களுக்கு நன்றிகள் .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. MIGA ARUMAI
    இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை.

    பதிலளிநீக்கு
  17. பிறர் நிலைமை கண்டு மனம் சஞ்சலப் பட்டாலே அது பெரிய தானம் தான்...

    பதிலளிநீக்கு
  18. வேகமாக போய்கொண்டிருக்கும் இந்த உலகில்
    இந்த பதிவை பொறுமையாக படித்து புரிந்துகொள்ள
    நிதானம் தேவை .அது எத்தனை பேருக்கு இருக்கிறது
    என்பது அவரவர் மனதிற்கு தெரியும்
    முக்கியமாக பேசும் பேச்சில் நிதானம் இருந்தால்
    வாழ்க்கையில் தேவையற்ற துன்பங்களையும்
    இழப்புகளையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து
    ஒரு பழமொழி உண்டு.
    ஆரங்குலமே உள்ள நாக்கு ஆறடி உயரம் உள்ள
    மனிதனையே கொன்றுவிடும்.

    பதிலளிநீக்கு
  19. அட கலக்கிபுட்டீங்க...உண்மைதானுங்களே..!

    பதிலளிநீக்கு
  20. வாழ்க்கையின் புரிதலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..

    நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  21. இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை....நல்ல கருத்து தொடருங்கள் ....

    பதிலளிநீக்கு
  22. இன்றைய தேவை நிதானமும் பொறுமையும்
    என்பது மிகச் சரியான கருத்தே
    அதைத் தெளிவாக அனைவரும் மறுக்காது
    ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லிச் சென்ற விதம்
    மிக மிக அருமை
    இந்தப் பதிவு தங்களிடம் நிறைய எதிர்பார்ப்பை
    ஏற்படுத்திப் போகிறது தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6

    பதிலளிநீக்கு
  23. பதிவு மிக அருமை, தாங்கள் கூறநினைத்த கருத்தை குழப்பாமல் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்... அருமை... நண்பரே...

    தானம்-நிதானம் அடிப்படையில் இவை இரண்டும் வேறுவேறு, பலர் இவை இரண்டையும் ஒப்பிடுவது தான் எனக்கு வியப்பை ஏற்ப்படுத்துகிறது... நண்பா...

    பதிலளிநீக்கு
  24. எம்மாம் பெரிய விஷயம் அதை பொறுமையாக நிதானமாக சொன்ன விதம் சபாஸ்

    பதிலளிநீக்கு
  25. சென்ற பதிவிலேயே தங்களிடம் சொல்லநினைத்தேன்... நண்பரே...

    அனைத்து பதிவிலும் தாங்கள் திருக்குறள் பயன்படுத்துவதால் குறளின் எண்களை சேர்த்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்குமென்று...

    இதை தாங்களே உணர்ந்து கொண்டு, திருத்திக்கொண்டது எமக்கு மகிழ்ச்சி... நண்பா...

    பதிலளிநீக்கு
  26. கருத்தாழமிக்க அருமையான பதிவு,நல்ல பின்னூட்டங்கள், ஆரோக்கியமான விடயம் வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  27. சிறப்பான கருத்துக்கள். தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. பகிர்வுக்கு நன்றி நண்பரே. பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  29. நிதானம் பொறுமை எல்லாம் சரிதான். நிதானம் எந்தவகை தானத்தில் சேர்க்கமுடியும்? அன்ன தானம், உடல் உறுப்புதானம், கண்தானம் இதெல்லாம் தனியா வருது இல்லியா?

    பதிலளிநீக்கு
  30. அவசர உலகத்திற்கு நிதானமின்றி செயல்படுவதால், உணர்ச்சி வசப்படுவதால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். தங்களின் பதிவில், அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதனை செயலில் கொண்டு வருவார்களேயானால், நிம்மதியான வாழ்வு கிட்டும் என்பது திண்ணம்.!.நன்றி !

    பதிலளிநீக்கு
  31. ஃஃஃஃஃ"பாத்திரமறிந்து பிச்சையிடு" என்றும் பெரியோர்கள் சொல்வார்கள்.ஃஃஃஃ

    நிச்சயமான உண்மைங்கோ.. இது அறியாததால் தான் இன்றும் பணக்காரன் தான் பணக்காரனாக இருக்கிறான்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

    பதிலளிநீக்கு
  32. நிதானம் மிகவும் முக்கியம் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  33. வணக்கம்! தானம் என்பது அடுத்தவருக்கு நாம் கொடுப்பது.நிதானம் என்பது நம்மோடு இருக்க வேண்டிய குணம். தானத்தில் சிறந்தது அன்னதானம். இது பழமொழி.

    //இன்றைய மனிதனுக்கு நிதானம் (கவனம்/பொறுமை) தான் முதலில் தேவை.//

    என்ற தங்கள் வரிகள் தங்கள் அனுபவ உண்மையைக் காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  34. தானம் செய்வதால் கர்ம வினைப்பயனில் இருந்து விடுபடலாம்!

    பாராட்டுக்கள் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  35. இன்றைய அவசர உலகில் நிதானமே முக்கியம். அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  36. நிச்சயமாக மனிதனுக்கு னி'தானம்'தேவை..

    அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  37. நிதானமாய் வந்து நிதானம் தான் இப்போது முக்கியம் என ஒத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. தானம், நிதானம் அருமையான வார்த்தைகள் இரண்டுக்குமான தொடர்புபடுத்தி எழுதிய இந்த பதிவும்.. அருமை.. நிதானம் இருந்தால் மட்டும் பதிவைப் படிக்க மட்டுமல்ல..வாழ்க்கையைப் படிக்கவும் உதவும்..!!!

    பதிலளிநீக்கு
  39. மிகவும் நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

    ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
    www.shareblood.in


    இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
    பலருக்கும் பேருதவியாக இருக்கும்
    www.shareblood.in

    பதிலளிநீக்கு
  40. மனிதனுக்குத் தேவை நிதானம்...
    அதுவே முதல் பிரதானம்

    அருமை நண்பரே!!

    பதிலளிநீக்கு
  41. முன்பு பல நேரங்களில், "நன்றி நண்பரே" "பகிர்விற்கு நன்றி" இப்படி சில வரிகளில் பதில் சொல்லிக்கொண்டு இருந்த என்னை சிந்தித்து பதில் எழுதத் தூண்டியமைக்கு நன்றிகள் பல!!

    பதிலளிநீக்கு
  42. அறிவுப் பெட்டகத்திலிருந்து அருவி போல கொட்டுகிறது. ஒவ்வொரு பதிவும் ஆற அமர படிக்கத் தூண்டுகின்றது. எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. தானமிடுபவருக்கு தானம் பெருபவரின் பாவங்கள் வந்து சேருமா? என்பது தான் அது. சற்று விரிவாக விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  43. @கோவை எம் தங்கவேல் அவர்களுக்கு, மிக்க நன்றி நண்பரே! தானமிடுபவருக்கு தானம் பெறுபவரின் பாவங்கள் கண்டிப்பாக வராது ! அதைப் பற்றி விரிவாக, இறைவன் நாடினால் தனி பதிவாக எழுதுகிறேன் ! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.