🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பேயாட்சி...

அனைவருக்கும் வணக்கம்... செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களை இணைத்து முன்பு பதிவு செய்தேன்... அதன் இணைப்பு இப்போது அதன் தொடர்ச்சியாக அதிகார அகர வரிசையில் கடைசி வரும் அதிகாரம் தொடர்கிறது... இந்த முறை குறளின் குரலாக - ஐயனே அரசியல் களத்தில்...!


பொருட்பால் - இயல்: 5.அரசியல் - அதிகாரம்: 57.வெருவந்தசெய்யாமை (561-565)

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து : நாட்டின் பொறுப்பாளனே... குற்றங்களுக்குத் தண்டனை இல்லையென்றால் மக்களிடையே பயம் உண்டாகும்... அதே போல் குற்றத்திற்கு மிகையான தண்டனை வழங்கினாலும், அவையும் மக்களைப் பயத்தில் ஆழ்த்தும்... தீயவர்கள் திருத்தப்படவேண்டும் என்பதே தண்டனையின் நோக்கமாக இருக்க வேண்டும்... எனவே குற்றத்தைத் தக்க முறையில் நடுநிலையில் நின்று ஆராய்ந்து தண்டனை கொடு... மீண்டும் மற்றவர்கள் அத்தகைய குற்றங்களை எண்ணாதவாறு தண்டனை கொடு...

562. கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர் : ஓங்கிய அளவில் அடிக்காமல் ஒரு கை குறைந்து அடிப்பது போலத் தண்டனை இருக்க வேண்டும்... அச்சமும் தரவேண்டும் ஆறுதலும் தரவேண்டும்... குற்றவாளியைத் திருத்த வேண்டும் எனும் நோக்கம் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கல்ல... முதலில் கடுமையான, நேர்மையான, சரியான விசாரணை செய்... அதுவே ஒருவன் செய்த குற்றத்தின் வீச்சை உணர்ந்து திருத்தவும் வழி உண்டாக்கும்... இவையும் ஏனைய மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும்...

563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் : பழிக்குப் பலியும் வேண்டாம்... உமது மூடத்தனமான செயல்களை வழக்கமாகச் செய்து, மக்களை எந்நேரமும் ஒருவித பய உணர்வை நிலைக்கச் செய்வது ஏன் வெங்கோலனே...? அடுத்து என்ன வரி போடுவதென்றோ, எந்தவிதமாக உடைமைகளைப் பறிப்பதென்றோ, எப்படியெல்லாம் கேடுகளை விளைவிப்பது என்றோ என்று மக்கள் ஓயாது அலறும்படி செய்பவனே, நீ உறுதியாக விரைந்து அழிந்து போவாய்...

564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் : எந்நேரமும் மக்கள் அஞ்சும்படியான கொடிய செயல்களைத் தொடர்ந்து செய்பவனே... "நீ கொடியவன்" எனப் படிக்காத அறிவார்ந்த பெரும்பான்மையான மக்களும், சற்றே தெளிவு பெற்று அறிவு பெற்று வரும் படித்த மக்களும் இணைந்து மனம் பொறுக்கமாட்டாமல், "நீ வெங்கோலன்" என வசைபாடத் தொடங்கினால், நீ நாடு இழந்து விரைவில் காணாமற் போவாய்...

565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து : மக்களிடம் இருந்து பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவும், நாட்டின் வளங்களைப் பெருக்குவதற்காகவும் பயன்படுத்தாதவனே... இரக்கக் குணம் இல்லாமலும் அருளற்றவனாகவும் இருப்பவனே... யாரையும் சந்திக்க மறுத்தும், குறை தீர்க்க வேண்டி வருபவர்களைக் காக்க வைத்தும், மக்களுக்கு செய்ய வேண்டிய பொருளுதவி எதுவும் செய்யாமல், அச்சமூட்டும் தகவல்களை மட்டும் சந்திக்காமலேயே அனுப்புகிறாய்... சிலவேளைகளில் சிலரைக் காணநேரிட்டாலும் அவர்களுக்கு கடுமுகம் காட்டி விரட்டுகிறாய்... வெங்கோலனே உனது செல்வம் பேயைக் கண்டாற் போன்ற அச்சம் தருகிறது...!

உழைக்கும் மக்களுக்கு உதவாதவனை மனதில் நிறுத்தி... கேட்பொலியின் ஒலியைக் குறைத்து... கீழுள்ள வரிகளைப் பாடி... வெங்கோலனின் தொண்டர்களை அறியலாம்...

© திருடாதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(மன்னிப்பாராக) S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫

திருந்தாதே தலைவா திருத்தாதே... வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே, திருட்டு இருக்கு மறந்துவிடாதே... சிந்தித்துப் பார்த்துத் திட்டத்தை மாத்து, சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ ⚊ திருட்டு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ... தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா, அதை திரும்பவும் வராம பாத்துக்கோ... திருந்தாதே தலைவா திருத்தாதே... சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதைத் திட்டம் போட்டுத் தருகிற கூட்டம் வருடிக் கொண்டே இருக்குது... தலைவனாய் பார்த்துத் திருந்திவிட்டால் ⚊ திருட்டை வளர்க்க முடியாது... திருந்தாதே தலைவா திருத்தாதே... கெடுக்கிற காலம் நெருங்குவதால் இனி வாழ்கிற அவசியம் இருக்காது... இருக்கிறதெல்லாம் ஏலத்திற்குப் போனா ⚊ சிரிக்கிற வேலையும் இருக்காது, அழுகிற வேலையும் இருக்காது... அழிக்கிற நோக்கம் உறுதியாயிட்டா ⚊ வளர்க்கிற நோக்கம் வளராது, மனம் கீழும் மேலும் திருந்தாது... கெடுக்கிற நோக்கம் உறுதியாயிட்டா ⚊ கொடுக்கிற நோக்கம் வளராது... திருந்தாதே தலைவா திருத்தாதே...

ஐயனுக்குப் பதில் கூறலாம்... வெங்கோலனை சூழும் தொண்டர் கூட்டத்தினர் பற்றி அடுத்த பகுதியில்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பதில்கள்
    1. இன்றளவும் என்னுடன் படித்த நண்பனின் நிகழ்வை பதிவாக பகிர்ந்தாலும், அதை விட, இன்றைக்கு நாங்கள் அடைவது அளவில்லாத துயரம்...

      வலைப்பூ பதிவு என்பதற்காக அதன் இணைப்பை வாசித்து சற்றே உணரலாம் மற்றும் சரியான நேரத்தில் சரியான பதிவு இதோ : →இங்கே← அறியலாம்... நன்றி...

      நீக்கு
  2. திருந்தாதே தலைவா திருந்தாதே ..... ஹ ஹஹா ... அட்ரா சக்க ... அட்ரா சக்க...

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜீ ஒத்து ஓதுவார் என்று எதிர் பார்க்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ஏன்...? எதற்கு...? எதனால்...? உங்கள் கருத்து என்ன ஐயா...?

      அப்புறம் எதிர்ப்பார்த்து...?

      நீக்கு
    2. அதாவது கில்லர்ஜிக்கு மட்டும் புத்தி இருக்கிறது மற்றவர்களுக்கு இல்லை அப்படித்தானே . ஒத்து ஊதுதல் என்று நீங்கள் சொல்ல வருவது பதிவின் கருத்தை ஆமோதித்து கருத்தை பகிர்வதைத்தானே சொல்லுறீங்க.. இந்தபதிவில் தன்பாலன் எழுதியது கற்பனையா அல்லது நாட்டில் நடக்க கூடியதா? நாட்டில் நம் கண்மூண் நடப்பதை தனபாலன் எடுத்து சொல்லும் போது அதை ஆமோதிப்பதுதானே அறிவார்ந்தோருக்கு அழகு அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு உள்ள அறிவு சங்கிகளின் அறிவைப் போலத்தாணே

      நீக்கு
  4. நமது பிரதமருக்கு தமிழ் படிக்க அறிந்திருந்தால் இதன் இணைப்பை அனுப்பி வைக்கலாமே என்று தோன்றுகிறது ஜி

    திருடாதே பாடலை திருத்திய விதம் அருமை ஜி

    அரசியல்வியாதிகளை அகற்றாவிட்டால் நாட்டின் அழிவைத் தடுக்க முடியாது

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. ஐயா... அப்படியென்றால் பதிவின் ஆரம்பத்தில் கொடுத்த இணைப்பு பதிவுகள் எல்லாம் வீணா...?

      நீக்கு
  6. இந்தப் பதிவு எனக்கானது சரிதானே? நீங்க உருவாக்கிய குறள் தாக்கம் தீடீரென என்னிடம் இருந்து ஒரு நாள் வரும். காத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே... இல்லை... கண்டிப்பாக இல்லை... நேரமிருப்பின் பதிவின் ஆரம்பத்தில் உள்ள இணைப்பைச் சொடுக்கினால், 5 பதிவுகள் வரும்... அதை எந்தளவு உள்பக்கம் சென்று வாசித்து உணர்ந்தீர்களோ அடியேன் தெரியேன்...! அதற்கு முன் :

      'மை' பதிவில் சொன்னதே இன்னொரு முறை // கல்வியின் சிறப்பை கல்வி அதிகாரத்தில் சொல்லி விடும் ஐயன், மேலும் எழுத வேண்டி உள்ளது; ஆனால் // சிலர் தான் படிக்க வேண்டும், அதுவும் இதுவரை தான் படிக்க வேண்டும்; சிலர் படிக்காமல் 'தொழில்களை' மட்டும் செய்ய வேண்டும்' // என்று, இந்தக்கால கய'மை'யே மூச்சாகக் கொண்ட (உங்கள் / நீங்கள் நல்லதென வருடும்) தலை'மை'கள் போல் அன்றே சிலர் இருந்திருக்கலாம்... இன்றும் உள்ளது... இதனால் அனைத்து மக்களும் கல்லாமற்போனால் வரும் தீ'மை'களைப் பற்றி, ஆமையில் 41.கல்லா'மை'யில் சொல்லி விடுகிறார்; அதோடு முடிக்காமல், 'சொல்வதெல்லாம் எதுவாயினும் நல்லவை கேள்' எனும் கேள்வி அதிகாரத்தில், கல்வி வாயிலாக அறிவைப் பெறும் முயற்சியை விட, கேள்வி வாயிலாக அறிவை எளிதிலும் கூடுதலாகவும் பெற முடியும் என்பதையும் விளக்குவார்... //

      அங்குத் தொடர்வது 3 அதிகாரம்... சரி கேள்வி அதிகாரம் முடித்துத் தொடர்வது அறிவுடைமை அதிகாரம்... அவை இன்றைக்கு இல்லை என்பதை நீங்களே அறிவீர்கள்...! அதன் பின்னே 'மை' என முடியும் அரசியல் (அரசு இயல்) அதிகாரங்கள் 54.பொச்சாவாமை, 55.செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை அதன் பின் இந்த 57.வெருவந்தசெய்யாமை - கவனிக்க இங்கு 4 'மை' அதிகாரங்கள்...

      இது என்ன கணக்கு...? சற்று பொறுங்கள்... ஐயனின் கணக்கியல் அறிய இது ஒரு முன்னோட்டம் மட்டுமே... அப்புறம் தங்களின் கருத்துரையின்படி : குறள் தாக்கம் இல்லாதவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல; மனிதர்களே இல்லை...

      தங்களின் வலைப்பூ கருத்துரைப் பெட்டியில் உள்ள வாசகத்தைச் சற்றே சிறிது மாற்றத்துடன் : // கெடுப்பது தவறு... கேட்பது இரவு...? அல்லது இரவச்சம்...? // குறளின் அதிகார விளக்கம் அறிந்த தெரிந்த புரிதலுக்கு (?) நன்றி அண்ணே...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல இந்த பதிவும் அருமை. ரசித்தேன். அரசியல் குறள்களும் அதன் விளக்கங்களும் மனதில் நிற்கின்றன. பழைய பாட்டும் அதன் பொருளும் இனிக்கிறது. அதனை மாற்றிய வரிகள் தங்கள் மன ஆதங்கத்தை காட்டுகிறது. கூடவே கலக்கத்தையும் ஊட்டுகிறது. தொகுப்பு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. பட்டுக் கோட்டை அவர்களின் பாடல் கேட்டேன்.
    அது போல மாற்று பாடலையும் பாடிப் பார்த்தேன்.

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
    என்பது உண்மை.


    பாட்டு சொல்லும் கருத்துக்கள் மனகலக்கத்தை தருகிறது.
    நல்லதே நடக்கட்டும். எல்லோரும் நல்லோர் ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  9. சந்திக்க மறுத்தும், காக்க வைத்தும்.. இப்படி எல்லாம் நடக்குமா என்று அங்கலாய்ப்பதை ஐயன் அன்றே சொல்லிவிட்டாரே!
    உங்கள் பாடல் வரிகள் அருமை அண்ணா. இந்தப் பாடலை ட்ராக்டர் தோறும் ஒலிபெருக்கியில் கேட்க வைக்கலாமோ!

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான கருத்துக்களை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் விதமாக உரைநடையை அமைத்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  11. திருத்தம் செய்யப்பெற்ற திருடாதே பாடல் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  12. வாசித்து , மனதில் இருத்த வேண்டிய கருத்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  13. நாட்டை எங்கே நல் வழியில் நடத்துக்கின்றார்கள். சட்டத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றி பயத்தை உண்டாக்குகின்றார்கள்.குறள் அருமை விளக்கம் டிடி.

    பதிலளிநீக்கு
  14. நாட்டின் பொறுப்பாளனே என்று ஆரம்பித்து சொல்லி இருக்கும் வரிகள் நாட்டின் பொறுப்பாளனுக்கு கொஞ்சமும் பொருத்தமாக இல்லை காரணம் தவறு செய்பவன் அவனே. அவனை தட்டிக் கேட்கும் நிலையில் உள்ள மக்களும் தங்களின் சுயநலன் காரணமாக அவரை பாராட்டி தங்களை மூளையை அடகு கடையில் வைத்தவர்கள் போல செயல்படுகிறார்கள் என்னத்த சொல்ல

    பதிலளிநீக்கு
  15. இன்றைய அரசியல் சூழலுக்கேற்ற குறளும் அதற்கான விளக்கமும் சிறப்பு. இந்த அரசியல் வியாதிகளை தவிர்க்க வாக்கு என்னும் தடுப்பு மருந்தை வாக்காளர்கள் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். பட்டுக்கோட்டையாரின் பாடலும் ரசித்தேன். அதை நீங்கள் திருத்தியமைத்த அழகும் சிறப்பு. வாழ்த்துகள்! அன்புடன். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

    பதிலளிநீக்கு
  16. நடப்பு சார்ந்த பதிவு ! அருமை..!! மகிழ்ச்சி!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.