🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஆட்சி சந்தி சிரிக்கும் போது, மழை எப்படி சிந்தி சிறக்கும்...?

அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

முந்தைய பதிவின் இணைப்புகள் :-
1) எல்லா பணத்தையும் எடு...!
2) உலகத்தில் கோழைகள் தலைவன்...
3) மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...!
4) தேசம் சுடுகாடு ஆவது நன்றோ...?

அமைதியாக வெளிமனம் நல்லாட்சியைப் பேசுகிறது...
அதை எதிர்த்துக் கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியைக் கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...!

முக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்...! மனதில் தோன்றுவதைக் கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதைக் கூறிக்கொண்டு...

மக்கள் மட்டுமல்ல, இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் மழையின் செம்மையை எதிர்பார்த்து வாழ்கின்றன... அது போல தான் ஒரு அரசாட்சியின் நேர்மை, மழையைப் போல் செழுமையாக இருக்க வேண்டும்...

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி (542)



தப்பான ஆட்சியாளரை திட்றதை விட, கொஞ்ச நேரம் மழை பெஞ்சா போதும், அதைத் திட்டாத ஆளு கிடையாது...! கருமேகம் சூழும், சிலுசிலுன்னு காத்தடிக்கும், மழை...? வரும் ஆனால் வராது...! ஒரு போக்கு காட்டிட்டு ஓடிரும்...! அது அரசாங்கத்திடம் கத்துக்கிடுச்சி...! முறைப்படி ஆட்சி செஞ்சா, முறைப்படி மழையும் பெய்யும்... ஆட்சியாளர்களின் ஆட்சி சந்தி சிரிக்கும் போது, மழை எப்படிச் சிந்திச் சிறக்கும்...?

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் (559)


மோசடிப் பாதையிலே... காசினை சேர்த்தாலும்2 பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்2 வாசமில்லா மென்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய், வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா...? சிந்தித்தால் சிரிப்பு வரும்... மனம் நொந்தால் அழுகை வரும்... வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்2 வயிற்றுப் பசியாலே, வாடி மடிவதில்லை2 மனதிலே சிறந்தவனாம், மண்ணிலே உயர்ந்தவனாம்... மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா...© செங்கமலத் தீவு திருச்சி தியாகராஜன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫

தப்பு செய்து விட்டால். அதற்குச் சரியாகத் தண்டனை உண்டு... அது யாராக இருந்தாலும் எந்த பாகுபாடும் கிடையாது... குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சியின் மிகச் சிறந்த பணியாகும்...

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை (541)



க்கும்... இதுமட்டும் தான் குறைச்சல்...! மோசமான ஆட்சியிலே எல்லாமே முறை தவறி நடக்குது... பசுவின் பால்வளம் குறையுது... சிந்திக்கும் ஞானிகளுக்கு நூல் உட்பட எல்லாமே மறந்து போகுது... எல்லா தொழிலும் நசிந்து நாசமா போகுது... காவல் செய்றவனே திருடுனா...? காக்க வேண்டிய அரசே, முறை தவறினால் அனைத்தும் கெட்டுப் போகாதா...?

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின் (560)


திரைப்படத்தில் இல்லாத பாடல் வரிகள் :- சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டி, சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டு, சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா... புதிரான உலகமடா, உண்மைக்கு எதிரான உலகமடா - இதில் பொறுமையைக் கிண்டிவிடும் போக்கிரிகள் அதிகமடா... குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா... இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா... தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா... இதயம் திருந்த மருந்து சொல்லடா...© மகாதேவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1957 ⟫

பிற்சேர்க்கை : ← இந்த மணியைச் சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைப்பேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...

இத்துடன் செங்கோன்மை மற்றும் கொடுங்கோன்மை அதிகாரங்களில் உள்ள குறள்களின் குரல்கள் நிறைவு பெற்றது... குறள்களின் இணைப்பைப் பற்றிய பதிவு விரைவில்... மற்றபடி உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............




?

அரசியல் அதிகாரங்கள் முடிந்தது... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அற்புதம். ஒவ்வொன்றையும் கவனித்து அதிக ஆச்சரியம் (மட்டும்) அடைய முடிகின்றது.

    பதிலளிநீக்கு
  2. டிடி வணக்கம்...பதிவு வழக்கம் போல அருமை....நீலமும் மத்த கலரும் ..

    படத்தில் இல்லாத பாடல் வரிகள் உட்பட எல்லாம் சூப்பர்.

    ஒன்றே ஒன்றுதான் நான் சொல்ல விரும்புவது. எந்த ஆட்சியாக இருக்கட்டும், ஆட்சி செய்பவர் யாராக இருக்கட்டும், எந்த நாடாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...

    விவசாயம், விவசாயி, ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் விவசாயம், கால்நடை, நீர்வளம் இவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் எந்த நாடாக இருந்தாலும் சரி அது வீழ்ச்சியைக் காணும் எல்லா வகையிலும். அதுவும் விவசாயம் முதுகெலும்பாக உள்ள நாடு எதுவாக இருந்தாலும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. புதுமையான எழுத்து நடையே உனது பெயர் தான் திண்டுக்கல் தனபாலனா

    பதிலளிநீக்கு
  4. உரிய நேரத்தில் உரியவர்களுக்கு உறைக்கும் வகையில் பொருத்தமான கவிதை வரிகளைத் தாங்கிய பதிவு.

    பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  5. இந்த காலத்தில் நடக்கும் செயலுக்கும் பொருத்தமான பாட்டு.
    "விளையும் பயிறை, வளரும் கொடியை வேரோடு அறுத்து விளையாடும்"
    நாள்தோறும் செய்திகள் மனதை வருத்த படுத்துகிறது. யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றுது.

    பதிலளிநீக்கு
  6. பதிவு நல்லா வந்திருக்கு. எனக்குத் தெரிந்து காமராசர் காலத்திற்கு அப்புறம் சிறப்பான ஆட்சி யாருமே கொடுக்கலை. உள்ளதுல தொந்தரவு இல்லாத ஆட்சின்னு சொல்லணும்னா எம்ஜியார் அப்புறம் 2001க்கு அப்புறமான ஜெ ஆட்சிதான்.

    இந்த நூற்றாண்டுல, நல்ல ஆட்சிக்கும் மழைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியலை. நல்ல மக்களுக்கும் மழைக்கும்தான் சம்பந்தம் இருக்கு. இயற்கையை என்க்ரோச் பண்ணி வாழறவங்கனாலதான் காட்டு விலங்குகளுக்கும், நீர் நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுது.

    பதிலளிநீக்கு
  7. உண்மை ஒரு நாள் வெளியாகும் -அதில்
    உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
    பொறுமை ஒரு நாள் புலியாகும்- அதற்கு
    பொய்யும் புரட்டும் பலியாகும்.

    அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால்
    ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;
    அறிவுக் கதவைச் சரியாக திறந்தால்
    பிறவி குருடனும் கண் பெறுவான்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் மிகவும் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
  9. யார் அங்கே ... மாதம் மும்மாரி மழை பொழிகிறதா

    பதிலளிநீக்கு
  10. "திண்டுக்கல் தனபாலன்னா வெறுமே நாலு திருக்குறள் சொல்லிட்டு, ரெண்டு சினிமாப் பாட்டை லிங்க் குடுத்துட்டுப் போறவன்னு நெனச்சியா? பாலன்டா!... தனபாலன்!!" என மிரட்டலாக அமைந்திருக்கின்றன உங்களுடைய அண்மைய பதிவுகள்! குறளையும் திரைப் பாடல்களையும் வைத்து வெறும் இலக்கியம் - சமூகம் - அறிவரைப் பதிவுகள்தாம் எழுத முடியும் என்கிற நினைப்பைப் பொய்யாக்கும் வகையில் இந்தத் தேர்தல் நேரத்துக்கு ஏற்றபடி அருமையான அரசியல் பதிவுகளை இந்தத் தொடரில் வழங்கி வந்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி! தலைப்பின் இயைபு நயத்தையும் ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  11. தலைப்பு பிரமாதம்.

    மழையை நினைத்து ஏங்க வைத்துவிட்டது பதிவு.

    தண்ணீர்... தண்ணீர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்களை மீண்டும் கேட்பதில் இருக்கும் பூரிப்பு, நிலைமையில்
      வருத்தத்தில் ஆழ்த்துகிறது. யாரை நம்பி நம் வாக்கைப் பதிவு செய்வது.

      வேலியே பயிரை மேய்கிறது. பிறகேது மழையும் பயிர் வாழ்வும்.
      நல்ல பதிவுகளும் பாடல்களும் கொடுத்தற்கு மிக நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. டிடியின் போஸ்ட்டுக்கு வந்தாலே.. எனக்கு டமில்:) இலக்கண வகுப்பில் பல்லைக் கடிச்சுக் கொண்டிருக்கும் ஃபீலிங் வருது ஹா ஹா ஹா.. ஒண்ணுமே புரியல்லே உலகத்தில.

    முதல் படம்..., இப்போ அப்படியா இருக்கு வறண்டுபோய்.. இம்முறை காவிரி எல்லாம் முட்டி ஓடுதே...

    பதிலளிநீக்கு
  13. திருக்குறளை நுணுகி ஆராய்ந்து, தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு நிகழ்வுகளைப் பகிரும்விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  14. அருமையான பாடல் தேர்வு ஜி
    தலைப்பை மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. பாடல்கள் அருமை....

    மழையா?! அப்படின்னா!!??

    பதிலளிநீக்கு
  16. சொன்னது ஒன்னு.
    நடந்தது ஒன்னு.
    அதனால முழிக்குது
    அய்யாக் கண்ணு.

    பதிலளிநீக்கு
  17. சரியான நேரத்தில் வெளிவந்த தேவைக்கேற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  18. மழை அரசியல் -இவற்றில் இத்தனை விஷயங்களா?

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இந்த தடவையும் கருத்துக்கள் நிறைந்த பாடல்களின் மேற்கோளுடன்,அழகான பொருத்தமான பதிவு. பாராட்டுக்கள். சிறப்பான ஆட்சி நடந்தால், அந்த ஆட்சிக்கு மகிழ்வுற்று நல்ல மழை நாடு சுபிட்சமாக பெய்யும். இப்போது காலம் தப்புகிறது. இல்லையேல், காலத்தை கண்கலங்க வைக்குமாறு புயல் சீற்றத்தால், வெள்ளங்களை உண்டாக்குகிறது. நல்லாட்சி அமைய இப்போது நாமும் இறைவனை வேண்டுவது தவிர வேறெதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம்.
    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல பதிவு. பொருத்தமான பாடல்களுடன் உண்மையை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  21. நல்ல பதிவு வாழ்த்துகள்.
    என் பக்கத்திற்கு நல் வரவு
    http://kovaikkothai.blogspot.com/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.