🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை... முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை...

அனைவருக்கும் வணக்கம்... இதற்குமுன் ஒரு அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, குறளின் குரல் பதிவுகளை எழுதியிருந்தேன்... இனி அவ்வப்போது கணக்கியல் கொண்ட குறளின் குரல் பதிவுகளை எழுதலாம் என்றுள்ளேன்...

முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை


ஏழு தலைமுறைக்கும் பொருள் வேண்டுமா...?
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் அறம் வேண்டுமா...?
தூங்கும் உவகை பெருக்கும் இன்பம் வேண்டுமா...?
இவை மூன்றும் துணையிருக்கும் குறள் வேண்டுமா...?




754. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்
மடிதற்று: 'சோம்பலை அறவே களைந்து' எனக் காளிங்கர் பொருள் கூறியது சிறப்பான உரை இல்லை... தொழில் செய்யும்போது ஆடையை இறுக அணியும் வழக்கம் எங்கும் உண்டு என்பதால், துணியை இறுகக் கட்டிக்கொண்டு என்பதே சரியான பதவுரை... 'எது சரி?' என்று உறுதிப்படுத்த, மடி (சோம்பல்) எனும் சொற்களை, திருக்குறள் முழுவதும் சோம்பல் இல்லாமல் தேடி, நாம் வழக்கமாகச் செய்யும் "முதல் ➕ கடை" கணக்கியல் செய்ய வேண்டும்...!

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல் : உயர்வு நவிற்சியாகக் கூறப்பட்டதாக இருந்தாலும், பலருக்கும் அது எல்லை கடந்துசென்றுள்ளது போல் தோன்றுகிறது... அவர்களின் உள்ளக்கருத்து, அந்த ஆற்றல் தெய்வத்திற்கு மட்டுமே உண்டு, மற்ற யார்க்கும் இயலாத ஒன்று என்பதே...! அகத்தது உணர்பவர்கள் எல்லாம் தெய்வம் தான் சொல்லப்பட்டதா...? இல்லை, தெய்வமாக ஒப்பக் கருதி மதிக்கவும் என்பதே சரி... அப்புறம் யாராக இருந்தாலும் உள்ளக்கருத்தை அறிய முடியாதா...? உள்ளக்கருத்து மட்டுமா...? எந்த நேரத்தில் பசிக்கும் என்பது உட்பட தன் வாழ்நாள் முழுவதும், தன் குழந்தைகளின் அனைத்து செயல்களையும் அறியும் அம்மா உள்ளார்களே... தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் :
தெய்வத்தான் ஆகாது எனினும் : 'தெய்வத்தால் முடியாததை மனிதன் செய்ய முயலலாம்' என்றும் 'மனித முயற்சியை இறைப் பொருளின் எல்லைக்கு ஏற்றிச் செல்லமுடியும்' போன்ற உரைகள் ஏற்கத்தக்கனவாக இல்லை... தெய்வத்தை நம்பி கணக்கு தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்கிட முடியுமா...? முதலில் கணக்கையெல்லாம் "படித்து" (மனப்பாடம் செய்து) மதிப்பெண் வாங்க முடியாது... வீட்டில் கணக்கைப் பலமுறை செய்து பார்த்துவிட்டுத் தேர்வுக்குச் சென்றால், கணக்கைப் புரிந்து கொண்டதற்கேற்ப மதிப்பெண் கிடைக்கும்...! மற்ற பாடங்களைப் படித்தால் மட்டும் போதாது... ஒருமுறை எழுதிப்பார்த்தால் நூறு முறை படித்தது மாதிரி...!

தெய்வம் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்எனப் பெய்யும் மழை
தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்: இக்குறளின் முதல் நான்கு சீர்கள் பேரிடராகவும், கடை மூன்று சீர்கள் பெரு மழையாகவும் அமைந்துள்ளன... "அனைவரும் ஏற்கும்படியான உரை இக்குறளுக்கு இன்னும் எழவில்லை..." என்பது பலரின் எண்ணம்...! "பெண்ணின் பெருந்தக்க யாவுள...? என்று பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவதே மடமை என்று நம்மை உணர வைத்தவர் ஐயன்... "சுனாமி போலக் காதல் நோய் எழுந்து தாக்கினாலும், மடலேறாது பொறுத்துக்கொள்ளும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் இல்லை" என்று காதலன் மூலமே சொல்ல வைத்தவர் தாத்தா...! அத்துணை சிறப்பு வாய்ந்த கற்புக்கரசியான மனைவியே, "கணவனே கண்கண்ட தெய்வம்" என்று நினைக்கும்போது, கணவன் எத்தனை உன்னதமான ஆண்மகனாக, பிறன்மனை நோக்காத பேராண்மை கொண்ட சான்றோனாக, அரசியல் பேதைமை இல்லாத, சிற்றினஞ்சேராத புல்லறிவில்லாதவனாக இருக்க வேண்டும்...? அதனால் கணவனைத் தெய்வத்துக்குச் சமமாகக் கருதுகிறாள்... "உள்ளம் இரண்டும் 1 - நம் உருவம் தானே 2 ?"

திரு.வி.க அவர்கள் :- // பன்னெடுநாள் எந்நெஞ்சில் குடிகொண்ட பாக்கள் சிலவற்றுள் இதுவும் ஒன்று. பாடபேதமிருக்குமோ என்று ஐயுற்ற நாளும் உண்டு // யாப்பு அமைதியும் பாட வேறுபாடும் எனும் திருக்குறள் ஆராய்ச்சி 1 கோப்பில் "தொழுவாள்" என்று பழைய உரையில் உள்ளதாக உண்டு... அப்படியென்றால் இங்கும் உயிரளபெடை (செய்யுளிசை / இசைநிறை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை) கொண்ட பற்றிய குறள்களைத் தொகுத்து, நாம் 'நம் கணக்கியல்' செய்ய வேண்டும்... 'தொழுதுஎழுவாள்' வருவதால், தொழுதல் கொண்ட குறள்களைத் தொகுத்தும், கணக்கியலைச் செய்யலாம்...! (நண்பர்களே, எழுத்துக்களின் கணக்கு ஏன் செய்கிறேன் என்று புரிகிறதா...?)

சிலப்பதிகாரத்தில் கட்டுரை காதையிலும், மணிமேகலையிலும் (22; 65-70) இக்குறளின் அடியை அப்படியே எடுத்தாண்டுள்ளன...! இக்காப்பியங்கள் ஒரே காலத்தவை... இதனால் குறள் எழுதப்பட்ட காலத்தை நிறுவ முடியும்... இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் என்ற நூலில், கயவாகு மன்னன் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்கிறது... சிலம்பில் இலங்கை வேந்தன் கயவாகு கண்ணகி கோயில் கட்டிமுடித்த விழாவிற்கு வந்ததாகக் குறிப்பு உண்டு... அப்படியென்றால் முப்பால் கி.பி. 2-ம் நூற்றாண்டிற்கு முந்தியது என்றும், எழுதப்பட்ட காலத்தைக் கணிக்கவும் இக்குறள் உதவுகிறது...!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
வாழ்வாங்கு வாழ்பவன் : இதுதான் வாழும் முறை என்று வரையறை செய்ய முடியுமா...? முடியும்...! உலகம் போகும் வாழ்க்கை முறைகளைக் கண்டு பயப்படாமல், புறக்கணிக்கவும் செய்யாமல், உலகத்தோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்றும், எவ்வாறு உலகம் வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வதே அறிவுடைமை என்றும், தாத்தா சொல்வதை மனதில் ஏற்றிக்கொண்டு, அதேசமயம் நல்ல நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால், இவ்வுலகிலேயே பேரின்பம் பெறலாம்... வாழ்வின் முழுமையைப் பெற்று, மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...!

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றுஆங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை
அன்னையா...? தந்தையா...? தெய்வமா...? - என்பதைப் பதிவின் ஆரம்பத்தில் "கேட்டு" விட்டோம்...! அடுத்து மாதா, பிதா, குரு, தெய்வம் = தாய் தந்தையால் வந்த நாம், குருவின் துணைகொண்டு தெய்வத்தை அடைய வேண்டும் என்று சொல்கிறார்கள்... // முதலில் உள்ளது உயர்வா...? அல்லது கடையில் உள்ளது உயர்வா...? // என்றெல்லாம் எண்ணம் வரக்கூடாது...! காரணம் இங்கு ஐந்தாவதாகத் தாத்தா சொல்வது - தான் : "தன்னைப் போற்றுதலைக் குற்றம்" என்போர் பலர்... தாத்தா வெளிப்படையாகவே உன்னையும் போற்றிக் காத்துக் கொள் என உலகறிய சொல்கிறார்... சுவரின்றிச் சித்திரம் வரையமுடியாது... "மனத்துக்கண் மாசிலன் ஆதல், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" போன்று பலரும் குறள் கூறும் அறநெறியில் வாழ்பவர்கள், தன்னை போற்றுதலும் அறச்செயலே...
மேற்காணும் இத்தனை முரண்களும், ஐயங்களும், புரிதல்களும் இருந்தாலும் :
குறளின் குரல்:

தெய்வத்தை வேண்டி வருந்தி அழைக்க வேண்டியது இல்லாமல், "என் குடும்பத்தை உயர்த்துவேன்" என்று முடிவு செய்து, செயல் வெற்றிபெற முழுமையாக முயன்று பாடுபடுகின்றவனுக்குத்தான், தெய்வமே உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கும்...! அவ்வாறு உயர்வதற்குச் செய்யப் போகும் செயலின் தன்மையையும், மாற்றான் பலத்தையும், உதவிக்கு வருவோர் திறன்களையும் விட, தனது பலத்தையும் பலவீனத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து செயலை மேற்கொள்ளும் ஒருவனுக்கு, பிறர் உள்ளத்தில் உள்ளதை ஐயுறவு இல்லாமல் அறிய முடிவதால், அவனைத் தெய்வத்தோடு ஒப்பக் கருதி மதிக்க வேண்டும்...! மதிப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், ஒருவன் தெய்வத்தின் அருளைமட்டும் நம்பி இருக்க முடியுமா...? தெய்வத்தால் அவன் எண்ணும் அளவு கூலி தர முடியுமா...? எந்த முயற்சியும் பயனின்றி வீண் போகாது என நம்பிக்கை கொண்டு முயற்சியில் ஈடுபடுகிறவனுக்கு, எவ்வித தடங்கல் வந்தாலும் உழைப்பை விடாதவனுக்கு, தெய்வத்தின் துணை இல்லாமல் போனாலும், அவனது முயற்சி அவனது உடல் உழைப்புக்கேற்ற பயனைத் தரும்... இவ்வாறான உழைப்புடன், அன்பும் அறனும் செயலாக்கி, ஈருடல் ஓருயிராகி, பெற்ற மக்கள் செல்வங்களைக் காக்கும் வீரனை, குடும்பத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கணவனையே வணங்கி எழும் பெண், தெய்வத்தைத் தொழாதவளாய் இருந்தாலும், "பொழியட்டும்" என்றவுடன் மழை பெய்யும்...! இதுபோல் உலகத்தில் வாழும் முறையான இல்வாழ்க்கையிலிருந்து ஐம்புல இன்பங்களை ஆரத் துய்த்துக் கொண்டு, தீதின்றி வந்த பொருள் கொண்டு, அற உணர்வோடு இல்வாழ்க்கை வாழ்பவர்கள், விண்ணுலகிலுள்ள தெய்வங்களுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள்...! இவ்வாறு தன்குடியில் வாழ்வாங்கு வாழ்ந்து இறந்தோர் மறைந்தோர், வழிபடு தெய்வம் அல்லது குலதெய்வம், விருந்தினர், சுற்றத்தார், எனப்பட்ட ஐந்து இடத்தும் செய்யப்படும் அறநெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கை ஆகும்...!
நண்பர்களே... // பதிவில் உள்ள மடி. தொழுதல், உயிரளபெடை கணக்குகளைச் செய்து, கட்டமைப்பு ஏழு 7 என்பதைச் செய்க... // என்று சொல்ல வரவில்லை... செய்க: இங்கு  ஆறு (6 குறள்களில் "தெய்வம்" எனும் சொல் வருகிறது... முருகா...

இதன் கட்டமைப்பு ஏழு நன்றி...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சிறப்பு. குறிப்பாக 'தெய்வம் கொழுநன்' குறள் விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான விளக்கங்கள் டிடி. அதுவும் தெய்வத்தான் ஆகாது எனினும், தெய்வம் கொழுநன் - இரண்டும் செம. உலகத்தோடு ஒத்து வாழ் என்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன....தாத்தா அப்படிச் சொல்லியிருப்பாரா என்று. ஏனென்றால் எல்லா விஷயங்களிலும் ஊரோடு உலகோடு ஒத்து நிற்க முடியாதே...ஒரு வேளை எனக்கு அதன் பொருள் புரியலையோ...உதாரணம் ஒன்று சொல்கிறேன் தற்போதைய நிலவரப்படி - பெரும்பான்மையோர் கடன் வாங்கியாவது கல்யாணத்தை எல்லொரும் நிறைய செலவழித்துச் செய்வது போன்று செய்கிறார்கள் அதாவது ஊர் உலகம் அப்படித்தான் நடத்துகிறது என்று...நம் வசதிக்கு மீறி அப்படிச் செய்வதும்.....அப்படிச் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் இக்குறளின் பொருள் சார்ந்து எழுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
      கூம்பலும் இல்லது அறிவு (425)

      எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
      அவ்வது உறைவது அறிவு (426)

      இவ்வாறுள்ள குறள்களில், அதன் பொருள்களையும் புரிந்து கொள்ள வேண்டும்...

      குறள் சிறப்புகளில் ஒன்று : ஒரு குறளின் விளக்கம் நமக்கு சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அதற்கான பதில் அதன் அதிகாரத்தின் மற்ற குறள்களில் இருக்கும்...

      இல்லையெனில் முழுதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், வேறு அதிகாரத்தில் உள்ள குறள்களில் இருக்கும்... அதற்கு தான் ஒரு சொல்லை தேர்ந்தெடுத்து, திருக்குறள் முழுவதும் தேடினால் முழுமையாக புரிந்து கொள்ளலாம்..!

      அடியேன் செய்வது கூடுதலாக கணக்கு...!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது.
    முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை. முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்ற ஆரம்ப வரிகளே அட்டகாசமாக உள்ளது.

    முதலில் காணொலியாக வந்த அன்னையா, தந்தையா, பாடலும் பலமுறை கேட்டு ரசித்த பாடல். உங்கள் கற்பனைக்கேற்றபடி முதலில் தொகுத்த பாடல் வரிகளும் அருமை.

    தெய்வம் உள்ள குறள்களாக கணக்கிட்டு தொகுத்து அந்தந்த குறள்களுக்கு தக்கபடி அருமையான விமர்சனமும், விளக்கமும் செய்து பதிவை தந்துள்ளீர்கள்.

    நாம் செய்யும் எந்த ஒரு முயற்சியும் இணையில்லாத ஒரு தெய்வத்திற்கு சமான மானதுதான் என்பதை தாத்தா நமக்கு தன் நூலான குறள்களின் மூலம் அழகாக விளக்கியுள்ளார்.
    பதிவை ரசித்துப் படித்தேன்.

    தாங்கள் குறள் பற்றிச் செய்யும் ஆராய்ச்சியில் தங்களது முயற்சியும் என்றும் வீண் போகாது. தங்களது திறமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. குறள் ஆராய்ச்சி வழக்கம் போல் சிறப்பு. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. குறள் பதிவு விளக்கம் அருமை ஜி
    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  6. ஆரம்பத்தில் சொன்ன முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது அருமை. பாடல் பகிர்வு அருமை.
    நாம் முயற்சி செய்தால் இறைவனும் உடன் வருவார் என்பது உண்மை.
    குறள் விளக்கம் நன்றாக இருக்கிறது. ஐந்து இடத்தும் செய்யும் கடமைகளை சரிவர செய்தலே இல்லறத்தான் கடமை. அதுதான் சிறந்த இல்வாழ்க்கை . என்று சொன்னதும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. அருமை.. அருமை..
    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  8. தாங்களும் கோவில் என்று எழுதுகின்றீர்களே!..

    பதிலளிநீக்கு
  9. முப்பாலுக்கு மிஞ்சிய நூலில்லை...முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  10. வழக்கம் போல் வலைச் சித்தரின் பதிவு மனதை கவர்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.