🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறளில் ஒரு சொல்லால் கணக்கே மாறும்...!

அனைவருக்கும் வணக்கம்...


ஓரெழுத்து சரியாக்கும் - ஓரெழுத்து தவறாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு அதிகாரம் 70 :மன்னரைச்சேர்ந்தொழுல்; சில முக்கிய வலைத்தளங்களில் மன்னரைச்சேர்ந்தொழுல் - பெரிய தவறு; ஒருவேளை இன்றைய பொய்யனின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளலாம், பலரை ஏற்றியும் கொல்லலாம்...! வாழ்வைச் சீராக்குவதும் சீரழிப்பதும், சோறாக்குவதும் சேறாக்குவதும் சொற்கள்தான்... இதையே ஒரு சொல் வெல்லும் - ஒரு சொல் கொல்லும் என்பார்கள்... இங்குத் திருக்குறளின் சிறப்புகளில், ஒன்றின் கணக்கையே மாற்றுகிறது...

ஒருவர் தான் கற்ற கல்வியில் சிறந்தவராக இருக்கலாம்; அதனால் யாருக்கும் தீதின்றி சேர்த்த செல்வங்களால், தன் குடும்பமே வாழ்வாங்கு வாழ்பவர்களாகவும் இருக்கலாம்... அதனால் பெருமிதம் கொள்பவராகவும் இருக்கலாம்... அவ்வாறு இருந்தாலும், அப்பெருமை தம்மைச் சற்றும் பாதிக்காமல், அதாவது தன் தலைக்குக் கொண்டு போகாமல், தன் மனதுடன் மகிழ்வுடன் இருத்தலே உண்மையான பெருமையாம்...! எதற்கு அந்தப் பெருமித உணர்வு...? அது இல்லாமல் இருப்பதும் பெருமைக்குரியதே என்கிறார் தாத்தா...! "பணியுமாம் என்றும் பெருமை" என்று சொன்னவர் ஆச்சே...! முடியுமா...? இன்னொரு பக்கம் பெருமைப்பட்டுக் கொள்ள எவ்வித காரணமும் இல்லாமலும், தொடர்ந்து பெருமைப்பட்டுக் கொண்டே செருக்கின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமையாம்...! இது எளிதாக முடியும்...! பொய்யன் எவ்வழியோ அவ்வழியே தொடரும் மூடர் கூடத்தைத்தான் தினமும் பார்க்கிறோமே...!

சரி, ஒரு குறளில் பெருமிதம் என்ற சொல் இருமுறை வருகிறது... அவ்விரு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது... அதே போல் சில குறள்களில் வரும் செருக்கு என்ற சொல் பெருமிதம், செருக்கு/ஆணவம்/இறுமாப்பு போன்ற பொருள்களிலும் ஆளப்பட்டுள்ளது...! இப்படியே தொடர்ந்து, குறளில் மூழ்கி, பத்து வருட வலைப்பூவில் குறளில் குரல் பதிவுகளாகப் போய்விட்டது...! ஓர் இணைப்பு தந்து விடுகிறேன் :- பெருமிதம் என்பது கெட்ட வார்த்தையா? என்று கேட்கிறார் நம் தமிழ்ப்பூ முனைவர் அ.கோவிந்தராஜூ (இனியன்) ஐயா அவர்கள்... செருக்கு எனும் சொல் உள்ள அனைத்து குறள்களையும் தொகுத்து, முப்பாலின் கட்டமைப்பின் படி (8+8=16-7) கணக்கிட்டால் "ஏழு" சரியாக வரும்; ஆனால் அது தவறு; நாம் இன்றைய கணக்கிற்கு வருவோம்...
குறள் எண் : 979 : பதம் பிரிக்காததும், பதம் பிரித்ததும்

பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல்/விடும்
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்/விடும்

மணக்குடவர் காளிங்கர் ஆகியவற்றின் உரையின் படி ஏழாவது சீர் 'விடும்' ! ஏழாவது சீர் 'விடல்' என்றால் உதடுகள் ஒட்டாது... 'விடும்' என்றால், பதம் பிரிக்காத இக்குறளை, வாய்விட்டு சத்தமாகச் சொல்லிப் பார்ப்போமா...? ஏழு முறை உதடுகள் ஒட்டுகிறதா...? அப்படியென்றால் உதடுகள் ஒட்டும் குறள்களின் எண்ணிக்கையில் சேர்த்து விடும்...! இது சரியா...? தொகாநிலைத்தொடர்கள் என்று தமிழ் இலக்கணம் அறிந்து தெரிந்து புரிந்தவர்கள் உடனே சொல்லி விடுவார்கள்...! (அடியேன் அன்றைய வகுப்பிற்குச் செல்லவில்லை......!)

திருக்குறளில் உள்ள அல்லது உருவாக்கப்பட்ட பலவிதமான பாட வேறுபாடுகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால், எழுத்துக்களின் கணக்கால் மட்டுமே முடியும்...! இவரின் உரை தான் சரியானது என்பதெல்லாம் முடியாது...! சரி இதழுறல், இதழகல் குறள்களை எவ்வாறு 1330 குறள்களிடமிருந்து பிரித்து எடுப்பது...? இதற்குச் சுளகு தம்பியை விட Excel நண்பன் தான் உதவும் என்பதால், இதைப் பயிற்சியில் சேர்க்கவில்லை; அடுத்த பதிவு அதைப்பற்றித் தான்... ஆனால் முந்தைய ஒரு பதிவில் கேட்ட கேள்விற்கும், இதழுறல்-இதழகல் குறள்களை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கும் தொடர்பு உண்டு...! மீண்டும் அதே கேள்வி : நான் யார்...? (ஒவ்வொருவரும் தன்னை கேட்டுக்கொள்ள வேண்டும்...! இந்தமுறை ஒரு குறிப்பு தருகிறேன் : உதடுகள் ஒட்டாத இந்த கேள்விற்கு, உதடுகள் ஒட்டும் பதிலை எதிர்பார்க்கிறேன்... நன்றி...)

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ​'எத்தனை தவறு? மிகப்பெரிய தவறு' என்று சொல்லலாம். அல்லது 'மிகப்பெரிய தவறு' என்று மட்டும் சொல்லலாம். கேள்வி வாக்கியமே பதில் வாக்கியமாக இரண்டும் சேர்ந்து வரும் வார்த்தை அமைப்பு பொருந்தவில்லை!!

    பதிலளிநீக்கு
  2. சேர்ந்தொழுதல் என்று பார்த்த ஞாபகமில்லை.  சேர்ந்தொழுகல் தான் சரி என்று படிக்கும்போது புரிகிறது. 

    'பணியுமாம் என்றும் பெருமை' - 'பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா '

    பதிலளிநீக்கு
  3. 'பெருமிதம் ஆணவம் இறுமாப்பு செருக்கு எனும் பொருளிலும் ஆளப்பட்டுள்ளது' = பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்.

    பதிலளிநீக்கு
  4. பழைய பதிவை படித்துப் பார்த்தேன்,தமிழ் மொழிக்கு உயிராக 7 என்ற எண்ணில் திருக்குறள் இருப்பதை மீண்டும் படித்தேன். என் பின்னூட்டத்தையும் படித்து வந்தேன்.
    உதடுகள் ஒட்டும் பதிலை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. இதழுறல் . இதழகல் அருமை - நான் யார் - அகம் பிரம்மம்

    பதிலளிநீக்கு
  6. சேர்ந்தொழுகல் என்றுதானே வரும் இல்லையா?

    தமிழ்ப்பூ வலைத்தளம் சென்று பார்த்தேன் ....நான் அந்தப் பக்கம் அன்று வாசிக்காமல் இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது இல்லைனா நினைவு இருக்கும்.

    பெருமிதம் என்பதன் பொருள் அறிய முடிந்தது. பெருமிதம் என்ற சொல் நீங்கள் சொல்லியிருப்பது போல்தான் நினைத்திருந்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தங்களது குறள் பதிவுகள் வழக்கம் போல சிறப்பு.

    தொடர்ந்து வாருங்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.