🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கிசுகிசு...!

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை - உள்ளதை இழந்திட சொல்லவில்லை - உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா...
தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் - இருக்கும் நிலை என்று மாறுமோ...?



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்...



70. மன்னரைச்சேர்ந்தொழுகல் : 694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து

பல்வேறு அனுபவம் வாய்ந்த, வல்லமை பொருந்திய மூத்தவர்கள், பெரியோர்கள் தலைமையில் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது... அது நாடு, வீடு, அலுவலகம் என எதுவாகவும் இருக்கலாம்... அச்சமயத்தில் தலைமைக்கு மிகவும் நெருங்கியவர் என்ற உரிமையில் அவ்விடத்தில் பண்புகளை மறந்து நடக்கக்கூடாது... அதாவது இன்னொருவருடன் காதில் தேவையில்லாமல் மறைவாகப் பேசுவதும், அதன்பின் சேர்ந்து நகைச்சுவை பகிர்ந்து கூடிச் சிரித்து மகிழ்தலும் பண்பாடான செயல்கள் அல்ல... தலைமைக்கு முன் இவ்வாறு நடந்து கொண்டால் அவர்களுக்கு ஐயமும் வருத்தமும் ஏற்படுவதோடு, அவர்களை அவமதிப்பனவாகவும் கருதப்படும்... யாருக்கும் கேட்காதவாறு காதுக்குள் பேசிக்கொள்வதில் என்ன தவறு...? நகைத்துக்கொள்வது நல்லது தானே...? அது எப்படிக் குற்றமாகும்...? அதானே...? = இக்கேள்விகள் யாருக்கு எழும்...? தலைமைக்கு நெருக்கமானவரின் மனதில்...! முதலில் தலைமையில் உள்ளோர் சொல்ல வந்த கருத்துக்களைக் கேட்க வேண்டும்... மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் உரையாடலாம்... அவற்றையும் ஆராய்ந்து வைத்திருக்கும் தலைமை விளக்கம் அளிக்கும்... ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதுபோல தேவையற்ற பேச்சுக்களைப் பேசி நகைப்பது விரும்பத்தக்கதல்ல... சிலருக்கு மட்டும் தெரிவிக்கும் 'அம்பல்' எனும் கிசுகிசு, நாளைக்கு ஊரே அறியும் 'அலர்' ஆகுவது பொதுக்கூட்டத்தில் நல்லதல்ல...! இக்குறளின் அதிகார தலைப்பை வாசித்தும் சிந்திக்கலாம்...! - நம் நாட்டை நினைத்து

முக்கிய குறிப்பு :- →thirukkural.com← வலைத்தளத்திலும், அதை அப்படியே படியெடுக்கும் (Copy and Paste) பல தளங்களிலும் அதிகார தலைப்பு "மன்னரைச் சேர்ந்தொழுதல்...! ஓரெழுத்து ( - ) தட்டச்சு தவறுதலால் பொருள் எப்படியெல்லாம் மாறுகிறது...! நாட்டின் தலைமையை "இறையென்று வைக்கப் படும்" என்று ஐயன் சொன்னாரே தவிர, இறைவன் அல்ல...! மன்னரைச் சேர்ந்தொழுகல் சரி, மன்னரைச் சேர்ந்தொழுதல் தவறு தப்பு...

கிளி போலப் பேசு... இளங்குயில் போலப் பாடு... மலர் போலச் சிரித்து - நீ குறள் போல வாழு... மனதோடு கோபம் - நீ வளர்த்தாலும் பாவம்... மெய்யான அன்பே தெய்வீகமாகும்... நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே... நம் நாடு எனும் தோட்டத்திலே - நாளை மலரும் முல்லைகளே - நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...

© நம் நாடு வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫


78. படைச்செருக்கு : 774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்

போர்க்களத்தில் கையில் வேலும், நெஞ்சில் அஞ்சாமையும் கொண்ட யானைப்போர் வீரன் ஒருவன்... தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டான்... தன் மீது ஆழப்பதிந்த அவ்வேலோடு அந்த யானை எங்கோ ஓடிவிடுகிறது... அடுத்து வரும் யானைப்போரை எதிர்கொள்ள வேண்டும்... அந்நேரம் பகைவரிடமிருந்து வந்த வேல் ஒன்று தன் உடல்மீது பாய்ந்து குத்திட்டு நிற்கிறது...! தனக்கு வேண்டிய போர்க்கருவி தானே வந்து சேர்ந்துவிட்டது என மகிழ்ந்து, அவ்வேலைக் குருதி பீறிடப் பிடுங்கி, அடுத்த யானைப்போரைத் தொடங்க ஆயத்தமாகிறான்...! தன்மீது தைத்த வேலைப் பிடுங்கும்போது குருதி இழப்போடு உயிருக்கு இறுதியும் நேரலாம் என்பது அறிந்தும், போர்மேல் ஊக்கம் உடையவனாக அவனது நெஞ்சுரத்தையும், அந்நிலையிலும் "நகும்" என்றது படைச்செருக்கால் வந்த பெருமிதச் சிரிப்பு ஆகும்...!

அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா... ஆறிலும் சாவு நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா... வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்...? மாபெரும் வீரர் மானம் காப்போர் - சரித்திரம் தனிலே நிற்கின்றார்...

© மன்னாதி மன்னன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1960 ⟫

ஒரு தகவல் :- குறளின் குரலுக்குத் திரைப்படப் பாடல்கள் மேலும் மேன்மை சேர்க்கும் என்பதற்காக இணைக்கின்றேன்... அதில் சிறிய தடங்கல் - வருக வருக...! வலைப்பூவில் கேட்பொலி இணைத்துள்ளவர்களுக்குச் சென்ற வருடம் (August 2020) ஒரு மின்னஞ்சல் → Convert your classic Google Sites to new Google Sites before Sept. 1, 2021 என்று வந்திருக்கும்... வழக்கம்போல் https://sites.google.com-ல் கேட்பொலிகளை (mp3 files) தரவேற்றம் செய்ய முடியாது... ஆனால் இப்போது கேட்பொலி இணைப்பு எளிதாக்கப்பட்டுள்ளது... அதன் விளக்கங்களை முன்பு எழுதிய →நேயர் விருப்பம்← எனும் தொழினுட்ப பதிவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது போல் செய்து பார்க்கலாம் → கேட்கலாம்...! மேற்படி இந்த தகவலை 'கிசுகிசு'வென சிலருக்கு மட்டும் தெரிவித்து 'அம்பல்' ஆக்குபவர்களுக்கும், ஊரே அறியும் 'அலர்' ஆக்குபவர்களுக்கும் நன்றி... ஐயம் வந்தால் → dindiguldhanabalan@yahoo.com | 5. கற்றலின் கேட்டலே நன்று (பழமொழி நானூறு) - பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும் என்பதால், முயற்சியும் பயிற்சியும் உருவா(க்)கி ஐயம் தீர்க்க ஐயன் : 42. கேள்வி : 411. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை...!

நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. திருக்குறள் ஓவியம் அருமை.
    பாடல்கள் நல்ல தேர்வு.
    பதிவு அருமை.
    நல்ல பயனுள்ள தகவல்கள் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஏழாம் நகை அற்புதம்.  அனைவரும் அறியவேண்டிய விஷயம்.  கடைசி பாரா உபயோகமானது.

    பதிலளிநீக்கு

  3. பதிவை நகைப்புடன் தந்து இருக்கிறீர்கள்.

    அருமை ஜி

    பதிலளிநீக்கு
  4. டிடி முதல் நகை வெகு அருமை. ஆமாம் இது அவையடக்கம் இல்லையோ? மிகவும் சரி. குடும்பத்துள் நிறையவே நடக்கிறது. எல்லோருக்கும் பொருந்துவது.

    நல்ல பதிவு டிடி. பயனுள்ள தகவலையும் இறுதியில் தந்திருக்கிறீர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பதிவின் தலைப்பைப் பார்த்ததும் இளமைக்காலத்தில் ஒரு வார இதழில் வெளியான பதிவுகள் நினைவிற்கு வந்தன. அத்தலைப்பே இங்கும்.
    அம்பல்..கிசுகிசு..அதிகம் கடைபிடிக்கவேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் அருமையான பதிவு. திருக்குறளின் மூலம் நீங்கள் இடும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுகள். முதல் ஓவியமும் நன்றாக உள்ளது. நகை முரணாக சுட்டிக்காட்டப்பட்ட ஏழும், எட்டும் சிறந்த கருத்துக்கள். பாடல்கள் பொருத்தமான வகையாக கூடியிருப்பதை ரசித்தேன். தேர்ந்தெடுத்து தரும் நல்லதொரு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். கடைசி பாராவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல் குறள் விளக்கம் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  8. பொருத்தமான பாடல்களை தேர்வு செய்தமைக்கும் சிறப்பான ஓவியத்திற்கும் பாராட்டுக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. நல்ல நல்ல பாடல்கள் நல்லான் அற்றவர்க்குதான் பயன்பட்டு இருக்கிறது என்று அறியும்போது ஆச்சரியம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  10. முதல் பாராவில் சொல்லப்பட்டுள்ள "அம்பல் தவிர்த்தல்" ஒழுக்க நெறி அருமை...
    copy and paste செயலில் ஈடுபடுபவர்களுக்கு தமிழும் தெரிவதில்லை... அதன் தரமும் புரிவதில்லை என்பதே உண்மை.
    பதிவும், பாடலும் இறுகிய மாந்தரையும் இசைய வைக்கும் விதத்தில் உள்ளது. சும்மா சொல்லக்கூடாது உண்மையிலேயே மிக மிக மிக அருமையான பதிவு!!!...

    பதிலளிநீக்கு
  11. வள்ளுவன் காட்டிய நற்குறளில் தேர்ந்தெடுத்த
    பாரறிந்த நல்மருந்தாம் காண்
    (இரு விகற்பக் குறள் வெண்பா)

    நகைச்சுவைக் குறள் விளக்கம் உள்ளத்தைத் தொடுகிறது.
    அருமையான ஆய்வாகக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. குறள் ஓவியம் மிக அருமை.
    ஒவ்வொரு குறளுக்கும் இசைந்த பாடல்கள் என்றும் நம் வாழ்வை
    வளம் பெற வைப்பவை. மிக நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.