🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மானிட லீலை...!

சத்தியத்தின் எல்லையிலே... உயர் சமரச நெறிகளிலே... அன்பின் சக்தியிலே... தேச பக்தியிலே... உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே... ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்...



முந்தைய பதிவு : சிரிக்க சிரிக்க...



28. கூடாவொழுக்கம் : 271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்

படிற்றொழுக்கம் என்பது பொய்யொழுக்கம்... ஐந்து பூதங்கள் எவை...? // மெய், வாய்,கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகள் → இதன் முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் இயற்கையின் கூறுபாடுகள் → இதன் சேர்க்கையால் உடம்பு // கால் (நிலம்), குடல் (நீர்), நுரையீரல் (தீ), கழுத்து (காற்று) தலை (வெளி அல்லது விண்) என ஐம்பூத அமைவு // சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எனப் பூதங்கள் ஐந்தின் நுண் வடிவங்கள் → இதன் உதவியால் தொழிற்படும் வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் என ஐந்து // நிலம், நீர், தீ, காற்று, வானம் // திண்மம் (Solid), நீர்மம் (liquid) வளிமம், (Gas) மின்மம் (Plasma state) வெறுமம் (n) எனும் இயற்பியலில் பொருள் நிலைகள் // வாதப்பகுதி, பித்தப்பகுதி, ஐயப்பகுதி எனப்படும் மண்ணாலான உடல், வளி (காற்று, வாயு), ஒளி (சூடு, பித்தம்) குளிர் (நீர் சீதளம்) இவை நான்கும் கலந்து ஒன்றாகும் போது பிறக்கும் உயிர் அருவமாய் வானம் எனப்படும்... இவ்வாறு ஐம்பூதங்கள் ஆனவையே எல்லா உயிர்களும் என்றாலும், மனிதர்களிடம் மனம் - அறிவு என்ற ஒன்று கூடுதலாக உள்ளது... // ← இவை பலரின் விளக்கங்கள்...

சில உயிரினங்களுக்கு மனமும் அறிவும் உள்ளது தான்... சரி, மனிதர்களுக்கு ஆறாவது பூதம் = மனசாட்சி...! என்று நினைத்துக் கொள்கிறேன்...! ஒரு சிறு எடுத்துக்காட்டு :- ஒருவன் தனக்குத் தெரிந்த ஒன்றையோ அல்லது கற்றுக் கொண்ட ஒன்றையோ பிறருக்கு உதவியாகச் செய்து தருவதில் மன மகிழ்வும், அதனால் அவனுக்கு அதை மீண்டும் நீடிக்கவும் தோன்றும்... அதைத் தவிர்த்து மனதில் சிறிதாகக் கொம்பு முளைக்க ஆரம்பித்து விட்டால்...? "உனக்குத் தெரிந்ததைச் செய்துவிட்டு அகந்தையா...?" என அவனின் ஆறாவது பூதம் சிரிக்கும்... ஆரம்பத்திலேயே அதைத் தடுக்க 85. புல்லறிவாண்மை : 849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு : அவரவர் மனசாட்சியைப் பிறர் போல் கருதி, பகா வழி பதிவை வாசித்தால், ஆறாவது பூதத்தை அடக்கி என்றும் விழிப்புடனும் மகிழ்வுடனும் இருக்கலாம்... மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி தீயநெறியில் வாழ்ந்து வந்தால், என்றாவது ஒருநாள் ஆறாவது பூதம் சிரித்து ஊழ் உண்டாக்கும்...! 4. அறன்வலியுறுத்தல் : 39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என அறம் ஒன்றே மனதை மகிழ்விக்கும்; அந்த மனதின் மகிழ்வே உண்மையான இன்பமாகும்...

அறம் மறந்து, செய்யும் தொழிலில், வியாபாரத்தில் என அனைத்து செயல்களிலும் பல கடவுள்களிடம் பேரம் → உடன்படிக்கை → அதற்கேற்ப பக்தி → ஆறாவது பூதம் சிரிப்பு...! கடவுளே, இறைவனே, தெய்வமே, ஆண்டவனே → வேண்டுதல்கள் பல → வெற்றி → மகிழ்ச்சி → வேண்டுதலை மறத்தல் → துன்பம் வருதல் → வேண்டுதல் ஞாபகம் வரல் → உடல் சார்ந்த அல்லது பணம் சார்ந்த வேண்டுதல் என்றாலும், வேண்டுதல் சிறு பகுதியாகக் குறைந்து ஒரு பரிகாரம் (ரூ 1¼ ?) → வேண்டுபவர்களின் ஆறாவது பூதம் சிரிப்பு...! இன்னொரு புறம் இதுபோன்று வேண்டுதலை உருவாக்கியவர்களுக்கு ஆறாவது பூதம் இருக்குமா...? சிரிக்குமா...? 64. அமைச்சு : 639. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை அறியாது மெய் வருத்தாமல் தன்னையும் பிறரையும் ஏமாற்றி வாழ்பவர்களை நம் ஆறாவது பூதம் அறிந்து கொள்வதோடு, பக்தி பரவசம் தரும் (சில) மானிடனின் ஒரு லீலையைக் கேட்க :-

பார்த்தாயா மானிடனின் லீலையை - தேவா - நிலையான உலகத்தையும் நேரான பழக்கத்தையும் தலைகீழாய்ப் புரட்டிவிடும் தாறுமாறு வேலையை...! பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே... பசியும் சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லை, பஜனையில்லை...! சுத்தமான போலிகளின் சோம்பேறி வேசத்திலே - தொடர்ந்து உந்தன் கண்ணெதிரில் நடந்து வரும் மோசங்களை... ஆட்டம் போட்டுப் புரள்வதுதான் ஆண்டவனின் சேவையா...? ஆலயத்தைத் தரிசிக்க அலங்காரம் தேவையா...? ஆளை ஆளை இடிக்கிறதும் அடிதடியும் ஏனையா..? அன்பர் கண்ணு அங்கே மொறைக்குது - கும்பிடு மட்டும் இங்கே நடக்குது...! விண்ணும் மண்ணும் நீயானாய், வெயிலும் மழையும் நீயானாய், விளங்கும் அகில உலகமிது - நீ இல்லாத இடம் ஏது...? காசு தந்தால்தான் உன்னைக் காணும் வழி காட்டுவதாய் - கதவு போட்டுப் பூட்டி வைத்துக் கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா மானிடனின் லீலையை...?

© நான் வளர்த்த தங்கை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண்டியாலா நாகேஸ்வர ராவ் 🎤 P.சுசீலா @ 1958 ⟫
ஆறாவது பூதம் ஒருவனை எள்ளி நகைக்கும்போது அவனின் கண், செவி, மூக்கு, நாக்கு, உடம்பு, என அனைத்திற்கும் இன்பமாக என்னென்ன கிடைத்தாலும் அவை நிலையான நீடித்த இன்பம் தராது... உறுத்தும் இந்த பூதத்தைக் கொல்லும் அளவிற்குச் சினம் ஏற்பட்டால்...? :-


31. வெகுளாமை : 304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற

ஆறாவது பூதமாகிய மனசாட்சி சரிவர வேலை செய்தவர்களுக்குக் கோபம் முதலில் முன்னாடி நிற்கும்...! கண்கள் சிவக்க, மூக்கு வீங்க, காதுகள் வெடவெடக்க, உதடுகள் படபடக்க, புருவம் தெறிக்க, அப்பப்பா - அனைத்தையும் முகம் காட்டிக் கொடுத்து விடும்...! அதன்பின் தீச்சொற்கள் தீயாய் பறக்கும்...! 'நகையும் உவகையும்' என்பது சிரித்த முகமும் உள்ளத்து மகிழ்ச்சியும்... முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தைவிட ஒருவனுக்கு வேறு பகைகள் உள்ளனவா...?

தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்றதோ...? - அதை கேள்வி கேட்க ஆள் இல்லாமல் பார்த்து நிற்பதோ...? // வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி - பிறர் வயிறு எரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி... மனிதன் என்ற போர்வையில் - மிருகம் வாழும் நாட்டிலே - நீதி என்றும் - நேர்மை என்றும் - எழுதி வைப்பார் ஏட்டிலே... எழுதி வைப்பார் ஏட்டிலே...

© ரிக்சாக்காரன் வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1971 ⟫

அறத்துப்பால் முடிந்து பொருட்பாலில் நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான பதிவு.
    மன சாட்சி எல்லாம் மனிதரை விட்டு என்றோ ஓடிவிட்டன என்று தோன்றுகிறது.
    வாலி ஐய்யாவின் பாடல்களிலும், பட்டுக்கோட்டை
    கல்யாணசுந்தரம் ஐயா எழுத்திலும் தான் இருக்கின்றன.
    அருமையான பாடல்கள். மிக நன்றி அன்பு தனபாலன்.

    பதிலளிநீக்கு
  2. பதிவு அருமை. திருக்குறள் ஓவியம் அருமை,
    முதல் பாட்டுக்கு பொருத்தம்.

    அந்த பாட்டு, படம் கேள்வி பட்டதே இல்லை.
    தேடி எடுத்து பொருத்தமான பாடலை பகிர்ந்து இருக்கிறீர்கள்.

    ரிக்சாக்காரன் பாடலும்
    வெகுளாமை குறளுக்கும் பொருத்தம்.
    இரண்டு பாடலையும் கேட்டேன். குறள்களை படித்தேன்.
    அறம் ஒன்றே மனதை மகிழ்விக்கும், அந்த மனதின் அன்பே உண்மையான அன்பு.
    இதை உணர்ந்து கொண்டவர்கள் நலமாக வாழ்வார்கள் அய்யன் சொன்னபடி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல சிறப்பான கருத்துகள், பாடல்கள்.
    இன்னும் ஒலியலை கேட்கவில்லை இணையம் பிரச்சனை.
    மீண்டும் வருவேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. எங்கிருந்து தான் இப்பாடல் கிடைத்ததோ. இது வரை கேள்வி படாத பாடல். உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள் நண்பரே.
    வழக்கம் போல பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  6. படிற்றொழுக்கம் என்னும் பொய்யொழுக்கத்தின் விவரணம் அபாரம். ஐம்பொறிகள், ஐம்பூதங்கள், ஐந்து நுண் வடிவங்கள், ஐந்து தொழிற்படுத்தங்கள் (பாயு, உபத்தம் விளக்கம் தேவை) என்று விவரமாக விளக்கியுள்ளறீர்கள். நன்று. 

    பதிவு ஒரு தடவைக்கு மூன்று தடவை படித்து புரிந்து கொள்ள வேண்டி இருந்தது. சுருக்க சொல்லி சிந்திக்க வைத்து விட்டீர்கள். 
    ஐந்தின் மகிமையைக் கூறி ஆறாவது மனசாட்சி என்று விளக்கி ஏழாவது ஒன்று வேண்டும் என்று கோபத்தை கொண்டு வந்துள்ளீர்கள். 7 உங்கள் விருப்ப எண். அதனால் தானே? 

    மொத்தத்தில் சிந்தனையைத் தூண்டிய பதிவு. திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு போன்று உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா... ஏழாம் அறிவாக ஐயனை உருவகப்படுத்தி, பதிவில் இடையிடையே வரும் குறள்களைச் சொல்வதாக எழுதி இருந்தேன்; நீண்ட பதிவாகத் தோன்றியதால் தவிர்த்து விட்டேன்...

      நீக்கு
  7. ரிக் ஷாகரன் பாடல் அன்று எம்ஜியாருக்காக இருந்தாலும் இன்று திருக்குறள் பதிவுக்கு பொருத்தமாக்கியது..அருமை.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு!
    பதிவின் தொடக்கமே மிகச்சிறந்த பாடலுடன் ஆரம்பித்த விதமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. சில உயிர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்குமே "மனம்" மற்றும் "அறிவு" உள்ளது... இரண்டுமே வேலையும் செய்கிறது... தாவரங்கள் உட்பட... எல்லா உயிரினங்களுமே தனக்கு வரும் ஆபத்துகளை தெரிந்துகொண்டு அதிலிருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவ்வப்போது புதுமையாக சிந்தித்து உருமாறி தப்பிக்கும் நம்முடைய "கொரனா" உட்பட. இன்னும் சொல்லப்போனால் உயிர்கள் இயங்க வேண்டுமென்றாலே அதற்கு மனமும் இயங்கினால்தான் சாத்தியம். எனவே அளவில் சிறிதோ, பெரிதோ உயிர் என்று வந்துவிட்டால் அதற்கு "மனமும்", "அறிவும்" இரண்டுமே வேலைசெய்யும் என்பது என்னுடைய புரிதல்.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமை.., நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு
  11. ஐம்பூதங்களையும் தாண்டி, ஆறாவது பூதத்தையும் விளக்கியிருப்பது அருமை . நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.