🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உன் எண்ணம் ஒன்றே போதுமே...

வணக்கம் நண்பர்களே... பிரிவாற்றாமை அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு ஆருயிரே மன்னவரே முதலில் ஒரு பாடலை கேட்போமா...?


உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது... உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது... கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது... இந்த காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது, தேடி ஓடுது... நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை... உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை, சிந்தனை இல்லை... காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை... உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை, பெண்ணுறங்கவில்லை© தெய்வத்தின் தெய்வம் கண்ணதாசன் G.ராமநாதன் P.சுசீலா @ 1962 ⟫

முதல் பகுதியில் தன்னைப் பிரிந்து செல்லும் கணவனிடம் நடந்த உரையாடலை அறிந்தோம்... இனி மனைவி தனது மனதிடம் உரையாடியும் போராடியும், சிறிது சிறிதாகத் தன்னை எவ்வாறு சாந்தப்படுத்தி சமாதானமாகிறார் என்பதை... இன்றைய காலத்தின் உரையாடலுக்கேற்ப சொல்லியுள்ளேன்...



அதிகாரம் 116 பிரிவாற்றாமை (1156-1160)

இத்தனை சொல்லியும் என்னைப் பிரிந்து போகும் அளவிற்கு கல்நெஞ்சுக்காராக இருக்கிறார் என்றால், திரும்பிவந்து என் மீது அன்பு காட்டுவார் என்கிற என் ஆசை எண்ணம் வீண் தானோ...?

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை 1156


தேய்வதும் மறைவதும் உன் அழகே... அவர் சிந்தையில் நிலைப்பது என் வடிவே... பார்த்தது போதும் பருவ நிலாவே... பாவை என் துணையை மயக்காதே... நீயோ நானோ யார் நிலவே... அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே... இரவின் அமைதியில் நீ வருவாய் - என்மன நிலையும் நீ அறிவாய்... உறவின் சுகமும் பிரிவின் துயரும், உனைப் போல் என் மனம் அறியாதோ...© மன்னாதி மன்னன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1960 ⟫

இப்படியே நினைத்து நினைத்து உடல் மெலிந்து, முன் கையிலிருந்து கழன்று விழும் வளையல்கள், அவர் என்னைப் பிரிந்து சென்று விட்டார் என்பதை ஊராருக்குத் தெரிவித்து விட்டதே...

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை 1157


தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி - அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி... திங்கள் நீயும் பெண் குலமும் ஒருவகை ஜாதி... தெரிந்திருந்தும் சொல்ல வந்தாய் என்னடி நீதி...? பூ உறங்குது பொழுதும் உறங்குது - நீ உறங்கவில்லை நிலவே... கானுறங்குது காற்றும் உறங்குது - நானுறங்கவில்லை... நானுறங்கவில்லை...© தாய் சொல்லைத் தட்டாதே கண்ணதாசன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1961 ⟫

ஆனால் என்னைப் புரிந்து கொண்டு அன்பு காட்டாத ஊரில் வாழ்வது துன்பமானது... அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது கொடூரமானது...

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு 1158


ஊரேது உறவேது உற்றார் ஏது...? - உறவெல்லாம் பகையாக ஆகும் போது... ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது...? - ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகும் போது... தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது...? - தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது... பூவேது கொடியேது வாசனை ஏது...? - புன்னகையே கண்ணீராய் மாறும் போது...© பாசம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1962 ⟫

ஏனென்றால், நெருப்பு தொடுபவரை மட்டும் தான் சுடும்... ஆனால் என்னவர் பிரிந்து போய் விட்டாலும் காதல் நோய் சுடுகிறதே...!

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ 1159


எந்தன் - வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்... இன்று - இருள் சூழ என் செய்தேன் பாபம்... நானும் இங்கே, நீயும் அங்கே, அன்பே... நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால், இன்பம் காண்பது எங்கே...? அன்பே... இன்ப கரை நாடும் இல் வாழ்வின் ஓடம், துன்ப புயலாலே அலை மோதி ஆடும்...© பொம்மை கல்யாணம் அ.மருதகாசி K.V.மகாதேவன் ஜிக்கி @ 1958 ⟫

இவ்வாறு பல துன்பங்களையும் தாங்கிக் கொண்டு உயிரோடு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து, குடும்பத்தின் வளத்திற்காகச் சென்றவரின் வரவிற்காகக் காத்திருப்பேன்...

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர் 1160


ஒன்று சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே, காதலர் சேர்ந்தாலே அல்லாது வாழ்விலே - இன்பம் நேராது என்பதும் இல்லையே... உள்ளம் கொள்ளை கொண்ட அன்பர் நல்வாழ்வை நாடும் - உண்மையான தியாகத்தாலும் பேரின்பம் நேரும்... தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும் - அது நீயிருக்கும் என் நெஞ்சை நெருங்காது... நீ என்றும் வாழ வேண்டுமே - உன் எண்ணம் ஒன்றே போதுமே - அதுதான் இன்பமே... என் இன்பமே... இன்.ப..மே...© ஆட வந்த தெய்வம் அ.மருதகாசி K.V.மகாதேவன் P.சுசீலா @ 1960 ⟫



குறளும் அதன் விளக்கமும் தரும் பிரிவின் சோகத்தை உணர, ஓரளவு குறளுக்கேற்ப பாடலை கேட்க, மேலிருந்து ஒவ்வொரு இதயத்தையும் சொடுக்கிக் கேட்கவும்...
கேட்பொலிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 1.5 நிமிடங்களே...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சிறியது போல தோன்றுமாம் பதிவு ஆட்டினில் கைவைத்தால் அளவு கூடும்!

    வழக்கம்போலவே சிறந்த பாடல்களை இணைத்து குறள் பரிசு.

    பதிலளிநீக்கு

  2. வணக்கம் ஜி
    வழக்கம்போல் நல்ல பாடல் வரிகள் சிறப்பு.

    தொழில்நுற்பமும், எழுத்துக்களின் அழகும் போட்டி போடுகின்றன...

    வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  3. பதிவு மிக அருமை.
    பாடல்கள் மிக அருமை.
    கடைசி பாடல் மிக மிக அருமை.
    அன்பால் தன் குடும்ப நன்மைக்கு பிரிந்து வாழும் அன்பர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
    இப்படி தியாகம் செய்யும் பல குடும்ப தலைவர் தலைவிகளுக்கு வாழ்த்துக்கள்.
    ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டு இருக்கட்டும்.
    காலம் நல்லது செய்யும்.

    அருமையான தொழில் நுட்பம்.
    எழுத்துக்கள் அழகு.
    திருக்குறளை படித்தேன், பாடல்களை அப்புறம் கேட்பேன்.

    பதிலளிநீக்கு
  4. /நெருப்பு தொடுப்பவரை/ - தொடுபவரை?

    வழமை போல சிறப்பான விளக்கம். பாடல்களும் நன்று.

    பின்னூட்டங்களும் வேறு எழுத்துருவில் - நன்று. தொடரட்டும் புதிய புதிய முயற்சிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி... திருத்தி விட்டேன்... "பின்னூட்டத்தில் எழுத்துரு மாற்ற முடியுமா...?" என்று நேற்று தான் செய்து பார்த்தேன்... இங்கு செயல்படுத்தியது சற்று முன் தான்...!

      நீக்கு
    2. நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு புகுந்த விளையாடுறீங்க? பதிவு திறக்க நேரமாகின்றது. முன்பு ஒரு சொடுக்கில் உள்ளே நுழைந்தேன். இதனையும் கவனத்தில் வைத்திருக்கவும். இந்தப் பதில் அடிக்கவே காத்திருந்து தான் எழுதுகிறேன்.

      நீக்கு
    3. என்னவென்று பார்த்து சரி செய்கிறேன்...

      நீக்கு
  5. பாடல்கள் அனைத்துமே குறள்களுக்குப்பொருத்தமாய் அருமையான தேர்வு! 'ஆட வந்த தெய்வம்' பாடல் வரை, அத்தனை பழைய பாடல் வரை போய் தேடியது உங்கள் உழைப்பைக்காட்டுகிறது. தொழில் நுட்பம், அருமையான பாடல்கள், நல்லதொரு ஓவியம் எல்லாமே சேர்ந்து மிக அழகான பதிவாக ஆகியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. குறள்களுக்குப் பொருத்தமானப் பாடல்கள்
    தங்கள் பதிவு ஒரு மாயாஜாலம்தான் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. அசத்துகின்றீர்கள். பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் முறை அருமை.

    பதிலளிநீக்கு
  8. குரல்களும் அவற்றிக்கு பொருத்தமாய் பாடல்களையும் அழகாய் தேர்வு செய்கிறீர்கள் நண்பரே. அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  9. கருத்துரைக்கு அதற்குள் வேறு எழுத்துருக்களா.... ?

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவுகளை அப்படியே விட்டு விட்டு போக முடியாது. அப்படியே காப்பி பண்ணி வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். ஒரு பதிவுக்கு நீங்கள் எடுக்கின்ற முயற்சி எங்களுக்கு எவ்வளவு பயனைத் தருகின்றது. குறளை எடுத்து அதற்கு ஏற்ப சினிமா பாடல்களை இணைத்து மிக சிறப்பாக ஒவ்வொரு பதிவும் தருகிறீர்கள். இதற்கு நன்றி மிக்க நன்றி என்ற வார்த்தைகளைத்தான் நாம் தந்துவிட்டு போகின்றோம்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. எப்போதும் போல் குறள்களின் இனிய பாடல்களும், அதன் விளக்கங்களும், பொருத்தமான திரைஇசை பாடல்களும் மிக அருமை. நீங்கள் வழக்கம் போல் தேடித்தேடி பாடல்களை பகிர்வது எங்களின் ரசிக்கும் ஆர்வத்தை மிக அதிகமாக்குகிறது.

    இதில் இரண்டு பாடல் மட்டும் கேட்டிராதது. (பாசம், ஆட வந்த தெய்வம்.படப்பாடல்கள். ) ஆனால் கேட்ட பின் பகிர்ந்த குறளுக்கு பொருத்தமாய் இருப்பதை ரசித்தேன்.

    ஓவியங்கள் நன்றாக உள்ளது. ரவி வர்மாவின் ஓவியத்தை என்றும் அலுப்புத் தட்டாது பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... எழுத்தை டைப்பிங் செய்து அனுப்பிய பின் மாறிய எழுத்துருக்கள் மேலும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி.

      நீக்கு
  12. ஜனரஞ்சகமான பதிவு.ஓவியம் பாடல் குறட்பா அதன் தெளிவுரை.அருமையான வடிவமைப்பு.இதுவரை காமத்துப்பால் படித்ததில்லை.பெண் அவள் உறவின் பிரிவை உணர முடிந்தது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வழமைபோல அழகு.. ஆஹா கொமெண்ட் எழுத்துக்களும் மாத்திப்போட்டீங்களோ அவ்வ்வ்:))

    பதிலளிநீக்கு
  14. குரலும் குறளும் வழக்கம் போல் அருமை

    பதிலளிநீக்கு
  15. வித்தியாசமான முறையில் பதிவு வெளிவந்திருக்கிறது. அருமை!

    கருத்துரை இட கூகுள் அனுமதிக்கும் போது மட்டுமே என்னால் கருத்து இடமுடிகிறது. எனது கணக்கில் இதுவொரு தொந்தரவாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  16. தலைப்பை பார்த்ததுமே தங்கள் பதிவு என்று அடையாளம் காண முடியும். சிறப்பு. அதற்கேற்றாற் போல பதிவும் அருமை. தொழிநுட்பத்தில் புகுந்து விளையாடுகிறீர்கள். சிறப்பு.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
  17. திருக்குறளுக்கேற்ற பாடல்கள் தெரிவு பட்டு கச்சிதகமாகப் பொருந்துகிறது .

    பதிலளிநீக்கு
  18. திருமிகு →வேங்கடசுப்ரமணியன் சங்கரநாராயணன்← அவர்கள் : ஆஹா....அற்புதம்....குறளைக் கொண்டு பாடலைத் தேடி எடுக்கிறீர்களா.அல்லது பாடலைக் கொண்டு குறளை தேர்வு செய்கிறீர்களா...பொருத்தம் நூறு சதம். ..தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.