🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நாடு அதை நாடு...

அனைவருக்கும் வணக்கம்...



தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு 731

தப்பாது விளையும் நிலங்களும், சான்றோரும், எல்லோரும் செல்வராய் உடையதே நாடாம்...
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே... என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே... பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே... பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே... நாம் சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே... இந்த தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே...!© பிள்ளைக் கனியமுது அ.மருதகாசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு 732

விளைவால் விரும்பத்தக்கதாகி, கேடற்று மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாம்...
பொன்னு விளையுற பூமியடா... விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்வோமடா... உண்மையா உழைக்கிற நமக்கு - எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா... மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு... பசும்தழைய போட்டுப் பாடுபடு செல்லக்கண்ணு... சேர்த்த பணத்த சிக்கனம்மா செலவு செய்ய பக்குவம்மா - அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு... அவுங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு...© மக்களைப்பெற்ற மகராசி அ.மருதகாசி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1957 ⟫

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு 733

அல்லல்காலத்து தாங்கி, மக்கட்கு நலம்செய்ய இறைபொருள் தரக்கூடியதே நாடாம்...
கல்விக்குச் சாலை உண்டு, நூலுக்கு ஆலை உண்டு, நாட்டுக்குத் தேவை எல்லாம் - நாம் தேடலாம்... தோளுக்கு வீரம் உண்டு, தோற்காத ஞானம் உண்டு, நீதிக்கு நெஞ்சம் உண்டு - நாம் வாழலாம்... சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்... சிந்தும் கண்ணீர்தனை மாற்றலாம்... வாருங்கள் தோழர்களே - ஒன்றாய் சேருங்கள் தோழர்களே... நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே... இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே... புரட்சி மலர்களே - உழைக்கும் கரங்களே...© உழைக்கும் கரங்கள் புலமைப்பித்தன் M.S.விஸ்வநாதன் K.J.யேசுதாஸ், M.S.விஸ்வநாதன் @ 1976 ⟫

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு 734

பெரும் பசியும் தீரா நோயும் பகையும் இல்லாமல் முன்னேறுவதே நாடாம்...
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும் - பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும் - நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும் - எதிர்த்து வருவோரை உரமாகப் போடும் - நாடு அதை நாடு - அதை நாடாவிட்டால் ஏது வீடு...? பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு... மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...© நாடோடி வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1966 ⟫

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு 735

கொள்கை மாறுபட்ட கூட்டமும் உட்பகையும் கொலைஞ்சரும் இல்லாததே நாடாம்...
தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்... தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்... நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த நாடே இருக்குது தம்பி... சின்னஞ்சிறு கைகளை நம்பி - ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...© பெற்றால் தான் பிள்ளையா வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

நாடு அதிகாரத்தின் குறளின் குரல் இணைப்பு

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம் ஜி
    நாட்டுப்பற்று குறித்த குறளும், திரைப்படப் பாடல்களும் பொருத்தமாக இருக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாடல் வரிகளையும், ஒத்த குறளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

  3. மணப்பாறை மாடு கட்டி பாடல் செம பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

    பதிலளிநீக்கு
  4. வழக்கம்போல் அருமை. 735ஆவது பாடலில் இல்லத நாடு உள்ளது. அது இல்லது நாடு என்றிருக்கவேண்டும். தகவலுக்காக.

    பதிலளிநீக்கு
  5. தப்பாது விளையும் நிலங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன
    சான்றோர்களும் குறைந்துகொண்டேதான் இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  6. நாட்டு பற்றிய குறளுக்கு ஏற்ற திரைபடப்பாடல்கள் அருமை.
    இந்த முறை திருக்குறள், விளக்கம், திரைப்படபாடல் எல்லாம் ஒரே இடத்தில் வருவது வசதியாக இருக்கிறது.

    அனைத்து பாடல்களும் பிடித்த பாடல்கள். கேட்டு ரசித்தேன்.
    திருக்குறள் ஓவியம் நன்றாக இருக்கிறது.
    நாட்டுக்கு வேண்டிய அனைத்தும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. பொன்னு விளையுற பூமி இது என்பதை மறந்து உலகம் முழுக்க தமிழன் திரவியம் தேட ஓடி கொண்டிருக்கிறான். பாடல்களை பிறகு கேட்கிறேன்..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவும் அருமை. இன்றைய குறள்களும், அதற்கேற்ற பாடல்களும் மிகவும் நன்றாக இருந்தது. ஐந்து பாடல்களுமே இனிமை. மிகவும் ரசித்துக் கேட்டேன். குறள்களுக்கு பொருத்தமான பாடல் தேர்வு செய்து, ஒவ்வொரு பதிவிலும் குறளமுதம் தரும் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. பெரும் பசியும், தீரா நோயும், பகையும் இல்லாது முன்னேறுவது நாடு

    இக் குறள் இந்நாள் ஏற்புடையதோ

    பெரும் பசியோடு ஒரு கூட்டம் நடக்குது
    தீரா நோயோடு உலகம் முடங்குது
    இல்லா பகையை ஒரு கூட்டம் வளர்க்குது

    இதுவே என்நாடாம்

    பதிலளிநீக்கு
  10. குறள்களுக்கு ஏற்ற பாடல்களை வழக்கம்போல் இணைத்து எங்களை மகிழ வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. குறள், அதற்கான விளக்கம், சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான பாடல் வரிகள் என அனைத்துமே சிறப்பு. தொடரட்டும் குறளமுதம். நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. மிக அருமை சார் பாடல்கள் அனைத்தும் போனில் கேட்டேன்

    பதிலளிநீக்கு
  13. திருக்குறளைப் போலவே புகழ்பெற்ற திரைப்பாடல்களையும் தங்கள் தளத்தில் கெட்க முடிவது வாசகர்கள் செய்த பேறே எனலாம். இதன் பின்னணியில் உள்ள உழைப்பு பிரமிக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. பாடல்களைத் தெரிந்து கொண்டு குறளை வாசிக்கும் போது எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் எளிய விளக்கத்துடன் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. டிடி இப்போது நீங்கள் கொடுத்திருப்பது கொஞ்சம் ஈசியாக இருக்கு. குறல், அடுத்து உங்களின் ஒரு வரி எளிய அழகான விளக்கம், அடுத்து பாடல் , அது என்ன பாடல் குறலின் பொருள்படும் வரிகள் என்று வருவது ஈசியா இருக்கு வாசிக்க. நல்ல பொருத்தமான பாடல் தலைப்பும். நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வழமைபோல அருமை, ஓவியருக்கு வாழ்த்துகள், மிக அழகாக வரைந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  17. திருக்குறளுக்கு விளக்கம் அருமை .... இசையுடன் புதுமையான முயற்சி ... வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு

  18. பாடல்கள், குறள்கள் யாவும்
    நாட்டை, நாட்டின் வளங்களை
    எண்ணிப்பார்க்க வைக்கிறது
    சிறப்பு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.