🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?

நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் கஷ்டமான விசயத்தைப் பற்றி. இந்தக் காலத்தில் எல்லாமே கஷ்டமான விசயமாக இருந்தாலும் அவற்றில் எது மிகவும் கஷ்டம்? அவற்றை எப்படி? எவ்வாறு தவிர்ப்பது? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம். (கீழ் படத்திற்கான விளக்கம் : வாழ்க்கை என்பது நீயே கண்டறிவது பற்றி அல்ல. வாழ்க்கை என்பது நீயே உருவாக்குவது பற்றித் தான்.)



மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன?

அவரவர் வாழ்க்கையைப் பொறுத்து இது மாறுபடலாம். ஆனால் முடியாத விசயம் அல்ல. சிலருக்கு இதெல்லாம் ஒரு விசயமாகத் தோன்றாது. அதனால் தான் தலைப்பை "மனித வாழ்க்கையில் முடியாத விசயம் என்ன?" என்றோ "மனித வாழ்க்கையில் கஷ்டமான காரியம் என்ன?" என்றோ வைக்கவில்லை. சரி..... இப்போது பல விசயங்களை அலசுவோம். இவையாவும் என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய / சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1: கடவுள் அருள் இருந்தால் போதுங்க. கஷ்டம் நம்மை அண்டாது. அந்த அருள் கிடைப்பது தான் ரொம்பக் கஷ்டமான விசயம்.

நண்பர் 2: கடவுள் அருள் இருந்தால் மட்டும் போதுமா? நிறையச் சம்பாதிக்கிறது தாங்க கஷ்டம். என்ன பிரச்சனை வந்தாலும் பணம் வேணுமே. பணம் இருந்தால் கஷ்டமான விசயம் என்று எதுவுமே இல்லை.என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் நிறையச் சம்பாதிக்கிறது தான்.

நண்பர் 3: நான் நிறையச் சம்பாதிக்கிறேன். எனக்கு ஏற்ற மாதிரி மனைவி அமைய வேண்டுமே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா! நல்ல துணைவி அமைந்து விட்டால் வாழ்க்கையில் கஷ்டமே இல்லை.

நண்பர் 4: பணம் இருந்தா படிப்பு வந்துடுமா? என் குழந்தைகளுக்குப் படிப்பு வரணுமே. நான் படிக்கும் போதும் கூட இவ்வளவு வீட்டுப் பாடம் செய்ததில்லேங்க..... நானும் என் மனைவியும் படுகிற பாட்டைச் சொன்னா, உங்க தளத்தில் 100 பக்கங்கள் எழுதலாம். (!) என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் நம் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது தான்.

நண்பர் 5: என் பையனுக்கு, அவனுக்குப் பிடித்த மாதிரி நல்ல வேலை கிடைக்கணும். என் பொண்ணுக்கு நினைக்கிற படி நல்ல வரன் கிடைக்கணும். இன்னும் எவ்வளவோ இருக்குங்க. என்னைப் பொறுத்தவரையில் நம் குழந்தைகளை அவர்களுக்கேற்றவாறு திருப்திப் படுத்திக் கரை சேர்ப்பது தான் வாழ்க்கையில் கஷ்டமான விசயம்.

நண்பர் 6: ஒழுக்கம், நேர்மை தாங்க முக்கியம். என்னைப் பொறுத்தவரையில் நல்ல மனுஷன் என்று பேர் வாங்குகிறது தான் ரொம்பக் கஷ்டம்.

நண்பர் 7: ஊருக்குள்ளே நான் தாங்க பெரிய மனுசன். ஆனா இப்படிப் பெரிய மனுசனாகவே இருக்க நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் தெரியுமா உங்களுக்கு? எதாவது வழி இருந்தால் சொல்லுங்க. (!)

நண்பர்களே? எப்படி? இன்னும் நிறைய நண்பர்கள் அவரவர் நிலைக்கேற்ப கஷ்டங்களைக் கூறினார்கள். நீண்ட பதிவு ஆகி விடும் எனபதால்.... கஷ்டங்களைத் தவிர்க்க வழி நம்மிடமே உள்ளது. ஒரு சின்ன கதை .....

அந்தக் காலத்தில் ஒரு குரு, தன் சீடர்களோடு கிராமத்து மக்களுக்கு உபதேசம் செய்து விட்டு, தன்னுடைய ஆசிரமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு சின்ன ஆறு இருக்கிறது. அதைக் கடந்து சிறிது தூரம் செல்ல வேண்டும். குரு, சீடர்களைப் பார்த்து "சீடர்களே, மனித வாழ்க்கையில் கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தவிர்ப்பது எப்படி? என்று உங்களுக்கு உணர்த்தப் போகிறேன். கவனமாக நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என்று கூறினார். "அதோ அந்தப் புல்லை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்களும் 'இதெல்லாம் ஒரு வேலையா?' என்று நினைத்துக் கொண்டு, ஒவ்வொருத்தரும் தன்னுடைய ஒரு விரலாலே ஒரு புல்லை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வைத்தார்கள். சிறிது தூரம் சென்றவுடன், "அதோ அந்தச் செடியை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்களும் 'எதோ விசயம் இருக்கிறது' என்று நினைத்துக் கொண்டு, ஒவ்வொருத்தரும் தன்னுடைய ஒரு கையால் ஒரு செடியை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வைத்தார்கள். இன்னும் சிறிது தூரம் சென்றவுடன், "அதோ அந்த மரத்தை பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்களும் 'நம்முடைய பலத்தைச் சோதிக்கிறார் போல' என்று நினைத்துக் கொண்டு, ஒவ்வொருத்தரும் தன்னுடைய கைகளால் ஒரு மரத்தைப் பிடித்து இழுத்தார்கள். முடியவில்லை. சிறிது சிறிதாகப் பள்ளம் தோண்டி, எப்படியோ மரத்தை இழுத்து, தூக்க முடியாமல் தூக்கி, பக்கத்து இடத்தில் பள்ளம் தோண்டி நட்டார்கள். இன்னும் சிறிது தூரம் சென்றவுடன், "அதோ அந்தப் பெரிய ஆலமரத்தைப் பிடுங்கி சிறிது இடம் தள்ளி வையுங்கள்" என்று குரு கூறினார். சீடர்கள் திகைத்தார்கள். குரு, களைத்துப் போன சீடர்களைப் பார்த்து," சீடர்களே, அந்தச் சின்னப் புல்லைப் போலத் தான் கஷ்டங்களும், பிரச்சனைகளும். கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சின்னதாக இருக்கும் போதே எடுக்கா விட்டால் அது நம் மனதில் பெரிய மரமாக மாறி விடும். அதை நீங்கள் தான் உடனே கிள்ளி எறிய வேண்டும்." என்று கூறினார்.

என்ன நண்பர்களே! இந்தக் கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் நமது கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் நாம் தான் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

நமது திருவள்ளுவர் கூறியது:
(அறத்துப்பால்-இல்லற இயல்-அதிகாரம் : புறங்கூறாமை-குறள் எண் : 190)
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பொருள் : மற்றவர்களுடைய குற்றத்தை காண்பது போல் நம்முடைய குற்றத்தையும் அறிந்து கொள்ளும் மனிதனுக்கு வாழ்க்கையில் துன்பம் வராது.

பழைய பாடல்களில் (1) நம்ம கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதியிருப்பார்.
படம் : திருடாதே. பாடல் ஆரம்ப வரி : திருடாதே பாப்பா திருடாதே
அதில் ஒரு வரி: "திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."

(2) நம்ம கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சிறிது கோபமாகவே எழுதியிருப்பார்.
படம் : யாருக்கும் வெட்கமில்லை. பாடல் ஆரம்ப வரி : ஊருக்கும் வெட்கமில்லை.
அதில் ஒரு சில வரிகள்: சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்... மற்றும் மூன்று விரல்கள், உங்கள் மார்பினை காட்டுதடா... மூடர்களே... பிறர் குற்றத்தை மறந்து, முதுகைப் பாருங்கள்... முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்...

தவறு செய்யாத மனிதனே கிடையாது...அதுவும் இந்தக் காலத்தில்...! நாம் செய்யும் தவற்றை நாம் அறிந்து / தெரிந்து கொள்ளாமல் இருப்பதே மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவரவர் வயதிற்கேற்ப, அந்தந்த நேரங்களில் சின்னச் சின்னத் தவறுகள் / கெட்ட பழக்கங்கள் வருவதுண்டு. அந்தப் பழக்கம் வழக்கமானால், அங்கே தான் ஆரம்பிக்கிறது தப்பு. (இன்னொரு நல்ல பாட்டு : நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி.... படம் : பெற்றால் தான் பிள்ளையா?) இதில் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் நம்ம புரட்சித் தலைவர் MGR அவர்கள் பாடியிருப்பார்..."தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தியாகணும்... தப்பு செய்தவன் வருந்தியாகணும்." எப்பேர்ப்பட்ட வரிகள்! நம் மனதிற்குத் தப்பு என்று தெரிந்த உடனேயே நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நாம் எவ்வளவு அழகாக, திறமையாக, மற்றவர்களுக்கு ஆலோசனைகள் (அட்வைஸ்) செய்கிறோம். ஆனால் அதில் ஒன்றையாவது நாம் கடைப் பிடித்திருக்கிறோமா அல்லது கடைப் பிடிக்கிறோமா என்று நினைத்துப் பார்த்தால் ...ம்... சந்தேகம் தான். மனிதனுக்கு... இல்லை... இல்லை... உலகத்திலேய ரொம்பச் சுலபமான விசயம் : அடுத்தவங்களுக்கு ஆலோசனை அல்லது அறிவுரை சொல்வது. கஷ்டமான விசயம்... என்னைப் பொறுத்தவரை...

மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் தன் தவற்றைத் தானே திருத்திக் கொள்வது தான்.

திருத்திக் கொள்ள முடியும் முயற்சி செய்தால்... ?!?


அவ்வாறு திருத்திக் கொள்ளவில்லை என்றால்...? என்ன நடக்கும் என்பதை இங்கே சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான பகிர்வு வாழ்க்கைக்கு உகந்த நல்ல பகிர்வை
    முன்வைத்தீர்கள் .வாழ்த்துக்கள் சகோ எல்லாம் எம் மனதைப்
    பொறுத்தே உள்ளது .எதுக்கும் ஆசைகளைத் துறந்தால் அவலமே
    இல்லை .இதுதான் மனிதர்களுக்கு இப்ப இருக்கின்ற பெரிய கஸ்ரமே .

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனை.ஆலோசனைக்கும்,அறிவுரைக்கும் பொருள் வித்தியாசம் உண்டு.அறிவுரை சுமத்தப்படுவது,ஆலோசனை முடிவெடுக்கத்தூண்டுவது.அறிவுரை அட்வைஸ்,ஆலோசனை கவுன்சலிங்! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன்னிக்குத்தான் உங்க பக்கம் வரேன். எல்லாமே நல்லா சொல்லி இருக்கீங்க.


    மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் தன் தவற்றை தானே திருத்திக் கொள்வது தான்.

    ஆமா உண்மைதான்

    பதிலளிநீக்கு
  4. நல்லாச் சொல்லி இருக்கீங்க. நம் தபைத் தப்பென்று உணர்வது மிகவும் கஷ்டமான விஷயம். ஆழ்ந்த சுய நிர்ணயம் தேவை. நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கருத்து. தன் தவறை திருத்துவது கடினமான காரியம்தான். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. என் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து வந்தேன்.வலை உலகுக்குப் புதியவர் என்கிறீர்கள் ஆனால் பரந்த வாசகர் உலகத்தைப் பிடிப்பதற்கு எல்லா முஸ்தீபுகளும் செய்திருக்கிறீர். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் சார்!! தொடருங்கள் உங்களுடைய ஆய்வை!

    பதிலளிநீக்கு
  8. அருமை அருமை.....

    மேலோட்டமாக பார்த்தால் வெறும் கிறுக்கல்....
    கூர்ந்து நோக்கின் புலப்படும் கூற்று....

    பதிலளிநீக்கு
  9. ஆகா... அருமையான முடிவு
    மிகவும் கடினமான காரியம் தான் செய்யும் தவறினை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல்!

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான வலைப்பூ,எங்கள் ஊர் நண்பரிடமிருந்து.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தனபாலன் அவர்களே ,
    நான் இந்தப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை
    இனிமேலும் வருவேன் இறை நாடினால்
    * மனித வாழ்கையில் கஷ்டமான விஷயம் தன் தவற்றை
    தானே திருத்தி கொள்வது தான்*
    ஆம் இது மட்டும் சுலபமான விஷயமாக எல்லோருக்கும் இருந்தால் ,
    உலகத்தில் பகைமை, சண்டை , சச்சரவு இல்லாமல் எல்லோரும்
    சகோதர உணர்வுடன் வாழலாமே ........
    யாதும் ஊரே , யாவரும் கேளீர்
    பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  12. நம்மை நாமே திருத்தி கொண்டால் மற்றவை லேசாகிடும்
    ந்ல்லபகிர்வு

    பதிலளிநீக்கு
  13. நம் தவறை நாமே உணருவது கடினம்தான், நண்பரே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.