🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நீயே உனக்கு என்றும் நிகரானவன்

வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் இங்கே

கேட்பொலி

© பலே பாண்டியா கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன், M.ராஜு @ 1962 ⟫


உங்களுடைய தோல்விகளுக்கும், பலவீனங்களுக்கும் காரணங்களைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்... வெற்றியின் வித்துக்கள் நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்குள் தூவப்பட்டன என்பதை அறிந்து கொள்ளுங்கள்... இந்த விதைகளை வளரச் செய்யும் சக்தி உங்களுடையதே... உங்கள் வெற்றிக்கு உங்கள் தந்தையோ, தாயோ, சமூகமோ அல்லது முதலாளியோ, சுற்றியுள்ள நண்பர்களோ அல்லது வியாபாரத்தில் உங்களது கூட்டாளிகளோ பொறுப்பல்ல... வெற்றியின் விதைகளும், அவற்றை வளரச் செய்யும் சக்தியும், மனித மனம் என்னும் அற்புதமான இயந்திரத்தில் புதைந்து கிடக்கின்றன... வெற்றியின் இலக்குகளை நிர்ணயிப்பதிலோ, அவற்றை நோக்கி அடையும் வழிமுறைகளிலோ, முற்றிலும் நவீனமான கணினி கூட மனித மனதிற்கு ஈடாகாது...

வெற்றி ஒரு தேர்ந்தெடுப்பு, அது ஒரு வாய்ப்பல்ல...

நீங்கள் வெற்றியாளராவது உங்களின் சரியான தேர்ந்தெடுப்பதிலே உள்ளது... வெற்றி என்பது மேதாவிகளுக்கு ஒதுக்கப்பட்டது அல்ல... உறுதியுடன், தொலை நோக்குடனும் வெற்றியடைய நினைக்கும் எல்லோருக்கும் அது சொந்தம்... உங்களுடைய சுயமதிப்பை வளர்த்துக் கொள்ளாமல் உங்களால் வெற்றி அடைய முடியாது... உங்களுடைய சுயமதிப்பு, உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கையின் மீதும், நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடு வைத்திருக்கிறீர்களோ, அதைப் பொறுத்தே அமைகிறது...

தாழ்வு மனப்பான்மையுள்ளவர்களும், தன்னால் எதுவும் சாதிக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கும், தன்னுடைய நிலைமைக்குத் 'தான் பொறுப்பல்ல' என்று அலுத்துக் கொள்பவர்களுக்கும், வாழ்க்கையில் வெற்றி என்ன என்பதே அறிய முடியாது... காற்றாடியை போல இங்கும் அங்கும் தள்ளப்பட்டு, இவர்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள்... உங்களுடைய வாழ்க்கையில் நடப்பவை யாவற்றுக்கும், எந்த அளவிற்கு நீங்கள் பொறுப்பானவன் என்று நினைக்கின்றீர்களோ, அந்த அளவிற்கே உங்களுடைய வாழ்க்கையை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்... தோல்வியாளர்கள் எல்லாம் சந்தர்ப்பம், சூழ்நிலையால் நிகழ்கின்றன என்று நினைக்கிறார்கள்...


நம் வாழ்க்கையில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மூல காரணம், ஏதோ ஒன்று இருக்கிறது என்பதில் ஐயமில்லை... இந்த காரணத்தை நாம் ஆராய்ந்து தெரிந்து கொண்டால், அதனுடைய விளைவுகளை நாம், நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்... எண்ணங்களும், நம்பிக்கைகளுமே எதையும் நிகழ்விக்கின்றன... நாம் எதை எண்ணுகிறோமோ, எதை நம்புகிறோமோ, அதற்கு நாமே பொறுப்பு... நமது இலட்சியம் எதுவென்பதை நமது எண்ணங்களே தீர்மானிக்கிறது... நாம் தான் குறிக்கோள்களை நிர்ணயிக்க வேண்டும்... ஒருவனுடைய வெற்றி அவனுடைய தன்னம்பிக்கையின் அளவே பொறுத்தே... நம்முடைய வெளி மனது எவற்றை நடத்த முடியும் என்று நம்புகிறோமோ, அவற்றை உள் மனது நடத்த விரைகிறது... நம்முடைய வெளிமனத்தால் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம்...

நம்முடைய மனப்பாங்கும், செயல்களும், ஒரு கால வரம்பிற்குள் நம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள பழக்கங்களைப் பொறுத்தே அமைகின்றன... நல்ல பழக்கங்களை வலுப்படுத்திக் கொள்ளவும், பழைய பழக்கங்களிலிருந்து விடுபடுவதும், புதிய பழக்கங்களை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் நாமே பொறுப்பு... வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டுள்ளவரிடம், நீங்கள் கூட்டுச் சேர்ந்தால், அதுவே உங்களது வெற்றிக்கு முதற்படியாகும்... மாறாகத் தோல்வி மனப்பான்மை உடையவர்களிடம் சேர்ந்தால் உங்களது தோல்வியையே உறுதிப்படுத்தும்...

நம்முடைய சிறிய தோல்விகளில், எதிர்காலத்தின் பெரிய வெற்றிகள் அடங்கியிருக்கும்... தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து 'களை' எடுத்து வெற்றியின் விதைகளை வளர்ப்பது நம் கையில் அன்றோ உள்ளது... சுருக்கமாகக் கூறினால் நம்முடைய வாழ்க்கையாகட்டும், நம்முடைய ஆரோக்கியமாகட்டும், செல்வமாகட்டும், உணர்வுகளாகட்டும் அல்லது ஆன்மீக வளர்ச்சி ஆகட்டும், எல்லாவற்றுக்கும் நாமே பொறுப்பு... இதை நாம் உணர்ந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, உறுதியாக நம்பினால், நாம் வெற்றிப் பாதையில் காலடி வைக்கிறோம்... இந்த அடிப்படையான உண்மையை நாம் ஏற்க மறுத்தால், முடியும் என்றால் முடியும், முடியாது என்றால் முடியாது, நடப்பவை யாவும் மனதின் நினைப்புகளே...

வெற்றி என்பது நமது தேர்ந்தெடுப்பே...
உன் வாழ்க்கை உன் மனதில்

சிந்தனையும் சிரிப்பும் தான் மனிதனின் உண்மையான சொத்துக்கள்... சிந்தனை முடிந்து விட்டது... இப்போது சிரிக்க ரசிக்க... மேலே பாட்டு Load ஆகி இருக்கும்... Play ≥ பட்டனைச் சொடுக்கவும்... ஆகா... நவரசங்களையும் நால்வரின் நடிப்பில் காணலாம்...

துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா... வெறும் தூபத்தில் உன் இதயம் மயங்காதையா... விதி கூட உன் வடிவை நெருங்காதையா... வினை வென்ற... மனம் கொண்ட... இனம் கண்டு, துணை சென்று, வென்ற தெய்வ மலர்...

நீயே உனக்கு என்றும் நிகரானவன்


தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்..அருமையான பதிவு..நன்றாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள். பாடல் அருமை..நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    பதிவு அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ''வெற்றி ஓர் தேர்ந்தெடுப்பு, அது ஒரு வாய்ப்பல்ல'' என்று சொல்லி வெற்றிக்கு வழியையும் காட்டியிருக்கிறீர்கள்.
    துதி பாடும் .... பாடல் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' என்ற பதிவின் தலைப்பிற்கு மிகப் பொருத்தமானது.
    மொத்தத்தில் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைக்கும் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. வெற்றியின் ரகசியத்தை இவ்வளவு எளிமையாக வேறு யாரும் சொன்னதாக நினைவில்லை.

    ""உன் வாழ்க்கை உன் மனதில்...""

    எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை எளிமையாக சுட்டுகின்றன மேற்கண்ட நான்கு வார்த்தைகளும்..

    அருமையிலும் அருமை...!!

    உங்களுக்கும், உங்களுடைய கருத்ததுகளுக்கும் ஒரு "சல்யூட்" சார்..

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    உண்மையில் பதிவை படிக்கும் போதுசிந்தனை உணர்வுகளை தூண்டி வெற்றிப்படிகளை தாண்டச் சொல்லுகிறது பாடலும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வெற்றி என்பது நமது தேர்ந்தெடுப்பே...

    மிக மிக அருமையாக, சுருக்கமாக, விளக்கமாகக் கூறினீர்கள் சகோதரரே!...

    தோல்விக்கு விதிதான் என்று நொந்துகொள்பவர்களுக்கு அற்புதமான விளக்கம்!
    மனதில் பதிந்துகொள்ளவேண்டிய சிறந்த பதிவு!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!...

    த ம. 3

    பதிலளிநீக்கு
  9. சரியா சொன்னீங்க DD..

    மேலும் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது.. (சிவாஜி, MRR கலக்கி இருப்பாங்க)

    பதிலளிநீக்கு
  10. ஒருவனுடைய வெற்றி அவனுடைய தன்னம்பிக்கையின் அளவை பொருத்தது என்பது மிகச் சரியான கூற்று. அருமையான கருத்துக்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. வெற்றியை அடைய விரும்புவோருக்கான உங்களின் வழிமுறைகள் உபயோகமானது...

    பதிலளிநீக்கு
  12. சும்மா நச்சுன்னு வெற்றியின் ரகசியத்தை கூறிவிட்டீர் நண்பரே!
    தோற்றால் ஆயிரமாயிரம் காரணங்களை மற்றவர்மீது கூறாமல் தன்னிடமுள்ள குறைகளை களை எடுத்தாலே வெற்றியின் அருகில் வந்தடைந்துவிடுவோம். உண்மையான உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  13. இந்தக் கட்டுரை படித்த பின் எனக்கு உங்களைப் பார்த்து இந்த பாட்டை பாடத் தோன்றியது: 'நீயே உனக்கு என்றும் நிகரானவன் அருமை தனபாலரே!'

    தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும். நாம் நம் மேல் வைக்கும் நம்பிக்கைதான் நம் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அழகாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

    உங்களுக்கு என்றே இந்தப் பாட்டை கவியரசரி எழுதினாரோ?

    பதிலளிநீக்கு
  14. வெற்றியின் ரகசியம் நம்மிடமே உள்ளது என்பதை விளக்கிய விதம் சிறப்புங்க.
    பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு


  15. பதிவு முழுவதும் வெற்றிக்கான
    வழிகளை மிகவும் அழகாக தொகுத்துள்ள
    பாங்கு பாராட்டத் தக்கது! நன்றி!தனபால்!

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு உற்சாகம் தரக் கூடிய பதிவு டிடி.. ஆச்சரியம் டிடி பதிவில் திருக்குறள் இல்லை

    பதிலளிநீக்கு
  17. படிக்கும் போதெ உற்சாகம். அருமையான பாடல்.
    நல்லதொரு பகிர்வு. எப்போதுமே சோர்வு வராது. மிக நன்றி தனபாலன்

    பதிலளிநீக்கு
  18. அருமை. வெற்றி, நம்பிக்கை மாபெரும் சொற்களும் கருத்தும்.
    அனைவருக்கும் இம்மந்திரம் நிறைந்து வெற்றியளிக்கட்டும்.
    அற்புதமான விளக்கம்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  19. சுருக்கமாக வாழ்க்கையில் வெற்றுப்பெறுவதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிட்டீர்கள்..!!!

    நன்றி.. வாழ்த்துகள்...!!!

    பதிலளிநீக்கு
  20. முதலில் வெற்றிக் கோடின் விமர்சனமோ என நினைத்தேன்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  21. வெற்றி, சந்தோஷம் போன்ற அனைத்துமே நம்மிடம் தான் இருக்கிறது என்று சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  22. வெற்றி ஒரு தேர்ந்தெடுப்பு அது வாய்ப்பு அல்ல ....ஆம் உண்மைதான்

    உனக்கு நீயே பொறுப்பென்று
    உரைத்தவரிகள் திடமாக
    தனத்தைதேடும் மாந்தருக்கும்
    தன்வழிகூறும் பாங்கழகே
    விருப்போடுந்தன் பதிவுக்குள்
    விழியை கொண்டு சென்றாலே
    அறியாப்பொருளும் அரும்பிடும்
    அழிந்துபோன செல்களிலும்..!

    அருமையான நம்பிக்கை ஊட்டும் வரிகள்

    வாழ்த்துக்கள் சார் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  23. அருமையான பதிவு.

    ஒவ்வொருவரும் சேமித்து வைத்து அவ்வப்போது படிக்க வேண்டிய வரிகள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. மிகவும் அருமையான பதிவு.

    வெற்றியின் இரகசியம் அறிந்து கொண்டேன்.

    மகிழ்ச்சி. நன்றி.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான கட்டுரை.

    நீங்கள் வெற்றி வீரர்களாக அல்லது செல்வந்தர்களாக பிறந்தீர்கள்.

    வரிகளில் ஏதோ தவறு என்று நினைக்கிறேன். பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  26. எடுத்த விடயத்தை அளவோடு அழகாக அருமையாகச் சொல்வதற்கு தனபாலனுக்கு நிகர் தனபாலன்தான்.
    பொருத்தமான பாடல். இப்போதுதான் முதல் முறையாக காட்சியோடு பார்க்கிறேன். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  27. அருமை அருமை மிகவும் அருமை
    நம்பிக்கையூட்டும் நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  28. எல்லாவற்றிக்கும் நாமே பொறுப்பு ..இதை உணர்ந்து விட்டால் வாழ்கையில் எது வெறுப்பு ?
    வெற்றி நிச்சயமென்று ஊக்கப்படுத்தும் அருமையான பதிவு !

    பதிலளிநீக்கு
  29. அடுத்த பதிவர் மா நாட்டிலே நீங்கள் ஒரு
    முப்பது நிமிடம் சொற் பொழிவு ஆற்ற வேண்டும்.

    இது போன்ற பயனுறும் கட்டுரைகளை நூலாகத் தொகுத்தும்
    அப்பொழுது வெளியிடலாம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  30. அருமையான கருத்துக்களும் அதுக்கேற்ற பாடலும் !

    பதிலளிநீக்கு
  31. அன்பின் திரு தனபாலன்,

    அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  32. நயமாக சொல்லி ஆர்வம் கொடுத்து உற்சாகத்தை தரும் கட்டுரை.

    வல்லமையும் , திறமையும் தொடர்ந்த உழைப்பின்றி கிடைக்காது
    வல்லமையும்,திறமையும் வாய்ப்பை தேடி நிற்கும்.

    சிந்தனையும் செயல்பாடும் உருவாக உழைக்க வேண்டும்
    சிந்தனையும் செயல்பாடும் இருந்தாலும் உருவாக்க இறைவன் அருளும் வேண்டும்

    அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு, (அதுதான்)
    அல்லாஹ்விடமிருந்து(இறைவனிடமிருந்து)உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும், எனவே ஈமான்(நம்பிக்கை) கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக! -குர் ஆன் 61:13

    பதிலளிநீக்கு
  33. தன்னம்பிக்கையோடு புறப்படும் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் வரிகள்...

    நம்மைமட்டுமே நம்பினால் வாழ்க்கை அர்த்தப்படும்...

    நமக்கு நிகர் நாமே...

    பதிலளிநீக்கு
  34. நம் எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பதை விளக்கிய பதிவு அருமை!.. பலே பாண்டியா திரைப்படத்தின் அருமையான பாடல் காட்சியினை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு

  35. ஒரு விளையாட்டு. ஒரு குழுவினரிடம் ‘நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு யார் அல்லது எது காரணம் என்று பகுத்துச் சொல்லுங்கள் என்று கேட்கப் பட வேண்டும். ஒவ்வொரு காரணத்துக்கும் பொறுப்பு பங்கு சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு நான் இந்த நிலைமையில் இருக்க என் பெற்றோர் பங்கு 40% ஆசிரியர் பங்கு 10% என் தலைவிதி 40% இந்த சமுதாயம் 10% என்று சொல்லலாம். கடைசியில் குழுவினரிடம் இருந்து வந்த தகவல்களை ஆராய்ந்தால் ஏறத்தாழ யாருமே அவர்கள்தான் பொறுப்பு என்று கூறி இருக்க மாட்டார்கள். எந்த ஒரு நிகழ்வுக்கும் அவரவரே பொறுப்பு என்று விளங்க வைக்க இது ஒரு விளையாட்டு. வாழ்த்துக்கள் கடினமான தலைப்பு . அழகான விளக்கம் பாராட்டுக்கள்,

    பதிலளிநீக்கு
  36. வெற்றியும் தோல்வியும் நம் கையில்தான் இருக்கிறது என்பதை அழகாக விளக்கிவிட்டீர்கள்! காணொளியும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  37. ரஞ்சனி மேடம் கமெண்ட் வழி மொழிகிறேன். சீனுவின் ஆச்சர்யம் எனக்கும்!

    பதிலளிநீக்கு
  38. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
    அருமையான பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  39. தெளிவாகவும் விரிவாகவும் விளக்கி விட்டீர்கள். நமது வெற்றி தோல்விகளுக்கு நாமே பொறுப்பு என்பதை.

    பதிலளிநீக்கு
  40. எண்ணங்களும் நம்பிக்கையுமே சாதனைகளுக்கு அடித்தளம். மிகவும் உண்மை

    பதிலளிநீக்கு
  41. கருத்துகள் அனைத்தும் அருமை !


    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  42. வெற்றி ஒரு தேர்ந்தெடுப்பு
    அது ஒரு வாய்ப்பல்ல என்பதை மிக அழகாகச் சொன்னீர்கள்.


    பதிலளிநீக்கு
  43. உற்சாகத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் புத்துணர்வு கூட்டியமைக்கு மிக்க நன்றி பாலண்ணா!

    பதிலளிநீக்கு
  44. அருமையான பதிவு. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. தெளிவாகச் சொல்லிய பகிர்வு...

    உன் வாழ்க்கை உன் கையில்

    அருமை.. அருமை...
    அழகான பகிர்வு..
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. தனபாலன், அருமையாக சொன்னீர்கள்.
    நடப்பவைகள் எல்லாவற்றுக்கும் நாமே தான் பொறுப்பு .
    தன்னம்பிக்கை தரும் நல்ல கட்டுரை.நம் சுய மதிப்பை ஒவ்வொரும் வளர்த்துக் கொண்டால் தான் வெற்றிப்பெற முடியும் உண்மை. இளைய சமுதாயத்திற்கும், முதியோர்களுக்கும், நம்பிக்கை தரும் பதிவு. சுப்பு தாத்தா(சூரிசார்) சொல்வதை நானும் வழி மொழிகிறேன். நூலாக வெளியிட நானும் கேட்டுக் கொள்கிறேன்.
    பாடல் பகிர்வு மிக அருமை.
    ரஞ்சனி அவர்கள் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.
    உங்களுக்கு நிகர் நீங்களே.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  47. வெற்றியும் தோல்வியும் நமதுகையில்தான். தன்நம்பிக்கைதரும் பகிர்வு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  48. பாட்டும் விளக்கமும் அருமை. நம் கைதான் நம்பிக்கை .

    பதிலளிநீக்கு
  49. நல்லதொரு பாடல் பகிர்வின் மூலம் தன்னம்பிக்கை தரும்,சிந்திக்க வைக்கும் மிக அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வரிக்கு வரி படித்த பதிவு.

    சுருக்கமாகச் சொல்லப் போனால்

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    பதிலளிநீக்கு
  51. தலைப்புக்கேற்ற பொருத்தமான பேபிப் படம் சூப்பர்ர்..

    பல கருத்துரைகள்.. அறிவுரைகள்.. ஆழமாக படிக்க அனைத்தும் உண்மையாக இருக்கு.. அருமை.

    பதிலளிநீக்கு
  52. தலைப்புக்கேற்ற பொருத்தமான பேபிப் படம் சூப்பர்ர்..

    பல கருத்துரைகள்.. அறிவுரைகள்.. உண்மையே.. நமக்கு ஏற்படும் எச்செயலுக்கும் நாமே பொறுப்பு:).. தீதும் நன்றும் பிறர்தர வாரா...

    பதிலளிநீக்கு
  53. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரீங்க அண்ணா..அருமையான கருத்துக்கள்..

    பதிலளிநீக்கு
  54. "வெற்றி என்பது நமது தேர்ந்தெடுப்பே..." என்பதில் உண்மை இருக்கிறது.
    நல்லதைத் தேர்ந்தெடு - அதை
    இன்றே தேர்ந்தெடு - அதனால்
    நன்றே வெற்றி காண்பாய்!

    பதிலளிநீக்கு
  55. சரியாக சொன்னீர்கள் சார், உண்மையாகவே இந்த பதிவுகளை படிக்கும்போதே மனதில் ஒரு வேகம் பிறக்கிறது. நாமே நமது வெற்றிக்கு காரணம் என்பது சரியே..... அதை சொன்ன விதத்திலும், வீடியோவும் மனதை கவர்கிறது ! பதிவுக்கு மிக மிக நன்றி !

    பதிலளிநீக்கு
  56. உன் வாழ்க்கை உன் கையில்! அருமையான இந்த தாரக மந்திரத்தைத்தான் நான் எப்போதுமே கடைபிடிக்கிறேன். வெற்றிக்கான ஆலோசனைகள் அருமை!!

    பதிலளிநீக்கு
  57. ஆழ்ந்த சிந்தனை. அழகாக விளக்கியுள்ளீர்கள். ஆம் தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்துக் ”களை” எடுத்து வெற்றியின் விதைகளை வளர்ப்பது நம் கையில் தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  58. //நீயே உனக்கு என்றும் நிகரானவன்// :)))) அப்படியே..
    மிக அருமை.சகோ.

    பதிலளிநீக்கு
  59. வெற்றியைக் குறித்து விளக்கிய பெருமை உங்களைச் சேரும்! மேலும் பல பதிவுகள் வ்ந்து எங்களைச் சேரும்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  60. தெளிவாகவும் விரிவாகவும் விளக்கி விட்டீர்கள் மிக அருமை

    பதிலளிநீக்கு
  61. உண்மை தான், தன்னுடைய நிலைக்குத் தான் பொறுப்பல்ல என்று நினைப்பவர்கள் இதை உணரக் கூட மாட்டார்கள்.

    பழக்கங்களை மாற்றிக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கு. :)

    நம் வெற்றி நம்மிடம் இருக்கையிலே எங்கெங்கோ தேடி அலைகிறோம்.

    பதிலளிநீக்கு
  62. வணக்கம் தனபாலன் அண்ணா.

    ஏன் என் பின்னொட்டத்தை வெளியிடவில்லை. ஏதாவது தவறுதலாக எழுதிவிட்டேனா...? அல்லது ஸ்பேமில் போய்விட்டதா...?

    பதிலளிநீக்கு
  63. வெற்றியின் சூட்சுமத்தை அழகுற சொல்லியுள்ளீர்கள் சார் மிக்க நன்றி கஷ்டப்படும் நேரங்களில் இக் கட்டுரை ஒரு தெளிவை கொடுக்கும்

    பதிலளிநீக்கு
  64. வெற்றி முயற்சியின் பயிற்சி என அருமையான விளக்கம்.
    பணி தொடரட்டும்.
    இனிய வாழ்த்து..
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  65. வெற்றி என்பது நமது கையிலும், மனத்திலும்தான் என்பதை அழகாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  66. அருமை..அருமை ..ஆழமாக ,சொல்லி இருக்கீங்க ..

    பதிலளிநீக்கு
  67. மீண்டும் ஒரு அற்புதமான பதிவு .வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  68. படித்தேன் தனபாலன், தன்னுணர்வோடு எடுக்கப்படும் வெற்றிக்கான முயற்சிகள் அவனுக்கு அவனையே அடையாளம் காட்டும் என்பதைத்தான் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' கூறுகிறது.

    உங்களின் பல்வேறு பதிவுகளிலும் இம்மாதிரியான சுயமுன்னேற்றக் கருத்துக்களை அழகிய பாடல் வரிகளுடன் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள்.பாராட்டுக்கள். ஒரேயொரு குறை. பாடல் இயற்றிய கவிஞரின் பெய்ர்களைச் சொல்லாமல் விட்டுவிடுகிறீர்கள் என்பதுதான்.

    தங்களின் நம்பிக்கையூட்டும் எழுத்துக்கள் மேலும் பெருகட்டும் .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.