🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நம்மையன்றி வேறு யாரால் முடியும் ? (பகுதி 2)

நண்பர்களே! அன்பான வணக்கங்கள்...! இதற்கு முந்தைய பதிவில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள்...! அதைப் படிக்காதவர்கள் முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி ஒன்று) சென்று படிக்கலாம்... அடுத்த பகுதி இதோ உங்களுக்காக...


இவை எல்லாம் (95%)மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியர்களின் படைப்புக்கள்...! அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று அந்த இதழ் முழுவதும் ஊற்று நீர்போல் ஊற்றெடுத்தது. ஊடகத்தைப் பற்றி உண்மையை அழகாகச் சொல்லி உள்ளார்கள்... முதலில்...

கொஞ்சம் கவிதை...


கண்டேன்... கண்டேன்...

முயற்சியைக் கண்டேன் சிலந்தியிடம்
பொறுமையைக் கண்டேன் ஆமையிடம்
ஒழுக்கத்தைக் கண்டேன் எறும்பிடம்
ஒற்றுமையைக் கண்டேன் காக்கையிடம்
இவை அனைத்தையும் கண்டேன்
என் அன்னையிடம் !

விதைகள்

மண்ணில் விழுகின்ற விதைகள்
மீண்டும் உயிராகும் போது -
மனிதா...
நீ மனம் சோர்ந்து போகலாமா ?
எழுந்து நில் ! நிமிர்ந்து நட !
வெற்றி உன்னைத் தேடி வரும் !

தேவை நமக்கு...

கால்களுக்குத் தேவை செருப்பு
சாம்பாருக்குத் தேவை பருப்பு
மனிதனுக்குத் தேவை சிரிப்பு
மாணவர்களுக்குத் தேவை படிப்பு
நாம் ஒவ்வொருவருக்கும் தேவை
கடினஉழைப்பு !
முயற்சி!

விளையாட்டுக்குத் தேவை 'பயிற்சி'
மாணவர்களுக்குத் தேவை 'தேர்ச்சி'
குழந்தைகளுக்குத் தேவை 'மகிழ்ச்சி'
இளைஞர்களுக்குத் தேவை 'புகழ்ச்சி'
எல்லோருக்கும் தேவை 'விடாமுயற்சி'

உன்னை நம்பு !

உன்னை நம்பு
உலகம் உன் கையில்
நம்மால் என்ன முடியும்
என்று நினைப்பதை விட
நம்மையன்றி வேறு யாரால் முடியும் ?
என்று நினைத்தால்
வாழ்வில் உயரலாம்.
வெற்றிக் கனி

தோல்வியைக் கண்டு மனம் தளராமல்
நம்பிக்கை எனும் குழி தோண்டி
கடும் பயிற்சி எனும் செடி நட்டு
உழைப்பு எனும் உரமிட்டு
துணிவு எனும் நீர் பாய்ச்சி
கவலை என்ற களையெடுத்து
சாதனை எனும் மரம் வளர்த்து
விடாமுயற்சி எனும் ஏணியில் ஏறி
'வெற்றி' கனியைப் பறித்திடுவோம்

சிந்தித்தால் வாழ்வு !

காலையில் படிக்கலாம் என்றால்
கார்டூன் என்னை அழைத்தது !
மாலையில் படிக்கலாம் என்றால்
மனதை இழுத்தது சித்திரம் !
இரவில் படிக்கலாம் என்றால்
சுட்டி டி.வி. போகோ சேனல்கள் !

அன்னையின் அடிக்குப் பயந்து
சிந்தித்து எழுதலாம் என்றாலோ
ஜாக்கி ஜானின் சாகசம் !
என்ன செய்வேன் நான் ?
மழுங்கடித்தது என் மூளையை
ஊனமாக்கியது என் அறிவை
என்ன செய்வேன் நான்?

சிந்தித்தேன்...
தொலைத்தேன் தொலைக்காட்சியை
மீண்டும் பெற்றேன்
தொலைந்த 'அறிவை'
தொலைந்த 'அன்பை'
தொலைந்த 'பாசத்தை'
தொலைந்த 'பண்பை'
தொலைந்த 'படிப்பை'

ஊனப்படுத்தும் ஊடகம்

ஊடகமே ! ஊடகமே !
எங்களை முடக்கி மூலையில்
இட்ட ஊடகமே !

வண்ண வண்ண இயற்கையை
ரசித்த எங்களது கண்களை
ஒரே இடத்தையே உற்று
நோக்க வாய்த்த ஊடகமே !

பேனா பிடித்த எங்களது கைகளை,
இணையதளத்தின் பட்டன்
பிடிக்க வைத்த ஊடகமே !

மான்கள் போல் துள்ளித் திரிந்த
எங்களது கால்களை உடைத்து
ஓரிடத்தில் நடைப்பிணம் போல்
அலைய வைத்த ஊடகமே !

எங்கள் மூளையை மழுங்கடித்து
உலகம் மறக்கச் செய்த ஊடகமே !
எங்களை நீ ஊனமாக்கியது போதும்
விழித்துக் கொண்டோம்
நாங்கள் இப்போது !

இது நிஜமானால்...

உன்னை நம்பு உலகை வென்றிட - என
உளவியல் ஆர்வலர்கள் ஆர்ப்பரித்ததை
உளமதில் நிறுத்தி உழைத்திருந்தால்
மாவட்டந்தோறும் ஓர் பில்கேட்ஸ்
உருவாவதை யார்தான் தடுத்திருக்க முடியும்?

எண்ணியாங்கு எய்துவர் என ஐயன்
ஏற்றத்துடன் கூறிய வார்த்தைக்கு
செயல்வடிவம் கொடுத்திருந்தால்
வட்டாரந்தோறும் ஓர் லட்சுமி மிட்டல்
வலம் வருவதைக் கண்டிருக்குமே இவ்வுலகம் !

எங்கோ இருந்து இயற்கையை ரசிக்க வந்திட்ட
கன்னியவர் தன்னலம் பாரா சேவையினால்
உலகிற்கே அன்னையானாள் அன்னை தெரசா
தன்னை நம்பி சேவை செய்தால் போதுமே
தரணியிலே ஆயிரமாயிரம் அன்னை தெரசாக்கள்.

உழைப்பால் வரும் வலி, உயர்வினால்
நீங்கிடும் உண்மை அறிந்திட்டால்
உழைப்பே உன் மூச்சாய் உயர்ந்திட்டாய்
நீ உலகை வெல்வதனை
விதியும் வழிவிட்டு வேடிக்கை பார்க்குமே.

முடிவாய்,
நினைவுகள் சுமையென்று இருந்துவிடாதே
அது நிஜமானால் ! உன்னைச் சுமக்கும்
நினைவுகள் சுகமென்று உறங்கிவிடாதே
அது நிஜமானால் !

உயர்வாய் இரு !

காற்றாய் இருந்துவிடு
உன்னை யாரும்
தடுக்க முடியாது
கடலாய்இருந்துவிடு
உன்னை யாரும்
அளக்க முடியாது
மழையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறுக்க முடியாது
மலையாய் இருந்துவிடு
உன்னை யாரும்
மறைக்க முடியாது
ஒளியாய் இருந்துவிடு
உன்னை யாரும்
பிடிக்க முடியாது
கடின உழைப்போடு நீ
என்றுமே இருந்துவிடு
உன் வெற்றியை
யாரும் தடுக்க முடியாது


வெற்றி

தோல்வி என்பதை
படிக்கல்லாக்கி
விடாமுயற்சி என்பதை
ஊன்றுகோலாக்கி
வெற்றி என்னும்
இலக்கை அடைவோம் !

கொஞ்சம் ... ஹி... ஹி... ஹி...

சர்தார்ஜி : ஹலோ, நீங்க தான் பில்கேட்ஸ் ஆ ?
பில்கேட்ஸ் : ஆமா, உங்களுக்கு என்ன வேணும் ?
சர்தார்ஜி : கம்ப்யூட்டர் கம்பெனி வச்சி நடத்தறீங்க... MyPicturesனு ஒப்பன்
பண்ணுனா என் போட்டோ ஒன்னு கூட இல்லை... Windowsனு இருக்கு,
ஒப்பன் பண்ணுனா காத்து வரமாட்டேங்குது...!?
ஒரு காலியான மது பாட்டில் சொன்னது...
" இன்று உன்னால் நான் காலி ஆனேன், நாளை என்னால் நீ காலி ஆவாய் !"
"டேய் ! நாளைக்கு எங்க வீட்ல செடி நடப்போறோம்டா... வீட்டுக்கு வந்துடு."
"எதுக்குடா என்னை கூப்பிடுற...?"
"நீ தாண்டா...! 'கூடயிருந்தே நல்லா குழிப்பறிப்பேன்'ன்னு சொன்னே...!
"ஏண்டி... மழையில் எதுக்கு குடை பிடிக்கிறோம் ?"
"நம்ம மண்டையிலே இருக்கிற களிமண்ணு கரையாம இருக்கணும் இல்லே...
அதுக்குத் தான்...!"
நோயாளி : டாக்டர், எனக்கு அடிக்கடி மறதி ஏற்படுகிறது...!
டாக்டர் : எப்படி சொல்றீங்க ?
நோயாளி : இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்ல டாக்டர்கிட்ட
போகணும்னு நினைச்சேன்.!
டாக்டர் : ....?! ....?!

கொஞ்சம் ... பொன்மொழிகள்

பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது நல்லது - டேவிட் கியூம்

உலகத்தில் யாரை நாம் இப்பொழுது மகான்களென்று கொண்டாடுகிறோமோ அவர்கள் எல்லோரும், தங்கள் சேவையினாலேயே அந்தப் பதவியை அடைந்திருப்பார்கள் - விவேகானந்தர்

நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி இன்பமான பொழுதை இழந்து விடுகிறீர்கள். தன்னைத் தானே அடக்கியாள இயலாதவன் பிறரை ஒரு போதும் வெற்றி கொள்ள மாட்டான் - காந்தியடிகள்

காலத்தின் மதிப்பு தெரிந்தால், உனக்கு வாழ்வின் மதிப்பு தெரியும் - நெல்சன்

ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்குத் தோல்வியே கிடையாது - லிங்கன்

விடாமுயற்சி உடையவன், விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான் - ரூஸ்வெல்ட்

தயங்கியவனுக்குத் தோல்வியும், துணிந்தவனுக்கு வெற்றியும் கிடைக்கும் - ஆதிசங்கரர்

ஒவ்வொரு தோல்வியும் வாழ்கையில் வெற்றிக்கு வழிகாட்டுகிறது - அமிர்தானந்தமயி

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் செய்வதை வித்தியாசமாகச் செய்கின்றனர் -ஷிவ்கெரா

நண்பர்களே... உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்கு உங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள் ! மிக்க நன்றி... தொடரும்...

அவ்வளவு தானா ? இன்னும் இருக்கு படிங்க - இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஜீவனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை நண்பரே..... தமிழ்மணம் வேலை செய்யவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை! அருமை!வியந்தேன்!

    இரசித்தேன்!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் அவர்களே..சிறு உளி கொண்டுதான் ஒரு சிற்பத்தையே செதுக்க முடிகிறது. அதுபோல சிறார்களின் இந்த தொகுப்பும். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. சிந்தித்தால் வாழ்வு அருமை. கடிகள் எல்லாமே புதுசு.

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகளுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் பயனுள்ள பகிர்வு.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. பொன்மொழிகள் பல அருமை; கோபம் பற்றி காந்தி சொன்னதும் லிங்கன் வெற்றி குறித்து சொன்னதும் நினைவில் நிற்கும்

    பதிலளிநீக்கு
  8. அத்தனையும் முத்துக்கள். அருமையான படைப்புகள்.தொடருங்கள்.
    தமிழ்மணத்தீல் ஓட்டுப்போட முடியவில்லை. என்ன காரணம் சார்?

    பதிலளிநீக்கு
  9. பிள்ளைகளுக்குள் இத்தனை திறமைகளா . எம்மை எல்லாம் மிஞ்சி விட்டார்கள். எதிர்கால உலகம் வாழடும் வளரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் குழந்தைகளின் திறமை வியக்க வைத்தது. அழகாகத் தொகுத்துத் தந்த உங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. கோபத்தில்இருப்பதோ
    ஒரு நிமிடம்
    இழக்கும் சந்தோஷத்தின்
    காலமோ அறுபது வினாடிகள்
    அருமையான கருத்து
    உண்மையில் இழப்பது
    சந்தோஷம் மட்டுமல்ல
    சினம் தன்னை
    சேர்ந்தாரைஎல்லாம்
    ஒருசேர கொன்றுவிடும்
    கொடூர தன்மை கொண்டது
    ஆதலால் ஒருவன் தன்னை
    காத்து கொள்ளவேண்டுமேன்றால்
    ஒவ்வொரு மனிதனும்
    தன்னை சினம் என்னும்
    கொடிய குணம் அணுகாமல்
    காத்து கொள்ளவேண்டும்
    அதற்க்கு ஒரே வழி பிறர் குறைகளை
    பெரிதுபடுத்தாமல்
    மன்னிக்கும் பண்பை
    வளர்த்து கொள்ளுதலும்
    அனைவரிடமும் இனிமையான சொற்களை
    பேசுவதும் அன்போடு இருப்பதும்
    வாழ்க்கையை இனிமையாக்கும்

    பதிலளிநீக்கு
  12. உனை நம்பு, உயர்வாய் இரு- சொல்லிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு நண்பரே ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  14. என்னுடைய இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருக்கின்றது. ஒருமுறை விஜயம் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  15. உங்களுக்கு என் வலையில் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கின்றது . வந்து பாருங்கள் .

    http://kowsy-vanappu.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. கண்கள் வரை இருப்பது எது கண்ணீர்
    காலம் வரை இருப்பது எது வருத்தம்
    தனபாலன்.ஐயா

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு நண்பரே. பகிர்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.