🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நீங்க மொத அமைச்சரானால்...?!

எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு...! அது என்னான்னா, ஒருத்தர்கிட்டே போய் மொத கேள்விய எளிதா கேட்டுட்டேன்... அவரு சொல்ற பதிலை வச்சி, இன்றைய நெலமைய நெனச்சி கோபப்பட்டு வருத்தப்பட்டு சிரமப்பட்டு, அப்புறம் எனக்கு நானே சமாதானமாகி, அடுத்த கேள்விய கேட்டேன்...

பொறுமையா பத்து பதில்களையும் சொன்னவாறு, பதினொன்னா ஒரு கேள்வி கேட்டேன் பாருங்க... வந்தது பாருங்க கோபம்... அத அப்புறம் சொல்றேங்க... ஆனா, உங்களுக்கு பத்து கேள்வியையும் சுருக்கமாக தாங்க கேட்டிருக்கேன்... எங்க Blog வலைப்பூவிலே இந்த இணைப்பில், ஏற்கனவே இதே கேள்விகளை படிச்சிருப்பீங்க... இங்கேயும் எதோ பார்த்து செய்யுங்க...!

(01) தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...?
(02) நல்ல சிந்தனைகள் வாழ்க... சிந்தித்தால் மட்டும் போதுமா...?
(03) அடேடே...! சரி, நல்லவரா மட்டும் இருந்தால் போதுமா...?
(04) அப்படியா...! இந்த நல்லதையெல்லாம் மத்தவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது ?
(05) அட, அருமைங்க... சரி, கூடவே இருக்கிறவர்கள் எப்படி இருக்கணும்...?
(06) ஆகா...! ஆனாலும் இதை கெடுக்கவே சூழ்ச்சி நடக்குமே...?
(07) எல்லாம் தெரியுமா...? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா...?
(08) சரிங்க, சொல்புத்தியும் கேட்காம, சுயபுத்தியும் இல்லாம செயல்பட்டா...?
(09) ம்... சுயநலம் தான் பிரதானம்ன்னு ஆயிட்டா...?
(10) அற்புதம்ங்க... வாயிலே வடை சுட்ற ஆட்கள் இப்போ பெருகிகிட்டு வர்றாங்க... முதல் கேள்விற்கு இப்போ என்ன பதில் சொல்லப் சொல்றீங்க...?

அப்புறம் பதிவோட தலைப்பைப் பார்த்து பயப்படாதீங்க... அது சும்மா... ஆனாலும் அப்படியும் நெனச்சி பதில் சொல்லலாமுங்க... முடியலேன்னா நீங்க உங்கள குடும்பத்தலைமையா நினைச்சிட்டு ? இல்லேன்னா நீங்க ஒரு பெரிய Company-க்கு தலைமைன்னு நினைச்சி பதில் சொல்லுங்க... உங்க பதிலை சரி பார்க்கணும்ன்னு நினைக்கிறீங்களா...? இந்தாங்கோ → எனக்கு பதில் சொன்னவரு முகவரி :-

தெய்வப்புலவர்,
No.64, அரசியலுக்கு அடுத்த அமைச்சியல் தெரு,
அமைச்சு இல்லம், பொருட்பால் வளாகம்,
உலகப் பொது மறை 631 (to) 640.

எல்லாத்துக்கும் தெளிவா பதில் வைச்சியிருக்கிறவர்கிட்டே கேள்வி கேட்குறது எவ்வளவு கஷ்டம்ன்னு புரியுதுங்களா...? அவரோட பதிலுக்கு திரைப்படப் பாடல்களை தேடிட்டிடு இருக்கேங்க... வரப் போற பதிவுல பெறகு நீங்க அத ரசிக்கலாம்... அப்புறம் விருப்பம் உள்ளவங்க, உங்க பதில்கள சரி பார்த்துக்கோங்க... அப்படி பார்த்தவங்க சொன்னா, கேள்விகளை மாத்துறேங்க... ஆனா, உங்க உண்மையான பதில்களை மட்டும் தான் ரொம்ப எதிர்ப்பார்க்குறேங்க... அவசரமில்லே, உங்களுக்கு நேரம் கெடைக்கிற போது சொன்னா போதுங்க... வரட்டுங்களா... ரொம்ப நன்றிங்க...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஓ... இது முன்னோட்டமா? ஸூப்பர்.

    தெய்வப்புலவரின் முகவரி நிறம் மாறிக்கொண்டே இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ஜி இந்த முகவரிக்கு கடுதாசி போட்டால் போகுமா ? டெக்னிக்கல் ஸூப்பர் ஜி

      நீக்கு
    2. நீங்க அனுப்புங்க ஜி்... கண்டிப்பாக போகும் நம் மனஇருளும் சேர்ந்து...!

      நீக்கு
  3. 01. பொறுமை, பணிவு, பிறரது சொல்லுக்கு செவி சாய்ப்பது அவசியமானது.

    02. நல்ல சிந்தனைகள் வளர நூல்கள் படிக்கும் பழக்கம் வேண்டும், சிந்தனையோடு செயல்பாடுகளும் அவ்வப்போது வேண்டும்.

    03. & 04. நாம் உறுதியாக நல்லவரே இதை பிறரும் அறியும் வண்ணம் பிரதிபலனை எதிர்பாராது பொதுநலமான நல்ல செயல்களில் நம்மை (நமது குடும்ப நலனோடு) ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்.

    05. நம்முடன் நண்பராக இருப்பவர்கள் நம்மைப் போன்றவர்களாக இருப்பது மிக முக்கியமானதே.

    06. உலகம் தோன்றிய காலம் முதல் இவர்களும் உண்டு சமாளித்தே தீரணும்.

    07. ஏட்டில் அறிந்ததால் மட்டும் பயனில்லை அனுபவமே செயலாகும் அதுவே உண்மையான படிப்பினை.

    08. இப்படி இருந்தால் எதுவுமே கரை சேராது.

    09. சுயநலவாதியால் அவனுக்கு மட்டுமே பயன் அவன் மக்கள் பிரதிநிதியாக முடியாது.

    10. முதல் கேள்வி என்பது பதிவின் தலைப்பா ?

    வெளியூரில் இருப்பதால் செல்வழி ஆகவே சிறிய அளவிலான பதில் ஜி.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் பிளாக்கில் படித்து விட்டேன். உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் திருக்குறளை வைத்தே இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் கேள்விகளுக்கு உங்கள் பாணியில் பதிக்களை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கில்லர்ஜியே சொல்லிட்டார்...

    தெய்வப்புலவரின் அட்ரஸ் சூப்பர்...டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோமச்சாங்க்...(க்ரேசி டயலாக்) ஹா ஹா ஹா...

    கேள்விகள் அனைத்தும் குறள்களோடுனு தெரியுது...அடுத்த பதிவில் வருவதை அறிய ஆவலுடன்....குறளும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...முடிந்தால் சொல்கின்றேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி கீதா அவர்களுக்கு, உங்களுக்கு தோன்றும் பதில்களை சொல்லுங்கள்... பின் 'அமைச்சு' அதிகாரத்தில் உள்ள வள்ளுவரின் பதில்களையும் சரி பாருங்கள்...

      கில்லர்ஜி அவர்கள் சொந்த கருத்துக்களை அருமையாக சொல்லியுள்ளார்... குறள்களை வாசித்திருந்தால், முதல் குறளின் விளக்கமும் அதை பத்தாவது குறளின் முடித்த விதமும் தான் நம்ம தாத்தாவின் சிறப்பு... நன்றி...

      நீக்கு
    2. ///கில்லர்ஜி அவர்கள் சொந்த கருத்துக்களை அருமையாக சொல்லியுள்ளார்///

      பின்னே மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தா வாங்கிட்டு வர்றேன் ?

      நீக்கு
    3. அடடா... தேவகோட்டையில் ஒரு அமைச்சர் தயாராகி விட்டாரே...!

      நீக்கு
  6. மிகவும் மாறுபட்ட கோணத்தில் எழுதி உள்ளீர்கள் .விடைகளுக்கு முயல்கிறேன் .
    பிறகு மீண்டும் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  7. ஆகா! மிக அருமையான பதிவு! முதலில் கொஞ்சம் புரியவில்லை.அப்புறம், உங்களுக்கு விடைகள் பகர்ந்தவரின் முகவரியைப் பார்த்ததும்தான் எல்லாம் புரிந்தது. திருக்குறளைப் படிக்க வைக்க நீங்கள் எடுக்கும் புதிது புதிதான முயற்சிகள் மிகச் சிறந்த தமிழ்ச் சேவை! முதல் நான்கு கேள்விகளும் கடைசிக் கேள்வியும் குறிப்பிட்ட குறள்களோடு அவ்வளவாகப் பொருந்தவில்லை. இவற்றுக்கு நான் விடையளிக்க முயல்வதை விட, பொய்யாமொழிப் புலவரின் விடைகளோடு பொருத்திப் பார்ப்பதே நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் மிகவும் எதிர்ப்பார்த்தேன் ஐயா...

      இந்தப் பகிர்வின் நோக்கத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி...

      நீக்கு
  8. வாசித்தேன் , நன்கு சிந்திக்க வைக்கிறீர்கள் . அவகாசம் கிடைக்கும்போது பதில் எழுதுவேன் .

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளுக்கு விடைகளை கொஞ்சம் நேரத்தில் தரேன் :)

    நான் மொத அமைச்சரானால்.... இதுவும் கேள்வியா ?
    நான் மொத அமைச்சரா இருப்பேன் !!!

    மற்ற இடங்களில் எழுத்து பிழையிருந்தாலும் பரவாயில்லை ..இங்கே தெய்வ புலவர் பார்ப்பார் :)
    நிறுத்தி நிதானமா எழுதிய விடைகளோடு வரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் மொத அமைச்சரா இருப்பேன்... //

      அருமை...

      நான் மொத (முதலில்) அமைச்சரானால் என்பதற்கும், நான் முதலமைச்சரானால் என்பதற்கும் வேறுபாடு உண்டு... தொடருங்கள்... நன்றி...

      நீக்கு
  10. 1, நேர்மை ,தெள்ளத்தெளிவான பேச்சு , நம்பிக்கை தன்னம்பிக்கை ,
    பேச்சாற்றல் அதனால் எதிராளியையும் கவரும் ஆளுமை ,எடுத்த காரியத்தை முடித்தல் ,பொறுமை பேச்சு செயல் எல்லாவற்றிலும் உறுதியான நிலைப்பாடு .

    2, நல்ல சிந்தனைகள் வளர நல்லவற்றை நினைக்கணும் செயல்படுத்தணும் நல்ல சிந்தனைகள் நாலு பேரை சென்றடையணும் .

    3, நல்லவராக இருப்பது மட்டும் போதாது குறைந்தது நாலு பேரையாவது நல்வழிப்படுத்தணும் .

    4,நமது செய்கைகளே புரிய வைக்கும்

    5, நல்ல தலைமை தனக்கு துணையாக நல்லவர்களையே தேர்ந்தெடுத்திருப்பார் .அதனால் கூட இருப்பவங்க அரணாக இருக்கணும்

    6, தெளிந்த புத்தியுடையவர்களை யாராலும் குழப்ப முடியாது ..அப்படியும் குழப்பி விடறவங்களை அருகில் அண்ட விடக்கூடாது

    7, எல்லாம் தெரிந்தவர் என்று யாருமில்லை இறைவனை தவிர ..ஏட்டு சுரைக்காய் கறிக்குதவுமோ உதவாதோ ஆனால் நல்ல சிந்தனைகளை தாங்கி வரும் ஏடு வாழவைக்கும்

    8, சொல்புத்தி சுயபுத்தி இல்லாதவங்க நிலை கஷ்டம்தான் ..

    9, சுயநலம் உள்ளவனால் எல்லாவற்றையும் கைக்கொண்டாலும் இறுதியில் தனிமையே அவனை கொல்லும்
    சுயநலம் வாழாது வாழவைக்காது

    10, வாயால் வடை சுடறவங்களா .. அதெல்லாம் நம்ம மக்கள் விவரமானவங்க ஏமாற்றமுடியாது ..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது பதில் : மிகவும் அருமை + வாழ்வதற்கான அர்த்தம்...

      பத்தாவது பதில் : இது போல் ஏமாறாத மக்கள் இருந்து விட்டால், அனைத்தும் சுபம்... நேரம் கிடைப்பின் 'அமைச்சு' (குறள் எண் 631-640 ) அதிகாரத்தை வாசியுங்கள்... முதல் குறளில் (குறள் எண் 631) நல்ல சிந்தனையே முக்கியம் என்று ஆரம்பித்த திருவள்ளுவர், முடிவில் (குறள் எண் 640) முத்தாய்ப்பாக ஒரு சிறப்பான கருத்தை கூறியுள்ளார்... மிகவும் நன்றி சகோதரி...

      நீக்கு
  11. வாழ்வின் நர்வுகளில் சுழல்கிற கேள்வியும் பதிலும்!

    பதிலளிநீக்கு
  12. மொத அமைச்சராகும் வழியை காட்டுங்க. என் அசிஸ்டண்ட் வந்து பதில் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்குக் கிளவியைக் கேட்கிறது.. சே..சே ஆரம்பமே குழப்புதே பிறகு எப்பூடி மொத:) அமைச்சராகிறது நான்?:).. உங்களுக்கு கேள்வி கேட்கிறதுதான் கஸ்டமா இருக்கு, எனக்கு எல்லாமே கஸ்டமாத்தான் இருக்கு ஹா ஹா ஹா..

    நான் மொத:) அமைச்சரானால் புளொக்குகளை எல்லாம் தேம்ஸ்ல போடச்சொல்லி ஓடர் போடுவேன்:)) அதுதான் என் மொத :) வேலை..:).

    பதிலளிநீக்கு
  14. கேள்விக்குப் பதில்கள் சொல்லப் போறேன், இதுக்கு நீங்க குறளில் பதில் சொல்வதாயின், எனக்குத் தெரிஞ்ச மொழியிலதான் சொல்லோணும்:).

    1.தலைமை எனில், நீதி நியாயம் அடிப்படையில் இயங்க வேண்டும், அங்கு முகத்துதி பார்த்தல், சொந்தம், நட்பு, சலுகை என எதுவும் இருக்கப்படாது.

    2. சிந்தித்தால் மட்டும் போதாது செயலிலும் காட்டப்படல் வேண்டும்.

    3. நல்லவராக இருக்கோணும் ஆனா நல்லவரா மட்டும் இருந்தால் போதாது.

    4. எந்த எதிர்ப்பு வரினும் துவண்டு போயிடாமல் களத்தில இறங்கிப் பாடுபடோணும்.. உ+ம்:- எல்லோரையும் ஞானியாக்குவதற்காக நான் இப்போ பாடுபடுவதைப்போல :) ஹையோ ஹையோ ஒரு புளோல வந்திட்டுது விட்டிடுங்கோ:).

    5.ஆமாம் ஜாமி போடாதோராக இருந்து, நல்லது கெட்டதைத் தட்டிச் சொல்லோணும்:).

    6.இரவுக்குப் பகல்போல இன்பத்துக்கு துன்பம் போல அனைத்துக்கும் இரு பக்கம் உண்டுதானே, அதனால நம் இலக்கை அடையும் வரை சொர்ந்திடக்கூடாது.. டேக் இட் ஈசியாக எடுத்துக் கொண்டு முன்னேறோணும்.

    7. எல்லாம் தெரியுமெனச் சொல்வோரைத்தான் முதலில் துர நிறுத்தோணும்:) ஹா ஹா ஹா..

    8. இரண்டும் இல்லாட்டில் தேம்ஸ்லதான் தள்ளோணும்:)

    9. எப்போ சுயநலத்தோடு ஒருவர் செயல்படுகிறார் எனத் தெரிய வருகிறதோ அன்றோடு அவர் தனித்துவிடப்படுவார்.. அழிவுதான்:).

    10. கடசி வரை வாயாலேயே வடை சுடச்சொல்லி விட வேண்டியதுதான்...

    இந்தப் பத்து விடைகளையும் வச்சு ஒருவராலும் மொத அமைச்சராகிட முடியாதே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மொழி எப்போதுமே ரசனை தான்... ரசித்துப் படித்தேன்... அதுவும் ஏழாவது பதில் செம...

      அடுத்து தேம்ஸ் நிறைந்து விடும் என்று நினைக்கிறேன்... ஹிஹி...

      நீக்கு
  15. 1. தலைமை என்றால்?
    அ.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

    ஆ.நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று
    தன்னம்பிக்கை மிக்கவராக,சுய மதிப்பிடல், சுய ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும். (self-esteem) தன்னிலிருந்தே மாற்றங்களை விதைப்பவரே சிறந்த தலைமைப்பண்புக்கு தகுதியானவர்.
    தம்மையும்,தம் சொல்லையும் வெல்ல இனி எவரும் இல்லை எனும் நம்பிக்கையை தருபவராக இருக்க வேண்டும். பேச்சால்,செயலால், அன்பால் தனக்கு பின் தொடர்பவர்களை வழி நடத்தும் திறமை கொண்டிருக்க வேண்டும். நம்பினவர்களை கைவிடாத உறுதியும் கைவிட மாட்டார் எனும் நம்பிக்கையை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    2.சிந்தித்தால் போதுமா?
    இல்லை, இல்லவே இல்லை.
    அ. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
    நீள்வினையால் நீளும் குடி.

    ஆ.கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
    பெருமையின் பீடுடையது இல்.
    சிந்தனைகளை செயல்படுத்தி வீட்டையும் நாட்டையும்மேன்மை பெற வைக்க வேண்டும். .

    இ. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்
    சொல்வதும், சிந்திப்பதும் எளிது தான். அதை சொல்லிய படி செய்ய வேண்டும்

    சிந்தனைகளை செயல்படுத்த நினைக்காதவர்களை குறித்து பாரதியார் பாடி இருப்பதை பாருங்களேன். .
    “நெஞ்சில் உரமும் இன்றி,

    நேர்மைத் திறமும் இன்றி

    வஞ்சனை செய்வாரடி – கிளியே

    வாய்ச்சொல்லில் வீரரடி”


    3. நல்லவராக இருந்தால் போதுமா?
    இல்லை, நல்லவர் எல்லோருமே தங்களை தவிர எல்லோரும் நல்லவர்கள் அல்ல எனும் சுய பெருமைக்குள் சிக்கி இருப்பார்கள். அதனால் எவருக்கும் பயனில்லை.

    இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரையா தார்.

    தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர் வாசனை வீசாத மலரை போன்றவர். நல்லவராக இருந்தாலும் பிறருக்கு பயன் படாதவராக, சமுதாயத்து சிந்தனை அற்றவராக இருந்தால் எவருக்கும் பயனில்லை. நல்லவராகவும் நாலு பேருக்கு நல்லது சொல்பவராகவும், செய்பவராகவும் இருக்க வேண்டும். ஏட்டுச்சுரக்காய் கறிக்குதாவது போல் நல்லவர் பட்டம் மட்டும் போதாது.

    4. மற்றவர்களுக்கு எப்படி புரிய வைக்கின்றது?
    நம்ம வாழும் வாழ்க்கையை முன்னுதாரணமாக்கி தான்.
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக
    மற்றவர்கள் எதை செய்யக்கூடாது என நாம் சொல்கின்றோமோ அதை நாமும் செய்யாமல் வாழ்ந்து காட்ட வேண்டும். கல்வி என்பது ஏட்டுக்கல்வி மட்டும் இல்லை. பட்டறிவும் கல்வி தான். பல நூல்கள் படித்து நாம் அறிந்து கொள்வதை நாம் பின்பற்றும் போது மற்றவர்கள் தாமாகவே புரிந்து கொள்வார்கள். சொல்லை விட செயல் முக்கியம்.

    5. கூடவே இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்?
    ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
    அ.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.
    என்ன தான் படித்திருந்தாலும் நல்லதை ஏற்று கெட்டதை விலக்க கூடியவர்களாக நம் நட்புக்கள் இருக்க வேண்டும்.

    ஆ.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.
    நாம் தவறு செய்தால் அதைக்கடிந்து திருத்துபவர்களாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. 6. சூழ்ச்சிகளும் தடைகளும்?
    அ.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

    ஆ.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.

    எந்த விளைவுகளுக்கும் எதிர் விளைவுகள் உண்டு. குடும்ப வாழ்க்கையிலும் , சமூக வாழ்க்கையிலும் ரோபோ போல் செயல் பட முடியாது. நல்லது இருந்தால் கெட்டதும் அங்கே இருக்கும், சாதகம் இருந்தால் பாதகங்களும் உருவாகும். நாம் நம்ம கடமையை செய்திட்டே இருக்கணும். முடிந்தால் அவர்களுக்கு புரிய வைத்து நம் கூட சேர்த்துக்க பார்க்கலாம். காரியம் சித்தி பெற அதை எதிர்ப்பவர்களை கூட்டு சேர்த்து கொள்வது புத்திசாலித்தனம். சூழ்ச்சிகளை வெல்லும் தந்திரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். தலைமைப்பண்புக்கு இதுவும் முக்கியம்.

    7.ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவுமா?
    உண்மையில் இந்த கேள்வியை கவனிக்காமல் மூன்றாவது கேள்விக்கு இந்த பழமொழியை பதிலாக்கி இருக்கின்றேன்.
    அ.முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
    திறப்பாடு இலாஅ தவர்
    திறம்படச் செயல்படத் தெரியாதவர்களிடம் சிக்கிக்கொள்ளும் காரியம் முழுமையடையாமல், முடங்கிப் போய்விடும். எந்த செயலானாலும் கற்றலுடன், பயிற்சியும், திறமைவும் முக்கியம்.
    முயலும் வெல்லும்
    ஆமையும் வெல்லும்
    முயலாமை வெல்லாது
    ஏட்டுச்சுரக்காயும் அப்படித்தான்.

    8.சொல்புத்தி, செயல் புத்தி?
    தலையில் தண்ணீரை கொட்டி தலை முழுகி விட வேண்டியது தான். அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்
    சொல்வது நம் கடமை கேட்பது அவர்கள் இஷ்டம்
    என்னோட பாலிசி இது தான்.
    1. ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
    11. புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்

    9. சுய நலவாதி??
    அ.அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் ; அன்பு உடையார்,
    என்பும் உரியர், பிறர்க்கு
    அன்பும், பண்பும், இல்லாதவர்கள். காணும் அனைத்தையும் தமக்கென உரிமை கொண்டாடுபவர்கள். அவர்களை நாம் நம்ப வேண்டாம்.
    ‘உன்னைப்போல் பிறரையும் நேசி’ என்கின்றது கிறிஸ்தவர்களின் பைபிள்


    10. முதல் கேள்விக்கு பதில்?
    அ.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க
    நன்றி பயவா வினை.

    ஆ. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி நிஷா அவர்களுக்கு : மேலே உள்ள இரு கருத்துரைகளும் அட்டகாசம்... ஒவ்வோர் கேள்விக்கும் நீங்கள் கொடுத்துள்ள குறள் மற்றும் விளக்கம், அசர வைக்கிறது... மனம் முழுவதும் மகிழ்ச்சி... மிக்க நன்றி...

      நீக்கு
  17. படிச்சேன். மனதில் தோன்றுவதைச் சொல்ல முடியாது. முழுமையாப் படிச்சு உள்வாங்கிப் புரிந்து கொண்டு சொல்லணும். வரேன் அப்புறமா.

    பதிலளிநீக்கு
  18. கில்லர்ஜி, ஏஞ்சல் ஆகியோரின் பதில்களைப் படித்தேன். இதுக்கு மேலேயா நாம சொல்லப் போறோம்???????????????

    பதிலளிநீக்கு
  19. தனபாலன் ஐயாவுக்கு வணக்கம்.
    நல்ல பதிவு மற்றும் சிறப்பான விமரிசனங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வள்ளுவரின் பதில்களும் திரைப்பாடல் பதில்களும் சுவைக்க ஆவலோடு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  21. உங்களுடைய இந்த பத்து கேள்விகளை முன்பே படித்தேன். பதில்களை கொஞ்சம் சிந்தித்து விட்டு எழுதலாம் என்று விட்டதில் அதிக நாட்களாகி விட்டது. நீங்கள் திருக்குறள் மூலம் பதிலை எதிர்பார்ப்பீர்கள். நான் எனக்குத் தெரிந்த வரை எழுதுகிறேன்.

    1. ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம், தீர்க்கதரிசனம். இன்றையிலிருந்து இன்னும் பத்து வருடத்தில் என்னவிதமான மாறுதல்கள் நிகழும் என்று கணிக்கத் தெரிந்தால் மட்டுமே நீண்ட கால திட்டங்களை தீட்ட முடியும். இதற்கு கடந்த காலத்தில் எப்படி இருந்தோம் என்று அறிந்திருப்பதும் அவசியம்.
    மிக முக்கியமான ஒரு குணம் எல்லோராலும் சுலபமாக அணுகக்கூடியவனாக,தரையில் காலூன்றி நிற்பவனாக இருக்க வேண்டும்.

    2. சிந்தித்தால் மட்டும் போதுமா? நிச்சயமாக போதாது, தன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை செயல்படுத்தக்கூடியவர்களை தேடி கண்டுபிடிப்பதும், அப்படி கண்டுகொண்டவர்களில் எந்த வேலையை யாரிடம் விட வேண்டும் என்று தெரிந்து அதை செயல்படுத்துவதும் அவசியம்.

    3. ஒரு தலைவன் முழுக்க முழுக்க நல்லவனாக இருக்க முடியாது. ஏனென்றால் அவனுக்கு கீழ் இருப்பவர்களுக்கு அவனிடத்தில் கொஞ்சம் பயம் வேண்டும் அப்பொழுதுதான் சரியாக நிர்வாகம் செய்ய முடியும். மேலும் எதிரிகளை சமாளிக்க வேண்டுமே.

    4. அறிஞர் பெருமக்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் இவனுடைய நல்ல தன்மையை மக்களுக்கு கடத்துவார்கள்.

    5. கூட இருப்பவர்கள் அவனை புரிந்து கொண்டு நடப்பவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் செயல்பாடுகளால் தலைவனுக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இடையில் திரை விழுந்து வீடக் கூடாது.

    6. சூழ்ச்சிக்கு ஆளாகாமல் இருப்பதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. ஒன்று செய்யலாம் யாரையும் முழுமையாக நம்பாமல் இருந்தால் சுலபமாக ஏமாற முடியாது. இதற்கு கொஞ்சம் பிரித்தாளும் சூழ்ச்சி தெரிய வேண்டும். இதனால்தான் சொன்னேன், தலைவன் என்பவன் முழுமையாக நல்லவனாக இருக்க முடியாது என்று.

    7. இதற்குத்தான் முதல் கேள்விக்கான பதிலிலேயே தரையில் கால் ஊன்றி நிற்க வேண்டும் என்றேன்.

    8.கடைசி வரை போஸ்டர் ஒட்டிக்கொண்டு, தலைவர் வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

    9. தலைவனாவதற்கு எல்லா தகுதிகளும் பெற்று, சுயநலமியாகி விட்டால் மக்கள் பாடு திண்டாட்டம்.

    10. வாயில் வடை சுடுவதா? நாம் நல்ல தலைவனுக்குரிய இலக்கணங்களை பேசிக் கொண்டிருக்கிறோம், எனவே இந்த கேள்விக்கே இடம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை அம்மா...

      சில பதில்கள் இடம் தான் மாறியுள்ளன... உதாரணமாக ஆறாவது உள்ள பிரித்தாளும் சூழ்ச்சி மூன்றாவதில் வரும்... நன்றி அம்மா...

      நீக்கு
  22. கேள்வியெல்லாம் படிச்சேனா.. எனக்கு இப்பிடித்தான் தோணுது.. தாடித்தமிழரு கோச்சுக்கிட்டாலும் பரவாயில்லே!

    1. தலை மிஸ்ஸாயிடாம பாத்துக்கணும்.
    2. அப்பிடி நான் சொன்னேனா?
    3. எப்படிப் போதும்? காரியத்தையெல்லாம் யாரு செய்யறது?
    4. முயற்சிதான் செய்யணும். முயற்சி திருவினையாக்கும்னு யாரோ பெரியவரு சொன்னதா சொல்றாங்களே..
    5. குழிபறிக்காம இருக்கணும்..
    6. அட! அதுக்குல்லாம் பயந்தா தலைமை தாங்க முடியுமா!
    7. கறிக்கு உதவாதுதான். அதுக்காக கூட்டு செய்யலாம்னா ஐடியா போடறது?
    8. சே! அதுக்குல்லாம் செயல்பாடுன்னா பேரு?
    9. ஒழிச்சிக்கட்டிறவேண்டியதுதான்..
    10. மொத அமைச்சரானா என்ன? ரெண்டாவது அமைச்சரானா என்ன? சாதிச்சுக்காட்டறதுதானே முக்கியம்.. என்ன நா சொல்றது?

    பதிலளிநீக்கு
  23. டிடி சகோ....அன்றே படித்து முதலில் ஒரு டோக்கன் கமென்ட் போட்டுவிட்டேன் ஹா ஹா ஹா...

    ஏனென்றால் இது டக்கென்று பதில்கள் சொல்ல முடியாது...நானும் ஒரு சின்ன பணி செய்து கொண்டிருப்பதால் நிதானமாகச் சொல்லலாம் என்று விட்டேன்...யாருடைய பதிலும் முழுதாக நான் வாசிக்க வில்லை...

    தலைமை என்பது லீடராக இருக்க வேண்டும்..பாஸாக இருக்கக் கூடாது. முதலில் ஒரு கருத்தை மட்டும் வைத்து விட்டு மீண்டும் வருகிறேன்...

    தலைமைக்கு முதலில் ஒரு நல்ல அமைச்சர்...அன்று அரசனுக்கு நல்ல அமைச்சர் இருக்க வேண்டும் என்று சொல்வது போல இருக்க வேன்னும்.

    சின்ன உதாரணம்...வீட்டு தலைவனையே எடுத்துக் கொள்வோம்...தலைவனுக்கு பல சமயங்களில் பல விஷயங்களில் புத்திசாலித்தனமாக விவேகத்துடன் ஆலோசனை சொல்லுவது மனைவிதான். தலைவன் என்னதான் தலைவனாக முடிவு எடுக்கும் அதிகாரத்துடன் இருந்தாலும் மனைவியுன் கலந்தாலோசித்து அந்த கருத்துகளையும் மனதில் கொண்டு முடிவு எடுத்தால் நல்லது. பெண்கள் பொதுவாகவே பல விதங்களில் ஆராய்ந்து முடிவு எடுப்பவர்கள்...ஸோ மனைவியை மந்திரி என்று எடுத்துக் கொள்ளலாமா?

    வீட்டுத் தலைவன் ஆணவத்துடன் ஏகாதிபத்திய அதிகாரத்துடன் இருந்தால் அந்தக் குடும்பமே தத்தளிக்கும்...அது போலத்தான் நாடும்...பல உதாரணங்கள் சொல்லலாம் ஆனால் வேண்டாம் இங்கு...

    அதே போன்று அரசனுக்கும் ஒரு நல்ல மந்திரி தேவை. விவேகமுள்ள முத்திசாலித்தனமான, சமயோசித புத்தி உள்ள ஒரு மந்திரி தேவை. அப்போதுதான் அரசன் அதாவது தலைவன் மிளிர முடியும்...நல்ல முடிவுகள் எடுக்க முடியும். பல சரித்திரங்கள் சொல்லுவது அரசன் மந்திரியின் ஆலோசனைகளைப் புறக்கணித்ததால்ல் வீழ்ந்தது பற்றி...

    நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அக்பர் அவையில் பீர்பால், கிருஷ்ணதேவராயர் அவையில் தெனாலிராமன் சாதுர்யம், சமயோசித ஆலோசனைகள்....

    இப்படி ஒருவர் தலைவனுக்கு அருகில் இருக்க வேண்டும்.

    அதைக் கேட்கும் நல்ல தன்மையுள்ள தலைவனாக இருக்க வேண்டும்.

    சுயநலம் அற்ற, நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே போன்று அதாவது தன் குடும்பத்தாருக்கு மட்டும் நன்மை நினைக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கு ஸ்பெஷலாக கவனிப்பது போன்ற குணங்கள் அற்ற தலைவனாக இருக்க வேண்டும். சரி இதை விவரிப்பதை விட காமராசர், ஓமந்தூர், கக்கன் போன்றவர்களைச் சொல்லலமா?

    அடுத்த கேள்விகளுக்கு வரேன்...

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை... இன்னும் விளக்கங்களை வாசிக்க காத்திருக்கிறேன் சகோதரி...

      நீக்கு
  24. தலைவன் ஒரு சில சமயங்களில் எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கவும் முடியாது. அப்படி எடுக்க நினைத்தால் எல்லோரையும் திருப்திப்படுத்த நினைத்தால் கண்டிப்பாக பல நல்ல விஷயங்களிலும் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிலை வரும். அப்படியான தருணங்களில் தலைவன் எதிர்ப்பே வந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல விஷயத்தில் உறுதியோடு நிற்க வேண்டும்...அதில் சமரசம் கூடாது

    மற்றொன்று தலைமைப் பொறுப்பு...தலைவன் என்பவன் நிர்வாகி. எனவே தலைமையின் கீழ் பல துறைகள் வரும்...ஒவ்வொரு துறைக்கும் உள்ள தலைவன் அல்லது அதைத் தொகுத்துக் கொடுக்கும் அமைச்சர் சொல்லும் கருத்துகலை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் அதைக் களைய வேண்டும்...முடிவுகளில் தோல்வி கண்டால் அதன் பொறுப்பை (அது அவர் கீழ் வரும் யாருடைய தவறாக இருந்தாலும்) ஏற்றுக் கொள்ளும் பண்பு வேண்டும். புகழுரைகளை ஏற்பது போல் தவறுகளை ஏற்கும் பொறுப்பும் வேண்டும். பொறுப்பை ஏற்றால் மட்டும் போதாது அதைச் சரி செய்ய வேண்டும் செயல்படுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்...இதுவும் மிக முக்கியம்.

    இதில் இரண்டாவது கேள்விக்கான விடையும் இருக்கு என்று தோன்றுகிறது....

    நல்லவராக அதாவது தனிப்பட்ட நபராக நல்ல சிந்தனைகள் உடையவராக் இருக்கலாம் ஆனால் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அவர்களையும் மேய்ச்சுக் கட்டி நல்ல சிந்தனைகளைச் செயல்படுத்தும் திறன் வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. முதலில் சொன்ன கருத்துகளில் பாரப்ட்சம் பார்க்கக் கூடாது என்பதற்கு நடுவு நிலைமை அதிகாரத்தில் இருக்கு….
    அப்புறம்…அமைச்சர் சுற்றியுளவர்கள் சொல்லும் நல்லவற்றைக் கேட்டலுக்கு குறள் 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பாரிலானுங்க் கெடும்
    3 வது நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. செயல்படுத்தும் போது கொஞ்சம் சமயோசிதமாகச் செயல்படும் திறன் வேண்டும். அன்னம் போன்று பிரித்தெடுக்கும் திறன்……வின் வின் சிச்சுவேஷன் புத்திசாலித்தனம் வேண்டும்…
    அதான் மேய்ச்சுக் கட்டும் திறன்

    மற்றவங்களுக்குத் தன் நல்ல சிந்தனைகளைப் புரிய வைக்கும் திறன்.
    ரொம்பக் கஷ்டமான விஷயம். அதற்கான அலைவரிசை உடையவர்கள் தலைவனைச் சுற்றியிருந்தால் மட்டுமே அது சாத்தியம். எளிது. அதுவும் இக்கால தலைவர் பதவிக்கு ரொம்பவே கடினம்……..ஹா ஹா ஹா..
    டிடி என் சிற்றறிவிற்கு எட்டிய வரை
    குறள் 384, 385, 390, 448, 528, 547, 581…583 ஒற்றர்கள் எவ்வளவு அவசியம் என்பது…..இது நாட்டு நலன் அறியவும் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் …என்றும் எடுத்துக் கொள்ளலாமோ…
    குறள் 530 மிக மிக யோசிக்க வைக்கிறது….அதாவது அரசன்/தலைவனை விட்டுப் காரணம் இல்லாமல் பிரிந்தவன் மீண்டும் ஏதோ ஒரு காரிய காரணத்திற்காக வந்தால் அவனுக்கு அந்தக் காரியத்தைச் செய்து கொடுத்து அவனை ஏறுக்கொள்வதை ஆராய்ந்து செய்யணும் என்று சொல்வது இப்போதய அரசியலை நினைக்க வைத்தது…
    இன்னும் இருக்கு மற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. Me... ஹாய் உறவுகளே...
    மாண்புமிகு DD: யாரங்கே..
    Me... நான்தான் அவைத்தலைவா
    GM sorry CM மீசைக்காரர்: நான்தான்னா?
    Me... நான்தான்னா நான்தான்.
    கோடாலி மீசை: அதான் யாருய்யா.
    Me... நான் அன்பே சிவம் மன்னா
    கோ மி:இத்தன நாளா எங்கே காணோம்.
    Me: வந்துட்டேன்னு ஷொல்லு. திரும்ப வந்துட்டேன்னு ஷொல்லுன்னு ஒரு பயணக்குறிப்பு..
    மீசை:இப்ப என்ன சொல்றீங்க..
    Me: ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு.
    எங்க ஊரிலிருந்து இங்க வந்து பாத்துட்டு திரும்பி.. மீசை: ம்ம்ம். Me: போறேன்னு ஷொல்லிட்டு போகத்தான் வந்தேன்.
    மீசை:ஓடிப்போ...

    பதிலளிநீக்கு
  27. திருவள்ளுவரை இணைத்து புதிய சிந்தனை. இந்த வழியில் சிந்திப்பது ஒரு சுய பரிசோதனை போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  28. முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
    இந்த பதிவை பார்க்கவே இல்லை. இன்று தான் பார்த்தேன்.
    திருக்ககுறளை படிக்க வைக்க அருமையான பதிவு.
    விடைகளை சரிப்பார்க்க வள்ளுவர் முகவரியும் கொடுத்து இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

    எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  29. முதலில் தலைமை பொறுப்புக்கு ஆளுமை திறமை வேண்டும்.

    //இதனை, இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து,
    அதனை அவன்கண் விடல்///
    -குறள் 517
    எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று இல்லாமல் வேலைகளை பிரித்து கொடுக்க வேண்டும், அதுவும் யார் அந்த வேலையை சிறப்பாக முடிப்பார்கள் என்ற திறன் இருக்க வேண்டும்
    தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு.

    பதிலளிநீக்கு
  30. 2. சிந்தித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும்.
    சிந்தித்து செயல் படும் போது அதை நல்ல படியாக முடிக்க பொருள், கருவி, காலம், செயல்முறை,இடம் என்ற ஐந்தையும் ஆராய்ந்து செயலை முடிக்க வேண்டும்.

    பொருள்கருவி, காலம் வினை இடனோ டைந்தும்
    இருள் தீர எண்ணிச்செயல்
    குறள்- 675.

    பதிலளிநீக்கு
  31. 03. நல்லவராக மட்டும் இருந்தால் போதாது வல்லவராகவும் இருக்க வேண்டும்.
    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்
    -குறள் 648.
    நல்லவராக இருந்தால் மட்டும் போதாது தான்.
    சொல்லும் நல்ல விஷயங்களை சொல்லும் காரியங்களை வரிசைப்படிக் கோர்த்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால் இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏர்றுக் கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  32. 04. 648 வது குறளே இதற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. 05. கூடவே இருப்பவர்களை கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    818 வது குறளில் சொல்வது போல் நாம் செய்யும் செயலைச் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு நீக்கி விட வேண்டும்

    ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்.

    - குறள் 818

    பதிலளிநீக்கு
  34. 06. சூழ்ச்சிக்களை அறியும் திறன் வேண்டும்.
    தலைமை பொறுப்பில் இருப்பவர் எல்லோரிடத்திலும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள் தோறும் கண்டு கொள்ளல் வேண்டும்.

    584 -குறள்.
    வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதவர் என்றாங்கு
    அனைவரையும் ஆராய்ந்து ஒற்று.
    தலைமை பொறுப்பில் இருக்கும் எல்லோருக்கும் பொறுந்தும்.

    பதிலளிநீக்கு
  35. 07. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது
    ஏட்டில் உள்ளதை படித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும் என்பதற்கு சொல்லப்பட்ட ஒரு பழமொழி.
    391 வது குறள் தான் இதற்கு
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    பதிலளிநீக்கு
  36. 08. சொல்புத்தியும் சுயபுத்தியும் இல்லையென்றால் கஷ்டம் தான்.

    இரண்டும் இல்லையென்றால் வள்ளுவர் சொன்னபடியாவது கேட்க வேண்டும்.

    எப்பொருள் யார்யார்க் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்பது அறிவு.










    பதிலளிநீக்கு
  37. 08. சுயநலம் ஒன்ரே பிரதானம் ஆகி விட்டால்

    சுயநலம் புகுந்து விட்டால் பொதுநலம் செயல்படாது.

    பதிலளிநீக்கு
  38. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு செயல் திறமை இல்லையென்றால் நல்லவ்ராக, வல்லவராக, படித்தவராக , பண்புகள் நிரைந்தவராக எப்படி இருந்தாலும் செயல் வீரனை தான் உலகம் விரும்பும்.கர்மவீரர் காமராஜரை இப்படித்தான் விரும்பினார்கள் மக்கள்.

    பதிலளிநீக்கு
  39. 01) தலைமை என்றால் முன்நின்று செயலாற்றுவதோடு ஏனையோரை அரவணைத்துச் செல்லும் பணி தான். அதனைச் சரியாகச் செய்பவரே தலைவர்.

    02) மனிதன் தேவை ஏற்படும் வேளை தான் சிந்திக்கின்றான். சிலர் சிந்தித்தே செயலாற்றுவர். சிந்தித்தால் மட்டும் போதாது; நற்சிந்தனை வழி நற்பணியாற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் ஈட்டவும் வேண்டும்.

    03) நல்லவராக மட்டும் இருந்தால் போதாது. நல்ல பெயரோடு மட்டும் இருந்தால் போதாது. மக்கள் பணிக்காகத் தன்னைப் பங்கெடுக்கச் செய்தல் வேண்டும்.

    04) தேவை ஏற்படும் வேளை, தேடல் வலுக்கும்! அவ்வேளை தான் பிறர் சொல் கேட்பாங்க... அந்த நேரம் பார்த்து நல்லவற்றைப் புரிய வைக்கலாம்.

    05) கூட இருக்கிறவங்க புரிந்துணர்வுடன் இருக்கும் வேளை பெருமகிழ்ச்சி.

    06) எப்பவும் நல்லுறவுகளைப் பிரிக்கும் மூன்றாம் ஆள்கள் இருக்கலாம். புரிந்துணர்வுடன் உள்ள எவரும் பிரிய வாய்ப்பில்லையே!

    07) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதாயினும் சூழலைச் சார்ந்து முடிவு எடுக்கத் தூண்டுமே!

    08) சொல் புத்தியும் கேட்காம, சுய புத்தியும் இல்லாம செயல்பட்டா புதை குழியில் விழலாம். சில வேளைகளில் பட்டுத் தெளிந்து திருந்தலாம்.

    09) எந்தப் பொதுநலத்தின் பின்னும் தன் (சுய) நலம் இருக்கே! இருப்பினும் தன் (சுய) நலம் மிகையாக இருப்பின் தனித்த சூழலில் வாழ நேரிடும்.

    10) வாயால வடை சுடுகிற ஆள்கள் பெருகினாலும் செயல் வீரர்கள் இருக்கத்தானே செய்வர். செயல் வீரர்களையே மக்கள் நல்ல தலைவர்களாக ஏற்கின்றனர்.

    இவை யாவும் எனது சொந்த கருத்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.