🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? பகுதி 2

நண்பர்களே... இதற்கு முந்தைய பதிவில் எனது பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்கு வகுப்பு ஆசிரியர் கூறிய அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல் ஆகியவற்றுக்குக் கூறிய விளக்கங்களைப் படித்திருப்பீர்கள். அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படிக்கவும்...


பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து நண்பர்கள் மேற்படிப்பிற்காகப் பிரிந்து விட்டோம். என் ஆசிரியர் கூறிய, "கணக்குப் பாடத்தில் ஒரு கணக்கை நீங்கள் முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டால், அதில் எளிய வழி இருந்தால் எனக்கும் நீங்கள் சொல்லித் தரலாம், இதை எல்லா விசயங்களிலும் பயன்படுத்துங்கள்." என்று கூறியது மட்டும் என் மனதில் ஆணித் தரமாக விழுந்து விட்டது. அப்போது அவர் இதைச் சொன்ன போது, சிரித்ததை நினைத்து, இன்றும் வருத்தப் படுவேன். அது எவ்வளவு பெரிய பெருந்தன்மை, என்பது கூட அன்று தெரியாமல் போய் விட்டது.

ஆனாலும் அவர் சொன்னது இன்று வரைக்கும் பல விசயங்களிலும் உதவுகிறது. அந்தக் காலத்தில் நாம் படித்த பாடத் திட்டங்களும், படித்த முறையும் வேறு. இந்தக் காலத்தில் குழந்தைகளுக்குப் பாடச்சுமையும் அதிகம், பொறுப்புகளும் அதிகம். நான் அன்று பத்தாம் வகுப்பில் படித்த பல பாடங்கள் இன்று ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புப் பாடங்களில் வந்து விட்டன. இந்த நவீன உலகில் கல்வி என்பது அனைவருக்கும் தேவை என்பதாகி விட்டது. எவ்வளவு பணம் இருந்தாலும் அந்தப் பணத்தைக் காப்பாற்றக் கல்வி தேவை. நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.


பொருள் : கல்வி அறிவு உள்ள நல்லவரிடம் உள்ள வறுமையை விடக்கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.

நாம் ஒரு சில விசயங்களை மட்டும் அலசுவோம். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது படிக்கும் சில குழந்தைகளுக்கு 'கணக்கு' என்ற "பெயரைக் கேட்டா சும்மா அதிருதில்லே". கணக்குப் பாடம் செய்யச் சொன்னால் சில குழந்தைகளுக்கு அப்போது தான் தூக்கம் வரும், வயிற்றைக் கலக்கும், திடீரென்று பசி எடுக்கும்... எப்படியோ தப்பிக்க முயற்சி செய்யும்.

அந்தக் குழந்தைகள் மீது தப்பில்லை. நாம் தான் பயமுறுத்தி வைத்துள்ளோம். கணக்குப் பாடத்தை மட்டும் முழுமையாகச் சொல்லித் தராதீர்கள். எனது ஆசிரியர் சொல்லித் தந்த மாதிரி, கணக்குப் பாடத்தை மட்டும் குழந்தைகள் யோசிக்குமாறு சொல்லித் தரலாம். அவர்களாகவே புரிந்து செய்து விட்டால், "இவ்வளவு எளிதாக உள்ளதே" என்று நம்மிடம் சொல்வார்கள். உடனே பாராட்டிப் பேசுங்கள். அடுத்த கணக்கைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

மேலும், தினமும் பள்ளியும் தரும் மற்ற வீட்டுப் பாடங்களை ஒரு முறை நன்றாகப் புரியும் வரை படித்து விட்டு, எழுதிப் பார்க்கச் சொல்லுங்கள். அவ்வாறு எழுதிப் பார்க்கும் போது, தவறுகள் நிறைய வரலாம். பரவாயில்லை. அடுத்த முறை அவர்கள் எழுதிப் பார்க்கும் போது அது சரியாகி விடும். அவர்களுக்கு மறந்தும் போகாது. அவ்வாறு, எழுதிப் பார்க்கும் குழந்தைகளுக்கு, இதற்கு முன் அந்தப் பதிலை எழுதிப் பார்த்த போது செய்த தவறுகள் ஞாபகம் வந்து, சரியாக எழுதி விடுவார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு முறை எழுதிப் பார்ப்பது நூறு முறை படிப்பதற்குச் சமம்.

அவர்கள் எந்தப் பாடத்திலாவது சந்தேகமோ, தெரியவில்லை, புரியவில்லை என்று நம்மிடம் வந்தால், யாரையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பேசாமல், நமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம். அப்போது அவர்களை, 'எப்படியோ படி' என்று உதாசீனப்படுத்தி விட்டாலோ, அடித்தாலோ அல்லது திட்டினாலோ, அடுத்த தடவை நம்மிடம் கேட்கப் பயப்படும் அல்லது தயங்கும். 'எனக்குத் தெரியவில்லை' என்று நாம் சொல்லி விட்டால், அடுத்த தடவை நம்மிடம் வரவே வராது. ஏனென்றால், 'இந்தச் சாதாரணக் கேள்விக்கே அப்பாவிற்கோ / அம்மாவிற்கோ விடை தெரியவில்லை. இந்தக் கேள்விக்கெல்லாம் எப்படி விடை தெரியும்' என்று தானாக நினைத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் பாராட்டினால் போதும், அதுவே அவர்களுக்கு ஊக்கமும், மேலும் படிப்பதற்கு ஆர்வமும் தரும்.

சில குழந்தைகள் எப்படியோ அறிந்து, தெரிந்து, புரிந்து படித்து விடும். சில குழந்தைகள் மனப்பாடம் (கடம் ?) செய்து விடும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால், 'அதிக மதிப்பெண் வாங்கினால் போதும்' என்ற நமது விருப்பத்திற்காக(!).

நண்பர்களே... குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அறிந்து, தெரிந்து, புரிந்து படிக்கச் சொல்லுங்கள். இல்லையென்றால் அதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன் பிறகு, குழந்தைகள் தானாகக் கற்றுக் கொள்ளும். அதன்பின் நாம் குழந்தைகளைக் கண்காணித்தாலே போதுமானது. இது படிப்பிற்கு மட்டும் தானா ...?

வங்கிகளுக்குச் செல்லும் போது குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். முடிந்தால் அவர்கள் பெயரிலேயே, ஒரு சேமிப்புக் கணக்கைத் துவக்கி, மாதா மாதம் கொஞ்சம் பணத்தை அவர்களாகவே சேமிக்கக் கற்றுக் கொடுங்கள். நூலகத்திற்குச் செல்லும் போது குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்குப் பிடித்த நூல்களை வாங்கித் தாருங்கள்.

புகைவண்டி அல்லது பேருந்து முன்பதிவு செய்யச் செல்லும் போதும், அஞ்சலகம் செல்லும் போதும் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் சொல்லித் தரா விட்டாலும் தானாகக் குழந்தைகள் பல விசயங்களைக் கற்றுக் கொள்ளும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, எப்போதோ படித்த ஒரு சின்ன விசயம் நினைவிற்கு வந்தது. அது.....

இரு நண்பர்கள் புகை வண்டி முன் பதிவிற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நண்பர் தன் மகனோடு வந்திருந்தார். இரு நண்பர்களும் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டே வரிசையில் நகர்ந்தனர். அதில் ஒரு நண்பர், மகனோடு வந்த நண்பரின் முன் பதிவு சீட்டைப் பார்த்து, "என்ன நண்பா, உன் மகன் குள்ளமாகச் சின்னப் பையன் போலத் தானே இருக்கிறான். அவனுக்கு ஏன் முழு சீட்டு வாங்க வேண்டும். வயதைக் குறைத்து எழுதி அரை சீட்டு வாங்கலாம், பணமும் மிச்சமாகும்" என்றார்.

அதற்கு அந்த நண்பர், "நண்பா! எனக்கும் அது தெரியாதது அல்ல. ஆனால் எப்போதுமே நான் அவ்வாறு செய்ததில்லை. செய்யவும் மாட்டேன். என் மகன் ரொம்ப விவரமானவன். முன் பதிவு சீட்டில் உள்ள விவரங்களை எல்லாம் கேட்பான். இது என்ன நம்பர்? இது எதற்கு? WL என்றால் என்ன? RAC என்றால் என்ன?... இப்படி. அவனுக்குத் தன் வயது குறைவாக எழுதியதைப் பார்த்து, நீங்கள் சொன்ன விசயங்களைத் தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் அவனை இது பாதிக்கும். நல்ல வேளை, என் மகன் தூரத்தில் உள்ளதால், நீங்கள் கூறியதை அவன் கேட்கவில்லை. நன்றி நண்பா!" என்று கூறி தன் மகனை அழைத்துச் சென்றார். அந்த மகன் தான் பிற்காலத்தில் சிறந்த நீதிபதியாக இருந்தார் என்பது வரலாறு.

நண்பர்களே... நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் கூட நம் குழந்தைகளைப் பெரியதாகப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இன்றைய காலத்தில் நாம் அவர்களுக்குக் கற்றுத் தருகிறோமோ இல்லையோ, அவர்களிடமிருந்து நாம் தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி !



அறிந்து, தெரிந்து, புரிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்...? அறிய இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. //நண்பர்களே... நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது.//

    ஆமாம்,முன்மாதிரி நாம்தான்.நல்லபதிவு

    பதிலளிநீக்கு
  2. பாஸ் மிகவும் நல்ல பதிவு.... ரியலி குட்... அப்புறம் உங்க பொண்ணு ரெம்ப அழகு... கண்ணு பட போகுது...... :)

    பதிலளிநீக்கு
  3. அத்தனையும் படித்து மனதில் வைக்க வேண்டிய
    வாழ்க்கை அனுபவ பொக்கிஷங்கள்...

    தங்களின் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. //நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. //
    நிச்சயமாக!மிக நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. பெற்றோர்களுக்கான கட்டுரைக்கு நன்றி...
    நம் பிள்ளைகளுக்கு நாம் தான் ரோல் மாடல்...
    ரொம்பவும் கவனமாக பிள்ளைகளை செதுக்க வேண்டும்..
    பயனுள்ள கட்டுரை...

    பதிலளிநீக்கு
  6. //நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது.//

    உண்மை.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  7. வழித்தோன்றல்கள்
    வழிதவறி செல்லாது காக்கவேண்டிய நாம்
    வழிப்பாதையை செப்பனிட்டு காட்டவேண்டும்...
    அப்போதுதான் வழிவழி வரும் சந்ததிகள்
    வாழ்வில் நேர்மைபட வாழமுடியும்...
    அருமையான கட்டுரைக்கு நன்றிகள் பல நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் தனபாலன் - குழந்தைகளின் பிஞ்சு மனதில் பதியும் செய்திகள் - நிகழ்வுகள் - அவர்களது வாழ்க்கை முழுவதும் பயன் படும். ஆகவே ந்ல்லதையே சொல்லிக் கொடுத்து வளர்ப்பது நன்று. நல்லதொரு பதிவு. நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்துக்களுடன் கூடிய அருமையான பதிவு பாஸ்

    பதிலளிநீக்கு
  10. "உங்கள் கட்டுரை அருமை. பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய கொள்கை அவர்தம் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக..."

    பதிலளிநீக்கு
  11. நன்றி.
    பதிவு குழந்தைகளை பெற்றோருக்குமட்டுமல்ல
    நீண்ட நேரம் தங்களுடன் குழந்தைகளை
    தங்களுடன் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கற்பிப்பதைவிட வாழ்ந்து காட்டி கற்பிப்பதே சிறந்தது. பதிவில் பல நல்ல விஷயங்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. பதிவில் பல நல்ல விஷயங்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  14. நிஜமாவே உங்க பொண்ணு அழகா இருக்காங்க... கண்ணு பட்டாலும் பட்டுவிடும்...

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான்! நாம்தான் குழந்தைகளுக்கு மாடல். நாமே தவறான பழக்கங்களை செய்தால் குழந்தைகளும் அதை கற்றுக்கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  16. உண்மைதான்! நாம்தான் குழந்தைகளுக்கு மாடல். நாமே தவறான பழக்கங்களை செய்தால் குழந்தைகளும் அதை கற்றுக்கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  17. //நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது.//

    உண்மைதான் சகோ. நம்மிடமிருந்தான் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். நாம்தான் அவர்களின் முதல் பள்ளி யல்லவா! ஆகவே நாம்தான் மிக கவனமாக இருக்கவேண்டும். மிக அழகான அருமையான பதிவு..

    வாழ்த்துக்கள் சகோ..

    பதிலளிநீக்கு
  18. கணக்கு பாடத்தின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுறாங்களே அவர்களை என்ன செய்யலாம் ?

    பதிலளிநீக்கு
  19. பல நல்ல விஷயங்களை தந்துள்ளீர்கள்... நண்பா...
    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. அறிந்து , தெரிந்து, புரிந்து கொண்டேன் .
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  21. மிக நலல் கருத்துக்கள்..இன்னும் வாசித்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
  22. ''...நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட நம் குழந்தைகளை பெரியதாக பாதிக்கும் வாய்ப்புள்ளது..''
    இதை எணர்ந்தாலே வாழ்வு சிறப்புறும். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  23. பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
    அருமையான ஆலோசனைகள்!!

    இதனை நாமும் நம் நடைமுறையில் பின்பற்றலாம்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல ஆசிரியர் தான். பகுதி இரண்டும் அருமையாக உள்ளது. நான் பொதுவாக எல்லாவற்றையும் எழுதித் தான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் பல விஷயங்கள் நினைவில் இருக்கின்றன என எண்ணுகிறேன். :)))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.