🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1)

அனைவருக்கும் வணக்கம்,,, திருக்குறளில் தொடரும் தவறான சிறப்புகள் எனும் முந்தைய பதிவை தொடர்ந்து, திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1) ஆரம்பிப்போம்...
திருக்குறள் எனும் முப்பால் நூலானது உலகின் ஒரே அறநூல் மட்டுமல்ல; நினைத்தே பார்க்க முடியாத வகையில் எழுத்துக்களின் எண்ணிக்கையில் கட்டமைக்கப்பட்ட ஒரே கணக்கு நூலும் ஆகும்... அதிகாரங்கள், குறள்கள் என்று தனித்தனியாகவும், இரண்டையும் சேர்த்தும், அனைத்து எழுத்துக்களைக் கணக்கிட்டுக் கட்டமைப்பைப் பார்ப்பது முதல் வகை... கூடுதலாகக் கொம்பு எழுத்துக்கள் இல்லாத குறள்கள், இதலுறல் குறள்கள், இதழகல் குறள்கள் ஆகிய சிறப்புகளுக்கும் கணக்கியல் உண்டு...! பல குறள்களில் தாத்தா கேள்வி கேட்டிருப்பார்; கேள்விக்கான குறியீடு (?) தான் இல்லையே தவிர, அவற்றுக்கும் கணக்கு உண்டு...! தினம் ஒரு திருக்குறள் என்று கற்றல் நடக்கும் போது :

குறளில் வரும் ஒரு சொல்லுக்குச் சரியான பொருளை அறிந்து கொள்ள ஐயம் வருகிறது; அதே சொல் முப்பால் முழுவதும் உள்ளதைத் தேடித் தெரிந்து கொள்வது; அதன்பின் அனைத்து குறள்களிலும் ஒரே பொருளில் ஆளப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்வது... தொல்லாசிரியர்கள் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை, நாம் தேடிய சொல்லுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு உரைகள் இருந்தால், நம் ஐயங்களின் எண்ணிக்கை கூடும்...! இதற்குத் தீர்வு என்ன...? எழுத்துக்களின் கணக்கியல் மட்டுமே...! எடுத்துக்காட்டாக :

திரு எனும் சொல்லை எடுத்துக்கொள்வோம்... திரு என்ற சொல் குறளில் செல்வம், மேன்மை, சிறப்பு, பொலிவு, அழகு, தெய்வத்தன்மை, செல்வக் கடவுள் கண்டாரால் விரும்பப்படும் தன்மை, போன்ற பலபொருள்களில் உரையாசிரியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்... அதிகாரம்: 92. வரைவின்மகளிர் - 920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு - இக்குறளில் வரும் திரு என்பதற்கு, மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர், மு.வரதராசனார் ஆகிய பலரும் செல்வக் கடவுளாக, அதாவது திருமகளாகப் பொருள் கொள்கின்றனர்... இல்லை திரு என்றால் செல்வம் என்று சொல்பவர்கள் பலரும் உண்டு... எது சரி...?

தேடுதல் : திரு எனும் சொல்லை உடைய குறள்கள் அனைத்தையும் தொகுக்க வேண்டும்... கணக்கிடல் : அவற்றில் நம் கட்டமைப்பைப் பயன்படுத்திச் சரி பார்க்க வேண்டும்... தீர்வு : திருமகளா ? செல்வமா ? என்பதைக் கணக்கு முடிவு செய்யும்...! அதென்ன கணக்கு...? அதற்குமுன் :-
முதலில் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது எப்படி...? திருக்குறளில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் ங, ளீ என்பதை அறிவோம்... இவற்றின் அதிகாரங்களையும் குறள்களையும் அறிய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்...? நம் கணினியில் ஒரு விரிதாள் கோப்பில் (Excel File) குறள் எண்களுடன் 1330 குறள்களும், அதிகார எண்களுடன் 133 அதிகாரங்களும், நான்கு நெடுவரிசைகளில் (columns) 1330 வரிகளாக வரிசையாகவும் (rows) இருக்க வேண்டும்... அதன்பின் தேடுதல் (Ctrl-F) மூலம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்... அதில் Find All என்பதைச் சொடுக்கி ஒரு குறளில் தான் உள்ளது என்பதையும் கூட உறுதிப்படுத்தி விடலாம்... இதே போன்று ளீ எழுத்தையும் முடித்து விட்டால், இவற்றின் அதிகாரங்களையும் குறள்களையும் சொல்லி விடலாம்...! சரி வேறு ஏதேனும் எழுத்துக்கள் ஒரு முறை இருந்தால்...?

மேற்சொன்ன முறையில், ஒவ்வொரு குறளையும் தனித்தனி எழுத்துக்களாகப் பிரித்து, தமிழ் எழுத்துக்கள் 247-யையும் தேடிப் பார்க்க வேண்டுமா...? அதற்கு கண்டுபிடி & மாற்று (Find & Replace) நன்றாகத் தெரிந்திருக்க வேண்டுமா...? அதற்கு ஏழு (7) தருக்க முறை செயல்பாடுகளை (Logic functions) எல்லாம் பயன்படுத்திய கில்லாடியாக இருக்க வேண்டுமா...? அனைத்திற்கும் மேலாக நிரல் (Macro) மன்னனாக இருக்க வேண்டுமா...? - இவை அனைத்தும் அவசியமேயில்லை... நமது முதல் முதன்மை கோப்பு நாம் கணக்கிட்டவற்றைச் சேமிக்க மட்டுமே...! நாம் கணக்கிட நினைப்பதெல்லாம் ஒரு கருவி எளிதாகச் செய்து கொடுக்கும்...! சற்று பொறுங்கள், தாத்தா குறள் ஒன்றைச் சொல்கிறார் : 68. வினைசெயல்வகை :

675. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

கணக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுக்கும் தாத்தா...! குறள் வழி வாழ்பவர்களுக்கு, செயற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன இல்லை... எண்ணித் துணிந்து ஆய்வு செய்யும் செயலில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு (467), காலம் தானே அறிந்து உதவி செய்யும்...! அதன்பின் எது நேரிடினும் "பார்த்துக்கொள்ளலாம்" என்று தவறாகச் சொல்ல மாட்டார்கள்...! (483)

ஆமாம் எளிதாகக் கணக்கிட என்ன கருவி தேவை...? அக்கருவிக்கு, குற்றத்தைத் தடுத்து, அழிவை அகற்றி, வாழ்நாள் இறுதிவரை காக்கும் அறிவு எனும் கருவி (421) துணை செய்யும்... நன்றி... தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்லதொரு ஆராய்ச்சித்தொடர் இனிதே தொடக்கம்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான பதிவு. திருக்குறள் மட்டும் படித்து விடுவோம், கணக்கியல் பயிற்சி என்று சொல்கிறீர்கள். பயிற்சி செய்ய வேண்டும்.

    வாழ்நாள் இறுதிவரை அறிவு எனும் கருவி செயல்படவும் திருக்குறள் உதவும்.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கணக்கியல்..
    சீரிய கருத்துகளின் பதிவு..

    தொடரட்டும் தங்களது அரும்பணி..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. எளிதாகக் கணக்கிட உதவும் கருவி அதுவும் இறுதி வரை காக்கும் கருவி அறிவு இதைத் தீட்டத்தானே மெனக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் இல்லையா...இப்ப கணக்கியலுக்காக ரொம்பவே தீட்டிக்கணும். தீட்டிட்டா போச்சு. கணக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுக்கறது தாத்தாவாச்சே!!!!

    நல்ல ஆராய்ச்சி, டிடி. தொடர்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஆராய்ச்சி சிந்திக்க வைக்கிறது. ஒருமுறை நான் மெய்யெழுத்து இல்லாத குறள் உண்டோ எனக் கேட்டிருந்தேன். 

    https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெய்யெழுத்து இல்லாத குறள்கள் உண்டு...! உயிரெழுத்து இல்லாத குறள்களும் உண்டு...!! உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இல்லாத குறள்களும் உண்டு...!!! நன்றி ஐயா...

      நீக்கு
  6. வணக்கம் ஜி
    நல்லதொரு ஆராய்ச்சி தொடக்கம் நானும் படித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. திருக்குறள் அறிவுக்கணக்கு தொடரட்டும். நன்றி .

    பதிலளிநீக்கு
  8. புதிய கோணத்தில் முயற்சி சுவாரஸ்யமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள் .தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்லது... நானும் படித்து கொள்ள தொடருகிறேன்...

    பதிலளிநீக்கு
  10. எப்படியெல்லாமோ முனைவர் பட்டம் பெறுகிறார்கள். உங்களைப் போன்ற சிலரே அதற்கு தகுதியானவர்கள். தொடரட்டும் ஆராய்ச்சி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.