🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...!

மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசைத் தேன் தானோ... ? மின்னல் ஒளியெனக் கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...?2) அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே...© கிழக்கே போகும் ரயில் முத்துலிங்கம் இளையராஜா P,ஜெயச்சந்திரன் @ 1978 ⟫
கண்டுபிடிங்க பார்க்கலாம்...! என்கிற முந்தைய பதிவில், 10 திரைப்படப் பாடல்களின் ஆரம்ப வரிகள் சிலவற்றை மட்டும் கொடுத்து, எந்த குறளுக்கு எந்தப் பாடல் ஒத்து வருகிறது, அப்படியானால் அது எந்த அதிகாரம் என்று கேட்டிருந்தேன்... "பாடல் வரிகளைப் பார்த்தால் காமத்துப்பாலில் உள்ள அதிகாரம் தான் இருக்கும்" என்று திருக்குறளைக் கையில் எடுத்தவர்கள், அதன் முதல் அதிகாரமே என்று கணித்த ഽ திருமிகு. தளிர் சுரேஷ், ഽഽ திருமிகு. தில்லை அகத்து கீதா ഽഽഽ திருமிகு. தேன் மதுரத் தமிழ்! கிரேஸ் ഽഽഽഽ திருமிகு. வே.நடனசபாபதி மற்றும் ഽഽഽഽഽ திருமிகு. நாகேந்திர பாரதி ஐவருக்கும் பாராட்டுகள்... நன்றிகள்...
இதோ குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும்...! கொடுத்துள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க பிளேரை சொடுக்கவும்... வேறு சரியான பாடல் குறளோடு மேலும் ஒத்துப் போனால், அதைக் கருத்துரையில் பாடவும்... முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்குக மும்முனை தாக்குதல்...! வாசித்து வந்தால் நன்று... நன்றி...

அதிகாரம் 109 - தகையணங்குறுத்தல்(1086-1090)

வளைந்த நெளிந்து போகும் பாதை போல இருக்கும் இவளின் புருவங்கள், நேராக இருந்து மறைக்குமானால், இவளின் கண்களால் எனக்குள்ளே உண்டாகும் நடுங்கும்படியான துன்பத்தைத் தடுத்து விடும்...!

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்  
செய்யல மன்இவள் கண் (1086)  
புருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக, பருவம் ஒரு களமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ...? குறுநகையின் வண்ணத்தில், குழி விழுந்த கன்னத்தில்2 தேன் சுவையைத் தான் குழைத்து - கொடுத்ததெல்லாம் இவள் தானோ...? நிலவு ஒரு பெண்ணாகி, உலவுகின்ற அழகோ...? நீரலைகள் இடம் மாறி - நீந்துகின்ற குழலோ...?2 மாதுளையின் பூபோலே - மலருகின்ற இதழோ...?2 மான் இனமும் மீன் இனமும், மயங்குகின்ற விழியோ...?© உலகம் சுற்றும் வாலிபன் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1973 ⟫

இவளின் முன்னழகின் மேல் இருக்கும் சேலை, மதம் பிடித்த யானையின் மேல் இருக்கும் முகபடாம் போல் அல்லவா இருக்கிறது...!

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்  
படாஅ முலைமேல் துகில் (1087)  
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ...? - நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல அடி எடுத்துக் கொடுத்ததோ...? ஒ ஒ ஓ... அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ...? ஒ ஓ... ஆ...ஆ...ஆ...ஆ... இளநீரைச் சுமந்திருக்கும் - தென்னை மரமும் அல்ல... மழை மேகம் குடை பிடிக்கும் - குளிர் நிலவும் அல்ல2 இங்கும் அங்கும் மீன் பாயும் - நீரோடை அல்ல2 இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல...? ஆ...ஆ...ஆ...ஆ...© பேசும் தெய்வம் வாலி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫

போர்க்களத்தில் பகைவரும் பயந்து கதி கலந்து போகும் என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே தோற்று அழிந்து போயிற்றே...!

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்  
நண்ணாரும் உட்குமென் பீடு (1088)  
தென்றலதன் விலாசத்தை தம் தோற்றமதில் பெற்று வந்தவள்... மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்றுத் தந்தவள்... முகத்தை தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்... சிந்து பைரவியைச் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்... பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம் - அதில் பரதமும் படிக்குது அபிநயம்2 லாலாலலா... லாலாலலா... இந்திர லோகத்துச் சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ... ? மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ... ரதி என்பேன், மதி என்பேன், கிளி என்பேன், நீ வா... உடலென்பேன், உயிரென்பேன், உறவென்பேன் நீ வா...© உயிருள்ளவரை உஷா ராஜாஸ்ரீ டி.ராஜேந்தர் S.P.பாலசுப்ரமணியம், சசிரேகா @ 1983 ⟫

பெண்மானைப் போல் இளமை ததும்பும் இவளின் கொஞ்சும் பார்வையும், நாணத்தையும் இயற்கையாகவே நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு, வெவ்வேறு வகைப்பட்ட நகைகள் அணிந்திருப்பது ஏனென்று தான் தெரியவில்லை...!

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு  
அணியெவனோ ஏதில தந்து (1089)  
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன் கண்ணாலும் உன்னைக் காணாதே2 மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் - மயங்கிடுவார் கொஞ்சம் நேரம்... இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும் - தனியே வருவது பாவம்...! கண் படுமே பிறர் கண் படுமே - நீ வெளியே வரலாமா...? உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா...? புண் படுமே புண் படுமே - புன்னகை செய்யலாமா...? பூமியிலே தேவியைப் போல் - ஊர்வலம் வரலாமா...?© காத்திருந்த கண்கள் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫

மதுவை உண்டால் தானே மயக்கம் வரும்...? ஆனால் அது தேவையேயில்லை... இவளைக் கண்டாலே தானாக மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...!

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்  
கண்டார் மகிழ்செய்தல் இன்று (1090)  
அன்னத்தைத் தொட்ட கைகளினால் - மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்... கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து - மதுவருந்தாமல் விட மாட்டேன்... உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் - உள்ளத்தினாலும் தொட மாட்டேன்... உன் உள்ளம் இருப்பது என்னிடமே, அதை உயிர் போனாலும் தரமாட்டேன்...! மயக்கமென்ன... இந்த மௌனமென்ன... மணி மாளிகைதான் கண்ணே... தயக்கமென்ன... இந்த சலனமென்ன - அன்பு காணிக்கைதான் கண்ணே2© வசந்த மாளிகை கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1972 ⟫

தங்களின் ரசனை என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா

    குறள் தரும் சுவையும் பாடலுடன் விளக்கம் தரும் சுவை மிகமிக அருமை... வாழ்த்துக்கள் அண்ணா த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மதுவோ மற்ற தெதுவோ தராத மகிழ்ச்சி 'தங்க'ளின் பதிவுகளில் பெறுகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. முன்னதாக கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமான திரைபப்டப்பாடலை தேர்வு செய்து பகிர்ந்தமைக்கும் அந்தக் திரைப்படப் பாடல்களை கேட்டு இரசிக்க இணைப்பு தந்தமைக்கும் நன்றி. ஆனால் ‘கண்ணாடி முன்னால் நில்லாதே’ என்ற பாட்டுக்கான இணைப்பு விட்டுப்போய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. குறளை வெளிப்படுத்தும் பாடல்கள்.. ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. கனிகளைத் துளைக்கும் கருநிற வண்டென
    கண்களைக் கண்கள் துளைக்கின்றதே!..
    ஓவியமா இது காவியமா இந்தப்
    பூமியும் திகைக்கின்றதே!..

    பதிலளிநீக்கு
  7. குறள் கூறும் பாடல்கள் அருமை.

    பாடல்களை கேட்டேன் அனைத்துன் அருமை.
    எல்லோரையும் குறளை படிக்க செய்வதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சினிமாவுக்கு பாட்டெழுதவோ, வசனம் எழுதவோ... தனியாக எதுவும் படிக்க வேண்டியதில்லை. திருக்குறளும், ஏனைய பிற சங்க இலக்கியங்களும் மட்டுமே போதும்.

    திருக்குறள் + சினிமா பாடல் உதாரணங்கள் அதை உறுதி செய்கின்றன.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அய்யா.பழனியப்பன் கந்தசுவாமி சொன்ன சொல் மாதிரியே.. நான் எப்போதுமே மூளையை பயன்படுத்தியே இல்லை.. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனபது போல..எனக்கு இருந்தால்தானே பயன்படுத்துவதற்கு....

    பதிலளிநீக்கு
  10. படத்தில் உள்ள கண்களை பார்க்கும்போது எனக்கு மயக்கம் வரவில்லை..பயம்தான் வந்தது..உண்மையாக....

    பதிலளிநீக்கு
  11. அய்யா பழனி கந்தசாமி சொன்ன கருத்துதான் என்னோடதும். இப்போதெல்லாம் மூளையை வேலை வாங்குவதே இல்லை.
    மற்றபடி பதிவும் அதற்கான திரைப்பாடல்களும் மிக மிக அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பதிவும் பாடல்களும் அருமை. அனைத்திற்கும் மேலாக நீங்கள் தெரிவு செய்த புகைப்படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  13. திண்டுக்கல் தனபாலன் இனி திருக்குறள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. திருக்குறளும் அதற்கேற்ற திருக்குரல்களும் இணைந்த பாடல்கள் அருமை ..
    குறள்களை அதன் பொருளாய் அமைந்த திரை இசை பாடல்களுக்கு பொருத்திய நட்புக்களுக்கு வாழ்த்துக்கள் ..
    எத்தனையோ இடங்களில் பாடல்களை கேட்டாலும் உங்கள் பதிவை வாசித்துக்கொண்டே கேட்கும்போது இனிமை அதிகம்

    பதிலளிநீக்கு
  15. இந்தமுறை கூகிள் க்ரோம் உலவியில் வந்தேன் பாட்டு கேட்கமுடிந்ததுதிரை இசைப் பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு ஆனால் அவற்றில் ஆராய்ச்சி எல்லாம் செய்ய்யத்தெரியாது அதுவும் குறளுடன் ஒப்பு நோக்கத் தெரியவெ தெரியாது

    பதிலளிநீக்கு
  16. ஆஹா ஆஹா பாட்டும் கருத்தும் மனதை மயக்குதே, மிக அருமை மிகவும் ரசித்தேன், முதல் படம் மட்டுமே தெரியுது ஏனையவை மொபைலில் தெரியுதில்லை , வீட்டுக்குப் போய் கொம்... ல பார்த்து வோட்டும் போடுறேன்.

    பதிலளிநீக்கு
  17. திரைப்படப் பாடல்களை ஆழ்ந்து ரசிப்பதால் திருக்குறளோடு ஒப்புமை செய்ய முடிகிறது. இதில் வரும் பல திரைப்படப் பாடல்களும் நான் அறியாதவையே! :) ஆகையால் இதில் எல்லாம் கலந்து கொண்டால் மூளையைப் பயன்படுத்தினாலும் பலன் இராது! :)

    பதிலளிநீக்கு
  18. சென்ற வருடம் வானொலி நிகழ்ச்சிக்காக இக்குறள்களை எடுத்து ஓரளவு பொருந்தும் திரைப்பாடல்களோடு வெளியிட்டிருந்தேன். இப்போது இப்பதிவில் தரப்பட்டுள்ள பாடல்கள் மிகப்பொருத்தமாயிருப்பது கண்டு வியக்கிறேன். பகிர்வுக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  19. அண்னன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் வணக்கம்

    தங்களது இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    திருக்குறளும் தமிழ் திரைப்பாடல்களும் ஒரு கோர்வையாக, அதன் சுவை மாறாமல் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

    எனக்கு தெரிந்த இரு திரைப்பட பாடல்களில் இடம்பெற்றுள்ள திருக்குறளை இதில் பதிவு செய்கிறேன்

    குறள் 1: யான் நோக்குங்காலை நிலம் நோக்கும் நோக்காக்கால்
    தான் நோக்கி மெல்ல நகும்
    உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே
    (பாடல்: நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ, வரிகள்: கவி.கண்ணதாசன் )

    குறள் :2 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து

    அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும் என அவன் அருந்திட மாட்டான் சூடு நீரும். சுடு சோறும்
    (பாடல்: மருதாணி விழியில் ஏன்? வரிகள்: கவிஞர் வாலி படம்: சக்கரக்கட்டி )

    குறள் :3 இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

    ஒரு பார்வை ஒரு பார்வை என்னை மலை மேலே தலைகீழாய் செய்யும், மறு பார்வை மறு பார்வை என்னை மீண்டும் மேலே வர செய்யும்
    (பாடல்: என்னமோ நடக்கிறதே. வரிகள் : நா . முத்துக்குமார். படம்.: சண்டக்கோழி.)


    குறள் :4 கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள

    ஏ கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணிலிருக்கு இந்த பூமி மீது நானும் வந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

    (பாடல்: அவள் வருவாளா? படம்:நேருக்கு நேர், வரிகள்:வைரமுத்து)

    பதிலளிநீக்கு
  20. புதுமையான முறையில் திருக்குறள் நெறி பரப்பு.

    பதிலளிநீக்கு
  21. இதுவரை அறிந்திராத குறள்களை - அவற்றின் பொருள்களை அறிந்து மகிழ்ந்தேன்.

    மது அருந்தி அறியாததால் அதனால் வரும் மயக்கம் என்னவென்பதையும் அறியேன்,ஆனால் இந்த குறள்களின் பொருள் கேட்டு சொக்கி மயங்கித்தான் போனேன்.

    வள்ளுவனாரை என்னவென்று புகழ்வது.

    ஆராய்ச்சிக்கும் பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.

    அருமை அருமை.

    கோ

    பதிலளிநீக்கு
  22. உங்கள் பதிவு சிலரையாவது திருக்குறள் காமத்துப்பால் முழுதையும் படிக்கத் தூண்டும் . அரிய பணி . பாராட்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
  23. அருமையான குறல்களுக்கு அழகான பாடல்களை இனம் காட்டிய பகிர்வு ரசித்தேன் டிடி!

    பதிலளிநீக்கு
  24. பாடல்களுக்காகக் குறளா
    திருக்குறளுக்காகப் பாடலா

    பாடலாசிரியர்கள்
    திருக்குறளை உறிஞ்சி
    திரைப்பாடல்களாக
    கொப்பளித்திருக்கிறார்கள்

    உள்ளம் தொட்ட பதிவு

    பதிலளிநீக்கு
  25. என்னமோ தெரியவில்லை கொம்பியூட்டரில் ஓன் பண்ணியும் பாடல் கேட்க முடியவில்லை, மொபைலில் எதுவும் தெரியாததால் அதைப் படங்கள் என நினைச்சு மேலே கொமெண்ட் போட்டேன்... வோட்டும் போட்டாச்சூஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  26. வலைச்சித்தரே!

    மயங்க வைத்த காதல் ரசம்...! கேட்டுக் கேட்டுப் பருகினேன். கலாப்பிரியருக்கு கலாரசிகனின் பாராட்டுகள். அருமை.

    பதிலளிநீக்கு
  27. குறள் சுவை பாடல் விளக்கம். அருமை
    தமிழ் மணம்.11
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  28. ஆஹா...
    அருமையான கண்ணு...
    பாடல் விளக்கம் அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  29. மிக்க நன்றி டிடி!

    அருமையான பாடல்களைக் கொடுத்து இதுவரை அறிந்திராத திருக்குறள்களை அறியத் தந்தமைக்கும் நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  30. இதுவரை திருக்குறள் காமத்துப்பாக்களைப் படித்ததில்லை. பொருத்தமான பாடல்கள் மூலம் திருக்குறளின் பொருள் அறியச் செய்தமைக்கு நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  31. சிறப்பு! படித்து மகிழ்ந்தேன். மிக்க சிறப்பு!

    பதிலளிநீக்கு
  32. உங்களைத் திருக்குறள் சொல்லித்தர சொல்லிருக்கலாம்....பலர் சொல்லித்தருகிறென் பேர்வழி என்று...எங்களை பயமுறுத்திய சம்பவம் இன்னும் எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.