🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நம் குற்றங்களைத் திருத்த...

தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால், சிறைச்சாலைகள் தேவை இல்லை... இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே எடுப்பவர் யாரும் இல்லை... பிறவியில் எவனும் பிழைகளைச் சுமந்தே வாழ்க்கையைத் தொடங்கவில்லை - பின்பு அவனிடம் வளர்ந்த குறைகளைச் சொன்னால் வார்த்தையில் அடங்கவில்லை...

© நான் ஆணையிட்டால் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫


நல்ல பாட்டு மனசாட்சி... பாட்டிலே வர்ற "பொதுவில் வைத்ததாலே"ங்கிறதை நினைக்கும் போது சின்ன வயசு ஞாபகம் வருது... காசு பணம் எல்லாம் பீரோவிலே வைச்சி தான் பூட்டணும்கிற பழக்கமெல்லாம் அம்மாவுக்குக் கிடையாது... டேபிள் மேலே, சமையல்கட்டிலே, புத்தக அலமாரியிலே, ஜன்னல் ஓரத்திலே அப்படின்னு அங்கங்கே காசுகள் கெடக்கும்... அங்கங்கே காசு பணம் இறைஞ்சி கிடைக்குமே தவிர, எங்கெங்கே எவ்வளவு பணம் இருக்குதுன்னு அம்மாவுக்குக் கரெக்ட்டா தெரியும்... யார் பணம் எடுத்தாலும் அம்மாக்கிட்டே சொல்லி விட்டுத் தான் எடுக்கணும்... ஒருநாள் சமையல்கட்டிலே இருக்கிற பணத்துலே பத்து ரூபாயை காணாம்... அப்பாகிட்டே கேட்டாங்க... அவரு எடுக்கலைன்னு சொல்லிட்டார்... அப்படின்னா நாந்தான் எடுத்திருக்கணும்ன்னு என்கிட்டே கேட்டாங்க... நானும் எடுக்கலைன்னு சொல்லிட்டேன்... அம்மா என்னை விட்றதாயில்லை... ஒழுங்கா உண்மையைச் சொல்லி, நீ குற்றத்தை ஒத்துக்கிட்டா பரிசா 100 ரூபாய் தரேன்ன்னு சொன்னாங்க... ஐ... ஜாலின்னு உடனே குற்றத்தை ஒத்துக்கிட்டு 100 ரூபாயை வாங்கிட்டு வெளியே கிளம்பிட்டேன்...!

ஹேஹே... எத்தனை முறை இந்த மாதிரி பரிசு வாங்கினே...?

அப்படிக் கேளு... இரு முறை... வேலைக்குப் போய் முதல் சம்பளம் வாங்கிச் செலவழிக்கும் போது, பரிசோட அர்த்தம் புரிஞ்சது வலியுடன்...! ஆனா அந்த இரண்டாவது "ஸ்பெஷல் பரிசு" கொடுத்தது அப்பா...! ஹிஹி...

ஆக, குற்றம் செய்பவங்க குற்றங்களை ஒத்துக் கொள்பவர்களாக இருந்தால் உலகில் நீதி மன்றங்களே தேவையில்லை... மனிசங்க குற்றங்களை உணரவும் ஒத்துக் கொள்ளவும் தொடங்கி விட்டால், பிறகு நாட்டில் குற்றங்களே நடக்காமலும் போய் விடும்ன்னு சொல்றே...! குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி... இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி... தவறுகள் பண்ணிப் பண்ணித் திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி... தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி இல்ல... பாடம்படி பவளக் கொடி... உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டி இல்லை... உள்ளம் என்பது பூந்தொட்டியானால் நாளை துன்பம் இல்லை... புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு... எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...! (படம் : யூத்)

தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பில்லைங்கிறது இன்றைய மோசமான நிலை...! இப்போதெல்லாம் செய்த குற்றத்தை ஒத்துக் கொள்ளும் பழக்கம் யாரிடமே இல்லைன்னு தான் சொல்ல வேண்டியிருக்கு... சிறு குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்யும் போதே, அவர்கள் செய்தது குற்றம் தான் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே கற்பனையாகச் சொல்லப்பட்டது அந்த ரூ 100 பரிசு சம்பவம்...! குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல சுகம் அடைவதேது...? குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...? அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்...2 அரும்பிட முடியாது...! (படம் : ரத்தக் கண்ணீர்)

ஏன் முடியாது...? செஞ்சது குற்றம்ன்னு தெரிஞ்சி, உடனே திருந்தித் திருத்திக்கிட்டா சரியாப் போச்சி... ஆனா தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்... தப்புச் செய்தவன் வருந்தியாகணும்... (படம் : பெற்றால் தான் பிள்ளையா...?) பல பேர் தான்மட்டும் என்ன தவறு செய்தாலும் தவறில்லை, அடுத்தவங்க சின்னத் தவறு செஞ்சா கூடத் துள்ளிக் குதித்து அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்த நினைக்கிறாங்க, இன்னும் பலபேர் ஏமாற்றுவதே தொழிலா செஞ்சிக்கிட்டு இருக்காங்க... இரண்டிற்கும் பதிலென்ன...?

கடும் விஷத்தைக் கூட விஷமுறிவிற்குப் பயன்படுத்தும் மருத்துவம் இருக்கிறது... அடித்தவனை அடித்துத் திருத்துகிற வழிமுறை வழிமொழியப்படவில்லை... முள் எடுக்க முள் பயன்படுத்துவது போல ஏமாற்றுக்காரனை ஏமாற்று மூலம் திருத்த முற்படலாமொழிய, அவனைக் கவிழ்த்துச் சாய்த்து விட முயற்சிக்கக் கூடாது... அவர்களை அவர்கள் வழியிலே திருத்த முற்படுவது தான் நல்ல வழி... நமது நீதி வழங்குகிற தண்டனைகள் எல்லாமே குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் முயற்சியே என்பதை நாம் மறந்து விடக் கூடாது மனசாட்சி... கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர் (562) ஒரு நிகழ்ச்சி :
ரொட்டி வியாபாரி ஒருவர் இருந்தார்... அவரது கடையில் ரொட்டிகள் அமோகமாக விற்பனை ஆயின... அவரின் வியாபாரத்திற்கு இன்னொருவரிடமிருந்து வெண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தார்... ஒரு நாள் ரொட்டி வியாபாரிக்கு வெண்ணெய் வியாபாரியின் மீது சந்தேகம் வந்தது... வெண்ணெய் வியாபாரி தனக்கு எடை குறைவாக வெண்ணெய் வழங்குவதைக் கண்டுபிடித்து விட்டார்... ஒரு கிலோவை நிறுத்திப் பார்த்தால் 800 கிராம் தான் வெண்ணெய் இருந்தது... உடனே காவல்துறைக்குச் சொல்லி கைது செய்ய வைத்தார்... வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது... வெண்ணெய் வியாபாரியை நீதிபதி விசாரித்தார்... விசாரிப்பில் வெண்ணெய் வியாபாரி சொன்ன விளக்கமே வழக்கில் திருப்பத்தைக் கொண்டு வந்தது...!

"ஐயா, என்னிடம் எடை பார்க்கும் இயந்திரம் கிடையாது... தராசு மூலமே வெண்ணெய்யை நிறுத்துகிறேன்... என்னிடம் எடைக்கற்களும் கிடையாது... கால் கிலோ எடைக்கு ரொட்டிக் கடைக்காரர் தயாரிக்கும் கால் கிலோ எடையுள்ள ரொட்டித் துண்டுகளையே எடைக்கற்களாக வைத்து நிறுத்துகிறேன்... நாலு ரொட்டித் துண்டுகளை வைத்து எனது வெண்ணெய்யை வைத்து நிறுத்திப் பாருங்கள்... சரியாக இருக்கும்..." என்றார்... நிறுத்திப் பார்த்தால் சரியாக இருந்தது... எடை குறைவாக - அதாவது கால் கிலோவிற்குப் பதிலாக 200 கிராம் தந்தது வெண்ணெய் வியாபாரியின் குற்றமா...? ரொட்டி வியாபாரியின் குற்றமா...? அதற்கு இது சரியாகப் போய் விட்டது என்று இருவரையும் அனுப்பி வைத்தார் நீதிபதி...
இப்படித்தான் நம்மில் பலர் நம்மிடம் குற்றங்களை வைத்துக் கொண்டு, அடுத்தவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி வைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறோம்... நம்மில் குற்றங்களைத் திருத்துவதற்கு அடுத்தவர் தான் வரவேண்டுமா என்ன...?



© யாருக்கும் வெட்கமில்லை கண்ணதாசன் G.K. வெங்கடேஷ் K.J.யேசுதாஸ் @ 1975 ⟫

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்... முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்... // சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில்... மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா...

சொல்லுங்க நண்பர்களே... தங்களின் கருத்துகளை...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. "சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா " என்று கவிஞர் பாடல் ஒன்று இருக்கிறது! "மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்... முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்" என்று தொடரும் அந்தப் பாடல்!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துள்ள பதிவு. வாழ்த்துக்கள் தனபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.. உண்மைதானுங்களே !!

    பதிலளிநீக்கு
  4. அருமையான சிந்தனை. தவறு செய்பவர் திருத்திக் கொள்ளவேண்டும், தப்பு செய்தவர் உணர்ந்து திருந்தவேண்டும். இவை இரண்டும் இன்று நடக்கிறதா என்பதே கேள்விக்குறி..
    சிந்தனைக்கு ஏற்ற பாடல்களும் அருமை..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா

    உண்மைதான் மனிதர்கள் திருந்தினால் சிறச்சாலைகள் தேவையில்லை நல்ல கருத்துள்ள கதை சொல்லி பதிவை ஒளிரவைத்துள்ளீர்கள். 5ந் அறிவு படைத்த உயிரினங்களை திருத்தலாம் 6அறிவு படைத்த மனிதனை திருத்தவே முடியாது.

    ஒரு மனிதன் கீழ்ப்படிவு தன் நலம் பாராமல் பிறர் நலத்தில் அக்கரை செலுத்துதல் தாய்தந்தையர் சொல்க்கேட்டல் பெரியோரை மதித்தல் குருவுக்கு மரியாதை செய்தல் இறை நம்பிக்கை இன்னும் பல அம்சங்கள் சேரும் போது திருந்தி வாழ்வான். இந்த பண்பாடு இல்லை என்று சொல்வதை விட மிக குறைவு எனலாம் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பணத்தைக் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டேன் என்று அனைவரும் பெருமையாக சொல்லும் காலம் இது. இங்கே எது குற்றம் எது குற்றமில்லை என்பதே கேள்விக்குறி. என்ன செய்வது? அவரவர்களுக்கு அவரவர் மனசாட்சி. மனசாட்சிக்கு எல்லை, அவர்கள் வளர்க்கப்பட்ட விதம். நல்ல பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. குற்றம் புரிவதை நிறுத்தினால் மட்டுமே குற்றங்கள் ஒழியும். ஒப்புக்கொள்வதால் எப்படி மறையும்?

    ரொட்டிக் கதை கெட்டி.

    பதிலளிநீக்கு
  9. மன சாட்சியும் தெய்வத்தின் சாட்சியும் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லையே...

    பதிலளிநீக்கு
  10. அற்புதமான பதிவு
    ரொட்டிக் கதை மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. ஆஹா அருமையான பதிவு சொல்வது அத்தனையும் தத்துவ முத்துக்கள்.சுட்டும் விரல்சுட்டும் போது மற்றும் மூன்று விரல்களும் மார்பினைக் காட்டுதடா எவ்வளவு நிஜம்.(" குற்றம் அற்றவர் யாரும் இல்லை குறைகள் கூற உனக் கருகதையு மில்லை"). இது நான்( சொன்னது) எழுதிய ஒரு கவிதை ஹா ஹா ...
    நன்றி ! தொடர வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
  12. சுட்டு விரல் கருத்து மறுக்க முடியாத உண்மை.... நல்ல பதிவு சகோ...

    பதிலளிநீக்கு
  13. ///பல பேர் தான் மட்டும் தவறு செய்தாலும் தவறில்லை.அடுத்தவங்க சின்ன தவறு செஞ்சா கூட துள்ளிக்குதித்து அம்பலப்படுத்தி,அசிங்கபடுத்த நினைக்கிறாங்க.// 100%உண்மை.
    ரொட்டிக்கதை அருமை.பொருத்தமான பாடல்கள்.சிந்தனைக்குரிய நல்லதொரு பகிர்வு.நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் தன பாலன் - அருமையான கருத்தினை அழகான பதிவாக எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை .
    எல்லேருமே பிழை செய்கிறார்கள் .
    மனிதனாகவே திருந்தினால் தான் உண்டு.
    மிக நல்ல பதிவு டிடி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. ஏமாற்றுகிறவனை ஏமாற்றுவதன் மூலமே திருத்தமுடியும் என்பது சரியான அணுகுமுறையா எனத் தெரியவில்லை. அப்படி செய்யமுடியும் என்றால் நீதிமன்றங்கள் தேவையில்லையே.

    பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  17. நம் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுக்காமல் அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை பார்க்காதே என்கிறது பைபிள். நம் குற்றத்தை நாம் ஏற்காத வரை மற்ற எவரையும் குற்றம் சொல்ல நமக்கு உரிமையில்லை. அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே!

    அருமையான கதையோடு சிறந்த பாடல் தெரிவுகளும் நிறைந்த நற்கருத்துகளும் கொண்ட நல்ல பதிவு!

    மிகவும் அருமை!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான பன்ச் வார்த்தைகளோடு முடித்துள்ளீர்கள் தனபால் சகோ. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  20. எத்தனையோ தப்பு பண்ணியும் தப்பிச்சுகிட்டேன் பாத்தியா என்கிற தற்பெருமை ஆட்களை நாமும் பாராட்டுவதால்தான் தப்பு செய்வது சகஜமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  21. ரொட்டிக்கதை அருமை! குற்றம் செய்தாலும் இப்போது யாரும் ஓப்புக்கொள்வதில்லை காலம் மாறிப்போச்சு. திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டாள் கஸ்ரம் தான்.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,


    நிதர்சனமான உண்மையை உணர்த்தும் செரிந்த பதிவு.
    நம் குற்றங்கள் திருத்தப் படல் வேண்டும்....நல்ல சிந்தனை.
    நன்றி.

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    பதிலளிநீக்கு
  23. நல்ல கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

  24. "தனியொரு மனிதன் திருந்தி விட்டால்
    சிறைச்சாலைகள் தேவை இல்லை...

    குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி" என
    சிறந்த பாடல் விளக்கத்தோடு
    சுவையாக நல்ல பயன்தரும்
    வழிகாட்டலைத் தந்தீர்கள்...
    நல்ல தத்துவங்களைத் தொகுத்து
    நம் மூளைக்கு வேலை கொடுத்தீர்...

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
  25. அருமையான விஷயங்களை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். இதைப்படித்து யாராவது ஒருவர் திருந்தினாலும் வெற்றி தான். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

  26. வணக்கம்!

    குற்றம் கலைய கொடுத்திட்ட இப்பதிவு
    முற்றல் கனியின் மொழி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  27. உண்மையை உரக்கச் சொன்ன அருமையான பகிர்வு தன்னைத் தானே
    திருத்திக் கொண்டால் உலகத்தில் குற்றவாளிகளே இருக்க வாய்ப்பில்லை என்பது தான் சத்தியம் .ஒவ்வொரு கருத்திற்கும் அருமையான பாடல்களைத் தேர்வு செய்து மிகப் பிரமாதமாக சொல்ல வந்த விசயத்தைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்அருமை ! அருமை ! வாழ்த்துக்கள் அன்புச் சகோதரா .

    பதிலளிநீக்கு
  28. தவறு செய்வதற்கு வெட்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம்..
    தவறு செய்யாதவர்களை ஏளனம் செய்வதே இன்றைய நாகரிகம்..

    நியாயமாக நேர்மையாக வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் - மக்களின் மனங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப் படுகின்றது.

    கலங்கரை விளக்கம் போல இனிய பதிவு..
    கரையேறுவது அவரவர் முயற்சியில்!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  29. இந்த மனசாட்சி என்பதே புரிந்து கொள்ள முடியாதது. எந்தச் செயலைச் செய்பவரும் சொல்வது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்தேன் என்பது. மனசாட்சிக்கு அளவுகோல் ஏது. மனசாட்சி என்பதே செய்யும் காரியத்துக்கு அழைக்கப் படும் துணை என்றே தோன்றுகிறது,

    பதிலளிநீக்கு
  30. எடைகுறைப்பை நாம் செய்யலாம் ஆனால் நமது சப்ளையர் செய்யக் கூடாது என்கிற ரொட்டிக் கதை ரொம்ப அருமை அண்ணா தொடர்க
    http://www.malartharu.org/2014/01/blog-post_2280.html

    பதிலளிநீக்கு
  31. ரொட்டிக் கதை அமர்க்களமா இருக்கு. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  32. நல்ல கருத்துள்ள பகிர்வு.கதைகள் மிக அருமை ஐயா. ஆமா அந்த பையன் யாரு கையை தூக்கு அப்படினி சொன்னா.....? எல்லாரும் கையை தூக்கவேண்டும் ஹா ஹா......

    பதிலளிநீக்கு
  33. ரொட்டி கதை சூப்பர் அண்ணா!
    நாளைக்கு வகுப்பில் போணி பண்ணிற வேண்டியது தான்:))

    பதிலளிநீக்கு
  34. அடுத்தவனை குற்றம் சொல்ல நீளும் ஒரு விரல், மற்ற மூன்று விரல்களும் நம்மை காட்டுகிறது என்று மலையாளி நண்பர்களுக்கு அடிக்கடி நான் சொல்வதுண்டு...!

    சிறப்பான பதிவு !

    பதிலளிநீக்கு
  35. வழக்கம் போல் குறிப்பிட்ட பாடல்களும் விளக்கங்களும் அருமை.
    வெண்ணெய் வியாபாரிக் கதை அசத்தல் இப்படி ஒரு கதையை இதுவரை படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  36. மிகவும் அற்புதமான ஒரு பதிவு! கருத்துமிக்க கதையுடன் வழக்கம் போல் அழ்காகச் சொல்லிச் சென்ற விதம் அருமை DD! மனிதர்கள் என்றால் குற்றம் செய்யாமல் இருப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷய்ம்தான். யாருமே 100% சரி என்று சொல்ல முடியாது! குற்றம் செய்தாலும், அதை உணர்ந்து திருத்திக் கொண்டு, வாழ்வது சாலச் சிறந்த ஒன்று! காந்திஜி அதற்கு ஒரு உதாரணம்!

    நல்லதொரு பகிர்வு!

    பதிலளிநீக்கு
  37. நல்ல பதிவு.! அடுத்தவங்க குணங்களையே பாருங்கன்னு நம்ம வள்ளுவர் சொல்றாரு.."குணம் நாடி,குற்றமும் நாடி.." இதுல[ குற்றமும்] உள்ள உம் இழிவு உம்மைன்னு இலக்கணத்துல சொல்லுவோம். அதாவது அடுத்தவங்க குற்றத்தைப் பார்க்குறவங்க இழிவானவங்கன்னு வள்ளுவர் மறைமுகமாச் சொல்றாரு. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  38. இந்த காலத்தில் நாம் நல்லவராக இருந்தால்.... நம்மை ஏமாளி என்கிறார்கள் .

    கட்டுரையுடன் கூடிய கதையும் அருமை.

    மிக நல்ல பதிவு தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  39. மிகவும் அருமையான பதிவு. எளிமையான நடை. சிருவர்களுக்கான பாட புத்தகத்தில் இடம் பிடிக்கத் தகுதியானதொன்று (பாட்டு வரிகளை நீக்கி மற்றும் சில மாறுதல்களைச் செய்து..). மனம் விட்டுப் பாராட்டுகிறேன்.

    இன்னுமொன்று. போகிற போக்கில் மிகவும் சிந்தனைக்குறிய கருத்தை விதைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். " கடும் விஷமும் மருத்துவத்திற்கு பயன்படும்" என்பதே அது. உண்மைதான். இயற்கையிலோ அல்லது சமுதாயத்திலோ வீணானதென்றோ அல்லது ஒதுக்கபடவேண்டியதென்றோ எதுவும் கிடையாது. பயன்படுத்திக் கொள்ளும் ஞானம்தான் தேவை.

    மிகவும் சிறப்புக்குறிய சிந்தனை.

    God Bless You

    பதிலளிநீக்கு
  40. எத்தனை எத்தனை முத்தான கருத்துக்கள் !!!!...பகிர்விற்கு மனமார்ந்த நன்றி !!!!...

    பதிலளிநீக்கு
  41. ஒருமனிதன் குற்றம் செய்ய, வெட்கப்பட்டால் ? அவன் தன்னுடைய தவறுகளை குறைத்துக்கொள்வது சாத்தியமே... நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  42. நல்ல ஆழமான கருத்துள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
  43. குற்றங்களை ஒத்துக்கொள்ளும்போது மனிதன் இன்னும் குணத்தளவில் மேம்பாடு அடைகிறான் என்பதே உண்மை. ரொட்டி, வெண்ணை அனுபவம் பொருத்தமானதாக உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  44. நல்லதோர் பகிர்வு! குற்றம் புரிந்தவர் தாமாகவோ, இல்லை, தவறை உணர்ந்து மனசாட்சிக்கு மதிப்பளித்து திருந்தி வாழ ஆரம்பித்தால், நாட்டுக்கும் நல்லது! அவர்தம் வீட்டுக்கும் நல்லது! நிம்மதியான வாழ்வை நித்தமும் வாழலாமே! என்பதை சிறப்பான உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  45. என் எழுத்துக்கும் மதிப்பளித்து, என் தளத்திற்கு வந்து கருத்திட்டு நான் மேலும் எழுத என்னை ஊக்கப்படுத்துவதற்கும், என் மனம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. பழைய காலங்களில் இது போலப் பாடல்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் நல்ல மாணவர்களை வளர்த்துவிட்டார்கள். இப்பொழுதும் ஒன்றும் கெடவில்லை. இது போல நல்ல வார்த்தைகளைக் கேட்டெ திருந்த வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்களுக்கும் அந்தப் பொறுப்பு அதிகம். நல்ல செடிகளும் நல்ல மரங்களும் வளர்வது தோட்ட உரிமையாளரின் கடமை. நல்ல மரங்களும் நல்ல பிள்ளைகளும் செழித்து வளர இறைவனை வேண்டுகிறேன். நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  47. அன்பு டிடி அண்ணா. வணக்கம்.

    ஒவ்வொரு முறை தங்கள் பதிவை படிக்கும் போதும், மனதளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

    மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது...

    அழகிய இப்பதிவை பகிர்ந்தமைக்கு, கோடானு கோடி நன்றிகள் டிடி அண்ணா.

    பதிலளிநீக்கு
  48. நன்றிகளுடன' கூடிய வாழ்த்துக்கள் சொந்தமே

    பதிலளிநீக்கு
  49. அருமை. எல்லோரும் மனசாட்சிக்குப் பயந்து நடந்தால் நீதிமன்றத்துக்கு சாட்சிகள் தேவை இல்லையே? த.ம. 17.

    பதிலளிநீக்கு
  50. அய்யா,
    சிறந்த பகிர்வு!
    ஈர்க்கும் நடை!
    முதிர்ந்த கருத்துக்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  51. அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்..!

    இன்றைய சமூகத்தின் நடப்பு இப்படி என்று ரொட்டி கதையில் விளக்கி விட்டீர்கள். இக்கதையை( முன்பு )படித்து இருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  52. தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !

    பதிலளிநீக்கு
  53. தவறை தெரியாமல் செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும். தன் குற்றத்தை பார்த்துவிட்டு பிறர் குற்றத்தை காணவேண்டும் என சிறப்பான சிந்தனைகளை பகிர்ந்தது பதிவு! பாடல்கள் தேர்வு வழக்கம் போல அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  54. உண்மைதான் அண்ணா, நம்ம தவறுகளுக்கு வக்கீலாக நடந்து கொள்கிறோம், அடுத்தவர்களின் தவறுகளுக்கு நல்ல நீதிபதியாக நடந்து கொள்கிறோம்......

    பதிலளிநீக்கு
  55. கருத்தாளமிக்க பாடல் வரிகளுடன் விளக்கம்... நீதியுடன் ஒரு சிறந்த கதையென மிகச் சிறப்பான பதிவு....

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ரத்தகண்ணீர் வசனம் ஏனோ நினைவில் வந்து போனது..(நாடு அப்படித்தான இருக்கு)...
    ஒவ்வொருத்தரும் திருந்தணும், அவரவர் எதாவது செய்யணும்..

    பதிலளிநீக்கு
  56. பொதுவாகவே இங்கே குற்றம் காணும் மனோபான்மை கூடிவிட்டதுதான்.

    பதிலளிநீக்கு
  57. படப்பாடல்களை உதாரணமாக காட்டி, சொந்த வாழ்க்கை அனுபவத்தை நகைச்சுவையுடன் சொல்லி, அருமையான ஒரு குட்டி கதையையும் சேர்த்து சிந்திக்க வைக்கும் பதிவை கொடுத்துள்ளீர்கள் !

    தவறுகள் நேருவது சகஜமே ! " ஆமாப்பா... மன்னிச்சிக்கோ ! ஏதோ தெரியாம... " என துடைத்துபோடும் மனம் அனைவருக்கும் இருந்தால் நமது சமூகமே வேறு மாதிரி அமைந்திருக்கும்தான் !

    வட்டிக்கு ஒட்டியாணம் வாங்கிய கதையாக சின்ன தவறை மறைக்க பல பெரிய குற‌றங்களையே இழைத்துவிடும் மனநிலை கொடுமை !

    இங்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்... ஒரு வலைப்பூவில் மத நல்லிணக்க பதிவு ஒன்றில் அவரவர் புத்திக்கு எட்டியது போல " மிக அருமையாக " ஒருவரை ஒருவர் தூற்றி பின்னூட்டமிட்டிருந்தார்கள்...

    நீங்கள் " அட போங்கப்பா ! " என எழுதியிருந்தீர்கள் !
    இந்த மனநிலைதான் அனைவருக்கும் வேண்டும் வலைசித்தர் அவர்களே !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  58. ரொட்டிக் கதையில் நீதிபதி தீர்ப்பு எனக்கு சரியாகப்படவில்லை. திருட்டுக்கு திருட்டு சரியாக போச்சு எனபது மாதிரி.....

    பதிலளிநீக்கு
  59. குற்றம் செய்பவர்கள் இருப்பதனாலேயே தவறைத் திருத்துபவர்களும் அறிவுரை சொல்பவர்களும் தேவைப்படுகின்றது.அருமையான கதை

    பதிலளிநீக்கு
  60. நமது வேலையும் இப்படித்தான் தித.
    செய்யாத வேலைக்குத்தானே சம்பளம் தருகிறார்கள்?!.

    பதிலளிநீக்கு
  61. அருமையான கதையுடன் பாடல் தெரிவுகளும் ரொம்ப நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.