🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...?

என்னப்பா... ஏதோ யோசனையிலே இருக்கே...? படத்தைப் பார்த்தா சுத்துதே..."

"என்னென்ன எழுதலாம்ன்னு யோசனை... அதான் நீ வந்திட்டில்லே..."

"உனக்குத் தெரியாததா...? மனித வாழ்வில் போனா வராதது எது ?, மிக மிக நல்ல நாள் எது ? இப்படிச் சின்ன சின்ன விசயத்தைப் பற்றி எல்லாம் அலச வேண்டியது தானே..? சரி... சரி... முறைக்காதே... தலைப்பு என்ன சொல்லு...?"


"இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது ?"

"அடேய்... சின்ன சின்ன விசயத்திலிருந்து தான், நிறையத் தெரிந்து கொள்ள முடியும்... வாழ்க்கையில் நிறையப் பார்க்கிறோம், படிக்கிறோம், அனுபவ அறிவையும் பெறுகிறோம். ஆனால், நமக்குத் தெரிந்த அறிவையும் அனுபவங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா..? நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் தவறினால், என்ன பயன்...? தெரிந்ததைப் பயன்படுத்தாமல் இருப்பவருக்கும், தெரியாமலே இருப்பதற்கும் என்ன வேற்றுமை...? பயன்படாமல் இருக்கும் அறிவாற்றல் என்று எதுவுமில்லை... அதுவும் அறியாமைக்குச் சமம் தான்... அதனாலே... நிறையத் தெரிந்து கொள்ள முயல்வதை விடத் தெரிந்ததைப் பயன்படுத்த முயல்வோமா...? அதைத்தான் இப்ப நான் செய்து கொண்டிருக்கிறேன்..."

"அப்பாடா... முடிச்சிட்டியா... அதான்... அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது? பதிவிலே, பகிர்ந்து கொள்வது தான் சிறந்தது என்று சொல்லிட்டேயே... அதை விட, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சொல்வது மிகச் சிறந்ததுன்னு நினைக்கிறேன்... நன்றி மறவாமல் இருப்பது தான் இன்றைய மிகப் பெரிய தேவை..."

"நன்றி மறந்தவன் மனிதனேயில்லை. ஆனால், மற்றவர்களுக்கு நன்றி சொல்வதோ இல்லை பாராட்டுவதோ ஒரு மந்திரச் சொல்லாக நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அவை இரண்டும் உடனே சொல்ல வேண்டும். நம் மனசுக்குள்ளேயே ஒருத்தரைப் பற்றிப் பாராட்டினாலோ, நன்றி தெரிவித்தாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை... முக்கியமான விசயம்-அவை இரண்டும் மனதார சொல்ல வேண்டும்... பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கணும்... நீ ஞாபகப்படுத்திட்டே... அன்புச் சகோதரி ராதா ராணி அவர்கள் AWESOME BLOGGER AWARD கொடுத்திருக்காங்க... அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..."

"பாத்தியா, மறந்துட்டே.. மறதி கூட மனிதனுக்கு நல்ல மருந்து தான்.. சரியா...?"

"மறதின்னு ஒன்னு இருக்கிறனாலே தான் மனிதன் இன்னும் உயிரோடு இருக்கான். இல்லேனா, இப்ப வீட்டிலேயும், நாட்டிலேயும் நடக்குற அநியாயத்திற்கு ஒருத்தரை ஒருத்தன் வெட்டிட்டு சாவான்..."

"நல்லது செய்தவர்களை யாரும் நினைக்கிறதேயில்லை... கடவுளைக் கூடக் கஷ்டம் வந்தாத்தான் ஞாபகமே வருது... கெடுதல் செய்தவர்களை மறக்க முடியலையே... என்ன செய்வது...?"

"அப்படியா...? அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்... நீ மறந்துருவே... அவங்க, வாழ்க்கை முழுக்க உன்னை ஞாபகம் வச்சிருப்பாங்க... நம்ம ஐயன் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால், குறள் எண் 314-ல்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
பொருள் : துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும். சரி... நீ விசயத்திற்கு வா... இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை - பணம், பங்களா, வசதி, etc ., இப்படி எல்லாம் எதையும் சொல்லக்கூடாது... கத்தியைத் தீட்டாதே... உன் புத்தியைத் தீட்டு..."

"இருந்தாதானே தீட்டுவதற்கு... யோசிக்கிறேன் இரு.. அந்தத் திருக்குறள் புத்தகத்தைக் கொடு ...ம்... அன்பு ?, பாசம் ?, பணிவு ?, அறம் ?, தானம் ?, தவம் ?, நட்பு ?, நகைச்சுவை உணர்வு ?, பொறுமை ?, சுறுசுறுப்பு ?, விட்டுக் கொடுக்கும் தன்மை ?, உதவி ?, உண்மையே பேசுதல் ?, கருணை ?, சாந்தம் ?, மன்னிப்பு ?, அடக்கம் ?, அமைதி ?, மானம் ?, ஒழுக்கம் ?, வீரம் ?, தைரியம் ?, ஆர்வம் ?, ரசனை ?... என்ன சொல்றது..? இப்படிப் புலம்ப வைச்சிட்டீயே.. அட.. குறள் எண் 424-ல்
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.
பொருள் : கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும்,, பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும். இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை... அறிவு தான்..."

"இப்பத்தான் விசயத்திற்கு வர்றே... நீ சொன்ன எல்லாமே மனிதனுக்குத் தேவை தான்... எல்லா இடத்திலும் அது சரிப்பட்டு வருமா...? இதற்கு அவை அறிதல், அவை அஞ்சாமை அதிகாரங்களில், திருவள்ளுவர்... எந்தக் குறளை சொல்வது... எல்லாக் குறளும் சொல்லலாம்... அவ்வளவு நல்லா இருக்கு... குறள் எண் 724-ல்
கற்றார்முன் கற்ற செலத்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
பொருள் : தாம் கற்றவற்றைக் கற்றோர்கள் மனங்கொள்ளும் படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகத் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக்கொள்ளல் வேண்டும்."

"இரு... இரு... எங்கேயோ படிச்சது... பள்ளிக்கூடத்திலே வாத்தியார் சொல்லிட்டாரு... தென்னை மரம் / பசு-இந்த இரண்டு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்... நல்லா படிச்சிட்டு வந்துருங்க என்று சொல்லிட்டார். நம்ம பையன் தென்னை மரத்தைப் பற்றிப் படித்து விட்டுப் போனான்... அடுத்த நாள் வாத்தியார் எழுதச் சொன்னதோ பசு மரத்தைப் பற்றி... நம்ம பையன் கவலைப்படாமே, தென்னை மரத்தைப் பற்றி இரண்டு பக்கம் மேல எழுதிட்டு, கடைசி ஒரு வரியில், "இவ்வளவு மகத்துவம் வாய்ந்த தென்னை மரத்தில் அந்தப் பசு, கயிற்றால் கட்டப்பட்டிருந்தது." இப்படி விவரமா இருக்கிறது தான் தேவை.. சரியா ?"

"நல்ல பையன்.. பிற்காலத்தில் பெரிய தலைவன் ஆயிடுவான்.. ஒரு கதை செல்றேன்... கேளு... அந்தக் காலத்திலே, செல்வாக்கு மிக்க, மோசமான பண்ணையார் ஒருத்தர் இருந்தார்... பணத்தை வட்டிக்கு விடுவது தான் வேலையே... தன்னிடம் பணத்தை வாங்கினவனின் மகள் மீது ரொம்ப நாளா ஒரு கண்... சமயம் பார்த்து ஒரு பஞ்சாயத்து.. உடனே பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று... (1) வீட்டை விற்றுப் பணம் கொடு (2) அவனின் மகளைக் கல்யாணம் செய்து கொடு என்று... அம்மன் கோயிலில் இரண்டு சீட்டுப் போட்டுப் பார்த்து விடுவோம் என்று தீர்ப்பு... எல்லாரும் கூடிட்டாங்க... அந்தப் பெண்ணுக்குப் பண்ணையார் பற்றியும், ஏதோ சூழ்ச்சி செய்கிறான்.. என்பதை உடனே தெரிந்து கொண்டு, ஒரு சீட்டை எடுத்து, வாயிலே போட்டு முழுங்கிட்டாள். கூட்டத்தைப் பார்த்து, "இந்த ஒரு சீட்டில் என்ன உள்ளதோ, அதற்கு எதிர்மறையான சீட்டில் உள்ளது போல் எனது தந்தை செய்யட்டும்" என்று சொல்லி விட்டாள்... ஏன்..? பண்ணையார் இரண்டு சீட்டிலும் ' மகளைக் கல்யாணம் செய்து கொடு' என்று எழுதியிருப்பார் என்று சட்டென்று யோசித்தாள். இதைத்தான் சமயோசித புத்தி எனச் சொல்வார்கள். அதாவது நமக்கு இக்கட்டான அல்லது தர்மசங்கடமான நிலைமை வரும் போது நம் புத்தியை எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற் போல் உபயோகிப்பது என்பது தான் முக்கியம். என்ன புரிந்ததா...? ஆக என்னைப் பொறுத்தவரை

இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை :

சமயோசித புத்தி (நல்ல சொற்களிலும் செயல்களிலும்)

"யப்பா.. இந்த வார்த்தை தாம்பா சொல்லத் தெரியலே.. இதற்குத் தான் தென்னை மரம் - பசு கட்டுரையைச் சொன்னேன்... நீ எப்படியும் சொல்லிடுவேன்னு தெரியும். இதுக்குப் பேரு தான் போட்டு வாங்குறது... நீ சொன்ன புத்தி வரணும்ன்னா, அதற்கு நிறைய அனுபவம் வேண்டும்... கண்டும், கேட்டும், சிந்தித்தும், படித்தும், அதுவும் அந்தச் சமயத்திற்குத் தகுந்தாற்போல் செயல் பட, நமக்குள் தெளிவான ஆற்றலை உண்டு பண்ண வேண்டும்... அதுக்கு நமது முன்னோர்களின் வீர தீரச் செயல்களையும், புராணக் கதைகளும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்... இப்பத் தான் புரியுது... சின்ன சின்ன விசயத்தையும் முழுமையா தெரிஞ்சிக்கணும்ன்னு.. முடிவா நான் ஒரு குறள் (701) சொல்லிக்கிறேன்...
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
பொருள் : ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே, அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான். மேலே படத்தைப் பார்த்தா, ஏன் சுத்தற மாதிரி தெரியுதுன்னு இப்ப நான் யோசிக்கிறேன்... வரட்டுமா...?"

நன்றி மனசாட்சியே... சமயோசித புத்தி மட்டும் இருந்தால் போதுமா ? நம் உண்மையான எதிரியை அறிந்து கொள்ள வேண்டாமா...? இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அழகான பதிவு ...

    பகிர்வுக்கு நன்றி தன பாலன் சார்

    பதிலளிநீக்கு
  2. குட்டிக்கதைகள் ஏற்கனவே கேள்விப்பட்டவை தான் என்றாலும், மிகச்சிறப்பாக அவற்றை இங்கு சமயோஜித புத்தியுடன், சமயோஜித புத்திக்கு எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள்து அருமை. பார்ட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மற்றவருக்கு நாம் செய்யவேண்டியதை குறளை வைத்தே அருமையாக கூறியுள்ளீர்கள்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான பதிவு.....தொடருங்கள்......வாழ்க்கைக்கு தேவையானவற்றை தொகுத்து தருவதற்கு மிக்க நன்றி...நண்பரே.....
    த.ம.1, இண்ட்லி-1

    பதிலளிநீக்கு
  5. குறட்பாக்களுக்கு ஏற்ற விளக்கமும் கதைகளும் அருமை. பகிர்வுக்கு என் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு !!! இன்றைக்கும் 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவரின் கருத்துக்கள் எவ்வளவு முற்போக்காய் இருக்கின்றன !!!

    மனிதனின் அடையாளமே அறிவு தான் .. அறிவு இல்லை எனில் மனிதனும் இதர விலங்குகள் ஒன்று தான் !!!

    ஆனால் அறிவை எத்தனைப் பேர் பயன்படுத்துகின்றோம் ...

    அனைவரும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய பதிவு இது

    பதிலளிநீக்கு
  7. sako!
    award kidaithathukku vaazhthukkal!

    melum suvaraasiyamaana kathaikal!
    arumai!

    nantri!

    பதிலளிநீக்கு
  8. சமயோசிதமான பகிர்வுகள் ! பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. தேவையை உங்கள் பாணியில் ரொம்ப சிறப்பா அழகா ஆழமா சொல்லி இருக்கீங்க - பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. FRUIT SALAD போல பல்சுவை. ஒரே சமயத்தில் பல விஷயங்களை யோசிக்க வைத்த கட்டுரை.

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு ஒரு மனிதனுக்கு சமயோஜித புத்தி அவசியம் அது மட்டும் போதும் என கூறவும் முடியாது...இன்டலி-3 தமிழ்10-4 தமிழ்மணம்-4

    பதிலளிநீக்கு
  12. தெரிந்ததைப் பயன்படுத்த முயல்வோம் உண்மை சார்

    உங்களுக்குக் கிடைத்த விருதுக்கு மனமார்ந்த மகிழ்ச்சி அய்யா

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் தேவையான அரிய கருத்துக்களை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். ஆழ்ந்து யோசித்தால் மறதிகூட ஒரு மருந்துதான் என்பது புரிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  14. குறளின் பெருமையையும், அறிவின் பெருமையையும் ஒரு சேர சொன்ன பதிவு. சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  15. அருமை மிக அருமை பயன் மிக்க பதிவு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  16. சகோதரா உண்மையில் தலை சுத்துது தான் நிறைய விடயங்களை அடக்கி இருக்கிறீர்கள் உங்கள பதிவில். ஒரு விடயத்தை எடுத்து விரிவாக எழுதுவது நல்லதல்லவா? நிறையத் தரவேண்டும் ஆசைப்படுகீறிர்கள் போல. மிக்க நன்றி நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. விருத்துக்கு வாழ்த்துக்கள்
    பதிவும்
    சொல்லும்
    சிந்தனையும்
    ரெம்ப பாராட்டக்கூடிய விஷயம் அருமை
    நன்றிகள் சார்

    பதிலளிநீக்கு
  18. நல்ல பயனுள்ள பதிவு.கதை மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
  19. சிந்தனையை தூண்டக்கூடிய நல்ல பதிவு.வாழ்த்துக்கள்!

    “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப்படும்”
    என்ற அய்யன் வள்ளுவனின் வாக்குப்படி உயிரைவிட சிறந்த ஒழுக்கமே இன்றைய மனிதனுக்கு தேவை என நினைக்கிறேன் நான்.

    பதிலளிநீக்கு
  20. மனிதர்களில் பலவகையாக நிறையவே காணக் கிடைக்கின்றனர்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. சிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள் .
    சுழலும் சக்கரங்கள் படம் அருமை
    நட்புடன் ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
  22. நண்பரே இன்றைய மனிதனுக்கு பணமும் மிகபெரிய தேவை தானே?

    பதிலளிநீக்கு
  23. வாழ்தல் பற்றிய அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...இப் பகிர்விற்காய் மிகவே நன்றியும் பாராட்டுகளும்...!

    பதிலளிநீக்கு
  24. உங்கள் விருப்பமான பாடல் மிக்சிங் எங்கே அன்பரே

    பதிலளிநீக்கு
  25. நல்லதொரு பதிவு சார்...உங்க பாணியே ரொம்ப வித்தியாசமா இருக்கு..

    பாராட்டுக்கள் விருது பெற்றமைக்கு விருது வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. பதிவின் கருவுக்கு மிகச் சரியான
    இரண்டு அருமையான கதைகளை
    அருமையாகச் சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
    பயனுள்ள பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு! நன்றி ஐயா!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  28. அருமையான வாழ்க்கைக்கு உதவும் கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  29. சகோ அவர்களே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  30. இன்றைய மனிதனுக்கு தேவை இடம், பொருள், ஏவல் என்ற காலம் அறிந்து சமயத்திற்கு ஏற்ற் மாதிரி பேசும் திறமை வேண்டும் என்று அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

    நன்றி அருமையான கருத்துக்களுக்கு.

    பதிலளிநீக்கு
  31. குறள் மேற்கோள்களுடன் நல்ல கருத்துகள்

    பதிலளிநீக்கு
  32. நிறைய விஷயங்களை அழகாக் கோர்த்து ஒரே பதிவில் சொல்வது உங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
    "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்பது அறிவு."
    இதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
  33. அழகான பதிவு .. நறுக் கதைகள்... தொடரட்டும் தங்கள் நற்பணி

    பதிலளிநீக்கு
  34. நண்பரே உங்களை போலும் நானும் ஒரு குறல் பதிவு ..உங்கள் பதிவு கலக்கல் ..நன்றி ...

    பதிலளிநீக்கு
  35. குறளுடன் கொடுத்துள்ள செய்தி ஒவ்வொன்றும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  36. நல்ல நல்ல கருத்துள்ள கட்டுரைகள்..அருமையாக இருக்கிறது உங்கள் தளம்..

    பதிலளிநீக்கு
  37. விருத்துக்கு வாழ்த்துகள்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  38. உண்மை தான்...
    இன்றைய மனிதனுக்கு மிக முக்கியம் சமயோசித புத்தி தான்!!

    அருமை!

    பதிலளிநீக்கு
  39. அருமை நண்பர் வே.நடனசபாபதி ஒழுக்கமே தேவை என்று கூறியுள்ளது, சரியானதாக என் அறிவுக்கு படுகிறது.

    இதையே நான் வேறுமாதிரி சொல்கிறேன் தனிமனித ஒழுக்கம் தேவை என்பதே மிகச்சரியானதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

    மேலும் இன்றைய அதிவேக் உலகத்தில் நிதானமும், பொறுமையும் இருந்தால் சமயோசித புத்தி தானாக வேலை செய்யும்

    எனவே சமயோசித புத்தியின் ஆணிவேரான நிதானமும், பொறுமையும், தனிமனித ஒழுக்கமும் ஒவ்வருவருக்கும் தேவை என்பதே அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய தாழ்மையான கருத்து.

    முதலிலேயே சொல்லவேண்டியதை இப்பொழுது சொல்கிறேன். சிந்திக்க வேண்டிய மிகவும் அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று

    மிக்க நன்றிகள் நட்பே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.